Wednesday 7 March 2012

ஜீரோ எழுத்து -3 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

உலகில் எல்லாவகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஆனால் இவர்களை ஒரே மாதிரி சிந்திப்பவர்கள், வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என பிரித்து விடலாம். இதன் காரணமாகவே ஒருவரைப் பற்றி அவரா, அவர் அப்படித்தான் எனும் சிந்தனை கூட நம்மில் வந்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட சிந்தனையில் வறட்டு சிந்தனை, தெய்வீகச் சிந்தனை, காதல் சிந்தனை, காம சிந்தனை, வேலை சிந்தனை, வெட்டிவேலை சிந்தனை என பல சிந்தனைகள் அடக்கம்.

நாம் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். நாம் ஏதும் செய்யாமல் இருந்தால் நமக்குள் விபரீத சிந்தனைகள் எல்லாம் எழும் என்பார்கள். ஏதும் செய்யாமல் எவரேனும் இருக்க இயலுமா? உறங்குதல் கூட ஒரு செயல் என ஆனபின் எப்படி ஏதும் செய்யாமல் எவராலும் இருக்க இயலும்? 'சும்மா இருப்பதே சுகம்' என்றார்கள்.

ஒரு நபரை சந்திக்கிறோம். நாம் அவரிடம் கேட்கிறோம். ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என! அவர் தனது பைகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டு என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது தன்னை எப்படி அவர் மறந்தார் எனும் கேள்வி எழ வேண்டும். ஒரு மனிதரை விடவா அவரிடம் இருக்கும் பொருள்கள் பெரிது? அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும், என்னைத் தவிர என்னிடம் வேறு பொருட்கள் இல்லை. ஆனால் எவரும் அப்படி சொல்வதில்லை. என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்வதன் மூலம் அவர் இருக்கிறார் எனும் புரிதல் தானாக வர வேண்டும் என்பதுதான் அந்த பதிலின் அர்த்தம். ஆனால் இந்த உலகம் பொருள்கள் இல்லாத ஒருவரை 'வெறும் பயல்' என்றுதான் பட்டம் சூட்டுகிறது.

எதற்கு இப்படி இருக்கிறாய்?

ஒண்ணுமில்லை.

ஏதாவது பிரச்சனையா?

ஒண்ணுமில்லை.

ஒண்ணுமே இல்லைன்னா எதுக்கு இப்படி இருக்கிறாய்?

அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேனே.

இப்படி ஒண்ணுமில்லை, மனிதர்களின் வாழ்வில் ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. அறிவியல், தத்துவம், இறையியல் எல்லாம் இந்த ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி என்ன சொல்கிறது?

அறிவியல் குறிப்பாக இயற்பியல் விதிப்படி இந்த உலகம் ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து தொடங்கி ஒன்றுமே இல்லாத ஒன்றில் முடிவடையும் என்பதுதான். ஒன்றுமே இல்லாமல் எப்படி ஒன்று இருந்திட முடியும் எனும் போது 'அப்படித்தான், இப்போது என்ன செய்யப்போகிறாய்' என இயற்பியல் விதிகள் நமது சிந்தனைகளை கட்டுப்படுத்த எத்தனிக்கும்போது அங்கே 'ஒண்ணுமே சொல்ல இயலாமல்' போய்விடக்கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமே. ஆனால் இது ஒரு விதண்டாவாதம் என எவரும் நினைப்பதில்லை, ஏனெனில் இது அறிவியல்.

ஒரு முழு உருவம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த உருவம் இருக்கிறது. இதற்கு முன்னர் அந்த உருவம் எங்கே இருந்தது? எங்கேயும் இல்லை என சொன்னால் நம்மால் நம்ப இயலுமா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது தத்துவம் சொல்லும் ஒண்ணுமில்லை. இப்பொழுது அதே உருவத்தை சின்னாபின்னாமாக்கி தூள் தூளாக்குவோம். நமது கண்ணுக்கே தென்படாத துகள்கள் இப்போது அந்த உருவம் ஆகிவிட்டது. அந்த உருவம் ஒன்றுமே இல்லையா எனில் ஆம் அப்படித்தான் ஆகிவிட்டது. துகள்கள், முடிந்தால் கண்டுபிடித்து கொள் என்கிறது தத்துவம். பிறக்கும் முன்னர் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இறந்து பின்னர் ஆகிவிடுவோம் என மிக சர்வசாதாரணமாக சொல்லி செல்கிறது இந்த தத்துவம் சார்ந்த ஒண்ணுமில்லை. இதைத்தான் எதைக்கொண்டு வந்தாய், எதைக் கொண்டு செல்லப்போகிறாய் என பகவத் கீதை பேசுகிறது என ஒரு சிந்தனையாளர் எழுதினார்.

அடுத்ததாக இறையியல் சொல்லும் ஒண்ணுமில்லை. கடவுள் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார். எவரேனும் தெரிந்து கொண்டனரா என்றால் ஒண்ணுமில்லை என ஆகாயத்தை விளிக்கிறார்கள். இந்த ஒண்ணுமில்லை தன்னை தானே அறிந்து கொள்தல் என பொருள்கொண்டு அதில் இறைவனை அறிவது என்பதுதான் இறையியல் தத்துவம்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் வானத்தில் இருந்து பார்த்தால் பூமியில் உள்ள எல்லாம் ஒரே மாதிரிதான் தெரியுமாம்.  சமநிலை கோட்பாடு என்பதைத்தான் ஒண்ணுமில்லை கோட்பாடு அடைய துடிக்கிறது என்கிறது இந்த அறிவியல், தத்துவம், இறையியல் கோட்பாடுகள்.

சமநிலையை நோக்கிய ஒரு இழுவை என அறிவியலும், சமநிலையை நோக்கிய ஒரு பார்வை என தத்துவம், இறைவனுடன் கலந்து சமநிலை கொள்தல் என இறையியலும் ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி குறிக்கிறது.

ஆனால் சம நிலையும், ஒண்ணுமில்லை என்பதும் வெவ்வேறானவை என்பதை இந்த மூன்று பார்வைகளும் பார்க்காமல் விட்டுவிட்டன. எப்படி ஒண்ணுமில்லை சமநிலை ஆக இயலும்? எல்லாம் இருப்பது கூட சமநிலை அடைய முடியும் அல்லவா.

ஒண்ணுமில்லை என்பதெல்லாம் நமது சிந்தனையை கட்டிப்போட சொன்ன ஒரு வழி. எனது தாய் சொன்ன ஒண்ணுமில்லை இன்னும் நினைவில் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. இயற்பியல் விதிகள் அனைத்தையும் தகர்த்துவிடத்தான் ஆசை. ஆனால் இயற்பியல் விதிகளே ஒன்னுமில்லாதபோது இல்லை என சொல்லியபின்னர், இல்லாத விதிகளை எப்படி தகர்ப்பது?

கந்தகம் நிறைந்த மண்ணில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றின என எவரேனும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அது உண்மையாக இருக்காது என ஒதுங்கி போய்விடுவீர்களா? அப்படி கந்தகம் நிறைந்த மண் எங்கே இருக்கிறது என தேடித்தான் போவீர்களா?

(தொடரும்)

2 comments:

சார்வாகன் said...

நல்ல பதிவு சகோ

1.அறிவியலின் எந்த விதிகளுமே சில இயற்கை நிகழ்வுகளை அவதானித்து,அதன் காரணிகளிக்கிடையேயான் தொடர்பாக் வரையறுக்கப்ப்ட்டு,அது பரிசோதனைகள் மூலம் உறுதிப் படுததப் பட்டால் அறிவியல் உல்கில் ஏற்றுக் கொள்ளப்படுகிற‌து.

2. அவ்விதிகளின் மீது ஒரு மாதிரி வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து நிகழ்வுகளும் கணிக்கப்ப்டுகின்றன.[Model based prediction]

3.ஆனால் ஒவோரு விதியும் அதன் எல்லைகளில் சரியாக் கணிக்காது.அதுபோலவே இந்த ஒன்றுமிலை[nothing],மற்றும் அனைத்தும்[everythimg] என்பது இரு அதீத் எல்லைகள்.இவற்றில் அறிவியல் ப்யன்படுத்த முடியுமா? அப்படி ஏதேனும் கருதுகோள்[hypothesis] இருந்தாலும் சரிபார்க்க இப்போது முடியாது.எப்போதாவது கூட முடியுமா என்பது சிக்க்லான் விடயம்.

4.// ஆனால் சம நிலையும், ஒண்ணுமில்லை என்பதும் வெவ்வேறானவை என்பதை இந்த மூன்று பார்வைகளும் பார்க்காமல் விட்டுவிட்டன. எப்படி ஒண்ணுமில்லை சமநிலை ஆக இயலும்? எல்லாம் இருப்பது கூட சமநிலை அடைய முடியும் அல்லவா.//
.உங்கள் கருத்து ஒரு விதத்தில் சரியே என்றாலும் கொஞ்சம் மாறுபடுகிறேன். ஒன்றுமில்லை என்பதிலும் சம் நிலை இருக்கிறது,ஆனால் சமநிலை ஒன்றுமில்லையில் இருந்து அனைத்திலும் இருந்தால் மட்டுமே அந்நிலை நீடிக்கும் ,இல்லையேல் அழியும். [Equilibrium means stable condition it ranges form 0 to [slightly less than ]infinity,stability means bounded input should produce bounded output]
எ.கா இயற்கைச் சூழலில் சம்நிலை[one equilibrium point to another equilibrium point] என்பது மாறிக் கொண்டே இருக்கும்.
சூழலுக்கு ஏற்ப உயிர்கள் மாறுவதும்,மாறும் உயிர்கள் வாழ்வதும்,மாற இயலாதவை அழிவதும் உயிரினங்களின் வரலாறு!!!!!!!!!
கடவுள் என்பது எதுவாக் உருவகப்படுத்துகிறீர்கள் என்பதுதான் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு விடையாகும்.இயற்கைதான் கடவுள் என்றால் ஆம் இருக்கிற‌து என்றே நானும் கூறுவேன்!!!!!!!.இயறகையை பராமரிக்க வேண்டும்,போற்ற வேண்டும்,இதுதான் வழிபாடு அல்லது ஆத்திகம் என்றால் நானும் அந்த குழுவினன்தான்!!!!!!
நன்றி

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோ. மிகவும் அருமையான தெளிவான கருத்துகள்.

சமநிலை. ஒன்றும் இல்லை பற்றி மேலும் கலந்துரையாடுவோம்.