Thursday 23 July 2009

ஆசைப்பட்டேன் - 3

பசுமாடு கன்றுக்குட்டி போட்டதும் சீம்பால் என காய்ச்சித் தருவார்கள். எங்கே பசுமாடு கன்று போடும், எப்பொழுது கன்று போடும் எனக் காத்திருந்து குடிக்க வேண்டும் என குடித்து மகிழ்ந்த ஆசை இப்போது இல்லை, அட பசுமாடுகளே பக்கத்தில் இல்லை!

ஆடுகள் ஓட்டிக்கொண்டும், மாடுகள் ஓட்டிக்கொண்டும் காடுகளில் மேய்த்த சிறுவயதில் இயேசுநாதர் அத்தனை பழக்கமில்லை, கண்ணபிரான் அத்தனைத் தெரியவில்லை, திருமூலரும் எனக்குப் பரிச்சயமில்லை. அவர்களாகவே ஆக வேண்டும் எனும் ஆசை எழுந்திட வழியுமில்லை, இனி வழி பிறக்கப்போவதுமில்லை! இப்போது நுனிப்புல் எழுதி ரெங்காழ்வாராக மாற வேண்டுமெனும் ஆசை பொய்யான ஆசையே!

கண்மாயில் எப்போது தண்ணீர் வரும், சிவந்த தண்ணியில் எப்போது தவழ்ந்து போவோம் என ஆசையாய் மழை தரும் வானம் பார்த்ததுண்டு, ஆண்டுக்கு ஒருதரமாவது பொய்க்காமல் மழையும் தண்ணீர் தேக்கிப் போவதுண்டு. கிணற்று கட்டிடத்து மாடியில் இருந்து குதித்து நீந்த தண்ணீர் வராதா என ஆசையும் உண்டு. நிறைந்து வழியும் கிணறு என சிலமுறை கண்டதும் உண்டு. தரை தெரிய தண்ணீர் இருக்க ஆசை அழிந்ததுண்டு.

ஐந்தாவது படித்துவிட்டு ஆறாவது வகுப்பிற்கு அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும் என ஆசை வந்தது. ஆசையின் விளைவாக அந்த பள்ளிக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. முதலாவதாக வர வேண்டுமென ஒரு ஆசிரியை என்னிடம் சொல்ல ஆசை பிறந்தது, அந்த பள்ளியை விட்டு விலகும் வரை என் ஆசையோடு அவரது ஆசையும் நிறைவேறியது! கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற வேண்டுமென கணித ஆசிரியரின் ஆசை என் ஆசையோடு இரண்டு மதிப்பெண்களில் தகர்ந்து போனது!

தமிழ் ஆசிரியையின் அன்பினால் தமிழ் மேல் பற்று வந்தது. தமிழ் எனக்குள் விலகாமல் உயிரும் கொண்டது. சிறு வயதில் கதை எழுதிட ஆசை வந்தது. வாடா மலர் எனப் பெயரிட்டு எழுதிய பின்னும் அது வாடிப்போனது!

என் சின்ன அக்கா அதிகாலையில் காபி போட்டு என் மேசைக்கு கொண்டு வர வைக்க சண்டை போடும் ஆசை உண்டு. அக்காவும் வந்து எடுத்து குடி என எடுத்து வராமல் சண்டையிட ஆசை அடம்பிடிப்பதுண்டு. ஆசையை கொன்றுவிட வேண்டாமென அம்மா எடுத்து வந்து தருவதுண்டு. நான் இப்போது மனைவிக்கு காபி போட்டுத் தந்து மகிழும் ஆசை உண்டு அது அதிகாலையும் சரி நடுஇரவு எனினும் சரி ;)

கிரிக்கெட் விளையாடியே கரிக்கட்டை நிறத்துக்குப் போனாயே என வீட்டில் சொல்வதுண்டு ;) கிராமத்து கிரிக்கெட் அணி சுற்று வட்டாரத்தில் பெரிய அணி என பெயர் வாங்க நினைத்த ஆசை உண்டு. கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியதும் அந்த ஆசை பொய்த்துப் போனது.

என் ஆசைகள் தொடரும்.

No comments: