Wednesday 11 February 2009

தலைவிதி - 1

தலைவிதி :

சுருக்கமாகச் சொல்லப்போனால் எப்பொழுது தனிமனிதன் தன்னால் அனைத்து செயல்களையும் தனது கட்டுப்பாட்டுக் கொண்டுவர முடியாமல் தவித்தானோ அப்பொழுது அவனது மனதில் உதித்த எண்ணம்தான் தலைவிதி. எந்த ஒரு செயலுக்கும் காரணம் கற்பிக்க வேண்டும் என எப்பொழுது அவனது மனதில் தோன்றியதோ அப்பொழுது இடப்பட்ட விதைதான் தலைவிதி. ஒன்றைச் சார்ந்தே ஒன்று நடக்கின்றன என்னும் தத்துவமே இதன் அடிப்படை.

இதனால் என்ன நன்மை தீமை? நன்மை என எடுத்துக்கொண்டால் நடப்பது நமது கையில் இல்லை, அதனால் மனம் உடைந்து போய்விட வேண்டாம் என இதற்கு அதிபதியான இறைவனை துணைக்கு வைத்துக்கொண்டு அடுத்த அடுத்த காரியங்களில் இறங்கிவிடுவது. தீமை என்னவெனில் நமக்கு விதித்தது இவ்வளவுதான் என முடங்கிப்போய்விடுவது.

தலைவிதியை நிர்ணயம் செய்வது யார்? நாம். நமது செயலை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும். நம்மை மீறி ஒன்று நடக்கிறது என்ற பிரமையை அகற்ற வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என நமக்குத் தெரியாது என்பது சாதாரணமாக நடக்கக்கூடியதே அதை நாம் பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது செயல்களை முறைப்படுத்திட சுற்றுப்புற காரணிகள் மற்றும் நமது உடலில் ஓடுகின்ற ரசாயனங்கள் இதையெல்லாம் தாண்டிய எண்ணங்கள் மிகவும் முக்கியம். எனவே தலைவிதி என்பது நமக்கு நாமே விதித்துக்கொண்டது.

மரபியல் தத்துவமும் மூளையின் செயல்பாடும்:

மரபணுக்கள் மட்டுமே ஒரு மனிதருடைய குணாதிசயங்களை நிர்ணயித்துவிடுவதில்லை. மூளையின் செயல்பாடு மிகவும் முக்கியம். எப்பொழுது ஒரு மனிதன் எண்ண ஆரம்பித்தானோ அப்பொழுதே அவனது செயல்களில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. மரபணுக்கள் ஆதியிலிருந்து அத்தனை மாறுபாட்டை ஒன்றும் அடையவில்லை, ஆனால் மூளையில் பல மாறுபாடுகள் அடைந்து இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட மாறுபாடு மனிதனை இன்று இந்த அளவிற்கு சிந்திக்க வைத்து உள்ளது.

நாம் ஒருவரை பார்த்ததும் அட என்போம், மற்றொருவரை பார்க்கும் போது ம்ஹும் என்போம், இதற்கு காரணம் நமது மனதில் தோன்றும் எண்ணமே. சற்று நமது எண்ணங்களை பரிசீலித்தால் இருவருமே அட ஆவதற்கு சாத்தியம் உண்டு. மகிழ்ச்சி நமது மனதைப் பொருத்ததே என்பதுதான் எல்லா ஆன்மிக கோட்பாடுகளுக்கும் அடிப்படை.

அறிவியலும் ஆன்மிகமும்:

இரண்டும் ஒன்று என்பார் பலர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எப்பொழுது ஒன்று தனித்தனியாக பிரிகிறதோ அப்பொழுதே அது தனது தனித்தன்மையை காட்ட வேண்டும்.

இதைப்பற்றி விரிவாக தொடர்வோம். நீங்களும் தொடருங்கள். ஒவ்வொரு விசயங்களாக எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன், கற்றுக்கொள்ளும் முயற்சியே அன்றி கற்றுக்கொடுக்கும் முயற்சி அல்ல என்பதை மிகவும் தெளிவாக கூறிவிடுகிறேன்.

No comments: