Wednesday 11 February 2009

தலைவிதி - 2

கவனக்குறைவு:

ஒருவிசயம் நடந்துவிட்டது. அது நமக்கு எதிராகப் போய்விட்டது என வைத்துக்கொள்வோம். நம்மை ஏளனமாகப் பேசுபவர்கள் உண்டு, நம்மைத் தட்டிக்கொடுக்கும் மனிதர்களும் உண்டு. இப்படி எதிராக ஏன் ஒரு விசயம் போகவேண்டும் எனப் பார்த்தால் அதற்கெல்லாம் காரணம் கற்பிப்பது ஒரு கண்மூடிய விளையாட்டாகத்தான் இருக்கும். இது போன்ற செயல்களை பார்த்து பார்த்து சலித்துப் போன மானுடம் விதி வலியது என்று கூறிவிட்டுப் போகும், பாவம் என பரிதாபமாய் எளக்காரப் பார்வை பார்த்துவிட்டுப் போகும்.

அடிப்படை காரணம் கவனக்குறைவு. இந்த நேரத்தில் ஏன் நடக்க வேண்டும் என கேட்டால் அது அப்படித்தான் நடக்கும். அப்படித்தான் நடக்கும் எனும் அந்த சமயத்தில் சமயோசிதமாக செயல்படுவதுதான் ஒரு சாதாரண மனிதரை சாதனை மனிதராக மாற்றும்.

மனம் புண்படும்படி பேசும் மானுடம் வாழும் உலகில் எண்ணங்கள் உருக்குலைந்து போகும். புத்தரின் எனது அனுமதியின்றி என்னை யாரும் நிந்திக்கமுடியாது எனும் கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்டால் வாழ்வில் பல சாதிக்கலாம்.

என்னதான் வியாக்கியானம் பேசினாலும் போனது போனதுதான், அதைப்பற்றி சிந்தித்து பயனில்லை எனும் பக்குவம் வருவது அத்தனை எளிதல்ல. நாம் அடுத்தவரைப் பார்க்கும் பரிதாபப் பார்வையில் அவர்களுக்கு இருக்கும் சிறிது தன்னம்பிக்கையையும் தகர்த்தெறிகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மகாகவி பாரதியாரின் ஒரு அழகிய கவிதை இது

சென்றதினி மீளாது மூடரே! நீவீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

இந்த புனித உலகில் நம்மை நாமே அழித்துக்கொள்வதுதான் பெரிய கொடுமையான செயல். கோப்மேயரின் எண்ணங்களை மேம்படுத்துவோம் எனும் புத்தகமும், விவேகாநந்தரின் என்ன நீ நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் எனும் அழகிய தத்துவமும் அறிவியல் உலகை ஆட்டி வைக்கும். மனரீதியாக பலவிசயங்களை யாராலும் புரிந்து விளங்கிக்கொள்ள முடியாத பட்சத்தில் அறிவியல் சற்று விலகி நின்று அசைபோடும், அப்படிப்பட்ட அந்த புரிந்துகொள்ள முடியாத விசயத்துக்கெல்லாம் வடிகால் தான் ஆன்மிகம். நமக்குத் தேவை நிம்மதி, எது எப்படி இருந்தால் என்ன?

நலிந்தோர்க்கு நாளும் கோளும் இல்லை என்பதை எழுதியவர் யார்? எனக்குத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனை எப்பொழுது மொத்த சமூகத்தை ஆட்டிப்படைக்கிறதோ, ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்பாடு எப்பொழுது மொத்த சமூகத்தையும் தன் வசப்படுத்துகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டியதுதான் அந்த சிந்தனை, செயல்பாடு எத்தனை வலிமையானது என. மொத்த சமூகம் என நான் குறிப்பிடும்பொழுதே நாம் குறித்துக்கொள்ள வேண்டியது, அந்த சமூகத்தில் இதே சிந்தனை செயல்பாட்டினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உளர் என.

சிரமம் என்பது இவருக்குத்தான் வரும், இவருக்குத்தான் வரக்கூடாது என கட்டம் பார்த்து வருவதில்லை, அதைத்தான் நன்றும் தீதும் பிறர்தர வாரா என நறுக்கெனச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு எண்ணமும் நடுநிலையில் நின்று விவாதிக்கப்படுவது இல்லை, சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றுக்கும் முரண்பாடானவைகள் என்பதை வைத்தே நாம் ஒரு தெளிவற்ற சமுதாயம் என நம்மை கருத வாய்ப்புண்டு.

ஒரு தெளிவான சமுதாயமாக இருந்து இருந்தால் சூரியனை வணங்கியதோடு காற்று, நெருப்பு, நிலம், நீர் என வணங்கி அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு 'விண்டவர் கண்டில்லை கண்டவர் விண்டில்லை' எனச் சொன்னால் அது சரிதான் என போக வேண்டியதுதான்.

நான் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எனச் சொன்னால் அது சரிதான் என சிரித்துக்கொள்வேனேத் தவிர அது குறித்து ஆராயப்போவது இல்லை. நமது மனதில் ஒருவித திட்டம் வகுத்து வைத்துக்கொள்கிறோம். இது மரபியல் வாயிலாகவோ, சுற்றுப்புற காரணிகளாகவோ நம்மிடம் ஒரு வட்டம் வரைந்து கொள்ளப்பட்டு விடுகிறது.

அந்த வட்டத்திற்கு உள்ளே வருபவர்கள் வேண்டியவர்கள், வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் வேண்டாதவர்கள். 'சே உன்னைப் போய் இப்படி நினைச்சேனே' என நீங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் இருந்து இருப்பீர்களானேயானால் நீங்கள் செய்த பாக்கியம், உங்கள் வட்டம் மிகப்பெரியது அதில் அனைத்து கட்டங்களும் அடங்கும்.

உள்ளுணர்வு :

இது ஒரு மெய்யில் கலங்கிய பொய்மையான உணர்வு. என்னைப் பொறுத்தவரை இது இல்லையெனில் அது. அவ்வளவே. நான் நினைச்சிட்டே இருந்தேன் நீங்க வந்துட்டீங்க, அப்படியெனில் நினைத்தபோதெல்லாம் அவர் வந்தாரா? அவர் வந்த சமயத்தில் எல்லாம் நீங்கள் நினைத்ததுண்டா? நமது மூளை ஒரு விநாடியில் எண்ணற்ற செயல்பாடுகளை பரிசீலிக்கும். மூளையை பற்றி பலர் ஆராய்ச்சி செய்து எழுதிய கருத்துக்களில் கூட வாசிக்கும் பலருக்கு உடன்பாடில்லை. ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் வேறு, இந்த கோணத்தில் சிந்தித்துப் பார், எனது நிலையில் நின்று பார் என்பதெல்லாம் இதன் அடிப்படையே.

யாராவது நம்மை கவனிக்கிறார்கள் என நினைக்கும்போதே நாம் நமது எண்ணத்திற்கு விரோதமாக செயல்படுகிறோம் என நினைக்க வேண்டி இருக்கும். உங்களுக்குத் தெரியாத ஒருவர் உங்களை கவனிக்கிறார் என உங்கள் உள்ளுணர்வு சொல்லுமா? அமெரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மனிதர் என்னை கவனிக்கிறார் என உள்ளுணர்வு சொல்லப் போகிறதா? இது எல்லாம் மூளையின் சுட்டித்தனம்.

அடடா நான் நினைச்ச மாதிரி நடந்துருச்சே என்பதெல்லாம் மூளையின் இல்லாத ஒன்றை இருப்பதாய் படம் காட்டும் வேலை. அறிவியல் அப்படித்தான் சொல்கிறது. ஆன்மிகம் அமைதியாய் இரு என்கிறது.

பின் குறிப்பு:இதை செய்ய வேண்டாம் என நினைத்துக்கொண்டே இருந்தேன், ஆனால் அதை செய்துவிட்டேன். இதுதான் விதியோ? என நினைப்போர்களே, உங்களிடம் கட்டுப்பாடு இல்லை என்பதை கடவுள் வந்தா சொல்லித் தெரிய வேண்டும்.

No comments: