Sunday 22 November 2015

நமது திண்ணை நவம்பர் மாத இணைய இதழ்

சற்று தாமதமாகவே வெளிவந்த இந்த இணைய இதழில் எப்போதும் போல வழக்கமான இராமானுசர் தொடர் இல்லாதது ஒரு குறையாகவே தெரிந்தது. பல வேலைகள் காரணமாக உடனே இந்த இதழை வாசிக்கவும் இயலவில்லை. வேலைக்கு முன்னுரிமை தரும்போது தமிழ் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த இதழின் ஆசிரியருக்கு பெருமளவில் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  ரிஜ்ஜியின் மழலைக் கடிதம் மிகவும் கவலை தரக்கூடிய கவிதை. இந்த உலகம் மிகவும் பொல்லாத ஒன்றாகவே தெரிகிறது. இறைவனுக்கு வணக்கங்கள் எனத் தொடங்கும் கவிதையில் நிறைய வலிகள். பெண்ணாக பிறப்பது பெரும் இடர் என இந்த கவிதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. பல இழிநிலை மனிதர்களால் குழந்தைகள்  படும் பெரும் துயரத்தை பல வரிகளில் நாம் காணலாம். இவ்வுலகம் மாற வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்கிறது.

உதயாவின் புகையிலை தவிர்ப்போம் எனும் விழிப்புணர்வு முத்தம் குறித்த கதை. ஒரு விஷயத்தை சமூகத்திற்கு சொல்ல முற்படும்போது வலி தரும் விசயங்களை சொல்லும்போது மனதில் படியும் என்றே எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் கதைப்பாத்திரங்கள் அத்தனை பாதிப்பை நம்மில் உண்டாக்குவது இல்லை. புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் என பல பழக்கவழக்கங்கள் உடல் நலத்திற்கு இடையூறு என சொன்னாலும் இன்றும் பெரும்பாலான மனிதர்கள் அதை விட்டுவிட்டதாகத் தெரியவில்லை.

அழகிய ஓவியங்கள் மிகவும் சிறப்பு. ஓவியங்கள் நமக்கு பாடம் நடத்தும். கொக்கின் வாயில் இருக்கும் மீன், கண்ணாடியில் விசித்திர முகம் என ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் சொல்லவே வரையப்பட்டு இருக்கும்.

அவளதிகாரம் மகளதிகாரம் அவனதிகாரம் எல்லாம் எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் அந்தந்த வரிகளில் வாழ்ந்து விடுகிறார்கள். முடி கலைவதே இன்பம். தேவதையுடன் உலா வருகிறேன். மௌனம் எப்போதுமே அழகு. பெரிய ஆபிசராம். என்னிடம் குழந்தையாகிப் போவான். சோறு ஆக்கிடுவான். குருடாக ஆசை. நானும் எத்தனையோ அவளதிகாரம் எழுதி இருக்கின்றேன் என்றே கருதுகிறேன். இதற்கு காரணம் எவர் என என்னைக் கேட்டால் அன்றில் இருந்து இன்று வரை பல பெயர்களை சொல்ல இயலும். எவரேனும் ஒருவர் கருப்பொருளாகி நிற்பார்கள். அதை எவராலும் அறிந்து கொள்ள இயலாதபடி எனது எழுத்து அமைந்து விடும்.

மெழுகுவர்த்திகள் குறித்து மேலும் பல விபரங்கள் தந்து இருக்கலாம். எங்கே செயல்படுகிறது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் யார் யார். எத்தனை வருடமாக தொண்டு புரிகிறார்கள், அவர்களை தொடர்பு கொள்வது எப்படி போன்ற விபரங்கள் இல்லாமல் இருப்பது முழுமையற்று இருக்கிறது. ஆசிரியர் இதை அடுத்தமுறையாவது இணைத்தால் நன்றாக இருக்கும்.

உதயாவின் கபாலி மிகவும் நகைச்சுவையான அதே வேளையில் நல்லதொரு கருத்து சொல்லும் கதை. ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என எனவும் சில அபத்தமான காரியங்கள் நல்லதில் சென்று கூட முடியும்.

நவராத்திரி விழாவா, பண்டிகையா சுசீமா அம்மா அவர்களின் பயன்மிக்கத்  தொடர். இதுவரை படி அமைத்து கொலு பொம்மைகள் எல்லாம் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. இந்தத் தொடரில் குறிப்பிட்டபடி பாடல்கள் பிறர் வீட்டுக்குச் செல்லுதல் எல்லாம் நான் கண்டதே இல்லை. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடுவோம். கலப்பை, புத்தகம் என கொண்டாட்டம் இருக்கும். தனிப்பட்ட சமூகம் கொண்டாடுமா, அல்லது எல்லா சமூகத்தினரும் கொண்டாடுவார்களா எனத் தெரியாது. சகோதரி ஷக்திபிரபா கூட இதுகுறித்து எழுதியாக ஞாபகம். எப்படி எடுத்துக் கொண்டாலும் இந்த நவராத்திரி ஒரு விழாதான். ஒன்பதாம் எண்ணுக்கு உரிய பலன்கள். நிறைய விசயங்களை உள்ளடக்கிய பகுதியை அனைவரும் பயன்பெறும் வண்ணம் எழுதி இருப்பது வெகு சிறப்பு. எல்லாமே புதிய விசயங்கள்தான்.

ஆசிரியரின் திரு தனஞ்ஜெயின் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு. தேசிய விருது பெற்ற ஒரு எழுத்தாளர். ஒரு தயாரிப்பாளர். சினிமா குறித்த அவரது பார்வை மிகவும் சிறப்பு. அவர் தொழில் குறித்த தொடர்பான கேள்விகள் எல்லாம் சிறப்பு.

நண்பர் ரவியின் கிச்சன் டைம் பால் பேடா. இது பால்கோவாவுக்கு சளைத்தது அல்ல என்றே கொள்ளலாம். எவரேனும் செய்து பார்த்தவர்கள் எப்படி வந்தது என சொன்னால் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

டிவிட்டரில் சிந்தனை எல்லாம் எப்படி இருக்கும் எனில் சமூகத்தில் சினிமா முதற்கொண்டு அரசியல் வரை ஏதும் பிரச்சினை எனில் அனைவருமே அது குறித்து தங்களது எண்ணங்களை பதிவு செய்வார்கள். அப்படித்தான் துவரம் பருப்பு குறித்த சிந்தனையை இதில் காணலாம்.

உமாக்ருஷ் அவர்களின் பாடல் பரவசம். இந்த பாடலை நான் கேட்டதே இல்லை. வித்யாசாகரின் இசை மிகவும் மென்மையாக இருக்கும். பாடல் வரிகள் என்னவெல்லாம் சொல்ல வருகிறது என மிகவும் தெளிவாக ஆராய்ந்து இருக்கிறார். நல்ல நல்ல பாடல் வரிகள். எப்படி பாடுவது என்பதே இந்த பாடலுக்கான வெற்றி.

மதிப்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்.

பத்து இதழ்கள் கண்ட நமது திண்ணை தனது எல்லையை விரிவாக்கி இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளை தன்னுள கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா. அற்புதமான நமது திண்ணை இணைய இதழ் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்.


No comments: