Tuesday 13 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 17

''அத்தை  ரொம்ப நல்லா சமைச்சி இருந்தாங்க''

எனது கவனம் எல்லாம் காயத்ரியின் அக்காவின் செயல்பாட்டில் இருந்தது.

''முருகேசா, நான் சொல்றது காதுல வாங்கலையா''

''அம்மா எப்பவும் நல்லா சமைப்பாங்க''

எந்த ஒரு ஜீவனும் இல்லாமல் பேசி வைத்தேன். அதற்குள் அம்மா, பால் காய்ச்சி கொண்டு வந்தார்கள்.

நாங்கள் மூவரும் மாடிக்கு வந்தோம். சுபத்ராவிடம் சொல்வதா வேண்டாமா எனும் யோசனையுடன் காயத்ரி அக்கா விசயத்தை காயத்ரியின் அனுமதி இல்லாமல் சொல்லி முடித்தேன்.

''இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்''

''சுபா, என்ன சொல்ற நீ''

''அவங்களுக்கு பிடிச்ச லைஃப் தேடிக்கிட்டாங்க, இதுல என்ன இருக்கு''

''ஒரு முறை இருக்கு சுபா''

''என்ன முறை''

''வாழ்க்கை முறை, நெறிமுறை''


''ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்து கொண்டு, தனது சந்ததிகளை பெருக்குவதில் மிகவும் குறியாக இருக்கும், அப்படிப்பட்ட உயிரினமே இந்த பூமியில் வாழ தகுந்த அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும். அதுமாதிரிதான், மனுசங்களும். தனக்கு ஏதாவது சாதகம் நடைபெறக் கூடியதா இருந்தா அதுபக்கம் தனது நிலையை வைத்து கொள்வார்கள். இப்படி வாழ்ந்து கொண்டிருந்தவங்க ஒரு சமூகமா அமைஞ்சப்போ, இந்த மாதிரி தனக்கு மட்டுமே சாதகமா நடந்து கொண்டிருந்ததை ஒரு சிலரால் சகிச்சிக்க முடியலை. அதனால கொண்டு வரப்பட்டதுதான் நெறிமுறைகள், மரியாதை, கலாச்சாரம் எல்லாமே. ஆனா பரிணாம விதிப்படி இது எல்லாம் சரியானதுதான்''

சுபத்ராவின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது, ஆனால் அதுதான் நிதர்சனமோ என எண்ண வைத்தது.

''சுபா, நீ சொல்றது சரிதான், ஆனா...''

''என்ன ஆனா...  இப்போ நீ காயூவை காதலிக்கிறே, நாளைக்கே நீ காயூவை விட்டுட்டு வேற பொண்ணோட வாழ மாட்டேன்னு எப்படி உன்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா அப்படி நடக்காது, நடக்க கூடாதுன்னு நீங்க இரண்டு பேருமே முடிவோட இப்போ இருப்பீங்க, அப்படிப்பட்ட நினைவுகளுக்கு இடையூறு வந்தா என்ன பண்ணுவீங்க, நீங்க இரண்டு பேரும் முயற்சி பண்ணுவீங்க, எந்த விசயம் டாமினேட் பண்ணுதோ அதுவே கடைசியில ஜெயிக்கும், உதாரணத்திற்கு என்னை உனக்கு ஒரு போட்டியானவளா காயூ இப்போ நினைச்சிட்டு கலங்கிட்டு இருப்பா''

இப்படி சுபத்ரா சொல்வாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனக்கு மனதில் எவரோ கடப்பாரை கொண்டு பெயர்ப்பது போன்று இருந்தது. காயத்ரியின் முகம் கூட சற்று மாறிப் போனது. திடீரென சுபத்ரா ஆங்கிலத்திற்கு மாறினாள்.

''This world is full of uncertainties, anything can happen to anyone at anytime. However the probability of that happening is very limited on that given occasion and on that given situation''

''ரொம்ப தத்துவம் எல்லாம் பேசற சுபா. நீ எத்தனை நாளைக்கு இந்த ஊருல இருக்க போற, நீ போன காரியம் என்ன ஆச்சு''

''முருகேசா,  என்ன பேச்சை மாத்துற. இதைத்தான் இப்போ சொன்னேன், உனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்குல. எது எப்ப வேணும்னாலும் நடக்கும், நடக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையனும், அமைச்சிகிரனும். இப்போ you feel me as a threatening to your relationship''

காயத்ரிக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''சுபா, என்ன பேசுறீங்க நீங்க, உங்களுக்கு முருகேசுவை பிடிச்சி இருந்தா நேரடியா பேசுங்க, அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சி பேசறீங்க. நானே என்னோட அக்கா பண்ணினது பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கேன், நேரம் காலம் புரியாம பேசறீங்க''

''காயூ, ஆமா நான் முருகேசனை காதலிச்சேன், இன்னமும் காதலிக்கிறேன், அவன் மனசை மாத்துறேனா இல்லையா பாரு, இந்த ஊருலதான் இன்னும் ஒரு மாசம் இருப்பேன், தேவைப்பட்டா ஒரு வருசம் கூட இருப்பேன். என்ன நடக்குதுன்னு பாரு, வரேன் பை''

சுபத்ராவின் பேச்சு எனக்கு கனவில் நடந்தது போன்றே இருந்தது. அவ்வாறு பேசியவள்  வேகமாக கிளம்பினாள்.

''சுபா ஒரு நிமிசம் உட்கார், நீ என்ன பேசினனு தெரிஞ்சிதான் பேசினியா. படிக்கிற காலத்தில ஒரு நல்ல பிரண்டா பழகிட்டு இப்படி பேசற, அதுவும் காயூ முன்னால''

''ஏன், காயூ இல்லாதப்ப பேசி இருந்தா இனிச்சி இருக்குமா, ஆசை ஆசையா உனக்கு சோறு கொண்டு வருவேனே, உனக்கு ஒன்னுனா நான் ஓடி வருவேனே. என்னோட காதல் உனக்கு புரியலையா! I will take you away from her, this is for sure. Bye''

சுபத்ரா காயத்ரியின் அக்கா போனது போலவே வேகமாக கீழிறங்கி சென்றாள். நாங்களும் கீழிறங்கினோம். என் அம்மாவிடம் சென்று வருகிறேன் அத்தை என சொல்லிவிட்டு கிளம்பினாள். சிறிது நேரம் கழித்து என் அப்பா வந்தார். என் அப்பாவிடம், அம்மாவிடம் சுபத்ரா பற்றிய விசயத்தை சொல்லி வைத்தேன். அம்மாவிற்கு மிகவும் கோபமாக இருந்தது. அப்பா யோசனையோடு இருந்தார்.

''என்னப்பா பண்ணலாம்''

''என்கிட்டே கேட்டா எப்படி, நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தா அவ என்ன பண்ண முடியும்''

''முருகேசு, நீ கவலைப்படாத, அவளோட காலை நான் ஓடிச்சி விடுறேன், அடுத்தவாட்டி வரட்டும், நல்ல பொண்ணுன்னு நினைச்சா இப்படியா பேசிட்டு போறா''

''அம்மா, கால் எல்லாம் ஒடிக்க வேண்டாம். அப்பா, காயத்ரியோட அக்கா வீட்டை விட்டு கிளம்பி போய்ட்டாங்க, ரங்கநாதன் வந்து கூப்பிட்டு போய்ட்டார், உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க''

''என்ன சொல்ற''

''ஆமா, இனிமே வரமாட்டாங்க, அப்படியே கல்யாணம் பண்ணி வாழ போறாங்க''

''என்னம்மா காயத்ரி இது எல்லாம்''

காயத்ரி அழத் தொடங்கினாள். அவளுக்கு எத்தனை வலிக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

''நீ ஏன்மா அழற, அதுதான் சரின்னா நல்லா இருந்துட்டு போகட்டும், கல்யாண தேதி இடம் தெரிஞ்சா போயிட்டு வருவோம். நீ கவலைப்படாதம்மா''

அப்பா ஆறுதல் வார்த்தை சொன்னார். அம்மா காயத்ரியின் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

''இங்க பாரு காயத்ரி, நீ எதை நினைச்சியும் மனசை குழப்பிக்காத, உன்னை பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. இந்த வயசுல உனக்கு இத்தனை சோதனையா? கவலைபடாத  நாளைக்கு ரங்கநாதன் வீட்டுக்கு போவோம், உன் அக்காகிட்ட பேசுவோம். சந்தோசமா இருக்கட்டும், எப்ப இருந்தாலும் அந்த வீட்டுக்கு போகப் போற பொண்ணுதான''

காயத்ரி சற்று சமாதானம் அடைந்தது போன்றே தெரிந்தது. நானும் காயத்ரியிடம் உறுதி கொடுத்தேன். நான் காதலித்த ஒரே பெண் காயத்ரி மட்டுமே என்பதை சத்தியம் செய்தேன். இருப்பினும் சற்று பயம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. அதிகாலையில் காயத்ரியின் முகம் தனை பார்த்தபோது இரவெல்லாம் அழுது இருக்க கூடும் என்றே காட்டியது.

காலையில் நாங்கள் நால்வரும் ரங்கநாதன் வீட்டிற்கு போனோம். ரங்கநாதனின் அம்மாவிடம் பேசினோம். அவர்கள் காயத்ரியின் அக்கா அவர்களுடன் இருப்பதையே விரும்பினார்கள். காயத்ரியின் அக்கா தான் அவ்வாறு கிளம்பி வந்தமைக்கு வருத்தம் தெரிவித்தாள். திருமணத்திற்கு கட்டாயம் அழைக்கிறோம் என சொன்னார்கள். காயத்ரி, அவளின் அக்காவிடம் தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தாள். அப்போது சுபத்ரா அங்கே வந்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அத்தை என்றே ரங்கநாதனின் அம்மாவை அழைத்தாள். பேசினாள். தனியாக பேசிவிட்டு காயத்ரியும் அவளது அக்காவும் திரும்பி வந்தார்கள். காயத்ரிக்கு அங்கே சுபத்ராவை கண்டதும் அச்சத்துடன் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டு இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வீட்டு வாசலை கடந்து கொண்டிருந்த போது, சுபத்ரா காயத்ரியிடம் வந்து சொன்னாள். எனக்கு மெல்லிதாக கேட்டது.

''உன்னோட அக்கா வாழ்க்கை என் கையில, ரொம்ப வசதியா போச்சு''

சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். நாங்கள் நடக்க ஆரம்பித்தோம், காயத்ரியின் உள்ளம் நடுங்கியதை என் உள்ளம் நடுக்கத்துடன் கண்டது.

(தொடரும்)

Thursday 8 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 1

எனக்கு இப்போது பதினெட்டு வயது. கருகருவென கருத்த முடி போன்றே எனது கருத்த தேகம். கொழுப்பு இல்லாத தசை என சொல்லும்படியான உடல்வாகு. பளபளக்கும் கண்கள், கூரிய காதுகள். விவசாயம்தான் எனது தொழில். பெரிய நகரம் என்று சொல்லாவிட்டாலும், நகரத்து தொனியுடன் உள்ள ஊர்தான் என்னுடையது. தனித்தனியாக இருந்த கிராமங்கள் எல்லாம் இந்த இருபது வருடத்தில் ஒன்றாகிப் போனது. சிறுவயதில் இருந்தே இசை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தது. எனது இசை குறித்த ஆர்வம் கண்டு இசை குறித்த புத்தகம் ஒன்றை எனக்கு ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊர் டில்லி தாத்தா தந்தார். நான் ஐந்து வயதில் அவ்வளவு நன்றாக தமிழ் வாசிப்பேன் என்று அம்மா பெருமையாக சொல்வார். அவர் உயிரோடு, ஊரோடு இருந்து இருந்தால் எனக்கு இசையை கற்று தந்து இருந்திருப்பார். அந்த வாய்ப்பு கிட்டாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.

இப்போதெல்லாம் கூட என்னிடம்  நீ இந்த படத்தோட பாட்டு கேட்டியா, அந்த படத்தோட பாட்டு கேட்டியா என நண்பர்களின் அன்புத் தொல்லை என்னை இலகுவாக விடுவதில்லை. நான் சினிமா பாடல்கள் எல்லாம் கேட்பது இல்லை என்று சொன்னால் என்னை கேலி செய்வார்கள் என்று கருதியே நான் மனம் நிறைந்து அவர்களிடம் ஆமாம் கேட்டேன் என பொய் சொல்லி விடுவதுண்டு. பத்து வயதில் இருந்து இதுவே பழக்கம் ஆகிப் போனது. இசை என்பது இரைச்சல் சத்தம் போலவே கேட்டது எனக்கு. பாடல் பாடுபவர் காட்டு கத்தல் கத்துகிறார் என்றே எண்ணம் இருந்தது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது உன்னை லூசுன்னு ஊருல பேசிக்கிறாங்க என ஒரு அண்ணன் சொன்னபோது எனக்கு அன்று முதன் முதலில் கண்ணீர் வந்தது. ஒரு தாளம், ஸ்ருதி, ராகம் இல்லாம் என்ன பாடல், என்ன இசை என்றே நான் நினைத்துக் கொண்டேன், இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து நான் பார்த்தது என்னவெனில் எவரேனும் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதையும் மீறி, பேருந்தில் பயணம் செய்தாலோ அல்லது சாலையில் நடந்து செல்லும்போதோ, தேநீர் கடையில் தேநீர் பருகும்போதோ சினிமா பாடல்கள் வந்து எனது காதில் எனது அனுமதி இல்லாமல் நுழைந்து விடுகின்றன.  என்னமா மியூசிக் போட்டுருக்கான் பயபுள்ள என இசை மாமேதைகள் போன்றே ஒவ்வொரு நண்பரும் பேசிக்கொள்ள எனக்குள் 'குபுக்' என சிரித்து கொள்வதுண்டு. இசையை பற்றி என்ன கற்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்?

எனது பால்ய பருவத்தில் இருந்தே எனது வீட்டில் கூட என் அம்மா பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் பாட்டு கேட்காமல் சமைப்பதே இல்லை. எனக்கு கூட ஆராரோ பாடியே வெறும் தரையில் தூங்க வைத்ததாக பாட்டி முதற்கொண்டு கதை சொல்வார்கள். எனக்கு அந்த ஆராரோ எல்லாம் காதில் விழுந்ததாக நினைவில் இல்லை. அதைவிட  வயல் வரப்புகளுக்கு போனால் அங்கே வக்கணையாக பேசிக்கொண்டு ஏலேலோ ஐலசா என அலுப்பு தீர பாடிக் கொண்டதை கண்டது உண்டு, அதை நாட்டுப்புற பாடல் என்றே சொல்லி வைத்து இருந்தார்கள். ஆனால் அவை எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடித்தமானதாக இல்லை. நினைத்த நினைப்புக்கு இழுத்துக் கொண்டு பாடுவது என்ன பாடலா?

நிலா நிலா ஓடிவா, கை வீசம்மா கை வீசு தாண்டி பாபா பிளாக் சீப் என்றெல்லாம் பள்ளியில் படித்தபோது எரிச்சலாகவே இருந்தது. நீ எல்லாம் என்ன ஜென்மமோ என்றே அம்மா பலமுறை திட்டியதுண்டு. ஒரு நல்ல பாட்டு கேட்கமாட்டேன்கிற என்றே அலுத்து கொள்வார்கள். பாரதியார் பாட்டு  கூடவா உனக்கு பிடிக்கவில்லை என்றே அம்மா ஒருநாள் என்னை அடியடி என அடித்து விட்டார்கள். ஒருமுறை பூனை சட்டி உருட்டுவதில் இசை இருக்கிறது என அம்மா சொன்னபோது எங்கே என்ன தாளம் என சொல்லும்மா பார்க்கலாம் என்றே அம்மாவிடம் சண்டை போட்டது உண்டு. ஆனால் வீட்டில் இருந்த வறுமை காரணமாக பாடல் சொல்லித் தரும் பாட்டு ஆசிரியர் எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை என்றே என் அம்மாவும் அப்பாவும் என்னை பாடல் கற்றுக் கொள்ள அனுமதி மறுத்து விட்டார்கள்.

ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு என மேளம், நாதஸ்வரம் என வருபவர்களிடம் என்ன தாளத்தில் மேளம் இசைக்க இருக்கிறீர்கள், என்ன ராகத்தில் பாட இருக்கிறீர்கள் என கேட்டபோது இது பரம்பரை ஞானம், இதில் தாள கதி, ராகம் எல்லாம்  என்ன தேவை இருக்கிறது என்றே முறைத்து பார்ப்பார்கள். நாதஸ்வரம் வாசிக்க வருபவர்கள் வாசிப்பதை கேட்டு எனக்கு இருப்பு கொள்ளாது. 

பறை இசை என்றே எனது நண்பன் கருத்தபாண்டி ஒருமுறை அடிக்கும்போது என்ன தாளம் சொல்லு என்றே நான் கேட்க எனது கையில் குச்சிகள் கொடுத்து அடி தாளம் வரும் என்றான். அவனது அப்பாதான் யாரேனும் எங்கள் ஊரில் இறந்துவிட்டால் அவரது குழுவோடு வந்து பறை இசை அடிப்பார். என்ன நடை, என்ன தாளம் என்றே அவரிடம் ஒருமுறை கேட்டேன். என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு தெரியலைப்பா, பரம்பரையா அடிச்சிட்டு வரோம் என்றே சொல்லி விட்டார். அவரைப் போலவே கருத்தபாண்டியும். இப்படி நான் தாளம், ராகம் என்றெல்லாம் கேட்பதை கண்டு அம்மாவிடம் வந்து உன் வீட்டு பையனுக்கு புத்தி பேதலிச்சு போச்சோ என்றே சிலர் திட்டிவிட்டு போவார்கள். அம்மாவும் ஏன்டா இப்படி இருக்க என்றே கோபம் கொள்ளாத நாள் இல்லை.

அஞ்சாம் வகுப்பு வரை தான் என்னால் படிக்க முடிந்தது. அதற்கடுத்து படிக்க எனக்கு வாய்ப்பே அமையவில்லை என்பதை விட வறுமை என்னை வறுத்து எடுத்து விட்டது. காடு வேலைகள், வீட்டு வேலைகள் என எடுபிடியாகிப் போனேன். ஒரு நூலகம் செல்ல வேண்டும் என்றால் வேறொரு ஊருக்கு நான் ஒன்றரை மணி நேரம் நடந்து போனால் தான் உண்டு. எவரேனும் சைக்கிளில் சென்றால் தொத்திக் கொள்வேன். இந்த இருபது வருடங்களில்  நான் நூலகம் சென்ற தினங்கள் மிக மிக குறைவுதான். இசை பற்றிய புத்தகங்கள் தேடினால் ஒன்றுமே கிடைக்காது. அதன் காரணமாகவே எனக்கு ஆர்வம் குறைந்து போனது. மேலும் நிறைய வேலை இருக்கும், வேலை முடித்ததும் அலுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.

எப்போது பள்ளி செல்வதை நிறுத்தினேனோ அப்போதே எவரிடமும் தாளம், ராகம் பற்றி எல்லாம் கேட்பது இல்லை. ஒருமுறை காலண்டரில் இருந்த சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையை பார்த்து கண்கள் கலங்கி நின்றேன். 'எவர் ஒருவர் வீணையை கற்றுக் கொண்டு அதை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்களோ  அவர்களுக்கு மோட்சம் கிட்டும்' என்றே படித்து இருக்கிறேன். வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன், மோட்சத்திற்காக அல்ல!

எனக்கு பதினைந்து வயது இருக்கும். ஒருமுறை நூலகத்தில் நாச்சியார் திருமொழி என ஒன்று படித்தேன். அதில் கனாக் கண்டேன் என நாச்சியார் எழுதியதை படித்தேன்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

நானும் அப்போது கனவில் மிதந்தேன். மத்தளம் எந்த தாளத்தில் கொட்டி இருப்பார்கள். எந்த நடையை பயன்படுத்தி இருப்பார்கள். சங்கு என்ன ஜதியில் ஒலி த்து இருக்கும், இதையெல்லாம் எதற்கு நாச்சியார் விவரிக்காமல் போனார் என்றே ஆதங்கப்பட்டேன். மந்திரங்கள் என்ன ராகத்தில் அமைந்து இருக்க கூடும், அதை எப்படி ஓதி இருப்பார்கள் என்றே அன்று யோசித்தேன்.

ஒருமுறை 'சுத்த கர்நாடகமா இருக்கானே உன் பையன்' என அம்மாவிடம் ராஜு மாமா சொன்னது எனக்கு வலித்தது. இத்தனை வருடங்கள் உழைத்ததில் அக்காக்களின் திருமண செலவுக்கே பணம் செலவழிந்தது. அம்மா, அப்பாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் எனும் கனவு அவர்களுக்கு வயதாக வயதாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது.

இன்று எப்படியும் எனது இசை பற்றிய கனவை அம்மாவிடம் பேச வேண்டும் என்றே முடிவு செய்தேன்.

''இப்போதான் வரியா இருடா காபி போட்டு வரேன்''

''அம்மா 'காபி' அப்படிங்கிறது ஒரு ராகம் தெரியுமாமா?''

அம்மா என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் பாலில்லாத காபி போட்டு வந்தார்கள்.

''அம்மா என் பேரு எதுக்கு ஆதி அப்படின்னு வச்சீங்க. ஆதி ஒரு தாள வகைம்மா''.

சட்டென சிந்தாமல் சிதறாமல் காபியை வைத்துவிட்டு என்னை முறைத்தார்கள்.

''என்ன தவம் செய்தனை யசோதா 
என்ன தவம் செய்தனை 
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மாவென்றழைக்க''

நான் முதன் முதலில் அம்மாவிடம் வரிகள் வாசித்தேன். முறைத்து பார்த்த அம்மா அப்படியே என் அருகில் அமர்ந்தார்கள்.

''நான் இசை கத்துக்கிறனும்மா''

அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டேன்.

''யார் சொல்லித் தருவாடா''

''பரப்பிரம்மம்''

''யாருடா  அவரு?''

அம்மாவின் அந்த கேள்வி என்னுள் என்ன பதில் சொல்லிவிட உன்னால் முடியும் என்றே கேட்பது போலிருந்தது. பையில் இருந்த தாளினை எடுத்தேன். வாசித்தேன்.

''போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

நிர்குண பரம்ப்ரம்ஹ் ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச ரஹித 
நிஜ குஹ நிஹித நிதாந்த 
ஆனந்த அதிசய அக்ஷய லிங்கா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

திமித திமித திமி திமி கிட தக தோம் 
தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா, சபேசா, சர்வேசா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ' 

வாசித்து முடித்ததும் அம்மாவின் முகத்தை பார்த்தேன். நான் வாசித்தது பாடியது போன்றே அம்மாவிற்கு இருந்து இருக்க வேண்டும்.

''நல்லா பாடுறடா, வரி ஒண்ணுமே விளங்கலியே. யாராவது பாட்டு சொல்லி கொடுக்கிறவங்க இருந்தா போ சேர்ந்துக்கோடா''

''நிசமாத்தான் சொல்றியாம்மா''

''ஆமாடா, உனக்கு பாட்டு எதுவுமே பிடிக்காதேடா, இப்போ எப்படிடா''

மீண்டும் ஒரு தாளை எடுத்தேன். வாசித்தேன்.

''உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா 
உலகெலாம் ஈன்ற அன்னை 
உன்னையல்லால் வேறே கதி இல்லை அம்மா''

''டேய் ஆதி, ரொம்ப நல்லாருக்குடா''

சந்தோசம் என்னில் பொங்கியது. அம்மா தந்த காபியை அருந்திவிட்டு கிளம்பினேன்.

'போ, சம்போ சிவசம்போ ஸ்வயம்போ''

இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்ற பாரம்பரியமிக்க இசை உண்டு. இந்த கர்நாடக இசையை ஒரு சாரர் மட்டுமே கற்று கொள்ளும் அளவுக்கு தனிப்படுத்த பட்டது. பறை இசை அடிக்கும் கருத்தபாண்டியை கூப்பிட்டேன்.

''என் கூட வரியா''

''எங்கே''

''இசை கத்துகிருவோம்''

தப்பட்டையை எடுத்தான். அடித்தான்.

''இதைவிட என்ன கத்துக்கிரனும்''

''நிறைய இருக்கு, வா என் கூட''

''இரு சொல்லிட்டு வரேன்''

நானும் கருத்தபாண்டியும் ஒரு நகரம் நோக்கி விரைந்தோம். நான் வைத்து இருந்த ஐந்து பாடல் தாள்களில் ஒன்று மட்டும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. என்ன பாடல் உடைய தாளாக இருக்கும் என்றே பார்த்தேன். பறந்து கொண்டிருந்த தாளில் எழுதிய வரிகள் 

''உன்னைத் தேடி - இசையே 
 உன்னைத் தேடி தேடி 
உன்னை காணாமல் இளைத்தேன்'' 

இறைவனை மாற்றி இசை என்றே குறித்து வைத்தேன். 

(தொடரும்)

Wednesday 7 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 16

நான் ஒருவேளை காயத்ரியை சந்திக்காது போயிருந்தால் எவரை காதலித்து இருப்பேன், அல்லது எனக்குள் காதல் என்பதே வந்து இருக்காதோ என்றே எண்ணத் தோன்றியது.

காதல் எப்படி வரும்? காதல் எதற்கு வரும்? காதல் ஒரு கர்ம வினை என்றே மனதில் திட்டமிடும் அளவுக்கு தள்ளப்பட்டு இருந்தேன். மாலை சந்திக்கிறேன் என்று சொன்ன சுபத்ராவையும் காணவில்லை.  கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம், காயத்ரியிடம் எதுவும் அதிகம் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனேன்.

கர்ம வினை என்பது உண்டு எனில் அதற்கான முற்பிறவியும், அடுத்து வரப்போகிற பிறவியும் இருந்துதான் தீர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்த கர்ம வினை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்ற எண்ணம் தோணியது.

மாடியில் அமர்ந்தோம், வானத்தை பார்த்தோம், நட்சத்திரங்கள் எண்ணினோம் என்றெல்லாம் மனம் ஓடவில்லை. காதல் கர்மவினையாக இருக்கக் கூடுமோ? அப்படியெனில் நான் சென்ற பிறவியில் காயத்ரியை காதலித்தேனா? இப்படி என்னுள் எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருந்தபோது காயத்ரி மாடிக்கு வந்தாள்.

''என்ன காலேஜுல இருந்து வந்த பிறகு எதுவும் பேசலையே முருகேசு''

''அதெல்லாம் ஒண்ணுமில்லை காயூ, காதல் கர்ம வினையா?''

''ஆமாம் காதல் கர்ம வினைதான்''

''என்ன காயூ சொல்ற''

''புராணங்கள் எல்லாம் படிக்கிறது இல்லையா?''

''கதை சொல்றியா?''

''பீஷ்மர் பத்தி தெரியுமா?''

''இப்போ என்ன அதுக்கு''

''காதல் ஒரு கர்ம வினை''

''காயூ, போரடிக்காதே''

''இந்த பீஷ்மர் தனது முற்பிறவியில் தனது காதல் மனைவிக்காக ஒரு பசுவை வசிஷ்டர் முனிவரிடம் இருந்து திருடினதால தனது அடுத்த பிறவியில் யார் மீதும் காதல் கொள்ளாத தன்மை உடையவரா இருப்பார் அப்படின்னு வசிஷ்டர் சாபம் விட்டுட்டார், இதுதான் அந்த பிறவியில் செய்த திருட்டு பாவத்திற்கு இவருக்கு அடுத்த பிறவியில் கிடைச்ச தண்டனை''

''ஒரு பசுவை திருடினதுக்கா இந்த சாபம்''

''ஆமா''

''ஆமா, காயூ, அப்படின்னா அந்த பசுவை திருடுறதுக்கு முற்பிறவியில் ஏதாவது செஞ்சி இருப்பாரோ''

நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் காயத்ரி. நானும் எனது கேள்வியை மெச்சிக் கொண்டேன்.

''என்ன காயூ பதிலை காணோம், உன்னை நான் போன பிறவியில் காதலித்து இருப்பேனோ?''

''இறைவனுடைய அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்றது, காதல் ஒரு கர்மவினைதான்''

''காயூ, என்னை நீ பார்க்காம இருந்து இருந்தா யாரை காதலிச்சி இருப்ப?''

''தெரியலை''

''காதலிச்சி இருந்திருப்பியா இல்லையா?''

''தெரியலை''

''சரி, என்கிட்டே அந்த கேள்வியை கேளு''

''நீ என்ன பண்ணி இருந்து இருப்ப''

''யாரையும் காதலிச்சி இருந்து இருக்க மாட்டேன் காயூ''

''முருகேசு...''

''காதல் கர்மவினையாகவே இருக்கட்டும், நீ மட்டுமே எனது காதலியா எல்லா பிறவியிலும் இருப்ப, அது நிச்சயம்''

''முருகேசு...''

காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதை கண்டு என் மனம் வாடியது.

''என் அப்பா கூட இப்படித்தான் என் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாருன்னு அம்மா சொல்லி சந்தோசப்படுவாங்க, ஆனா என்ன நடந்தது பாத்தியா. அது கர்மவினைதானு மனசை தேத்திக்கிறேன்''

காயத்ரியின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். ஆனால் அவளது மனதில் ஏற்பட்ட காயத்தை துடைக்க முடியாது கலங்கினேன்.

''காயூ, கர்மவினை அப்படியெல்லாம் இனிமே பேச வேண்டாம், நமக்குள்ள ஒரு உறுதிப்பாடு இருந்தா எதுவும் நம்மை அசைக்க முடியாது, தைரியமா இரு''

''ம்ம்... சுபத்ராவை பாத்தீங்களா''

''இல்லை, வரேன்னு சொல்லிட்டு போனா ஆனா வரலை''

''உங்க வீடு அவளுக்கு தெரியுமா''

''ம்ம், தெரியும் ஆனா அடிக்கடி எல்லாம் வரமாட்டா''

பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னை கீழிருந்து அழைத்தது கேட்டது. நாங்கள் இருவரும் இறங்கி வந்து பார்க்கையில் சுபத்ரா வீட்டினுள் அமர்ந்து இருந்தாள்.

''சாரி லேட்டாயிருச்சி, பாக்கிறேன்னு சொன்னேன்ல, அதான் வந்துட்டேன்''

''காலையில வந்து இருக்கலாமே, அதுவும் எதுக்கு இந்த இருட்டு நேரத்தில, சரி சாப்பிட்டியா சுபா''

''இன்னும் இல்லை''

அம்மா உடனடியாக சுபத்ராவை வா வந்து சாப்பிடு என அழைத்து சென்றார். சுபத்ராவும் சாப்பிட்டு வந்து பேசுகிறேன் என எழுந்து சென்றாள். காயத்ரியின் அக்காவும் அப்போதுதான் வந்தார். வந்தவர், நேராக அம்மாவிடம் சென்று சிறிது நேரம் பேசியதை கண்டேன். பின்னர் எங்களிடம் வந்தார்.

''காயத்ரி, நானும்   அவரும் ஒரு வீடு பாத்து இருக்கோம், அவங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, அடுத்த வாரம் அங்க குடி இருக்க போறோம், இனிமே இப்படி நான் இங்க இருக்கிறது அவருக்கு பிடிக்கல''

அவசரம் அவசரமாக பேசிய காயத்ரியின் அக்காவின் வார்த்தைகள் என்னுள் ஊசியாக குத்தி தொலைத்தன. எனது பெற்றோர்கள் இவருக்காக எத்தனை சிரமம் பட்டு இருப்பார்கள். சில மாதங்கள் எனினும் இதுதானா முறை என்றே எண்ணத் தோன்றியது.

''அக்கா...''

இப்போதெல்லாம் காயத்ரியின் வார்த்தைகளில் அதிர்ச்சியே நிறைய தெரிந்து கொண்டிருந்தது. காயத்ரியின் அக்கா விறுவிறுவென மாடிக்குப் போனார். ஒரு பெட்டியுடன் கீழே வந்தார்.

''நான் கிளம்பறேன் காயத்ரி, மத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்து எடுத்துட்டு போறேன்''

''என்னக்கா...''

பதில் ஏதும் சொல்லாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''அப்பா வரட்டும்''

''அப்பாகிட்ட நீ சொல்லிரு''

காயத்ரியின் அக்கா வீட்டு வாசலை தாண்டி சென்றபோது எனக்கு காதல் கர்மவினை என்றே கனத்தது. ரங்கநாதன் என்னை அறியாதவர் போல் காயத்ரியின் அக்காவை அழைத்துக் கொண்டு போனார். அது இன்னமும் அதிகமாக வலித்தது. காயத்ரி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

''சாப்பாடு சூப்பர்''

சுபத்ராவின் வார்த்தைகள் எனக்கு கேட்கவே இல்லை.

(தொடரும்)