Monday 25 November 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 21

காயத்ரி தூங்க சென்று இருந்தாள். அந்த இரவில் கோரனிடம் இருந்து போன் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

''இன்னைக்கு அந்த வாத்தியானை போட்டு தள்ள முடிவு பண்ணிட்டேன்''

''அதை ஏன் என்கிட்டே சொல்ற, சொல்றவன் செய்யமாட்டான், செய்றவன் சொல்லமாட்டான்''

''உன் பேரை எழுதி வைச்சிட்டு போக போறேன், உனக்கு தான் இந்த வாத்தியானை பிடிக்காதே''

''எழுதி வைச்சிட்டு போ, கையெழுத்து என்னை மாதிரியா இருக்காது''

தைரியமாக பேசினாலும் எனக்குள் இனம் புரியாத பயம் வந்து தொற்றி கொண்டது. பேரைப் போலவே கோரபுத்தி உடையவனாக இருக்கிறானே, என்னை எதற்கு இந்த வம்பில் மாட்டிவிட வேண்டும்.

''போய் உன்னோட பையில இந்த வாத்தியானோட பாட நோட்டு இருக்கானு பாரு, அதுதான் தடயம்''

மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது. திரும்ப அழைத்து பார்த்தேன், அதற்குள்ளாகவே இணைப்பு முற்றிலும் இல்லாமல் போனது. எனக்கு வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

வேகவேகமாக பையில் நோட்டினை தேடினேன். அவன் சொன்னது போலவே அந்த நோட்டினை காணவில்லை. நெஞ்சு படபடவென அடித்து கொண்டு இருந்தது. மயங்கி விழுந்துவிடுவது போன்ற உணர்வு. காயத்ரியின் அறையினை மெல்ல தட்டினேன். கதவினை மெதுவாக திறந்து அறையில் விளக்குதனை போட்டேன். அவள் அழகாக தூங்கி கொண்டு இருந்தாள்.

''காயூ''

''ம்ம்''

''எழுந்திரு காயூ, ஒரு பிரச்சினை''

சட்டென விழித்தாள். அதற்குள்ளா இப்படி உறங்கிப் போனாள். கனவு என எதுவுமே காண மாட்டாளா?

''என்ன முருகேசு''

படபடப்புடன் விசயத்தை சொல்லி முடித்தேன்.

''சரி, காலையில பாத்துக்கிரலாம்''

''அவன் சாரை கொல்லப்போறான், நீ என்ன இவ்வள அசால்ட்டா சொல்ற''

''அவன் கொல்லமாட்டான், வேணும்னா அவர்கிட்ட இவன் சாவான்''

''காயூ''

''கவலைப்படாம, நீ தூங்கு முருகேசு''

''எப்படி தூங்குறது''

''இங்க தூங்கு, நான் உன்னோட ரூமில தூங்குறேன்''

''எனக்கு என்னோட ரூமில தூங்க தெரியாதா, அவன் திருப்பி போன் பண்ணுவானோ''

''என்ன திடீர் பயம் உனக்கு''

''கொலையை தடுக்கனும், பழி பத்தி பயமில்லை''

''சொன்னா கேளு, எதுவும் நடக்காது''

காயத்ரியின் அறையை விட்டு வெளியேறினேன். உடைகள் மாற்றினேன். வீட்டில் எவரிடமும் சொல்லாமல் கதவை வெளியில் பூட்டிவிட்டு வெளியேறினேன். அந்த நடு இரவில் ஆசிரியரின் வீட்டினை அடைந்தபோது மணி சரியாக 11.00.

ஆசிரியர் வீட்டின் வாசலில் கோரன் நின்று கொண்டு இருந்தான்.

''நீ இங்கு வருவாய் என எனக்கு தெரியும்''

''எதற்கு இப்படி ஒரு விபரீத விளையாட்டு''

''நான் வகுப்பில் சொன்னது மறந்து போனயா''

''அதுதான் அவர் சொன்னாரே, அது ஒரு தற்கொலை''

''அவர் சொன்னா அதை நீ நம்பிருவியா''

''அதுக்கு எதுக்கு என்னை இதுல வம்புக்கு இழுக்கிற''

''சுபத்ரா''

''யார் சுபத்ரா''

''சுபத்ராவை தெரியாது?, உன்னோட உண்மை காதலி''

''கோரன், வேண்டாம்''

''என்னடா வேண்டாம், சின்ன வயசுல இருந்து அவ உன்னை காதலிப்பா, நீ இன்னொருத்திய காதலிப்ப, அதை வந்து உன்கிட்ட சொன்னா, நீ அவளை உதாசீனப்படுத்துவ, இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, இப்பவும் சொல்றேன், நீ சுபத்ராவை ஏத்துக்கோ, காயத்ரியை எனக்கு விட்டுக் கொடுத்துரு, இல்லைன்னா நீ கொலை கேசுல உள்ள போக வேண்டி இருக்கும்''

சுபத்ராவை இவனுக்கு எப்படி தெரியும்? என்ற யோசனையில் மனம் சென்றது. அதோடு எனது காயத்ரி மீது இவனுக்கு என்ன ஆசை.

''கோரன், சுபாவை எப்படி உனக்கு தெரியும்''

''உன்கிட்ட கதை பேச நான் என்ன சினிமா வில்லன்னு நினைச்சியா, உன் பக்கத்தில உட்கார்ந்து இருந்தா நான் என்ன உன்னோட உயிர் நண்பன்னு கனவு கண்டியா''

இனிமேலும் தாமதிக்க கூடாது என அவன் எதிர்பாராதபோது அவனது மூக்கில் இரண்டு மூன்று என எண்ணிக்கொண்டே குத்துகள் விட்டேன். அந்த குத்துகளின் வேகத்தில் அவன் நிலைகுலைந்து போனான். அவன் வைத்து இருந்த பையில் உள்ள நோட்டினை எடுத்து கொண்டேன். படுபாவி, கத்திகள் இரண்டு வைத்து இருந்தான்.

பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி வைத்தேன். மயக்கமாகி இருக்க வேண்டும். அப்படியே படுத்துவிட்டான். அவனை தரையில் இழுத்துக் கொண்டு ஆசிரியரின் வீட்டினை தட்டினேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

''என்ன இந்த நேரத்தில''

''சார், இவன் உங்களை கொல்ல வந்தான்''

''யாரு''

''கோரன்''

மயங்கி கிடந்த கோரனை ஆசிரியர் பார்த்தார். வீட்டினுள் தூக்கி சென்றோம். மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. மூக்கினை மேல்வாக்கில் உயர்த்தி பிடித்தவர், தண்ணீரால் முகம் தனை துடைத்தார். விழித்து பார்த்தவன்

''நீங்க யாரு?''

நான் திடுக்கிட்டேன்.

''டேய் நான் முருகேசுடா, இவர் நம்ம சார்டா''

அவன் சுற்றும் முற்றும் பார்த்தது கண்டு எனக்கு மிகவும் பதட்டமானது.

''இவனோட வீடு தெரியுமா?''

''தெரியும் சார்''

''சரி வா, இவனை அவங்க வீட்டுல விட்டுட்டு வருவோம்''

''எப்படி சார், இந்த நிலைமையில''

''சொல்றதை செய்''

கோரனை எனது வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டேன்.

''சார், நான் அவங்க வீட்டுல விட்டுட்டு போறேன்''

''அவங்க அப்பாவை பார்த்து நான் சொல்லிட்டு வரனும்''

இனி எதுவும் செய்ய முடியாது என புரிந்து கொண்டு கோரன் வீட்டினை அடைந்தோம். அவருடைய காரில் தான வந்தோம். வரும் வழியில் கோரன் எங்க போறோம், நீங்க யாரு என்றே கேட்டு கொண்டிருந்தான். நடுத்தர வயது உடையவர் வீட்டு கதவினை திறந்தார்.

''உங்க பையன் என்கிட்டே படிப்பு சம்பந்தமா சந்தேகம் கேட்க வந்தவன் கிளம்பி போறப்ப கீழே தவறி விழுந்துட்டான், இப்போ தன் நினைவு இல்லை. அதான் விட்டுட்டு போக வந்தேன்''

''சரி, போ''

''நீங்க யாரு, இது யார் வீடு''

''கோரன், இது உன்னோட வீடு''

''முருகேசு, கிளம்பு அவங்க அப்பா பாத்துக்கிருவார், வா உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்''

''இல்லை சார், நான் போய்கிறேன்''

கோரன் வீட்டுக்குள் சென்றதை பார்த்து கொண்டே இருந்தேன். எனக்குள் அளவில்லா பயம் வந்து சேர்ந்தது. கதவு சாத்தப்பட்டது. வீட்டின் சன்னல் ஓரம் எனது காதை வைத்தேன்.

''போன காரியம் என்னடா ஆச்சு''

''நம்ம சுபத்ரா சொதப்ப வைச்சிட்டாப்பா''

''அவகிட்ட எதுக்குடா இந்த விசயத்தை சொன்ன''

''நேத்து அவளை எதேச்சையா பார்த்தேன், அப்போதான் இந்த முருகேசு பயலை பத்தி எல்லாம் சொன்னா. அதனால இவனை இதுல கோர்த்து விடலாம்னு திட்டம் போட்டேன். அவன் என்னை அடிச்சி மயக்கமாக்கிட்டான்''

''அந்த வாத்தியானை பதிமூணாவது நாள் காரியம் ஆக முன்னாடி முடிக்கனும்டா. இந்த முருகேசு கருகேசு எல்லாம் இதுல சேர்க்காதே''

''நான் பாத்துக்கிறேன்பா''

எனக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

(தொடரும்) 

2 comments:

Anonymous said...

வணக்கம்
அருமையான தொகுப்பு தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Radhakrishnan said...

மிக்க நன்றி