Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.


No comments: