Wednesday 11 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.

நாங்கள் பார்க்கச் சென்றவர் அதிக வயதானவராகத் தெரிந்தார். இதைப் படிம்மா என ஒரு காகித்தைத் தந்தார். நானும் படித்தேன்.

மண்ணில் துளையிட்டு
குடிகொள்ளும் ஈசல்களை
பெற்றோர்களும் உற்றார்களும்
வந்திருப்பதாய் பொய்க்கதை சொல்லி
ஆசையோடு வெளிவரும்போது
சிறகை உடைத்து நெருப்பிலிட்டு
சுவைகொள்ளும் நாவு
அன்பினை கேடயமாய்
அநீதிக்கு வைத்துக்கொள்ளும்
தீராநோய் கொண்ட நாவு

மானிட உயிருக்குள்
உள்ளிருக்கும் ஈசனை
மதிமயக்கும் மந்திரங்கள்
சொல்லி வெளிக்கொணர்ந்து
வீடொன்று கட்டி
தொலைத்துத் திரியும் நாவு
பக்தியை பகட்டுக்காக
பரவசத்துடன் சூறையாடும்
பாவநோய்கொண்ட நாவு

மெளனம்தனை மருந்தாய்
உட்கொண்டு மரிக்கும் நாள்வரை
இருக்குமெனின் தீராத நோயெல்லாம்
தீர்ந்து போகும்
பண்ணிய பாவமெல்லாம்
ஓடிப்போகும்
உள்ளுக்குள்ளே ஓசையொன்றை
உதடசைவின்றி
சொல்லிச் சிறக்கும் நாவு
இவ்வார்த்தைகளை உச்சரிக்காத நாவு!

இந்த கருமத்தை என்கையிலே ஏன் கொடுக்கிறாருனு நினைச்சிக்கிட்டு, அதுக்காக பேசாமலேயே நாம வாழ்ந்திர முடியுமானு அவர்கிட்ட வெடுக்கெனு கேட்டு வைச்சேன். சுந்தரி சும்மா இரு சரசு அப்படினு சொன்னா. பவளக்கொடி என்கிட்ட இருந்து வாங்கிப் படிச்சிட்டு மிங்கி மிங்கி பா அப்படினு சொன்னா. நாவரசன் ஒருவித தோரணையா மிங்கி மிங்கி பா சொன்னான். பத்தாததுக்கு மிங்கியும் மிங்கி மிங்கி பா சொன்னான்.

என்கிட்ட, மிங்கிகிட்ட, என் கணவர்கிட்ட, நாவரசுகிட்ட இரத்தம் எடுத்தவர் ரொம்ப நாளைக்கப்பறம் எங்களை வரச் சொன்னார். வரச் சொன்னவர் இது அறுபத்திநான்காம் மொழி அப்படினு சொல்ல ஆரம்பிச்சார். எனக்கு தலையை சுத்த ஆரம்பிச்சது. சங்கரியும் கூட வந்திருந்தா. அவர் சொன்னது சங்கரிக்கு ரொம்ப நல்லாவே புரிஞ்சிருச்சி போல. எனக்கு அவதான் விளங்கறமாதிரி சொன்னா.

நம்ம உடம்புல ஜீன் இருக்குதுல்ல அந்த ஜீன் புரோட்டின் எல்லாம் உருவாக உதவியா இருக்குமாம். பரம்பரை பரம்பரையா விசயங்களை பெற்றோரிலிருந்து பிள்ளைக்குக் கடத்தறது இந்த ஜீன் தானாம். ஒருத்தர் எப்படி இருக்கார், எப்படி வளருராருனு இந்த ஜீன் தீர்மானிச்சி வைச்சிருமாம்.

சகல ஜீவராசிகளுக்கும் இந்த ஜீன் இருந்தாலும் மனுசனைத் தவிர எந்தவொரு சிந்தனையும் இல்லாம தன்னையும் தன் வட்டத்தையும் காப்பாத்திக்கிட்டு மற்ற ஜீவராசிகள் வாழப் பழகிருக்காம். அப்படிப்பட்ட அந்த ஜீன், புரோட்டின் உருவாக்கறப்போ அதை நிறுத்த மூணு கோடான்கள் வைச்சிருக்குமாம். அந்த கோடான்களை உபயோகப்படுத்தி புரோட்டின் உருவாகறதை நிறுத்திக்குமாம். நம்ம சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடிய செயல்பாடு நரம்பு மண்டலத்தைச் சார்ந்து இருந்தாலும் இந்த ஜீன்களுக்கும் சம்பந்தம் இருக்காம். அறுபத்தி நாலு கோடான்கள்தான் மொத்தமாம். ஆனா மூணு கோடான்கதான் நிறுத்துமாம். அந்த கோடான்கள் என் பையன் விசயத்துல என் பையன் என்ன நினைச்சாலும் பேசற வார்த்தை மட்டும் இதுதானு தீர்மானிச்சிருச்சாம். என் பையனால எல்லாமே சிந்திக்க முடியும், எல்லாம் செய்ய முடியும், ஆனா வார்த்தை மட்டும் மிங்கி மிங்கி பா தானாம்.

இதுல என்ன கொடுமைன்னா அந்த ஜீன் என்கிட்டயும் இருக்காம். ஆனா அது என்கிட்ட வெளிப்படாம அடங்கிப் போயிருச்சாம். இல்லைன்னா நான் மிங்கி மிங்கி பா தான் சொல்லிட்டு இருந்திருப்பேனாம்.

சங்கரி சொன்னதும் அவர்கிட்ட ஏன் இப்படி வார்த்தைனு மிழுங்கி மிழுங்கிக் கேட்டேன். அய்யோ திரும்பவும் மிழுங்கியா? அதுக்கு அவர் சொன்னதை அப்படியே சொல்றேன்.

பொதுவா நமக்கு ஆசையோ விருப்பமோ இருந்தா பயத்துல அதை விழுங்கிருவோம். சூழ்நிலை சரியில்லைன்னா சொல்லவே மாட்டோம். இப்படி மனுசனோட அமைதியா வாழனும்ங்கிற ஆசை எல்லாம் சூழ்நிலையினால உள்ளுக்குள்ளே அமிழ்ஞ்சி போயிருச்சி. மேலோட்டமா எல்லாரும் அமைதியா வாழனும்னு சொன்னாலும் அந்த ஆசை நிறைவேறாத ஒண்ணுனு ஆயிருச்சி. இப்படி விழுங்கி வாழும் சமூகமாகவே மாறிட்டோம். யாரு எப்படிப் போனா, எந்த நாட்டுல குண்டு விழுந்தா நமக்கு என்னனும், சுனாமி பூகம்பம் வந்தா பூமிக்கு பாரம் தாங்கலை அதான் விழுங்குதுனு நாமதான் சரியான விழுங்கும் சமூகமா மாறிட்டோம். எதுக்கெடுத்தாலும் அந்த கவிதையில வரமாதிரிதான் வாழ பழகிட்டோம். மிங்கி அப்படின்னா தமிழுல முடிவு னு அர்த்தம். முடிவு முடிவு பா.

அதாவது அமைதிக்கு முடிவு கட்டிட்டோம், இந்த உலகத்துல அமைதியாவே இருக்க முடியாது அதைச் சொல்றதுதான் மிங்கி மிங்கி பா. முடிவு முடிவு பா.

ஆனா இதை மட்டுமே சொல்ற உங்க மகன்கிட்ட இருக்கிற அமைதி நம்மகிட்ட இல்லாம போனது துரதிர்ஷ்டம்தான்.

நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்ல ஆரம்பித்து இருந்தேன்.

முற்றும்.

1 comment:

cheena (சீனா) said...

மிங்கி மிங்கி பா - முடிவு முடிவு பா - இறுதியில் செய்யும் வேலை மருந்தாக்கியல் ஆய்வு கை கொடுத்ததா ? சற்றே அறிவியலைக் கலந்து கதையை முடித்து விட்டீர்கள். நன்று நன்று - நல்முடன் வாழ்க - நட்புடன் சீனா