Friday 16 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2

சிறுகதையோ, கதையோ புனைவு என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவிதை கூட புனைவதுதான் ஆனால் அது புனைவு என சொல்லப்படுவதில்லை. நாவலை புதினம் என்றும் அழைக்கிறார்கள். புனைவு எனும் சொல் நன்றாகவே இருக்கிறது.

பைத்தியக் காலம் என்றொரு புனைவு    எழுதியவர் 'இலக்கிய எழுத்தாளர்' நர்சிம்.  இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்துலகம் இவரது எழுத்துக்கள் பற்றி அறியும். இவரது எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன் என அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இவரிடம் சென்று எழுத பயின்று கொண்டால் நான் நன்றாக எழுத ஆரம்பிக்கலாம். ஒருமுறை நான் எழுதியதை கவிதை என்றேன். சற்று மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். எப்படி மாற்றி அமைப்பது என சிந்தித்து பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டேன்.

'தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச் செய்து விடுகிறார்கள் சிலர்'. இது அவரின் எழுத்து. எனக்கு என்னவோ இந்த எழுத்து வெகுவாக என்னை பாதித்துவிட்டது. எனது கிராமத்தின் சூழலை கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படித்தான் இவரது எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் நிகழ்வு மனக்கண் முன்னால் வந்து போகும். சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். அதில் இவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். விவரிப்பு அதில் வரும் கதாபாத்திரங்கள் அழுத்தமான ஒன்றை சொல்லி செல்லும். இந்த பைத்தியக் காலம். கதையை வாசித்து முடித்தபோது அதே பிரமிப்பு. கோமாதா, நந்தி அட! சொல்ல வைத்தது. அதுவும் கதையில் வரும்காட்சிகளின் பின்னணி. முடிவுதான் கதைக்கான மொத்த தளமும்.

அடுத்து பொன் வாசுதேவன் அவரது கவிதைகளுக்குப் போனேன். எளிமையான மனிதர். நேரில் பார்த்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். எனது இரண்டு புத்தகங்கள் வெளிவர காரணமானவர். இவரது  இருபது வருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவம் இவரது எழுத்துகளில் மிளிரும். ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருந்தார். தமிழும், அடர்ந்த கருத்து செறிவுமான  கவிதைகள் . ம்ம் இவரிடம் கவிதை எழுத கற்றுக்கொள்ளப்போகலாம். 'தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர் சிற்றலை நெளிய' பிரமாதம். நிழல் குறித்து  அட! வாழ்தலின் பலி கொண்டலையும் அற்ப சிம்மாசனம். வேரிழந்த எழுத்துக்கள். எனக்கு மிகவும் கடினம் இதுபோன்ற வார்த்தை கோர்ப்புகள். அதனால் தான் எனது கவிதைகளை வெறும் வார்த்தைகள் என கர்வத்துடன் சொல்லிக்கொண்டேன்.

அடுத்து என் சொக்கன் அவர்கள். இவருடனான அறிமுகம் ட்விட்டரில் இடம்பெற்றது. இவர் அழகாக வெண்பா எழுதுவார். அழகாக கதையும் சொல்வார். இவரது புனைவின் தலைப்பு காரணம். இவரது கதையை படிக்கும் முன்னரே நான் இப்படி எழுதி இருந்தேன்.

மனமுவந்து பாராட்டுவதை கூட உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என எண்ண  வைத்தது சந்தேக குணத்தின் குரூரமான பக்கம். 

இவரது கதையை படிக்கும்போது இதே சிந்தனை கொண்ட கதை. ஆனால் மனிதர்கள்  எப்படி விலகிப் போய்விட்டார்கள் என சொல்லும் அழுத்தமான கதை.

அடுத்து ரைலு. முத்தலிப். நகைச்சுவை உணர்வு உடையவர். பெயர்தான் முத்தலிப் ஒரு முத்தம் கூட தன இதழ்கள் கண்டதில்லை என என்னை சிரிக்க வைத்தவர். ரைலு ஒரு கனவும் அந்த கனவின் ஏமாற்றமும் சொன்ன கதை. இவர் தற்போது எழுத்துலகில் பரப்பரப்பாக கண்காணிக்கப்படுபவர். இந்த கதையும் அப்படியே. அதுவும் எங்கள் ஊர் பக்க கதை என்பதால் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை ரயில் மனத்திரையில் வந்து போனது. உள்ளப் போராட்டங்களை சொன்னவிதம் வெகு சிறப்பு. சில புதிய சொற்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

சங்கீதா பாக்கியராஜா. இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்துகளில் ஒரு கனமான வலி இருக்கும். அது சிறிது நாட்கள் வலித்துக் கொண்டே இருக்கும். இவரது எழுத்து பெண்களின் பிரச்சினைகளை நிறைய பேசும். இந்த அன்றில் பறவை ஒரு தபுதாரனின் கதை. நான் இந்த கதையைப் பற்றி நிறைய சொல்லப்போவதில்லை. ஒரே வரி மனைவி போனால் எல்லாம் போம்.

அடுத்து தமிழ் தமிழ் தமிழ். ஆம். கண்ணபிரான் ரவிசங்கர்.  இவரது சிந்தனைகள் இவர் ஒரு தமிழ் மாமேதை. எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கணிதமேதை ராமனுஜன் நினைவுக்கு வருவார். இவர் முருகனின் அருள் பெற்றவர். தரவு இல்லையெனில் வெளியே போ என மிரட்டும் கோபக்காரர். இவரோடு நான் ஒருமுறை ஆண்டாள் பற்றி விவாதம் செய்தபோது நான் விளையாட்டாக எழுதினேன் ஆனால் இவர் எல்லாவற்றையும் ஆணித்தரமாக எழுதினார். இதோ தரவு இப்படி அர்த்தம் கொள்ளலாம் என்றார். எனக்கு பொதுவாக புராணங்கள், பழைய விசயங்களில் அத்தனை தரவு பார்ப்பதில்லை, கற்பனைதான். ஆனால் இவரின் சிந்தனை வேறு. இவரைப்போல தமிழுக்கு பலர் வேண்டும். இவருக்கு எழுத்துலகில் கடும் எதிர்ப்புகள் இருப்பதால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் இவர் எழுத வேண்டும். இவர் எல்லாம் மாதம் ஒரு தமிழ் நூல் வெளியிடலாம். தமிழில் சிலப்பதிகாரம்தனை ஆய்வு செய்து உள்ளார். இவரது எழுத்து எனது நூல் ஒன்றுக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்.  அதைப்போல இவரது எழுத்து சுமந்து வந்த 'தமிழ்' மின்னிதழ் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறது. இலக்கியம், இலக்கணம் என சொல்லி எல்லா விசயங்களையும் இங்கே அருமையாக எழுதி இருக்கிறார். தகவல் களஞ்சியம், தமிழ் களஞ்சியம்.

அட இப்படி எழுதலாமா என ஜி ரா எண்ண  வைத்துவிட்டார். கேபியும் மூன்று பெண்களும் என்பதான புனைவு. எனக்கு அவர் குறிப்பிட்ட படங்கள் தெரியாது என்பதால் முழுவதும் உள்வாங்க இயலவில்லை. ஆனால் கதைநாயகிகள் மூலம் அற்புதமாக பல விசயங்கள் சொல்லி இருக்கிறார். படம் பார்த்து மீண்டும் படித்தால் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று இறுதியாக விமர்சனம். உலகப்படங்கள் பார்ப்பவர்கள் தமிழில் அதிகம், ஆனால் அதை அழகாக விமர்சனம் செய்வது இவருக்கு மட்டுமே கைகூடும். இவரது எழுத்து எனக்கு முன்னரே பரிச்சயம். புத்தக விமர்சனங்கள் இவர் எழுதுவது உண்டு. இவர் எழுதியதைப் படித்தபோது அந்த நியூரி பில்கே சிலேன் இயக்குனரின் படங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிகவும் தெளிவான நடை. தற்போது இவரது எழுத்துக்கள் பத்திரிக்கைகளிலும் வருகிறது.

நாளை, விஷ்ணுபுரத்தான் ஜெயமோகன் மற்றும் சில கவிதைகளும், புனைவுகளும்.

(தொடரும்)


No comments: