Friday 22 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 4

 பகுதி - 3 

4. பாரதியின் கனவு

மறுநாள் காலை பாரதியைப் பார்த்து சுந்தரன் என்னோட காதலை உனக்குத்தான் புரியக்கூடிய சக்தி இல்லை என  சொல்லி சிரித்தான். பாரதி சுந்தரனை நோக்கி முறைத்தாள்.

''என்ன முறைக்கிற, உன்னைவிட ஒரு நல்ல பொண்ணுதான் என்னை காதலிக்கிறா, டாக்டருக்குப் படிக்கிறோம்னு உனக்கு தலைக்கனம், உன் திமிரு எல்லாம் வேற எங்காச்சும் வைச்சிக்கோ''

''சுந்தரா, நான் உன்னை எதுவும் சொன்னேனா, நீ யாரையாவது காதலி எனக்கென்ன. எனக்கு உன்னை காதலிக்க மனசு இல்லை அவ்வளவுதான். உனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கானுட்டு என்னை நீ இப்படி பேசறத நிறுத்து''

''சும்மா அழாத, உனக்கு அந்த வாசனும் கிடைக்க மாட்டான். அவனுக்கு மாதவியை பேசி முடிச்சிட்டாங்க''

சுந்தரன் சொல்லி முடிக்கும் முன்னர் அவனது பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

''என்ன வாய் ரொம்ப பேசுதே, எங்கப்பா உனக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னுட்டு நீ துள்ளுற, ஒழுங்கா இரு இல்லை வேலை இடத்தில இருந்து தூக்கிருவேன். நீ எதுக்கு பாரதி இவன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க''

அருண் அங்கு வந்து நிற்பான் என்று சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தான் சுந்தரன்.

''அண்ணா, நீ அப்பா கிட்ட சொல்லி எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாவம் அவன்''

''சரி பாரதி''

பாரதி தனது தோழி கிருத்திகாவைச்  சந்திக்கச் சென்றாள்.

''என்னய்யா ஒருமாதிரி சோகமா இருக்க''

''ஒண்ணுமில்லை கிருத்தி''

''மறைக்காம சொல்லுய்யா''

''சுந்தரன் என்னை இன்னைக்கு வம்புக்கு இழுத்தான்''

''காதல் பண்ண ஆரம்பிசிட்டான்ல, இனி அவன் அப்படித்தான்.

''உன்னோட சொந்தக்கார பொண்ணுதான  அந்த பிரபா''

''தூரத்து சொந்தம்தான், சரிய்யா, உன்னோட ஜெனிடிக்ஸ் கனவு எல்லாம் எப்படி இருக்குய்யா, எதுவுமே நீ இதுவரைக்கும் சொன்னது இல்லையே''

''புதுசா ஒரு எண்ணம் இருக்கு கிருத்தி''

''சொல்லுய்யா''

''ஆர்என்ஏ மட்டுமே உள்ள ஒரு மனிதரை உண்டு பண்ணனும், டிஎன்ஏ இல்லாம சர்வைவ் பண்றமாதிரி செட் பண்ணனும்''

''என்னய்யா நீயும் நல்லா கதை சொல்ற, எந்த இங்க்லீஸ் படம் பார்த்த''

''கிருத்தி, நான் திருமால் அவரைப் போய் நாளைக்குப்  பார்க்கப் போறேன். அவருக்கு பல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கு. நீயும் வரியா''

''நான் வரலைய்யா, நீ மட்டும் போய்ட்டு வந்துரு. இன்னைக்கு ஏதாவது  படம் பார்க்கப் போகலாம்''

''இல்லை கிருத்தி, நான் இந்த ஆர் என் ஏ  பத்தி இங்க உட்காந்து எழுதலாம்னு வந்தேன், உனக்கு ஒண்ணும்  பிரச்சினை இல்லையே''

வாம்மா பாரதி என்றவாறு கிருத்திகா அம்மா வந்தார். கிருத்திகா, பாரதிக்கு குடிக்க ஏதவாது கொடுத்தியா என்றபடி உள்ளே சென்றவர் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வந்தவர் எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் என வைத்தார்.

''என்ன பாரதி அம்மா, அப்பா அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா, அடிக்கடி இந்தப் பக்கம் உன்னைக் காணோமே''

''எல்லோரும் நல்லா இருக்காங்க, கொஞ்சம் வேலை''

''சரி பேசிட்டு இருங்க''

கிருத்திகா அம்மா சென்றதும் பாரதி ஆர்என்ஏ குறித்து குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

'வினையூக்கிகள் மட்டுமே வேதிவினையில் ஈடுபடும் என அறிந்த உலகத்திற்கு இந்த ஆர் என் ஏக்கள்  வினையூக்கிகளாக செயல்படும் என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வினையூக்கிகள் புரதத்தினால் ஆனவை. புரதம் எப்படி மடங்கி உருவாகிறதோ அதைப்பொருத்தே ஒரு வினையூக்கி உண்டாகும். மேலும் இந்த வினையூக்கி குறிப்பிட்ட வேதிவினையில் மட்டுமே பங்கு கொள்ளும்.

இந்த வினையூக்கித் தன்மை கொண்ட ஆர்என்ஏக்கள் ரைம்போசைம் எனப்படும். இது நமது செல்லில் உள்ள ரைபோசோம்  அல்ல.  இப்படி புரதம் உண்டாகும் முன்னரே இந்த ஆர்என்ஏக்கள் ஒரு வேதிவினையை எதற்கு உண்டு பண்ணி இருக்கக்கூடாது எனும் சிந்தனை செய்யாத மக்கள் இல்லை. இதனால் ஆர்என்ஏ  தான் இந்த உலகில் உயிர்கள் உண்டாக காரணம் என எண்ணுபவர்கள் உண்டு'

''என்னய்யா பயங்கரமா குறிப்பு எடுத்துட்டு இருக்கப் போல''

கிருத்திகாவின் குறுக்கீடு கண்டு பாரதி நிமிர்ந்தாள்.

''நீ எழுதுய்யா, தொந்தரவு பண்ணிட்டேனோ?''

''இல்லை கிருத்தி, இந்த ஆர்என்ஏ  உலகம் அதிசய உலகம் போல தெரியுது''

''எனக்கு இந்த உலகம் போதும், என்னை அதில் இழுக்காதே''

''சரி, ஒரே ஒரு விஷயம் கேளு. இந்த ஆர் என் ஏ  தான் இந்த உலக உயிர்களுக்கு காரணம்''

''அப்படின்னா கடவுள்''

''அது வாசன் கிட்டதான் கேட்கணும்''

''வாசனுக்கு கடவுள், உனக்கு ஆர் என் ஏ''

''அப்படியே வைச்சிக்கோ, சரி கொஞ்சம் இரு''

கிருத்திகாவை பாதியில் நிறுத்திவிட்டு மேலும் சில வரிகள் பாரதி எழுத ஆரம்பித்தாள்.

'புரதம் உண்டாக்கும் வேதிவினையை இன்றளவில் இந்த ஆர் என் ஏக்கள் மட்டுமே நமது செல்லில் உள்ள ரைபோசொமில் செயல்படுத்துகின்றன. இந்த ஆர் என் ஏக்கள் ஸ்திரத்தன்மை அற்றவைகள் என்பதாலும், இவைகளால் எல்லா வேதிவினையை ஊக்குவிக்க முயலாது என்பதாலும் நாளடைவில் இந்த ஆர் என் ஏக்களை புறம் தள்ளிவிட்டு புரதம் முக்கிய வினையூக்கியாக செயல்படத் தொடங்கியது.

இந்த ஆர் என் ஏக்கள் டி என் ஏக்களில் இருந்து தற்போது உருவாகி அவை கரு உறையை விட்டு வெளியேறி இந்த புரதம்தனை உருவாக்குகிறது எனும்போது இந்த ஆர் என் ஏக்கள் தான் டி என் ஏக்கள் உருவாக காரணம் என்பதும் அறிய முடிகிறது. இந்த உலகம் ஆர் என் ஏ  உலகம் என்பதில் மறு கருத்து இல்லை'

''பாரதி, நாம வெளியில் போகலாமாய்யா?''

''கிருத்தி, இப்போதான் கொஞ்சம் எழுதி இருக்கேன், அதுக்குள்ளே வெளியில் போகணும்னு சொல்ற''

''உனக்கு இப்படி ஏதாவது கிடைச்சிருது, எனக்கு என்ன இருக்கு சொல்லுய்யா. ஜாலியா வெளியில் போய்ட்டு அப்புறம் வந்து எழுதலாம்''

''இனி நீ சொன்னால் கேட்கமாட்ட, சரி வா போகலாம்''

இருவரும் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் கூட வந்து இருக்கமாட்டார்கள். அவர்கள் எதிரில் சுந்தரனும், பிரபாவும் வந்தனர். இதை பாரதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

''கிருத்தி, நாம திரும்பிப் போய்ருவோம்''

''எதுக்குய்யா பயப்படற?''

''யார் வராங்க பாரு''

''நம்ம பிரபா, சுந்தரன்யா''

''சொன்னா கேளு கிருத்தி''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சுந்தரன் வெகுவேகமாக இவர்களை நோக்கி வந்தான். பிரபாவும் உடன் வந்தாள் .

''பாரதி, இதுதான் பிரபா. உன்னை விட அழகு''

''சுந்தரா, என்ன பேச்சு பேசுற'' கிருத்திகா சற்று கடுமையாகவே சொன்னாள்.

''சொன்னதுல என்ன தப்பு, பாரதிக்கு தான் ஒரு பெரிய அழகினு நினைப்பு''

பிரபா இடைமறித்து ''சுந்தரா, நீ இப்படி எல்லாம் பேசின அப்புறம் நான் உன் கூட பழகுறதை நிறுத்திறுவேன்'' என்றதும் சுந்தரன் நிலைமையை புரிந்துகொண்டு  அங்கிருந்து நகர்ந்தான். பிரபா இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

''நீ சொன்னா கேட்டியா கிருத்தி''

''என்னய்யா அவன் இப்படி இருக்கான், அவனுக்குப் போய்  நான் உதவினேன் பாரு''

''விடு கிருத்தி, அவனுக்கு நான் அவனோட காதலை ஏத்துக்கலைன்னு மன வருத்தம். அவனுக்கு இது ஒரு காயம் மாதிரி இருக்கும். என்னோட கனவு இப்படி காதல் பண்றது இல்லை கிருத்தி. எனக்கு இந்த ஆர் என் ஏ  உலகம் தான் உலகம்''

''ஆர் என் ஏவை  கொஞ்சம் விட்டுத் தள்ளுயா''

''நாளைக்கு நிசமாவே நீ திருமால் பார்க்க வரலையா''

''ஏன்யா இப்படி உங்க கிராமத்து ஆட்கள் முக்கியம்னு இருக்க, அந்த திருமால் என்ன உனக்கு சொந்தமாய்யா. பெருமாள் தாத்தானு  சொல்ற, கொஞ்சம் யூத் மாதிரி பிகேவ் பண்ணுய்யா''

''எல்லாம் சொந்தம்தான்''

''எப்படி''

''நாளைக்கு வா சொல்றேன்''

''ம்ம் சரிய்யா''

விரைவாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் பாரதி குறியாக இருந்தாள். கிருத்திகாவும் பாரதிக்கு ஏற்றபடி ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினார்கள்.

விவசாய நிலங்களில் வீடு கட்டுவது போல இந்த பூமியில் பல மாற்றங்கள் எப்படி வெளி கண்ணுக்கு புலப்படுகிறதோ அது போல நமது உடலில் நடந்த அல்லது உடல் உருவாகும் முன்னர் உள்ளே நடந்த விஷயங்களை குறித்து வைக்காமல் போனாலும் இப்படித்தான் என ஒரு தீர்மானத்திற்கு வர முடிகிறது. அப்படித்தான் பாரதியும் ஆர் என் ஏவில் மூழ்கிக் கொண்டு இருந்தாள்.

(தொடரும்)


No comments: