Tuesday 4 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 8

கோவிந்தசாமி சிறிது நேரம் அந்த இடத்தில் படுத்து உறங்கினார். நிலைமை சீராகும்படியாய் இல்லை. கோவிந்தசாமிக்கு மீண்டும் அதே கனவு வந்தது. விழித்துக்கொண்டார். அந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி நல்ல அலைச்சல் போல உங்களுக்கு, இப்படி தூங்கிவிட்டீர்களே, நாம் இன்றைக்கு செல்ல இயலாது. நாளைதான் செல்ல இயலும் என்றார். கோவிந்தசாமிக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.

அன்றைய பொழுதெல்லாம் அவர்களுடனே போக்கினார். கிராமம் நினைவுக்கு வந்து போனது. சென்ற மாதம் வசந்தராஜுவின் மகளுக்கு மிகவும் சிறப்பாக திருமணம் நடந்தேறியது. ஊரில் கோவிந்தசாமியை காணாமல் பலரும் காசியிலே அவர் ஐக்கியமாகிவிட்டதாக பேசிக்கொண்டனர். கோவிந்தசாமியின் மகன்களும், மகளும் தந்தை நிச்சயம் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். கோவிந்தசாமியின் வீட்டினை சுத்தம் செய்வதோடு சரி, அங்கெல்லாம் சென்று தங்காமலே இருந்தார் வசந்தராஜ்.

கோவிந்தசாமி சொன்ன உதவித்தொகையை எடுத்துக்கொள்ளலாம் என வசந்தராஜ் சொன்னபோது சுப்புராஜ் மறுத்துவிட்டான். வேறொரு இடத்தில் கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். சுப்புராஜின் நேர்மையைக் கண்டு மிகவும் பூரிப்பு அடைந்தார் வசந்தராஜ். ஒருமுறை கோவிந்தசாமியின் மகன் வீட்டுக்கு வந்தபோது அவரது தந்தை செய்ததை அப்படியே சொன்னான் சுப்புராஜ். அதற்கு அவரது மகன் பரவாயில்லை, நீயே நன்றாகப் பராமரித்துக்கொள் என சொல்லிவிட்டார். சுப்புராஜுவுக்கு சந்தோசமாகவும் அதே வேளையில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஊரில் உள்ளவர்கள் வசந்தராஜ் குடும்பத்தைச் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கோவிந்தசாமியின் வீட்டையும் நிலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்தான் சுப்புராஜ்.

அடுத்த நாள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பயணமானது மிகவும் கரடுமுரடாக இருந்தது. கோவிந்தசாமிக்கு உடல் எல்லாம் அலுப்பாக இருந்தது. அப்பொழுது அந்த நபர் ஒரு கதையைச் சொன்னார்.

ஒரு நாட்டின் மன்னருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகன் பாடல் கவிதை எழுதுவதில் மிகவும் சிறப்பு பெற்றவனாக இருந்தான். மற்ற மகன் போர்ப்படையில் சென்று சேர்ந்தான். கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்பொழுது மன்னனின் கனவில் வந்த ஏஞ்சல் பெண் உனது ஆட்சியை மெட்சினேன். உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மன்னர் எனக்கு எனது மகன் ஒருவனின் புகழ் என்றுமே நிலைத்து இருக்க வேண்டும் என சொன்னார். உடனே ஏஞ்சல் பெண் அப்படியே ஆகட்டும் என சொன்னாள்.

மகன் எழுதிய கவிதைகள் நாடு முழுவதும் வெகுசிறப்பாக பாடப்பட்டது. அனைவரும் பாடிக்கொண்டே இருந்தார்கள். மன்னனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. தான் நினைத்தது போலவே காலத்தால் அழியாத அருமையான பாடல்களை எனது மகன் எழுதிவிட்டான் என பூரித்துப்போனார்.

இப்படியாக இருக்க மன்னன் இறந்துபோனான். ஏஞ்சல் பெண்ணைச் சந்தித்தான் மன்னன். அப்பொழுது ஏஞ்சல் பெண்ணிடம் மன்னன் இன்னும் பல வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் கொண்டு என்னை நிறுத்து. காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய என் மகன் பாடலை கேட்கவேண்டும் என சொன்னார். ஏஞ்சலும் எதிர்காலத்தில் பலவருடங்களுக்கு அப்பால் மன்னரை கொண்டு நிறுத்தினாள். அப்பொழுது ஒரு இனிய ராகம் கொண்ட பாடல் கேட்டது.

இது என்ன பாடல், என் மகனுடையது அல்லவே என்றார் மன்னர். அதற்கு ஏஞ்சல் இது உங்களுடைய மகன் உடையதுதான். கவிதைகள் பாடல்கள் மட்டுமே புனைந்த மகனுடைய பாடல்களும் கவிதைகளும் சில காலத்தில் மக்கள் மறந்து போனார்கள். ஆனால் போர்ப்படையில் இருந்த உன் மகன் ஒருமுறை ஒரு பெண் அடிபட்டு இறக்கும் தருவாயில் இறந்தாள். அப்பொழுது உன் மகன் பாடத் தெரியாத போதிலும் இறைவனை நோக்கி அந்த உயிரை எழுப்பித் தருமாறு இரண்டே வரிகள் கொண்ட பாடலைப் பாடினான். அந்த பாடலைப் பாடியதும் அந்த பெண் உயிர் பிழைத்துக் கொண்டாள். அந்த பாடல் தான் இன்று வரை காலத்தால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது என்றாள் ஏஞ்சல் பெண். மன்னர் மனமுருகினார்.

அந்த கதையைக் கேட்ட கோவிந்தசாமி கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு நிமிடம் வாழ்வது எனினும் பிற உயிரின் நன்மைக்காக வாழ்ந்துவிடுவதுதான் சிறந்த வாழ்க்கை என நினைத்தார். வசந்தராஜ் குடும்பத்துக்கு தான் செய்த காரியம்தனை நினைத்துப் பார்க்கையில் மனம் நிறைய புதையலை எடுத்தது போல் உணர்ந்தார்.

(தொடரும்)

No comments: