Sunday 24 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா

7. இந்து அடையாளமிலி - ரோஸாவசந்த் ( கருத்து)

பல விசயங்களை அலசி ஆராய்ந்து இருக்கும் கட்டுரை என்றால் மிகையாகாது. இணைய பரபரப்பு என்று தொடங்கி நாவல், இந்து, இந்துத்வா என பயணித்தபோது எனக்கு சற்று குழப்பம் நேர்ந்தது உண்மை. எப்போது ஒருவர் தெளிவு இல்லையோ அப்போது ஒருவர் குழப்பம் அடைவார். எனக்கு இந்த கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தத் தெளிவு இல்லை என்பதால் எனக்கு குழப்பம் நேர்ந்தது உண்மை. கட்டுரையை இரண்டு முறை வாசித்தபின்னர் ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது. மாதொரு பாகன் நாவல் குறித்தும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், அதன் பின்னணி அலசி இருக்கிறது. சாதியம் குறித்த விசயங்களை திரைப்படம், படைப்புகள் எப்படி கையாண்டன என்பது என்னைப்போன்று  அறியாமையில் இருப்போருக்கு  வைக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு படைப்பை எப்படி எல்லாம் சாதகமானவர்கள், பாதகமானவர்கள் கையாள்வார்கள் என்பது இந்த மாதொருபாகன் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தனில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் காலப்போக்கில் இதை எல்லாம் மறந்து போவார்கள். அப்படி ஒரு பரபரப்பு என்பது கால காலத்திற்கும் நிலைத்து நிற்காவண்ணம் இயங்குவதுதான் ஊடகத்துறை. இந்துத்வர்கள், யார் இவர்கள், எப்படி இந்த விஷயத்தை நோக்கிச்  சென்றார்கள் எனத் தொடங்கி இந்து, காந்தி என பெரும் சுற்று சுற்று வந்து இருக்கிறது இந்த கட்டுரை.

இந்துத்வா என்றால் என்ன? எனக்கு இதுபற்றி தெரியாது என்பதால் சற்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்துத்வா என்ற வார்த்தை 1923ம் ஆண்டு விநாயக் தாமோதர் சவார்கர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 1989ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கையாக எடுத்துக்கொள்ள , விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாம் இதை முன்னிறுத்தி செயல்பட்டன.

According to the Oxford English Dictionary, Hindutva is an ideology seeking to establish the hegemony of Hindus and the Hindu way of life. According to theEncyclopedia Britannica, "Hindutva ('Hindu-ness'), [is] an ideology that sought to define Indian culture in terms of Hindu values". (விக்கிப்பீடியா) 

மேற்குறிப்பிட்ட விஷயத்தை மொழிப்பெயர்ப்பு செய்தால் இந்து யார் எனும் கேள்வி வரும்? இந்து என்றால் என்ன? இந்துக்களின் மதிப்பு என்ன? Hindu as one who was born of Hindu parents and regarded India as his motherland as well as holy land. (விக்கிப்பீடியா) 

இப்போது எனக்கு எனது தாத்தாவிற்கு தாத்தா அதற்கு முன்னர் இருந்த தாத்தா பாட்டி எல்லாம் இந்துக்களாக இருந்தார்களா எனும் கேள்வி எழுகிறது. எனது சந்தத்தி இந்தியாவை விட்டு வெளியேறியதால் அவர்கள் தாய்நாடு வேறு என்பதால் இந்து எனும் அடையாளம் இழந்து விடுகிறார்களா? எதுவும் எனக்குத் தெரியாது. இந்துத்வா என்றால் ஒரே குலம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அதாவது சமஸ்கிருத கலாச்சாரம். அப்படிப்  பார்த்தால் இந்தியாவின் நிலை என்ன ஆவது. இந்த கட்டுரை இந்துத்துவம் பற்றி நிறைய எழுத்தாளர்களின் நிலை, மற்றும் ஒரு நாவல் குறித்து எழும் சூழல் விவரிக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கருத்து சமூக கருத்தாக முடியாது. அதே வேளையில் தனிப்பட்ட மனிதனின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் எனில் அது சமூக கருத்து ஆகும்.

எந்த ஒரு இந்துவும் தன்னை இந்துத்வா என அடையாளம் காட்டிக்கொள்ள அச்சம் கொள்வார். இதற்கு காரணம் இந்துத்வா தன்னை முன்னிறுத்தும் விசயம். ஒரு இந்து எப்படி இருப்பார் என மகாத்மா காந்தி குறித்து எழுதியதைப் படிக்கும்போது எதற்கு கோட்சே ஒரு இந்துத்வா என புரியமுடிகிறது.

மனிதர்களில் இரண்டு வகை ஒன்று மிதவாதிகள், மற்றொன்று தீவிரவாதிகள். மதவாதிகள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே வலம் வருகிறார்கள். இந்த கட்டுரையில் சொல்லப்படும் இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு எனும் கருத்து பலருக்கு ஏற்புடையதே. ஒரு இந்து என்பவர் பிறரை துன்புறுத்தமாட்டார் என்பது பொது கருத்து . ஆனால் ஒரு இந்துத்வா இந்துவை கூட துன்புறுத்த தயங்கமாட்டார். 

இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய  மக்கள் கூட்டம் , திைாதிராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இது சற்று ஆச்சரியமான வாக்கியம். தான் ஒரு இந்து என்பதால் பிறரை சகித்துக்கொள்ளும் தன்மை உண்டு, மேலும் தனது மதத்தை முன்னிறுத்தி எந்த ஒரு இந்துவும் நடப்பது இல்லை. சாதியின் அடிப்படையில் செயல்படும்போது அங்கே இந்து என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இந்து அடையாளமிலி என இந்த கட்டுரை எழுப்பிய சிந்தனைகளுக்கு கட்டுரையாளர் ரோஸாவசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. 

8. லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை - லேகா இராமசுப்ரமணியன் (விமர்சனம்)

ஒரு நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும் என இந்த விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. தீவிர சிந்தனை கண்மூடித்தனத்தை எதிர்க்கும் என்பதான வாசகம் போற்றத்தக்கது. அந்த தீவிர சிந்தனை மதம் எனும் போர்வையில் நிகழும் போது  மதம் ஒரு கண்மூடித்தனம் என்ற நிலை உண்டாகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எழுத்தாளர் நிச்சயம் அதன் வலியை மிகவும் திறமையாக சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதே இந்த நாவல் குறித்த விமர்சனம் மூலம் அறிய முடிகிறது.  எப்படி அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்க்கின்றன என்பது பலரும் உணர்ந்த ஒன்றுதான். நாவல் குறித்து ஆவல் எழுப்பியமைக்கு லேகா அவர்களுக்கு மிக்க நன்றி. 

9. அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது - தமிழில் எம். ரிஷான் ஷெரீப் (மொழிப்பெயர்ப்பு)

சினுவா ஆச்சிபி என்பவரின் சிறுகதையை மொழிபெயர்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. சினுவா பற்றிய குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. வித்தியாசமான சிறுகதை. படித்த மனிதன் ஒருவன் இவ்வாறென ஒன்றை ஏன்  செய்தான்? இந்த கேள்விக்கு பல நிகழ்வுகளை வைத்து கேட்டுக்கொள்ளலாம். 

இப்படியாக வெகுசிறப்பாக பல விசயங்களை கொண்டுள்ள தமிழ் மின்னிதழ், தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட விஷயம் ஆண்டாள். அடுத்துப் பார்க்கலாம். 

(தொடரும்) 

No comments: