Sunday 22 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) -1

அம்மா - சௌம்யா அவர்களின் கவிதைத்தொகுப்பு மின்னூல் வடிவில். பல புத்தகங்கள் வெளிவர வேண்டுமென வாழ்த்துகிறோம்.

'சமூகத்தலைவி' மீனம்மாகயலின் அட்டைவடிவமைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிஞ்சு கால்களை தாயின் கரங்கள் அள்ளி குவிப்பது போல அமைந்து இருக்கிறது. அம்மா என்ற எழுத்தில் வைக்கப்பட்ட அழகிய சிவந்த நிற பொட்டு. மின்னூல் எவ்வித வண்ணம் இல்லாமல் கருப்பு வெள்ளை வடிவில் அமைந்து இருக்கிறது. எளிமைதான்.

அறிமுகமே இப்படித்தான் தொடங்குகிறது. 'அரட்டைகேர்ள்' என்ற பெயரில் 2011 முதல் ட்விட்டரில் இயங்கி வரும் சௌம்யா கோவையைச் சேர்ந்தவர் என. அவர் எழுதிய பல கவிதைகளின் தொகுப்பாக இந்த மின்னூல் இலவசமாக இங்கு  பெற்றுக் கொள்ளலாம். மின்னூல் விற்பனைக்கு கூட பண்ணலாம் என இப்போதுதான் தெரியும். இந்த கவிதைத் தொகுப்பை எப்படி வாசிப்பது என சென்றால் மொபைல் போனில் இதற்குரிய அப்ளிகேசன்ஸ் தரவிறக்கம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது. உடனே தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கியாகிவிட்டது. வலைதளம்  பேஸ்புக், ட்விட்டர் என தமிழில் இவரது இயக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. ட்விட்டர், வலைதளம் பார்த்தது உண்டு. பேஸ்புக் பார்த்தது இல்லை.

1. கிடா

இந்த கவிதையை ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. எனது கிராமத்தின் நிகழ்வை கண்ணுக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்திய ஒரு அற்புதமான கவிதை. கிடா எப்படி எல்லாம் அன்புடன் ஓடியாடி திரிந்தது என கவிதையாக நிற்கும். 'சாமி ஆடு, கைய கிய்ய வைச்சீங்க' என அப்படியே அந்த நிகழ்வு. அதுவும் அந்த கடைசி வரியில் கவிதைக்கான உயிர்நாடி.

2.  அம்மா

வேண்டாம். ஒரு தாயின் மரணம் பற்றி எழுதவே வேண்டாம். ஜில்லுனுதானே இருக்கு என்ற வரி படித்தபோது ஒரு இனம் புரியாத நெருடல். தாயை இழந்த பின்னர் எப்படி எல்லாம் நாம் தாயிடம் சொல்லிக்கொள்வோம் என்பது போன்ற உணர்வினை அழகாக தென்பட்டு இருக்கிறது

3. அப்பா

அப்பா அடித்ததேயில்லை. ஆமாம். பலருக்கும் பரிச்சயமான வரி. ஒரு தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான வரிகளில் தெளிவாகத் தெரிகிறார் அப்பா. 'நீ குழந்தை தானேடா' இப்போது கூட இதே வார்த்தைகளை என் தந்தை என்னிடம் சொன்னது உண்டு.

4. கணவன்

முத்தம் ரகசியம் தாம்பத்யம் வளவிக்கீறல் என சொல்லி சோகமான ஒரு கவிதைதான் என்பது கடைசி வரியில் தென்பட்டது.

என்ன இது எல்லா கவிதைகளுமே ஒரு வலியின் தடமாக இருக்கிறதே என்று யோசித்தேன். அடுத்து வந்தது பருவம்

5. பருவம்

குழந்தமை, பால்யம் பதின்மம் என சொல்லி ஒரு சிறுமியின் பருவம் எய்த நிலையை சொல்லிச் சென்றது கவிதை. முதுமை எல்லாம் சொல்லாமல் பருவம் என்றால் பருவமாக இருந்தது.

6. மோகமுள்

இது ஒரு நாவலின் தலைப்பு. உவமைகளைத் தாங்கி வந்திருக்கும் கவிதை. அடர்ந்த வனம். கருத்த தீவு. அதரம், இதழ் நெற்றி, கன்னம் கழுத்து என வார்த்தைகளில் நிறையவே மோகம் தாண்டவமாடுகிறது. மீசை குறித்த பார்வை சிறப்பு.

7. ஞானம்

புத்தனின் ஞானம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரு அழகிய கவிதை. பற்று வைப்பதில் விலகி இருப்பதே துறவறம். பற்று கொண்ட ஒன்றை விட்டு விலகிடுவதெ ஞானம் யசோதரா.

8. மரப்பாச்சி

மரப்பாச்சி பொம்மைகள். தனியாய் மாலையணிந்து வலி சொல்லும் கவிதை இது. சின்ன சின்ன வரிகளில் அதிரவைக்கும் கவித்துவம் தென்படுகிறது.

9. வான்சிறப்பு

வள்ளுவரின் வரிகள் கொண்ட தலைப்பு. மழை என்றால் என்ன எப்படியெனினும் மழை பிரமிப்பு. மழை நினைவுபடுத்திச் செல்லும் கவித்துவம்.

10. உறக்கம்

உறக்கம் மட்டும் இல்லையெனில் இவ்வுயிரின் இயக்கம் ஏதும் இல்லை. உறக்கம் ஒரு வரம். கவித்துவ வரிகளால் சிறப்பிக்கப்பட்ட உறக்கம்.

11. உதிரா நினைவு

அண்ணனின் பிறந்த தினம் குறித்த கவிதை என வாசிக்கத் தொடங்கினால் அம்மாவின் அன்பைச் சொல்லும் அழகிய கவிதை.

12. அவள் பெயர் அட்சயா

பொம்மை குறித்த பொருள் பொதிந்த உயிர் நிறைந்த கவிதை. இதுபோன்ற கவிதைகள் எல்லாம் மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமல்ல நம்மோடு எளிதாக இணைந்துவிடும் கவிதை. நமது நினைவுகளை கிளறிவிடும் கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

13 மிச்சங்கள்

மீண்டும் ஒரு பழைய நினைவுகளை அசைபோடும் கவிதை. பாத்திரங்களில் பெயர் பதிப்பார்கள். மனித பாத்திரங்களுக்கும் பெயர் வைப்பார்கள்.

14 வலி

பெயர் குறித்த வலி நிறைந்த கவிதை.

15 வன்முறை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை சொல்லும் கவிதை. முதலில் வாசிக்கும்போது என்னவோ என நினைக்க கடைசியில் ஒரு உணர்வின் மீதான வன்முறையை அழகாக விவரிக்கும் கவிதை

16 மகள்

இந்த கவிதையைப் படித்தவுடன் ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து போனது. எதற்கு மகள் வேண்டும் எனும் எனது எழுத்து கூட ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடுதான். நல்ல வரிகளுடன் தொடக்கம். பெண் குழந்தை என்றால் மிகவும் இஷ்டம் போல. அருமையான வெளிப்பாடு.

17. முத்தம்

காதல் முத்தம் அட்டகாசம்.

18 கண்ணீர்

அழுகையில் வடிந்து போனதென் அத்தனை ஆதங்கங்களும், அவமானங்களும், கோபங்களும் இயலாமையும். மனவலி நிவாரணி.

19. காதலிக்கப்படுதல்

காதலிக்கப்படுதல் கடைநிலை மனிதருக்கும் சந்தோசம் தரும். காதலிக்கபடுவதால் என்னவெல்லாம் நடக்கும் எனவும் புரியலாம்.

19. விஷூ

அம்மா முகத்தைத்தான் வெறிக்கிறது பார்வை.

ஒரு நிகழ்வை விவரிக்கும் கவிதையில் சில வரிகளே அந்த நிகழ்வின் சிறப்பம்சம்.

கவிதாயினி சௌம்யாவின் அம்மா அற்புதமாகவே இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் நூலுக்கு நான் எனது எண்ணத்தை  எழுதுவது இதுவே இரண்டாவது தடவை என்றே கருதுகிறேன்.

(தொடரும்)


No comments: