Thursday 14 May 2015

நுனிப்புல் பாகம் 3 -3

பகுதி -2 

3. பழியும் நிவராணமும்

''ஐயா, உங்ககிட்ட ஒரு விசயம் கேட்கலாமா''

வாசன் என்ன கேட்கபோகிறான் என்பதை யோசித்த விநாயகம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சரி கேள் என்றே சொன்னார்.

''உங்களுக்கும் நாச்சியார் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்''

''வாசன், எனக்கு என்ன சொல்றதுனு  தெரியலை, அது ஒரு நிறைவேறாத காதல்''

''நீங்க காதலிச்சீங்களா''

''என்ன வாசன், காதல் வரக்கூடாதா?''

''இல்லை ஐயா, எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் அதான் கேட்டேன்''

''நீயும் மாதவியும் நேசிக்கிற மாதிரி எங்க நேசிப்பு இருந்து இருந்தால் எங்களுக்குப் பிரச்சினை வந்து இருக்காது, நான் சைவம், நாச்சியார் வைணவம். இது ஒரு தடையாக இருக்கும்னு நான் அப்ப எதிர்பார்க்கலை''

''ஐயா, ஆனா நீங்க இந்த நெகாதம் செடி, பெருமாள் கோவில் எல்லாம் ஒரு வைணவம் பின்பற்றிய முறைதானே. அதுவும் உங்கள் கனவில் நாராயணன் வந்து சொன்னதாகதானே இந்த புத்தகம் எல்லாம் சொன்னீங்க. உங்களை சைவம்னு யாருமே சொன்னது இல்லையே''

''என் பேரு மட்டும் தான் நான் மாற்றலை வாசன், மற்றபடி நான் எல்லாம் வைணவத்துக்கு முழுசா மாறிட்டேன். அதுக்கு காரணம் நாச்சியார் தான்''

பெரியவரின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. ஒரு இளமைக்கால சரித்திரத்தை ஒவ்வொரு கிராமங்களும் தாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நிராகரிக்கப்பட்ட கனவுகள். பழமையில் ஊறிப்போன மனிதர்கள் என இன்னும் ஆங்காங்கே கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைய தலைமுறைக்கு புரியாத ஒரு வாழ்க்கை ஒன்றை கிராமம் முழுவதும் இன்னும் வெறுத்து ஒதுக்கிவிடவில்லை.

''உங்க சொந்த ஊரு சாத்திரம்பட்டிதானா ஐயா''

''ஆமாம் வாசன், எங்க குடும்பம் மட்டும்தான் சைவம். மற்ற எல்லாருமே வைணவம். எங்க குடும்பம் அங்கே எப்படி போனாங்கனு  நானும் என்னோட அப்பா அம்மாகிட்ட கேட்டது இல்லை. எங்க சொந்தகாரங்க யார் எவர்னு  எனக்குத் தெரியாது. அந்த ஊர்க்காரங்க மட்டுமே சொந்தம்னு  நினைச்சப்பதான் இந்த நாச்சியார் பழக்கம் ஆனா. இப்ப இதுக்கு மேல வேண்டாமே''

குரல் தழுதழுத்தது. காதலித்தவரிடம் காதலின் வலி பற்றி கேட்டு அறிந்து கொள்ள முடியாது. காதலின் வலி என்பது என்றுமே ஆற்ற இயலாத ஒரு துயரம். வாழ்வின் அடிப்படை என்னவெனில் காதல் தோற்ற பின்னர் வேறு ஒரு பெண்ணை அல்லது ஆணினை கல்யாணம் பண்ணி வாழ்வது சகஜம். அப்படி இல்லாதபட்சத்தில் மரணம் எனும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். காதலுக்கு என கல்யாணம் பண்ணாமல் வாழ்வது மிகவும் அரிது.

''ஐயா''

''என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுப்பா''

வாசன் பெரியவரிடம் சரி என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். எவருமே சொல்லாத விசயம் இது. இந்த ஊரில் எவருமே எதையும் பெரியவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறந்து போன பெருமாள் தாத்தாவுக்கும், சென்னையில் இருக்கும் திருமாலுக்கும் பெரியவர் பற்றி தெரிந்து இருக்கிறது. ஆனால் மாதவி பற்றி சாத்திரம்பட்டியில் சொன்னார்களே. அதுவும் கொஞ்ச வருஷம் முன்னால நீ வந்துருக்கக் கூடாதாம்மா என்று அந்த நாச்சியார் அம்மாள் எதற்கு மாதவியிடம் சொல்லி இருக்க வேண்டும். வாசன் நிறைய யோசிக்கலானான்.

அன்று இரவே மாதவிக்கு அழைப்பு விடுத்தான்.

''மாதவி, உனக்கு பெரியவர் விநாயகம் பற்றி தெரிஞ்சதை சொல்லு''

''என்ன மாமா, உருகும் உயிர் கதை சொல்ல சொல்றீங்களா?''

''மாதவி, நான் சீரியசா கேட்கிறேன். அவரும் நாச்சியார் அம்மாவும் காதலிச்சாங்கனு  பெரியவர் சொன்னார்''

மாதவி மறுமுனையில் எதுவும் பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர் மாதவியே  தொடர்ந்தாள்.

''மாமா, நான் அடுத்தவாட்டி ஊருக்கு வரப்ப எல்லாம் விபரமா சொல்றேன். பெரியவரை அந்த ஊரில இருந்து விரட்டி விட்டுட்டாங்க. அவர் குளத்தூர் வந்துட்டார். அதுக்கு காரணம் பெருமாள் தாத்தா. சாரங்கன் ஐயா கொஞ்சம் உதவினார்''

''உனக்கு எப்படித் தெரியும் மாதவி, என்னைக்காச்சும் நீ இதுபத்தி என்கிட்டே பேசி இருக்கியா''

''மாமா நான் யாருகிட்டயும் எதுவும் பேசிக்கிறல, ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோங்க, உங்ககிட்ட இது எல்லாம் சொல்ல வேணாம்னு நினைக்கல. யாராச்சும் பெரியவர் பத்தி ஊருக்குள்ள எதுவும் பேசுறாங்களா, நாம எல்லாம் அவர் ஊருக்கு வந்தப்பறம் பிறந்தவங்க மாமா. நான் எழுதின கதையே இப்போதான மாமா படிச்சீங்க''

''சரி மாதவி, நீ ஊருக்கு வந்தப்பறம் சொல்லு. படிப்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு''

''பரவாயில்லை மாமா, என்னோட ஆராய்ச்சி சம்பந்தமா ஒரு புது மேடம் கிட்ட உதவி கேட்டு இருக்கேன், சரினு  சொல்லி இருக்காங்க. இந்த பெரியவர் விஷயத்தை குழப்பிக்க வேண்டாம். பாரதி போன்  பண்ணினாள். சுந்தரன் அங்க வேலைப் பார்க்கிற இடத்தில ஒரு பொண்ணை  காதலிக்கிறானாம். ஏன்  மாமா உங்க குடும்பம் காதல் குடும்பமா?''

''மாதவி, என்ன சொல்ற நீ. அவன் திருந்தவே மாட்டான். போனவாட்டி பிரச்சினைனு  ஊருக்கு வந்தான். இப்ப மறுபடியும் என்ன இது. நான் அவனுக்கு போன்  பண்றேன்''

''ஐயோ மாமா, வேண்டாம். நான் உங்ககிட்ட தகவலாத்தான் சொன்னேன். நம்ம ஊருக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டா. அந்த குட்டிப் பையன்களைப் போய்  பார்த்தீங்களா?''

''பார்த்தேன் மாதவி''

''உங்களுக்கு வியர்த்துக் கொட்டி இருக்குமே''

''மாதவி''

''சும்மா சொன்னேன் மாமா. ஊருக்கு வரப்ப பேசறேன். எதுவும் முக்கியம்னா போன்  பண்ணுங்க''

''உனக்கு எல்லா விஷயங்களும்  முன்கூட்டியே தெரியுமா மாதவி''

''ஒண்ணுமே தெரியாது மாமா, சரி வைச்சிடுறேன்''

வாசனுக்கு மாதவி பற்றி அன்றுதான் யோசனை வந்தது. ஒருவேளை இவளுக்கு எல்லாம் தெரியுமோ. அப்படியே தெரிந்தாலும் முன்கூட்டி நடப்பதை எப்படி சொல்ல இயலும். எனக்கு வியர்த்தது அவளுக்கு எப்படித்  தெரியும். யூகித்து இருப்பாளோ?

வாசன் வீட்டின் மாடியில் மயங்கி விழுந்தான். தற்செயலாக அங்கு வந்து அவன் அம்மா தரையில் விழுந்து கிடந்த வாசனை எழுப்பிவிட்டார். வாசன் முழித்துப்  பார்த்தவன் அம்மா பெரியவர் பத்தி ஏதாவது பழைய வாழ்க்கை தெரியுமா என்றான். எதுவும் தெரியாதுப்பா என்றார். வாசன் அதுக்கு மேல் கேட்பது முறையில்லை என தவிர்த்தான்.

சாத்திரம்பட்டிக்குள் ஒரு சோகம் ஒளிந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


No comments: