Friday 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன். 

1 comment:

அப்பாதுரை said...

எதிர்பாராத திருப்பம் கவிதையில் :)