Tuesday 10 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 6

அப்படி ஒரு வார்த்தையை நான் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. சங்கரி அந்த பொண்ணு பாலையம்பட்டியைச் சேர்ந்தவள் என்று சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. பழனிச்சாமி அடுத்த முகூர்த்தத்திலேயே பவளக்கொடியின் திருமணம் வைக்கலாம் என்று சொன்னாலும் சங்கரியின் மகன் கல்யாணம் தடையாய் இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். முறைப்படியான நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து முடித்தோம்.

கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது. கல்யாணம் முடித்து எங்க ஊருக்கு கிளம்பு முன்னர் உனக்கொரு பிள்ளை பிறந்து அந்த பிள்ளையும் மிங்கி மிங்கி பா சொன்னா என்ன பண்ணுவ என ஒரு விளங்காத பாட்டி பவளக்கொடியிடம் விளக்கம் கேட்டு வைத்தாள். நானும் பயத்தோடு பவளக்கொடி என்ன சொல்வாளோ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். பவளக்கொடி மிங்கி மிங்கி பா வை மட்டுமே நான் பேசுவேன் என்றாள். அடி ஆத்தி என முகவாயில் கையை வைத்தாள் பாட்டி.

பவளக்கொடி சொன்னதைக் கேட்டதும் எனக்கு பெரிய தப்பு பண்ணிவிட்டோமோ என மனசு பதறியது. நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசி இருக்க வேண்டுமோ என நினைத்தேன். அப்படியெல்லாம் குழந்தை பிறக்காது. இது என்ன சாபமா என இருந்துவிட்டேன். மாதங்கள் ஓட கருவுற்றாள் பவளக்கொடி. எனக்குப் பயமாகத்தான் இருந்தது. நாவரசன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொன்னான். ஒருநாள் பவளக்கொடியிடம் நீ அவனுக்கு பேசக் கற்றுக்கொடுப்பாய் என ஆசைப்பட்டேன். நீ முயற்சிக்கவில்லையா என்றேன். எனக்கு மிங்கி மிங்கி பா தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொண்டாள்.

குழந்தை பிறந்தது. மிங்கி என பெயர் வைத்தாள். எனக்கு கோபமாகப் போய்விட்டது. என்ன நீ, இப்படி பெயர் வைத்திருக்கிறாய் என்றேன். இந்தப் பெயருக்கு என்ன அத்தை? என சொல்லிவிட்டாள். நான் பவளக்கொடியிடம் சண்டையே போடுவதில்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

குழந்தை வளர்ந்தது. ங்கா சொல்லாமலே வளர்ந்தது. ம்மாவும் சொல்லவில்லை. ஆனால் முகமெல்லாம் புன்னகை. நாட்கள் வளர என் பேரப்பையன் வார்த்தை பேச ஆரம்பித்தான். மி...ங்...கி மி...ங்...கி பா. எனக்கு பகீரென ஆகிவிட்டது. பவளக்கொடியோ சந்தோசமாக கொஞ்ச ஆரம்பித்தாள். அவளும் பதிலுக்கு மிங்கி மிங்கி பா என்றே சொன்னாள். நாவரசன் பற்றி சொல்லவா வேண்டும். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஹூம், தந்தையைப் போல பிள்ளையாம்.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கரி என் வீட்டுக்கு ஓடி வந்தாள். ''சரசு சரசு உன் மகனையும், பேரனையும் என்னோட அனுப்பறியா, நான் அவங்களை ஒருத்தர் கிட்ட கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்'' என சொன்னாள். ''உன் பேத்தி நல்லாதானே பேசுறா'' என்றேன். ''ஆமா சரசு அவ நல்லாதான் பேசுற, நீயும் கூட வா'' என அழைத்தாள். ஆச்சரியமா இருந்தாலும் சரி போய்தான் பார்ப்போமே என நாங்கள் சங்கரியுடன் கிளம்பினோம்.

(தொடரும்)

1 comment:

cheena (சீனா) said...

நாங்களும் கிளம்பறோம் - என்னதான் ? பார்த்து விடுவோமே ! நல்வாழ்த்துகள் வெ.இராதாகிருஷ்ணன் - நட்புடன் சீனா