Friday 10 February 2012

புற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை

முன்னுரை :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, பலரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு அரிய வாசகம். வாழ்வில் நடந்து கொள்ளும் முறைகள் பொருத்தே இந்த நோய்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குகின்றன. வாழ்க்கை முறையில் உணவு, சுற்றுப்புறம் என பல காரணிகள் சுகாதார வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கின்றன. புற்று நோயானது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் உருவாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட புகையிலை, சிகரெட், கதிரியக்கம், சில வேதி பொருட்கள் சூரிய ஒளி என பல தெரிந்த காரணிகளும், சில தெரியாத காரணிகளும் அடங்கும். வருமுன் காப்போம் என்பதுவும், நோயினை முற்றிலும் குணப்படுத்துவது காட்டிலும் அதனை தடுப்பது  மிக சிறந்தது எனவும் நோய் பற்றிய அறிவு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் இது குறித்த சிந்தனைகள் அறிந்திருத்தல் மிகவும் அவசியம் ஆகிறது. 

நோய் தீர்க்கும் மருத்துவம்: 

ஒரு நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதற்குரிய மருத்துவத்தை செய்ய வேண்டும் எனும் சிந்தனையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தங்களுக்குள் ஏற்படும் மன சோர்வு, உடல் வியாதிகள் என அனைத்திற்கும் மருந்து வகைகளை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்து தங்களது வியாதிகளை அந்த காலகட்டத்தில் குணப்படுத்தி இருக்கிறார்கள். புற்று நோயிற்கு கூட ஒரு தாவரத்தில் இருந்தே மருந்தனாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புற்று நோயினை முற்றிலும் தீர்க்க முடியாவிட்டாலும் அதனை தடுக்கும் முறையினை இன்று மருத்துவத்தில் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். 

நோய்தனை ஆரம்ப நிலையிலே தடுக்கும் வாய்ப்புகளை இப்போது மருத்துவ உலகம் உருவாக்கி கொண்டு வருகிறது. முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் புற்று நோய் முதலான மிகவும் கடுமையான நோய்களை தடுத்து நிறுத்த இயலும். கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்ப்பதன் மூலம் நோய்களை தடுக்க இயலும். கீமோதெரப்பி எனப்படும் மருத்துவ முறைகள் கொண்டு, எக்ஸ் ரே, காமா கதிர்கள் மூலம் இந்த புற்று நோய்தனை கட்டுபடுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த எக்ஸ் ரே, காமா கதிர்கள் அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யப்பட்டால் அவைகளே புற்று நோய் உருவாக்கவல்லவை. 

புற்று நோய்கள் வகைகள்: 

புற்று நோய் தலை முதல் கால் வரை வரக்கூடிய ஒன்றாகும். இந்த புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோய்தனை விரைவில் குணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய் தனை அகற்றலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. இதன் காரணமாக இந்த புற்று நோய் தனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதால் தடுக்கலாம். 

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது போல் புற்று நோய்தனை அறுபத்தி நான்கு வகைகளாக பிரித்து உள்ளார்கள், அதில் மூளை புற்று நோய், எலும்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், ரத்த புற்று நோய், மார்பக புற்று நோய், கருக்குழல் புற்று நோய், ஆண் பெண் பிறப்பு உறுப்பு புற்று நோய், தோல் புற்று நோய், வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், ஆண் இனப்பெருக்க சுரப்பி புற்று நோய், கணையம் புற்று நோய், வயிற்று புற்று நோய் மற்றும் மூச்சு குழல் புற்று நோய் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. 

ஒவ்வொரு புற்று நோயிற்கும் ஒவ்வொரு அறிகுறிகள் தென்படும். இந்த புற்று நோயானது உடனே நாம் உடல் பாகத்தை தடவி பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாது. இந்த புற்று நோய் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்து உடலெல்லாம் பரவி மனிதர்களை கொல்லும் வலிமை உடையது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் பட்சத்தில் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைகிறது எனலாம். 

பரிசோதனை செய்ய பயம் ஏன்:

மனிதர்களில் பலர் மருத்துவம் பார்க்கவே மிகவும் அச்சப்படுகிறார்கள்.  கிராமங்களில் காவல் நிலையத்திற்கு சென்றாலே கௌரவ குறைச்சல் என்பதை போல மருத்துவமனை பக்கம் செல்வது என்றால் தான் நோயாளி என்பது போன்ற உணர்வுகள் வருவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். வெளிநாடுகளில் எல்லாம் பெண்களுக்கு கருவாயில் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு அனுப்புவார்கள். இந்த பரிசோதனை இலவசமானது, ஆனால் பெரும்பாலான பெண்கள் இது போன்ற அழைப்புகளை அலட்சியபடுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அலட்சியபடுத்துவதன் மூலம் தங்கள் உயிருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடலை பேணி காப்பதில் தான் உயிர் காப்பதின் ரகசியம் இருக்கிறது என்பதை இத்தனை தெளிவாக எவரால் சொல்ல இயலும். மருத்துவ தொழில் நுட்பம் பெருகிய இந்த காலகட்டத்தில் புற்று நோயிற்கான உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. 

பரிசோதனை வகைகள்: 

நமது உடலில் புற்று நோய் உருவானால் அதை எதிர்க்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த புரதமானது ஆன்டிபாடி என சொல்வார்கள். புற்று நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பது மூலம் புற்று நோய் தடுக்கலாம். இந்த பரிசோதனையில் ஒருவேளை இந்த எதிர்ப்பு ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்க இயலாமல் போக வாய்ப்பும் உண்டு. எனவே வேறு சில பரிசோதனை முறைகளும் உபயோகிக்கலாம். 

நமது உடலில் புற்று நோய் ஏற்பட்டால் சில வேதி பொருட்கள் உடலில் அதிகரிக்கும், இந்த வேதி பொருட்களை பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான புற்று நோய் வந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் ஆல்பா பிட்டபுரதம், புற்றுநோய் ஆண்டிஜென் போன்றவை ஆகும். மேலும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் புற்று நோய் வந்தால் இந்த பொருட்கள் அளவு மாறுபடும் அதை வைத்து புற்று நோய் கண்டு பிடிக்கலாம். இவை எல்லாம் மிக மிக ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க கூடிய வசதிகளாகும். 

சிறிது பெரிதானாலும் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உண்டு. உடலை ஸ்கான் செய்து இந்த புற்று நோய் கண்டுபிடிக்கலாம். பெட் ஸ்கான் என சொல்வார்கள். மேலும் உடலில் ஏதாவது கட்டி இருகிறதா என உறுப்புகளின் அளவினை பார்த்து சொல்வதும் உண்டு. இப்படி பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டபின்னர் உரிய மருத்துவ முறையினை பின்பற்றினால் புற்று நோய்தனை தடுக்கலாம். 

விழித்து கொள்ளுங்கள்: 

புற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் எனும் உணர்வை அகற்றிவிட்டு புற்று நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு அந்த நோயின் தன்மையில் இருந்து காத்து கொள்ளலாம். தற்போது கரு உருவானதும் அந்த கருவில் மார்பக புற்று நோயிற்கான மரபணு இருக்கிறதா எனும் அளவிற்கு கரு பரிசோதனை எல்லாம் தற்போது மருத்துவத்தில் வந்துவிட்டது. இதை எல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் ரத்த தான முகாம், கண் பார்வை முகாம் போன்றது போல, புற்று நோய் முகாம் நடத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். 

இதுகுறித்த அறிவினை எங்கும் பரப்பிட பல அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, அந்த அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து மக்களை அறியாமையில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும். 

முடிவுரை:

புற்று நோயிற்கு முற்று புள்ளி வைக்க பரிசோதனை முறைகள் மிகவும் உதவி புரியும் என்றாலும் இது குறித்த அறிவு அனைவருக்கும் அவசியமாகும். அதனை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்திட போராடுவோம். 

Monday 6 February 2012

கோவம் ஏனய்யா? நாம சாவது

தமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை. 

வீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை. 

ஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'. 

அவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள். 

ஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது. 

இந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை. 

கோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது? அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும்? எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன். 

சாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமதை அதிகமாகவே இருக்கிறது. 

ஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை? புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது. 

கோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது  மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது. 

சினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும். 

நியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன்.  மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள். 

கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி. 

Friday 3 February 2012

ரஜினிகாந்தும் இலக்கியமும்

ரஜினி இலக்கிய விழாவில் பங்கு எடுக்க போகிறார் என்றதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த மனிதருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என நினைப்பு வந்து அமர்ந்தது. அதோடு நான் இது சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வலைப்பூ ஒன்றில் படித்தபோது எஸ் ரா மீதான குற்றச்சாட்டு கண்டு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என யோசிக்க வைத்தது. 

அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான். 

இத்தனைக்கும் எஸ் ரா எனது பக்கத்து ஊர்க்காரர். நான் அவரை பார்த்தது இல்லை, படித்தது இல்லை. எடின்பரோ நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த 'உறுபசி' கூட இன்னமும் புத்தக அலமாரியில் உறங்கி கொண்டிருக்கிறது. சில முறை எடுத்து பார்த்துவிட்டு வாசிக்காமல் வைத்து இருக்கிறேன். சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஊரில் இருந்தவரை சில புத்தகங்கள் கல்கத்தாவில் இருந்த நூலகங்களில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன். என்னுடன் படித்த அன்பழகன் சார், எனது சீனியர் அண்ணாதுரை சார் இவர்கள் எல்லாம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வாரம் வாரம் அள்ளிக்கொண்டு வந்து படிப்பார்கள். ஆச்சர்யபட்டு இருக்கிறேன். 

இப்படி இலக்கியங்கள் படைத்து கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் இடையே போட்டி பொறாமை என்றெல்லாம் அந்த வலைத்தளத்தில் படித்தபோது மிக மிக வருத்தமாகவே இருந்தது. மனதில் என்னவெல்லாமோ எழுத தோன்றியது, பின்னூட்டம் எதுவும் இடாமல் வந்துவிட்டேன். ஏனெனில் சென்னையில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளமால் என்ன சொல்வது எனும் மனநிலைதான். எப்போது இந்த இலக்கிய விழா நடக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் ரஜினியும் எலக்கியமும் என தலைப்பிட்டு ஒன்றை எழுத நினைத்தபோது ரஜினியின் பேச்சை கேட்காமல் எழுதக் கூடாது என தள்ளிவைத்தேன். அது மிகவும் சரியாக போய்விட்டது. ரஜினிகாந்தும் இலக்கியமும் என நன்றாகவே தலைப்பிட்டு எழுத வைத்தது. 

ரஜினி மேடை பேச்சுகளில் எப்போதுமே குட்டி குட்டி கதை சொல்வார். அந்த கதையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். எழுத்து என்பதன் வலிமை என்ன என அவர் பேசிய பேச்சு அற்புதம். அதிலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான கதையை சொல்லி அதற்கு பின்னர் அவர் முடித்த விதம் அட்டகாசம். அந்த கதையின் கடைசி வரிகள் தான் ரஜினி ஒரு சிறந்த இலக்கியவாதி என காட்டியது. என்ன சொல்கிறாய் என்பதல்ல எழுத்து, எப்படி சொல்கிறாய் என்பதுதான் எழுத்து. 

எத்தனை விசயங்கள். தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். இதைவிட அந்த வலைத்தளத்தில் எழுதி இருந்த குற்றச்சாட்டுதனை பொடிபொடியாக்கும் வண்ணம் எப்படி இந்த விழா நடக்க காரணமானது என அவர் சொன்ன விதம் எப்படியெல்லாம் உலகில் பிறர் பொய் பேசித் திரிகிறார்கள், வன்மை வைத்து திரிகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினி ஏமாறவில்லை. ஏமாற்றவும் இல்லை. 

தமிழ் எழுத்தாளர்கள் என ஜெயமோகன், சாருநிவேதிதா ( இவரை பலநாட்கள் பெண் எழுத்தாளர் என்றே நினைத்து இருந்தேன், சுஜாதாவை நினைத்தது போல) இவர்களுக்கு இடையே நடக்கும் எதோ அறபோராம் , அக்கப்போராம் அதையெல்லாம் படித்து எழுத்தாளர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் எனும் நினைப்பை அகல வைத்தது ரஜினியின் பேச்சு. 

இவரது பேச்சை கண்டு ரசிக்க இதோ இங்கே. இரண்டாம் பகுதி. 

ஒரு குட்டி சுயசரிதை எழுதப்பட்டு விட்டதாம். பிறர் மனம் நோக வேண்டாம் என வெளியிடவில்லை என அவர் சொன்னதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.