Tuesday 17 September 2013

சூப்பர் ஹீரோ

 இந்திப் படம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. தூர்தர்சனின் புண்ணியத்தில் மட்டுமே இந்தி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு பின்னர் இந்திப்படம் என பார்த்தது என எதுவுமே நினைவில் இல்லை.

சமீபத்தில் தியேட்டருக்கு சென்று சென்னை எக்ஸ்ப்ரஸ் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் படம் என்கிற ஒரு நினைப்பில் படம் பார்க்க அழைத்த போது போகலாம் என தியேட்டருக்குள் அமர்ந்த பின்னர் தான் சட்டென நினைவுக்கு வந்தது, வந்திருப்பது ஒரு இந்திப் படத்திற்கு என.

தமிழே புரியாது, இதில் இந்தி வேறா! நிறைய 'இந்தி'மார்கள் அமர்ந்து இருந்து இருந்தார்கள். படம் தொடங்கியது. எனக்கும் இந்திக்கும் உள்ள ஒரு பந்தம் மிகவும் சுவாரஸ்யமானது. கல்லூரி படித்த காலங்களில் ஆர்வத்துடன் ரமேஷ் எனும் நண்பர் கற்று கொடுத்த இந்தியை இலக்கணம் எல்லாம் என சேர்த்து ஓரளவு படித்து விட்டேன். தலைநகர் டில்லி, கல்லூரி கால கல்கத்தா என பிற மாநிலங்கள் சென்றாலும் இந்த இந்தியை இனிப்புக்கு கூட தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதில்லை. இந்தி மீது தனிப்பட்ட வெறுப்பு என்றோ , மறத்தமிழர் என்றோ இதற்கு காரணம் இல்லை. ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எனது வாழ்வில் சில மொழிகள் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவ்வப்போது எண்ணம் தலைகாட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட.

நல்லவேளையாக படத்தில் 'சப்டைட்டில்' ஆங்கிலத்தில் போட்டார்கள். இருப்பினும் அரைகுறை இந்தி மூலம் சில புரிந்து கொள்ளலாம் என்றே பேசுவதையும் கேட்டு வைத்தேன். ஆனால் 'இந்திமார்கள்' சிரிக்கும்போது எனக்கு தானாக சிரிப்பு வரவில்லை. மொழியின் சுவாரஸ்யம் மொழிப்பெயர்ப்பில் இருப்பது இல்லை. சில இடங்களில் சிரித்து வைத்தேன்.

தமிழ்நாட்டில் இத்தனை பேரழகா என உச் கொட்டும் வகையில் மழையும், அருவிகளும் கொண்ட பிரதேசம் காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பெண்கள் உடுத்தும் சேலை கண்டு 'இந்திமார்கள்' இத்தனை அழகான சேலை எல்லாம் தமிழ்நாட்டில் கிடைக்குமா/கட்டுவார்களா என ஆச்சர்யபட்டார்களாம். ஒரு சேலை எடுக்க கடைக்கு சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய மனைவிமார்கள் பற்றிய நகைச்சுவை கதைகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.

இந்த திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். எல்லா திரைப்படங்களும் ஒரு வரி கதைதான். அதை எப்படி வடிவமைத்து முடிப்பது என்பதில் தான் மொத்த திரைப்படத்தின் வெற்றியும் இருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் வாழ்வில் என்னவெல்லாம் நடந்து விடும் என கதை சொல்லி இருக்கிறார்கள். வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் ஒரு பெண். சுத்துப்பட்டி கிராமங்களை எல்லாம் தன வசத்தில் வைத்திருக்கும் ஒரு 'பெரிய தல' என படம் நகைச்சுவை உணர்வுடன் நகர்கிறது.

எழில் கொஞ்சும் பிரதேசங்கள் கண்டு கொண்டே இருக்கலாம் என்பது போல காட்சி அமைப்புகள். அந்த கிராமங்களில் வில்லன் உட்பட சிலர் இந்தி பேசுகிறார்கள். அரை குறை இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உபயோகிப்பது 'அச்சா' 'தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை' என்பதுதான். 'ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் இழுக்கு. ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் இழுக்கு' என மொழியின் பிரவேசம் குறித்து பேசுகிறார்கள். ஆங்கிலம் பிற மொழிகளை வசப்படுத்தியதன் காரணம், மொழிபெயர்ப்பு தான். மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். சில நாடுகள் ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்த்தும் தற்போது உலகமயமாக்கல் எனும் அடிப்படையில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த திரைப்படத்தில் காதல் தான் உண்மையான மொழி என சொல்வதோடு பிரச்சனைகள் கண்டு ஓடி ஒளியாமல் அதை எதிர்த்து நிற்கும்போது சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோ ஆகிவிடுவான் என்றே சொல்லி இருக்கிறார்கள். அதாவது 'பவர் ஆ ஃப் தி காமன் மேன்'. கடைசியில் ரஜினியை வைத்து ஒரு பாடல். பாடல் முடிந்தே பலரும் கிளம்பி சென்றார்கள். ஒரு தமிழ் கலந்த இந்திப் படம் பார்த்தது போன்ற திருப்தி. அதுவும் ஹிந்திமார்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.

இந்த சூப்பர் ஹீரோ குறித்து உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைய செய்யும் தகவல்கள் உண்டு. 1912ம் வருடம் இந்த சூப்பர் ஹீரோ பற்றியஎண்ணங்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதாவது சூப்பர் ஹீரோக்கள் அமானுஷ்ய தன்மை கொண்டவர்களா கற்பனை செய்யப்பட்டார்கள். 1937ல் முதல் காமிக்ஸ் புத்தகம் வந்தது, இந்த சூப்பர் ஹீரோக்கள் குறித்து தமக்கென இரண்டு நிறுவனங்கள் உரிமம் வைத்து கொண்டன. இதில் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இவை படங்களாக உருவாக்கப்பட்டன. பேட்மேன் போன்ற சாதாரண மனிதர்கள் சில கலைகள் கற்றுக்கொண்டு தமது திறமை மூலம் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள் என சொல்லப்பட்டது. அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பின்னர் இப்படி நிறைய சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் வடிவம் எடுத்தார்கள்.

'kick ass' எனும் திரைப்படம் வாழ்வில் உள்ள நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி ஒரு  காமிக்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. அதாவது சில உடைகள் அணிந்து கொண்டு, சமூகத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை தனியாளாக செய்வது, அல்லது ஒரு கூட்டமாக சேர்ந்து செய்வது.  kick ass 2 எனும் திரைப்படம் பார்த்தபோதுதான் இந்த நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த காமிக்ஸ் புத்தகம் அடிப்படையில் உண்மையிலேயே அமெரிக்காவில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் வலம் வருகிறார்கள். உண்மையிலேயே குற்றங்களை களைவது, வீடில்லாதவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக விசயங்களை அவரவருக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து செயல்படுவது இவர்களின் வேலை. கனடாவில் அனுஜன் பஞ்சாட்சரம் இது போன்று செயல்படுவதாக குறிப்பு உண்டு. நமது கிராமங்களில் காட்டுக்கு சென்று காவல் காப்பது, எல்லை காவலாளி என ஒரு மட்டத்தில் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு.

இந்த சூப்பர் ஹீரோக்கள் சில நேரங்களில் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்து விடுவது உண்டு. சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என காவல்துறையே சொல்லிவிட்டது.

நமது தமிழகத்தில்,  இந்தியாவில் பிற நாடுகளில் உள்ளது போன்று  நிறைய நிஜ  சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சினை தமிழக, இந்திய  நிஜ சூப்பர் ஹீரோக்களின் வில்லன்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் சிரமம்.

No comments: