Friday 9 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 2

புரையேறிய எனக்கு வேகமாக தண்ணீர் பாட்டில் திறந்து தண்ணீர் தந்தாள்.

'யாரோ நினைக்கிறாங்க' என சொல்லிக்கொண்டே 'உன் பேரு என்ன' என திருப்பி கேட்டேன்.

யார் உன்னை நினைப்பாங்க என்றாள் அவளது பெயரை சொல்லாமல்.

என் அம்மா தான் என சொல்லி வைத்தேன்.

உங்க அம்மா மட்டும் தான் நினைப்பாங்களா என அவள் கேட்டதும் உலகம் கண்ணுக்கு முன் வேகமாக சுழன்றது.

என் பேரு காயத்ரி.

'என் அம்மாவோட பேரு கூட காயத்ரிதான். ஆனா அவங்க ஒரே தொனதொன ரகம். எப்ப பார்த்தாலும் அதை செய், இதை இப்படி செய் அப்படின்னு நச்சரிச்சிட்டே இருப்பாங்க. அதனால எனக்கு எரிச்சலா வரும். நிறைய பொய் சொல்வேன் என் அம்மாகிட்ட. எதுனாலும்னா உடனே விரதம் இருக்க ஆரம்பிச்சிருவாங்க.

இப்படித்தான் என் அக்கா ஒருத்தரை லவ் பண்ணினா. அதெல்லாம் கூடாது, அந்த பையன் சரியில்லை அப்படி இப்படி பாட்டு பாடி என் அக்கா மனசை மாத்தி போன வருஷம் தான் வேற ஒருத்தரோட கல்யாணம் ஆச்சு. இதுல என் அக்கா வேற அட்வைஸ். அம்மா பேச்சை கேட்டு நட, யாரையும் லவ் பண்ணி தொலைச்சிராதேனு. ஆனா என் அப்பா எதையும் கண்டுக்க மாட்டாரு' என சொன்னதும் காயத்ரியின் முகத்தில் சின்ன மாற்றம் தெரிந்ததை கவனித்தேன்.

'அம்மாகிட்ட இனிமே பொய் சொல்லாத. இன்னைக்கு என்ன நடந்துச்சோ எல்லாத்தையும் சொல்லு' என்றதும் 'வகுப்பை விட்டு வெளியே அனுப்பினது, உன்னை பாத்துட்டு இருந்தது எல்லாமா' என்றேன்.

'ஆமா, எல்லாத்தையும் தான். இனிமே அம்மா என்ன சொன்னாலும் உடனே செஞ்சிரு. எந்த அம்மாவும் தன்னோட பிள்ளை நல்லா இருக்கனும்னுதான் நினைப்பாங்க, குட்டிச்சுவரா போகணும்னு நினைக்க மாட்டாங்க. அதனால நீ அவங்க சொன்னா மறுக்காம செய்யி. என்னையவே பாத்துட்டு இருக்காத, படிப்புல கவனம் செலுத்து' என்றாள்.

'அப்ப இனிமே என் கூட சாப்பிட வரமாட்டியா, பேசமாட்டியா' என்றேன்

'அதது அதுபாட்டுக்கு நடக்கும், இனிமே உன் அம்மாகிட்ட பொய் பேசாத. நானும் என் அக்காவும் என்ன நடந்தாலும் எங்க அம்மாகிட்ட சொல்லிருவோம். அப்படித்தான் என் அக்கா எட்டாவது படிக்கையில ஒரு திருட்டு தம் அடிச்சிட்டு இன்னைக்கு திருட்டு தம் அடிச்சேன் அப்படின்னு அம்மாகிட்ட சொல்ல, அடுத்த நாளு ஸ்கூலுக்கு போறப்ப என் அக்கா கையில சார்மினார் சிகரெட்டும், லைட்டரும் எங்க அம்மா கொடுத்தாங்க. அக்கா, அம்மாவை கட்டிபிடிச்சிட்டு அழுதுட்டா. ஒன்னே ஒன்னு எங்க அம்மா சொன்னாங்க. நீங்க தப்பு செஞ்சா உங்களை மட்டும் இல்ல, என்னையும் உங்க அப்பாவையும் சேர்த்துதான் பாதிக்கும், அதே போல நாங்க தப்பு செஞ்சா எங்களை மட்டுமில்ல உங்க ரெண்டு பேரையும் சேர்த்துத்தான் பாதிக்கும்னு. அம்மாகிட்ட மறைக்க வேண்டாம்' என்றாள். அவள் சொன்னதை கேட்டதும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் அம்மா!

'அவ்வளவுதான், என் அம்மா சாமி ரூம்ல உக்காந்துட்டு பகவானே என்ன இப்படி செய்ற என அழ ஆரம்பிச்சிருவாங்க' என்றேன்.

'அம்மாகிட்ட பொய் சொல்லாத இனிமே. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு, நம்பிக்கை தேவை. தன்னோட பிள்ளை தனக்குத்தான் என்கிற ஒரு அன்பு' என சொன்னாள் காயத்ரி.  பின்னர் வகுப்புக்கு நகர்ந்தோம். அனைவரின் கண்களும் எங்களையே மொய்த்தன. அருகில் இருந்த நண்பனிடம் 'எனக்கு தெரிஞ்ச பொண்ணு, எங்க குடும்பத்துக்கு பழக்கம் என பொய் சொன்னேன். இனி அவன் எல்லாரிடமும் சொல்லிவிடுவான், நாங்கள் பழக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே கணக்கு செய்தேன்.

அன்றைய மாலை பாட வகுப்புகளில் நான் அவளை பார்க்கவே இல்லை. நன்றாக பாடத்தில் கவனம் செலுத்தினேன். மாலை நாங்கள் பிரிந்து செல்லும்போது 'நான் நாளைக்கு சைவம்' என்றாள் காயத்ரி. 'நானும் சைவம்' என சொல்லிக்கொண்டேன். தனது பையில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி 'இது என் அம்மா, இது என் அப்பா, இது என் அக்கா, இது நான், உன் அம்மாகிட்ட காட்டு' என தந்தாள். 'நானும் போட்டோ கொண்டு வரேன்' என சொல்லி விடைபெற்றேன். அவள் முகம் மிகவும் தெளிவாக இருந்தது.

வீட்டிற்குள் நுழையும் முன்னர் 'இன்னைக்கு காலேஜு எப்படி இருந்துச்சி, என்ன பாடம் நடத்தினார்கள், என பல கேள்விகள் கேட்டு வைத்தார் அம்மா. ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேட்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.


'அந்த பொண்ணு வந்து இருந்தாளா'


'எந்த பொண்ணும்மா'


'அதான், காலேஜுல சேரப் போன  நாளு பார்த்துட்டே இருந்தியே'


அம்மாவின் இந்த கேள்வி என்னை பொய் சொல்ல வைக்க தூண்டியது. ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல் நடந்த அனைத்து விசயங்களையும், காயத்ரி சொன்ன பொய் சொல்லாதே என்ற விசயத்தையும் சொல்லி வைத்தேன்.  அதோடு காயத்ரி கொடுத்த போட்டோவையும் கொடுத்தேன்.


அதைப் பார்த்த அம்மா...


(தொடரும்)



No comments: