Tuesday 3 March 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - 37

''நில்லுடா''

''எமது வேகத்துக்கு உம்மால் ஈடுகொடுக்க இயலாது அடியாரே''

கதிரேசன் ஒரு கல்லை எடுத்து மதுசூதனன் மீது எறிந்தான். அந்த கல் மதுசூதனின் முதுகில் பட்டது. ஆ எனும் அலறல் ஒலி  கேட்கும் என நினைத்த கதிரேசன் சற்றே ஏமாந்தான். திரும்பிய மதுசூதனன் கதிரேசனை நோக்கியபடி வந்தான்.

''இந்தா கல், எமது தலையில் ஓங்கி அடித்துவிடும், எதற்கு என் மீது உமக்கு இத்தனை வன்மம், நீவிர்  எமது அடியார். இவ்வுலகில் எல்லோரும் எம் அடியார்கள்''

''மதுசூதனா, உனது புத்தி பேதலித்து போய்விட்டதா''

''யாம் திரிகோடன், எம்மை இனி திரிகோடன்  என்றே அழைக்கவும்''

''ஒரு பெண்ணை காதலிச்சி, ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இப்படி அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா, நீயெல்லாம் படிச்சி பட்டம் வாங்கி என்னடா பிரயோசனம். நீ உன்னை ஒரு சாமியார் மாதிரி நினைச்சிகிட்டு பண்ற அலப்பறை  உனக்கே நல்லா இருக்காடா, உன்னை எப்போ சந்திச்சேனோ எதுக்கு சந்திச்சேனோ. இனியாவது திருந்துடா, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ருக்மணிக்கு வாழ்க்கைக் கொடுடா. நானும் இப்படி சிவன் சிவன் இருக்க மாட்டேன்டா. சொன்னா கேளுடா''

''அடியாரே, பேசி முடித்தாகிவிட்டதா? யாம் மாபெரும் மாற்றம் எம்மில் கொண்டோம். இனி எமது வாழ்வில் கல்யாணம், காதல் என்பதற்கு இடம் கிடையாது. எம்மை சாமியார் என்றா அழைத்தீர். யாம் அடியார்க்கெல்லாம் அடியார். எமது அடியார்களாகிய உமக்கு யாமே இனி ஒரு அடியார்''

''மதுசூதனா, என்னடா இப்படி மாத்தி மாத்திப் பேசற''

''எம்மை திரிகோடன்  என அழைத்துப் பழகவும், இன்றுடன் எமது சிவன் சொற்பொழிவு முடித்துவிட்டு நாளை யாம் பௌத்தம் பேச இருக்கிறோம்''

''மதுசூதனா, மதி கெட்டவனே. எக்கேடு கேட்டுப் போ'' என சொல்லிவிட்டு கதிரேசன் வீடு திரும்பினான். மதுசூதனனின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ருக்மிணி கடும் கோபம் கொண்டவளாகத் தென்பட்டாள்.

''இனி அவனைத் திருத்த முடியாது. திரிகோடனாம்''

அன்று இரவு சொற்பொழிவு ஆரம்பித்தது.

''தாங்க இயலாத சோகம் நம்மைத் தாக்கும்போது நம்மால் பேசவும் இயலாது, எழுதவும் இயலாது. அனால் யாம் அப்படி அல்லன். எத்தனை சோகம் எனினும் எமக்கு இறைவனின் புகழ் பாடுவது மட்டுமே. நாளை முதல் யாம் பௌத்தம் தழுவ இருக்கிறோம். எமது பெயர் திரிகோடன். இங்கே ஒரு இடம் அமைத்து அங்கே பௌத்தம் பரப்ப ஆரம்பிப்போம். எம்மை நீவீர் தொடர்வீரா''

மதுசூதனின் பேச்சு பலரை ஆச்சரியம் உண்டு பண்ணியது. கூட்டத்தில் இருந்த ஒருவர் 'இவனை இன்னைக்குத் தீர்த்துரனும்ல, இல்லைன்னா நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிருவான்ல' என்றார்.

''எம்மை பின் தொடர்வீரா, மாட்டீரா?''

''நாங்கள் சிவன் பக்தர்கள், எங்களால் உங்களை பின் தொடர முடியாது''

''உங்களுக்கு அடியாராக நான் இருக்கிறேன். அடியார்க்கெல்லாம் அடியாராக நான் வருகிறேன். எம்மை பின் தொடருங்கள்''

கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்தார்கள். பெரும் சலசலப்பு உண்டானது. இதுதான் சமயம் என இருவர் மதுசூதனனை தரதரவென இழுத்து சென்றார்கள். கூட்டத்தில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

''அடியார்க்கெல்லாம் அடியாரா நீ, உன்னை இரும்லே, என்ன பண்ணுதேன்''

கத்தி எடுத்து மதுசூதனின் கழுத்தில் வைத்தான் அவன்.

''யாம் மீண்டும் திரிகோடனாக  பிறவி எடுப்போம்''

''இன்னுமால பேசற''

மதுசூதனனை கொலை செய்துவிட்டு அந்த இருவரும் ஓடிப்போனார்கள். மதுசூதனின் மரணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பௌத்தம் பின்பற்ற சொன்னதற்காக கொலை செய்யப்பட்டான் என்றே பேசினார்கள்.

வாழ்வில் தடம் மாறிப் போனவர்கள் எந்த ஒரு தடயமும் இல்லாமல் இறந்து போகிறார்கள்.

(முற்றும்) 

No comments: