Thursday 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)


No comments: