Friday 14 August 2009

சொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்

இந்து சாமிகளில் யார் பெரியவர் எனும் கேள்விக்கணையை சுந்தர் அவர்கள் தொடுத்திருக்க, அவருக்கு எனது கவிதையான சொல் எனும் சொல் கவிதையைத் தந்து இறைவனிடம் சென்று அவரை இந்த கவிதை குறித்து என்ன சொல்கிறார் எனக் கேட்டு வரச் சொன்னேன். அவரும் இறைவனிடம் கேட்டு வந்ததாகவும் "ரகசியம் என்று ஒன்று இருக்கிறது என்று தீராத வாஞ்சையுடன் நீங்கள் தேடுகிறீர்கள் அறியாத ஒன்றை அறிந்ததாக நினைத்துகோள்கிறீர்கள்" அவ்வளவுதான் பதில் எனச் சொல்லி இருந்தார். ஆனால் எனக்கோ அந்தப் பதிலை பார்த்ததும் இப்படி ஒரு பதில் எல்லாம் தருவார் இறைவன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு நான் எனது பதிலைத் தெரிவித்தேன். ''கவிதையை வாசித்து என்ன சொல்கிறார் என்று தானே கேட்டேன், நான் என்ன நினைக்கிறேன் என அவரை சொல்லச் சொன்னேனா ஐயா? இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்த மனுசர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இதிலிருந்து தெரிகிறதா ஐயா நீங்கள் கேட்ட கேள்விக்கான யார் பெரியவர் எனும் கேள்விக்கான பதில்.''

பின்னர் அவர் என்னிடம் கேட்ட சில விசயங்களுக்கு கீழ்கண்டவாறு பதில் அளித்து இருந்தேன். நீங்களும் தெரிந்தால் சொல்லுங்கள்.

சுந்தர்: உங்கள் கவிதையை பற்றி மட்டும் பேசுவோம்,
முதலில் அந்த கவிதை நீங்கள் எழுதியதா அல்லது இறைவனிடம் இருந்து பெற்றதா?
உங்களுக்கு அதன் அர்த்தம் தெரியுமா? தெரியாதா?
இரகசியத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்களா அல்லது இன்னும் அறியவில்லையா?

நான்: உண்மையைச் சொல்லப் போனால் எழுதியது நானேதான், ஆனால் ''எழுதியது நானே'' என சொல்லும்போது ஆணவம் மட்டுமே மிஞ்சுகிறது, எனது நினைவுக்குத் தெரிந்தவரை இறைவனிடம் இருந்து பெறவில்லை ஐயா. இப்படித்தான் இறைவன் சொல்வதாய் ஒரு கவிதை எழுதிவிட்டு இதை எழுதியது நான் அல்ல, ரங்கனே என குறிப்பிட்டு இருக்கிறேன், அந்த கவிதையும் விரைவில் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அர்த்தமில்லாத, அர்த்தம் கொடுக்காத கவிதைகளை ஒருபோதும் எழுதிடத் துணிவதில்லை, ஒரு வார்த்தையாவது முழு கவிதைக்கு அர்த்தம் கொடுத்துவிடும், அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும். ஆம் ஐயா அர்த்தம் தெரியும்.

இரகசியம் அறிந்து கொண்டேன். இதைச் சொல்லும்போதே இரகசியம் காப்பாற்றப்படுவது முடியாததாகிறது. எனவே இரகசியம் அறியாததுபோலவே இருக்கின்றேன். அறிந்ததை பிறருக்கு அறியச் செய்த இராமானுஜர் எங்கே, அறிந்தும் அறியாத அஞ்ஞானம் உடையவனாய் இருக்கும் நான் எங்கே!

இறைவன் தங்களை என்னிடம் கேள்வி கேட்க வைத்து அவர் சொன்ன பதில் சரிதான் என நிரூபிக்கப் பார்க்கிறார் போலும்.


சுந்தர்: சிலரை போல் அல்லமால் உங்களுக்கு உலகத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் இருக்கிறது என்பது எனக்கு தெரிகிறது அது நல்லதுதான் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எந்த ஆராச்சியினாலும், அறிவினாலும் இறைவனை மட்டும் அறிந்துவிட முடியாது.

நான்: உலகத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் எதுவும் இல்லை, ஆனால் உலகத்திற்கு உட்பட்ட சிந்தனை இருக்கிறது, அது மட்டுமே இருக்க முடியும், அதுதானே எனக்குத் தெரிந்த ஒன்று. பிறரது சிந்தனைகள் எனது சிந்தனையைவிட வலிமையானவை என்றே அறிந்திருக்கிறேன்.

அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருப்பவனும், அனைத்திலும் கட்டுப்பட்டு உள்ளே இருப்பவனும் இறைவன் என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.


சுந்தர்: நான் விடாபிடியாக எதையும் தேடுபவன்தான். ஆனால் தேடுதலில் பயன் இருக்க வேண்டும். இறைவன் என்று ஒருவர் இருக்கிறான் என்பதை கண்டுகொண்டேன் எனவே விடாப்பிடியாக அவரை தேடுகிறேன்.

நான்: ஐயா, தேடிக்கண்டெடுக்கும் பொருள் அல்ல இறைவன் என்பதை நீங்கள் அறிவீரோ? கண்டுகொண்ட ஒன்றை தொலைத்தால்தானே தேட வேண்டும், காணாத ஒன்று இருப்பதாய் அறிந்ததால் அதைத் தேடுகிறீர்களா? தேடலுக்கெல்லாம் உட்படாதவன் இறைவன், தேடுங்கள் எனச் சொன்னதெல்லாம் உங்களை நீங்களே உணரத் தேடச்சொன்னது, இறைவனை அல்ல!

சுந்தர்: உங்கள் கவிதைக்கான பதிலை கண்டுபிடிக்க நான் விடப்பிடியாய தேட வேண்டும் என்றால் எனது மேற்கண்ட கேள்விக்கு பதில் தரவும்.

நான்: பதில் அளித்துவிட்டேன் ஐயா, தேடலைத் தொலைத்துவிடாதீர்கள்

சுந்தர்: நான் எழுதுவது பலருக்கு ஜோக்காக தெரிந்தாலும் சிலர் பற்பல இடங்களில் இருந்து என்னை தொடர்புகொண்டு உண்மை பற்றி விசாரித்து அறிகின்றனர், அவர்கள் இருதயத்தை இறைவன் திறந்துள்ளார். அது தான் நான் எதிர்பார்ப்பது.

இறைவனைப் பற்றி அறிந்த ஒருவர் அமைதியாக இருப்பாரேயன்றி இறைவனைப் பற்றி பிரசங்கம் செய்து கொண்டிருக்கமாட்டார். வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி பேசிய, வாழ்ந்த மாபெரும் மனிதர்கள் இருந்த பூமிதானே இதுவன்றி இறைவனை பற்றி பிரசங்கம் செய்த பூமி அல்ல இது. அது அவசியமில்லாதது, ஆனால் அதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது நமது தவறே. பிரபஞ்சம் படைத்தவனை பற்றி யார் யாருக்குச் சொல்லித் தரவேண்டும்? இது அறிவியல் இல்லை ஐயா, சூரியன் மையமாகவும், கோள்கள் சுற்றிவருவதாகவும் சொல்லித்தருவதற்கு. ஒவ்வொருவரும் அறிந்த ஒன்றை அவர் அறியவில்லை என நாம் நினைத்துச் சொல்லித்தர முனைகின்றோம், ஆனால் அறிவிற்கு அப்பாற்பட்டவன் அல்லவா அவன். இதயம் எங்குமே திறந்துதான் இருக்கிறது, அனைவரும் அறிவார்கள், நல்லது ஐயா. ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பவன் அவன்.

கேலிக்குரிய விசயங்கள் என ஒன்றை நாம் ஏன் ஏற்படுத்தித்தர வேண்டும்? உலக மக்கள் அனைவரும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலிருந்தே நாம் சொல்லும் விசயங்களை பற்றித்தானே நமக்கு அக்கறை இருக்கவேண்டுமேயன்றி அனைவரும் ஏற்க வேண்டும் எனும் நோக்கம் இருக்கக் கூடாது, அதனால் மனம் சலிப்பு அடையவும் கூடாது.


சுந்தர்: பள்ளியில் வாத்தியார் எல்லோருக்கும் ஒன்றுபோல்தான் பாடம் சொல்லி தருகிறார் ஆனால் எல்லோருமா புரிந்துகொள்கின்றனர்? இல்லையே! அதுபோல் புரிபவர்களுக்கு புரியட்டும் புரியாதவர் சிரித்துவிட்டு போகட்டும்

அனைவருக்கும் புரியும்படிச் சொல்லித்தருபவரே சிறந்த ஆசிரியர், புரிந்துகொள்ளும்படி நடப்பவரே சிறந்த மாணாக்கன். புரிதல் இருந்தும் சிரிப்பவர்கள் இருக்கலாம் அல்லவா! அந்த உணர்தல் நமக்கு இருந்தால் போதும், பிறரை நாம் எப்பொழுதும் மாபெரும் மனிதர்களாகவே மதித்து நடத்துவோம்

சுந்தர்: படிக்கும் நேரத்தில் வேறு விஷயத்தில் நேரத்தை செலவழிக்கும் பலர் வாழ்வில் துன்பப்படும் போது அதை உணர்கின்றனர் அது போல் உணருகின்ற காலம் ஒன்று விரைவில் வரும் ! நாம் பிறருக்கு இறைவனை உணர்த்தவேண்டிய நமது கடமையை செய்வோம்!

நான்: உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பவனும் அவனே. உணர்வில்லாத நிலையில் கூட அவனை உணரலாம் ஐயா. மீண்டும் சொல்கிறேன் ஐயா, பிரபஞ்சம் படைத்தவனைப் பற்றி யார் யாருக்கு சொல்லித்தர வேண்டும்? இதுதான் தங்கள் கடமையாக கருதுவீர்களேயானல் செவ்வனே செய்யுங்கள், எதற்கும் மனம் தளராதீர்கள். நாம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் போதும், அவன் ஆனந்தப்பட்டுப் போவான்.

No comments: