Sunday 2 August 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)

தோணுகால் ஊரின் மந்தையில், அடுத்த வருடத் தேர்தலில் தனக்கு ஓட்டு அளிக்கும் வாய்ப்பு இருப்பதைப் பற்றியும், எந்த கட்சிக்கு ஓட்டு அளிக்கலாம் எனும் யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரகுராமன்.

அவனது யோசனையை கலைக்கும் விதமாக அங்கு வந்து சேர்ந்தான் பழனிச்சாமி.

''டேய் ரகு, என்னடா இங்க வந்து உட்கார்ந்திருக்க, வக்கனாங்குண்டுக்காரங்கே நாளைக்கு மேட்ச் விளையாட கூப்பிட்டாங்கடா, 50 ரூபா மேட்ச், நீ வரியல''

''ம் வரேன், பழனி நீ அடுத்த வருசம் தேர்தலுல முத ஓட்டுப் போடனும்ல''

''ஒரு கள்ள ஓட்டு அடுத்த தொகுதியில நடந்த இடைத்தேர்தலுலப் போய் போன வருசமே போட்டு வந்துட்டேன், முத ஓட்டா?''

''எந்த கட்சிக்குப் போட்ட, ஏன் அப்படி போட்ட?''

''நீ காலேஜுல படிக்கிற, நான் ஊர் சுத்திட்டுத் திரியறேன், நூறு ரூபா கொடுத்தானுங்க, பசக்குனு ஒரு குத்து குத்திட்டு வந்துட்டேன், எந்த கட்சினு சொன்னேனு வைச்சிக்கோ அப்புறம் அந்த கட்சிக்குத்தான் அவமானம், சரி கிளம்பு பிராக்டிஸ் பண்ணலாம்''

''அடுத்த வருசம் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவ''

''ஓட்டு ரகசியத்தை எல்லாம் வெளியிலச் சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்றேன். எவன் அதிக காசு தரானோ அவனுக்குத்தான் என் ஓட்டு. அந்த ஒருநாள் கூத்துக்கா இப்படி யோசிச்சிட்டு இருக்கே''

''நீங்க எல்லாம் விளையாடப் போங்க, நான் சாயந்திரமா வரேன்''

ரகுராமனுக்கு பழனிச்சாமி சொன்ன பதிலில் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. தனது தாத்தா காலத்திலிருந்து தனது வீட்டில் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சி போட்டியிடாதபோது அதன் கூட்டணி கட்சிக்கும் என வாக்களித்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏன் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்கு அளிக்கிறீர்கள் என அவன் ஒருநாளும் கேட்டதில்லை. இன்று கேட்டுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளாராகப் பணியாற்றும் பாண்டுரங்கன் ஆசிரியர் ஞாபகம் வந்தது. அவரது வீட்டு வாசலில் சென்று நின்றான் ரகுராமன்.


''அடடே வா ரகுராமா, படிப்பு எல்லாம் எப்படி போகுது?''

''நல்லாப் படிக்கிறேன் ஐயா''

''ம்ம்... என்ன சாப்பிடுற''

''வேணாம் ஐயா. நீங்க எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு வரீங்க, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்க''

''அரசியல் அறிவியல் படிக்கிறதால இப்படி ஒரு கேள்வியா? ம்... நான் எப்பவும் தி.மு.க தான். உதயசூரியன் சின்னத்தில ஓட்டுப் போட்டேப் பழகிப் போச்சு''

''ஏன்? அந்த கட்சிக் கொள்கை ரொம்ப பிடிச்சதா ஐயா?''

'' நான் கலைஞரோட அபிமானி. அவரோடப் பேச்சு, எழுத்துல கவரப்பட்டவன், அதனால் எப்பவும் தி.மு.க வுக்கும், கூட்டணிக்கும் தான் என் ஓட்டு''

''கட்சிக் கொள்கையைப் பார்க்கறதில்லையா ஐயா?''

''தி.மு.க வோடதா, கூட்டணி கட்சிகளோடதா?''

''பொதுவா''

''பார்ப்பேன், பார்ப்பேன், உதயசூரியன் அப்படினாலே இருளைப் போக்குபவனு அர்த்தம், இதைவிட தனியா என்ன கொள்கை வேண்டி இருக்கு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதாதா?''

ரகுராமன் யோசித்தான். தி.மு.க. அ.தி.மு.க பெரிய கட்சிகள். வளர்ந்து வரும் கட்சிகள்னு சில கட்சிகள். சுயேட்சையாகப் போட்டியிடப் போகிற பலர். எதிர் வரும் நபரிடம் எதேச்சையாகக் கேட்டான்.

''அண்ணே, அடுத்த வருசத் தேர்தலுல எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்க''

''பச்சைக் குத்திருக்கோம் பாரு, எப்பவும் இரட்டை இலை தான்''

அவரது கையைப் பார்த்தான் ரகுராமன். கண்களில் ஏக்கம் நிலவியது. பொறுப்பற்ற மக்கள் இருக்கும்வரை ஒரு பொறுப்பானத் தலைவரை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

(தொடரும்)

2 comments:

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Radhakrishnan said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள். மிக்க நன்றி சந்ரு அவர்களே.