Tuesday 17 February 2009

பழங்காலச் சுவடுகள் - 4

ஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.

தனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''

''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''

''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''

''அப்படியா, நீ என்ன சொன்ன''

''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''

''என்ன சொன்னாங்க அதுக்கு''

''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''

''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''

''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''

''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''

''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''

''எனக்குப் புரியலை''

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.

''சொல்லு என்ன சொன்னாங்க''

''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''

சின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

''நீயா தொலையனும்னு ஆசைப்படற''

''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''

''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''

அகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.

சின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.

அப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.

(தொடரும்)

No comments: