Tuesday 11 August 2009

பாறையில பேரு எழுதலாம்

மதுரை தெற்குத் தெருவில் இருக்கும் மொகலாயன் மார்பிள்ஸ் அண்ட் கிரானைட்ஸ் கடைக்குச் சென்றார் 40 வயதான போஸ். கடைக்குள் சென்றதும் 45 வயது மதிக்கத்தக்க வீரபாகுவிடம் கற்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

‘’இந்த மார்பிள் எவ்வளவு விலை?’’

‘’இது 240 ரூபாய்’’

‘’குறைஞ்ச விலையில எதுவும் இல்லையா?’’

‘’30 ரூபாயில கூட இருக்குங்க’’

‘’சரி சரி, இந்த கிரானைட் எவ்வளவு விலைனு சொல்ல முடியுமா?’’

‘’இது 440 ரூபாய்’’

‘’இந்த கல்லு ரொம்ப நல்லாருக்கு, எந்த ஊரு’’

‘’இது ராஜஸ்தான் மார்பிளு’’

‘’அதோ அது என்ன விலை’’

‘’அது இத்தாலியன் மார்பிளு 500 ரூபாய்’’

‘’அவ்வளவு விலையா?’’

‘’நீங்க கல்லு வாங்க வந்தீங்களா, விலை கேட்க வந்தீங்களா?’’

‘’நாலு கல்லோட விலை தெரிஞ்சாத்தானே எதுனு வாங்க முடியும்’’

‘’இந்தா போகுதே விஎன்பி பஸ்ஸு, இந்த முதலாளி கூட கிரானைட் நிலத்தை வாங்கினதால, கிரானைட் எல்லாம் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய ஆளாயிட்டார் இப்போ, அதுமாதிரி வெளிநாட்டு கல்லு நாம இறக்குமதி செஞ்சா விலை அதிகமாத்தானே இருக்கும். கல் இரண்டும் என்னவோ ஒண்ணுதான். நீங்களே சொல்லுங்க’’

‘’40 ரூபாய் மார்பிளு காட்டு, அதுல இருந்து எடுத்துக்கிறேன்’’

‘’விலை குறைஞ்சதா எடுத்தா தரமில்லைனு நினைக்காதீங்க, அந்த மார்பிளு ரொம்ப நல்லா இருக்கும்’’

‘’விலையுயர்ந்த கல்லை விற்காம இப்படி விலை குறைஞ்சதை என்கிட்ட விற்கிறியே’’

‘’வாங்குறவங்களோட தரத்தைப் பொருத்துதானே விற்கறதோட தரமும் போகும், நான் சொல்றது சரிதானேங்க’’

‘’பொருளோட தரத்துக்கும் மனுசனோட தரத்துக்கும் என்ன சம்பந்தம், நீ கஸ்டமருக்கிட்ட இப்படித்தான் பேசுவியா’’

‘’இப்போ பாருங்க, நான் எவ்வளவு மரியாதையா உங்ககிட்ட வாங்க போங்கனு பேசறேன், ஆனா நீங்க நான் இங்கே வேலை பாக்குறேனு ஒரே காரணத்துக்காக நீ வா போ னு பேசறீங்க இதுல இருந்து தெரியலையா உங்களோட தரம்? வாங்க வாங்க அந்த மார்பிளை எடுத்துத் தரேன்’’

போஸ் மார்பிளை வாங்குவதற்கான முன்பணத்தைக் கொடுத்துவிட்டு வீரபாகுவிடம் வந்தார்.

‘’நீங்க எவ்வளவு வருசமா வேலை பாக்குறீங்க’’

‘’20 வயசில இருந்து இங்கேதான் வேலை பாக்குறேன்ங்க’’

‘’உங்ககிட்ட வர கஸ்டமர் மரியாதை இல்லாம பேசுறப்போ எப்படி இருக்கும்’’
‘’ஏண்டா இப்படிப்பட்ட இடத்தில வேலை பாக்குறோம்னு இருக்கும்’’

‘’வேலை பார்க்குற இடத்தை தரக்குறைவா நினைக்குறது தப்புனு தோணலையா உங்களுக்கு’’

‘’யாரும் மதிக்கமாட்டாறாங்களே’’

‘’அடுத்தவங்க மதிக்கறமாதிரிதான் வேலை செய்யனும்னு இல்லைங்க, நாம செய்யற வேலைய மதிச்சி நடந்துக்கிறனும், முதல்ல அதைப் புரிஞ்சிக்கோங்க. இப்போ நான் நீங்கனு மரியாதையா பேசிட்டேன், உங்களுக்கு வேலை மேல மரியாதை வருமா?’’

‘’நான் சொன்னதால பேசினீங்க, இந்த வேலைய மதிக்கிறதுனாலதான் நான் இத்தனை வருசமா இங்கே இருக்கேன்’’

‘’இனிமே மரியாதையா பேசறேன்ங்க’’

போஸ் வீட்டிற்குச் சென்று மார்பிள் வாங்கிய கதையை தனது மனைவியிடம் சொன்னார். அப்பொழுது தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அப்படியே அமர்ந்தவர் கவனத்துடன் கேட்க ஆரம்பித்தார்.

‘இந்த மார்பிள் கிரானைட் எல்லாம் எப்படி உருவாகிறது தெரியுமா? இது ஒன்றும் உடனடியாக நடக்கக்கூடியதில்லை. மலையில் இருக்கும் பாறையானது இயல்பு நிலை அழுத்தத்தாலும், வேதியியல் மாற்றத்தாலும், விலங்கு மற்றும் தாவரங்களினால் ஏற்படும் உராய்வுகளாலும் உடைந்து சிறு துகள்களாக மாறுகின்றன. அவ்வாறு மாறும் அந்த துகள்கள் மழை நீரினாலோ, ஆற்றினாலோ அடித்துச் செல்லப்பட்டு ஓரிடத்தில் படிமமாக படிகின்றன. அவ்வாறு படிந்த இந்த துகள்களானது பல வருடங்கள் அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் பூமிக்குள் புதைந்து பாறையாக மாறுகின்றன. இந்த முதல் நிலை கற்களே கட்டிடங்கள் கட்ட உபயோகமாகின்றன. இதன் வேதியியல் தன்மை கால்சியம் கார்பனேட் எனப்படுகிறது.

அவ்வாறு உருவான பாறையானது பூமியின் மேல்நோக்கு அழுத்தத்தால் வெளியே தள்ளப்படும், அல்லது இதே பாறையானது மேலும் மேலும் கீழே அமிழ்ந்து மார்பிள் போன்ற பாறையாக உருவமெடுக்கின்றன. அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்ட காரணத்தால் தன்னை மெருகுபடுத்திக் கொள்கின்றன இந்த பாறைகள். மேல்நோக்கு அழுத்தத்தை தாங்காதபோது இந்த பாறைகள் வெளியேறக்கூடும், அப்படியில்லாத பட்சத்தில் மேலும் வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்பட்டு கிரானைட்டாக மாறுகின்றன இந்த பாறைகள்.

வெப்பக்குழம்புகளிலிருந்தும் கிரானைட் நேரடியாக உருவாகின்றன. உடனடியாக குளிராமல் மெதுவாக உள்ளுக்குள்ளே குளிர்வதால் பெரிய படிகங்களாக மாறி கிரானைட் உருவாகிறது. திடீரென ஏற்படும் எரிமலையால் இந்த வெப்ப குழம்புகள் வேகமாக குளிர்ந்து பாஸல்ட் எனப்படும் பாறையாக மாறுகிறது.

கிரானைட், மார்பிள் பாஸல்ட் போன்றவைகள் பெரும் அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாக்குதல் பிடித்து உருவானவைகள். அவை பெரும் விலையைப் பெற்று இருக்கின்றன’

போஸ் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு மனைவி போட்டுக்கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு வீட்டின் தாவாரத்திற்கு வந்தார். பிரச்சினைனு எதையும் நினைக்காம போராடினாத்தான் ஜெயிக்கலாம்னு வாழ்க்கையில எத்தனையோ பேரு சொல்லி வைச்சிருக்காங்க. இப்படி போராடி வர பாறைக்கு தரத்தை வைச்ச மனுசன் வாழ்க்கையில போராடுற மனுசனை மட்டும் ஏன் தள்ளி வைச்சான் என நினைத்துக்கொண்டு இருக்கும்போதே வீரபாகுவின் மேல் தனக்கு உண்மையிலே மரியாதை வந்தது.

முற்றும்.

No comments: