Thursday 2 February 2012

இந்த பிரபஞ்சம் தட்டை தான்

என்னைய நீங்க நொட்டை சொல்லக் கூடாது. இந்த பிரபஞ்சம் தட்டை தான், மட்டைகளா என ஒரு அறிவியல் குழு சொல்லிவிட்டது. நான் மொட்டை தலையை தடவி கொண்டு இருக்கிறேன். 

இந்த பிரபஞ்சம் தட்டை தான். 

ஆச்சர்யமாக இருக்கிறதா? இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. 

ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சம் சற்று வளைவானது என்று சொன்னதில் இருந்தே இது குறித்து அறிவியலாளர்கள் நிறையவே சிந்தித்து இருக்கிறார்கள். 

ஆனால் சமீபத்தில் அன்டார்டிகா மீது வானில் பறந்த ஒரு பலூன் இந்த பிரபஞ்சம் தட்டை என்றுதான் உறுதி செய்து உள்ளது. 

அதாவது ஈர்ப்பு விசை இல்லாத பட்சத்தில் ஒளியானது நேர்கோட்டில் மட்டுமே செல்லும், வளைந்து செல்லாது என்பது ஒரு விதி. 

அதோடு மட்டுமா, இந்த உலகம் எப்படி பெரு வெடிப்பு மூலம் உருவானதோ அதைப்போல பெரு சுருக்கத்தில் சென்று முடிவடையும் என்று முன்னாளில் நினைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு இந்த பிரபஞ்சம் பெரு சுருக்கத்தில் முடிவடையாது என சமீபத்தில் ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து நோபல் பரிசு கூட பெற்று விட்டார்கள் அறிவியலாளர்கள். 

இப்படி தொடர்ந்து விரிவடைந்து அப்படியே உறைந்துவிடும் பிரபஞ்சம் தட்டையாகவே இருக்க இயலும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

நாம் சாப்பாட்டினை சூடு செய்ய உபயோகிக்கும் மைக்ரோ அலைகள் பெரு வெடிப்பு நடந்தபோது உருவாக்கிய கதிரியக்க வெப்பம் தனை கொண்டு பல எப்படி பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறியலாம். 

இதற்காக ஒரு தனிதன்மையுள்ள கருவியை உருவாக்கி இருந்தார்கள். அதில் ஒரு கேலக்ஸியில் இருந்து உருவாகும் ஒளி செல்லும் பாதையை விட முதன் முதலில் உருவான (பெரு வெடிப்பில்) ஒளியானது பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாம். 

இந்த பிரபஞ்சம் முதன் முதலில் அது கொஞ்ச நேரத்திற்கு வளைவாக இருந்தது, ஆனால் இப்போது தட்டையாகிவிட்டது என்கிறார்கள்.

ஆமாம், வேத நூல்களில் 'தட்டை' என சொன்னது பிரபஞ்சத்தையா, பூமியையா? எதுக்கு சொல்ல வருகிறேன் எனில் சொல்பவர் சொல்வதை புரிபவர் வேறு விதமாக புரியலாம் அல்லவா. 

Wednesday 1 February 2012

வானியல் ஆராய்ச்சியில் விருப்பமா?

சிறு வயதில் இரவில் நான் ஓடிக்கொண்டிருக்க என்னுடன் ஓடி வரும் நிலா. நான் நின்றால் நின்று கொள்ளும் நிலா. என் பேச்சு கேட்கும் அன்பு நிலா.

அம்மாவின் இடுப்பில் அமர்ந்து நிலாவைப் பார்த்து சாப்பிட்ட தருணங்கள். இந்த நிலா, வெள்ளை நிலா, 

நிலா நிலா ஓடி வா என பள்ளி காலங்களில் படித்து ரசித்த பாடங்கள். நிலா உள்ளம் கொண்ட கொள்ளை நிலா. 

தேய் பிறை, வளர் பிறை என நிலா தேய்வதும், வளர்வதுமாய். இது நிலா பற்றிய ஒரு கால கணிப்பு. 

வானத்தில் மேகங்கள் வலம் வர அங்கே எவரோ இருப்பதாய் கண்டு சிரித்த காலங்கள். 

ஆடு போன்ற உருவங்கள், ராஜா பவனி வரும் குதிரை வண்டிகள் என எத்தனை எத்தனையோ மேகங்களில் பார்த்து ரசித்த ஓவியங்கள். ஒவ்வொரு தினமும் எவரேனும் வரைந்து வைத்ததைப் போன்றே புதிதாக தோன்றும். 

இரவில் வானத்தைப் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணுவது ஒரு பொழுது போக்காக இருந்தது. எங்கோ தொலைவில் விழுந்து விடும் நட்சத்திரங்கள் விர்ரென பறந்து போனது கண்டு எரி நட்சத்திரம் என்றார்கள். 

சூரிய பகவான். வாயு பகவான். வருண பகவான் என வானத்தில் கடவுளர்களை தேடிய பொழுதுகள் உண்டு. இடி இடித்தால் அர்ஜுனன் பெயர் சொல்லி கதவுக்கு பின்னால் மறைந்த பொழுதுகள் உண்டு. 

எத்தனை எத்தனை கவிதைகள், பாடல்கள். வான மங்கை போட இருக்கும் கோலத்திற்கான புள்ளிகள் தான் நட்சத்திரங்கள் என வாசித்த போது சிலிர்க்க வைக்க சிந்தனைகள். 

மழைக்காக மாரியம்மனுக்கு மழை கஞ்சி எடுத்த நினைவுகள். இன்னும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது. 

வானத்தில் இருக்கும் சொர்க்கம் என்றே பாட்டியிடம் கேட்ட கதைகள். இறந்தவர்கள் சாமியிடம் சென்று விட்டார்கள் என வானத்தை நோக்கி சொன்ன வார்த்தைகள். 

சூரிய நமஸ்காரம் சொன்னதோடு நவ கிரகங்கள் என ஒன்பது கிரகங்களை கோவில்களில் சுற்றி வந்த பொழுதுகள். எந்த கணக்கில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என கண்டு கொண்டார்களோ என புரியாத கணக்குகள். ராசியும் பலன்களுமாய். 

ஒவ்வொரு கிரகத்திற்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த மொத்த அண்ட சாரமும் பிண்டத்தில் உண்டு என்று சொன்ன விதிகள். 

இன்னும் இன்னும். நிலா தொட்டு விட்டோம். பூமிக்கு மட்டுமே நிலா அல்ல, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிலா உண்டு என்று கண்டு கொண்டோம். 

நாம் இருக்கும் இடம் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன துளி. என்றோ அனுப்பப்பட்ட வானியல் கோள் புளுட்டோவை தாண்டி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. 

சிறு வயதில் வானத்தில் படங்களை பார்த்தது போல தொலை தூர நட்சத்திரங்களில் நெபுலாவில் அதிசய படங்கள் பார்க்கிறார்கள். அதிசய படங்கள் காட்டுகிறார்கள். அத்தனை அழகுடன் வியாபித்து இருக்கிறது இந்த பிரபஞ்சம். 

நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஆக்சிஜன் அணு அளவும், நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆக்சிஜன் அணு அளவும் வெவ்வேறு என கண்டு கொள்ள முடிகிறது. இதனால் புது விசயம்தனை தெளிந்து கொள்ளலாம் என போராடுகிறார்கள். 

இப்படி எத்தனையோ முன்னேற்றம் அடைந்து கொண்ட இந்த கால தொழில் நுட்பம் பொது மக்களை வானியல் ஆராய்ச்சி செய்ய அழைக்கிறது. தொலை நோக்கி மூலம் வானில் ஏற்படும் அதிசயங்களை கண்டு தர சொல்கிறது. 

ஒருவரின் கண்ணுக்கு தெரிவது மற்றொரு கண்ணுக்கு வேறொன்றாக புலப்படலாம். பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த பணியில் இறங்கி எந்த ஆராய்ச்சி பட்டம் பெறாத ஒருவர் ஒரு புது கிரகத்தை அதுவும் பூமி போன்ற கிரகத்தை சமீபத்தில் கண்டு பிடித்தார். 

சந்திர கிரகணம். சூரிய கிரகணம். பாம்பு விழுங்கிய கதை எல்லாம் இன்னமும் நினைவில் இருக்கிறது. இன்றும் கூட கிரகணம் சமயங்களில் வெளியில் வர வேண்டாம் என கட்டுபாடுகள் விதிக்கிறார்கள். 

வானத்தில் அதிசயங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. வெடித்து சிதறும் பல நட்சத்திரங்கள். குட்டியாய் தோன்றும் நட்சத்திரங்களில் தண்ணீர் சிதறும் மர்மங்கள். இன்னும் இன்னும்.

ஒரு நாள் இரவில் தனியாய் மகனுடன் நடந்து கொண்டு இருந்தேன். வானத்தைப் பார்த்தவன் அதோ நிலவுடன் ஒரு நட்சத்திரம் என்றான். வானில் பறக்கும் விமானமாக இருக்கும் என்றேன். இல்லை இல்லை அது நேர்கோட்டில் அமைந்த நட்சத்திரம் என்றான். படம் எடு என வற்புறுத்த வேண்டாம் என மறுத்தேன். 

மறுநாள் மீண்டும் இரவில் நடந்தோம். அதே நிலா, அதே நட்சத்திரம். படம் எடுத்தே ஆக வேண்டும் என சொன்னான். படம் எடுத்தேன். வானியல் ஆராய்ச்சி விருப்பம் உடையவர்கள் ஒரு தொலைநோக்கியுடன் வானத்தைப் பாருங்கள். அதிசயங்கள் கிட்டும். 


வானில் எத்தனையோ அதிசயங்கள். இறைவன் மட்டும் தென்படுவதே இல்லை. 

Tuesday 31 January 2012

கூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்

நான் internet explorer அதிகம் உபயோகம் செய்வது கிடையாது. நான் மிகவும் விரும்பி உபயோகம் செய்வது google chrome. மின்னல் வேகத்தில் வேலை செய்யும். அதைப்போல எதாவது தளம் வைரஸ் போன்ற விசயங்களால் தாக்கப்பட்டு இருந்தால் காட்டி கொடுத்துவிடும். அதனால் எப்போதும் கூகுள் குரோம் தான் எனக்கு சிறந்த ஒன்று. 

அதுவும் இந்த வலைப்பூ எழுதுவது என்றால் குரோம் அல்லது ஆப்பிள் சஃபாரி. ஆப்பிள் சஃபாரியில் என்ன பிரச்சினை என்றால் நேரடியாக பின்னூட்டத்தில் தமிழ் வைத்து எழுத முடியாது. கூகுள் சென்று அங்குதமிழில் மாற்றி எழுதி அதை கொண்டு வந்து பின்னூட்டத்தில் வந்து பதிவிட  வேண்டும். அதனால் படிக்கும் வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை. அதனால் சுயநலமியாக எனது வலைப்பூவில் மட்டும் பின்னூட்டம் எழுதிவிட்டு அவ்வப்போது ஒவ்வொரு வலைப்பூவிற்கு பின்னூட்டம் இடுவது உண்டு. 

கூகிள் குரோம் என்னவென்றால் பதிவுக்கு கீழே வைத்திருக்கும் பின்னூட்ட பெட்டியில் மறுமொழி பதிவு போட இயலாது. அதுவே மற்றொரு பக்கத்தில் வரும் பின்னூட்ட பெட்டி என்றால் எளிதாக பின்னூட்டம் எழுத முடியும். இப்படி இருப்பதால் குரோமில் படித்துவிட்டு பின்னர் எக்ஸ்ப்லோறேர் சென்று போதும் என்றாகிவிடும். 

பொதுவாக பின்னூட்டம் எழுதுவது அந்த நேரத்தில் எழுதுவதும், சிறிது நேரம் பின்னர் எழுதுவதும் வித்தியாசமாக இருக்கும். சிந்திக்க அவகாசமே தரக்கூடாது என்பதுதான் நான் படிக்கும்போது நினைப்பது. படித்தவுடன் பளிச்சென ஒரு எண்ணம் வரும், அதுதான் எனக்குப் பிடித்த  பின்னூட்டம். சிறிது நேரம், சிறிது நாட்கள் கழித்து எழுதினால் மொத்த சிந்தனையும் வேறு மாதிரி இருக்கும். 

நண்பர் கிரி பதிவில் குரோம் பற்றி எழுதி இருந்தார். இந்திய மக்களுக்கு நான் அனுபவிக்கும் சோதனைகள் வருமோ என்னவோ. 

சில மாதங்கள்தான் இந்த பிரச்சினை. அதுவும் புதிய வலைத்தள வடிவமைப்புக்கு சென்ற பின்னர் என கருதுகிறேன். ஏதாவது தொழிநுட்பம் தெரிந்தால் சொல்லுங்கள். 

இத்தருணத்தில் மேலும் சில நாட்கள் நீட்டித்தமைக்கு நேசம் குழுவுக்கு நன்றி. கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். தமிழ் படுத்தும் பாடு!