Monday 6 July 2009

சில்வண்டுகள் - 1

அடர்ந்த காடு. தொடர்ந்து மழை. புகலிடம் தேடி, ஓடி ஒளிந்தன பறவைகள். விலங்குகள் மழையில் நனைய சற்றும் விரும்பவில்லை, ஓட ஆரம்பித்தன. ஓடிய விலங்குகள் ஒரு எல்லையில் சென்று நின்று கொண்டன. ஒளிந்த பறவைகள் சரியான எல்லையில் தான் இருக்கிறோமா எனத் தேடிக்கொண்டன. மரங்கள் மட்டும் எங்கும் செல்ல முடியாமல் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தன. மரங்களின் வளர்ச்சி வானை நோக்கிய வண்ணம் தான். தூறலும் சாரலுமாகவே வந்து சென்று கொண்டிருந்த மழை பத்து வருடங்கள் கழித்து அந்த காட்டில் பெரும் மழையாய் பெய்து கொண்டிருந்தது. மழைத் துளிகளானது ஓங்கி உயர்ந்து வளர்ந்து இருந்த மரக்கிளைகளின் இலைகளை ஊடுருவி தரையை தொடமுடியாத வண்ணம் தரையில் புல்லும் செடியும் வளர்ந்து புதராய் தடுத்துக்கொண்டிருந்தது. இவையெல்லாம் தாண்டி தரையைத் தொட்ட மாத்திரத்தில் மழை சிலிர்த்துக் கொண்டது. தரையில் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தது.

இந்த அடர்ந்த காடு ஊட்டிக்கு அருகில் உள்ள சிவாங்குகம் எனும் வட்டத்திற்கு உட்பட்டது. இந்த காட்டினுள் எட்டு திசைகள் பக்கமும் ஒரு எல்லைக்கு மேற்பட்டு உள்ளே சென்றவர்கள் உயிரோடு திரும்பியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. வனத்துறையினர் இந்த காட்டினை மொத்தமாக அழித்துவிடலாம் என அரசிடம் அனுமதி கோரியும் எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. இந்த காட்டிலிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரே ஒரு கிராமம் மட்டுமே உண்டு. தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு மேலாகவே மனிதர்கள் வசிக்கும் பகுதி இருந்தது. மிக அதிக பரப்பளவை உள்ளடக்கி வளர்ந்த காட்டின் மையப்பகுதியில் பெரும் மலையும் உண்டு. அந்த மலையானது மரங்களாகவும் செடிகளாகவும் காட்சி தந்து கொண்டிருந்தது. மலை உச்சியில் கற்களால் ஆன நான்கு அடி உயரத்திலும் நான்கு அடி அகலத்திலும் ஒரு சிறு மண்டபம் இருந்தது. அந்த சிறு மண்டபத்தின் கற்கள் இடைவெளியிலும் செடிகள் வளர்ந்து இருந்தது.

மழையுடன் பெரும் காற்று அந்த காட்டில் வீசத் தொடங்கியது. மரங்கள் ஆடத்தொடங்கின. மண்டபத்தின் உள்ளே ஒருவர் தியான நிலையில் அமர்ந்து இருந்தார். வீசிய காற்று, கற்களை அசைக்கத் தொடங்கியது. மழைநீர் மண்டபத்தினுள் நுழைந்து நிரம்பத் தொடங்கியது. அமர்ந்த நிலையை விட்டு அசையாமல் இருந்தார் அவர். நீரளவு அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் அசையாமலே இருந்தது. நீரானது அவரது முழு உடலையும் மூடி, தலையையும் மூடியது. அவரோ அமர்ந்த வண்ணமே இருந்தார். மழையின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

பல மரங்கள் பழங்களை சிதறின. சில மரங்கள் சிதறி விழுந்தன. ஓடிய தண்ணீர் மொத்த காட்டினையும் அலசிக்கொண்டிருந்தது. அந்த காட்டில் மட்டுமே பெரும் மழை பெய்தது. மண்டபத்தின் சுற்றி எழுப்பப்பட்ட கற்கள் சிதறி விழுந்தன. தியான நிலையில் அமர்ந்து இருந்த அவர் உத்வேகத்துடன் கைகளை நாற்புறமும் வீசி எழுந்து நின்றார். பெரும் காற்றும், பெரும் மழையும் உடனே நின்றது. மரங்கள் கிளைகளை, இலைகளை சிலுப்பிக்கொண்டன.

எழுந்து நின்ற அவர் வானத்தை நோக்கினார். கோபம் அவரது உடல் எங்கும் பரவி இருந்தது. கண்கள் இரத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு காலினை உயர்த்தி ஓங்கி தரையை மிதித்தார். அவரைச் சுற்றி இருந்த மலை உச்சிக்கு அருகாமையில் வளர்ந்த மரங்கள் பொல பொலவென வேருடன் விழுந்தன. மலை உச்சியில் இருந்து இறங்கினார். வழி இல்லா காட்டில் வழி உருவாக்கிக்கொண்டே வந்தார். வழி அடைத்த மரங்களும் செடிகளும் வழிவிட்டு உயிர் துறந்தன. அவர் நடக்க நடக்க எழுந்த வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகி கொண்டிருந்தது. அவரது காலடி பட்ட இடங்களில் பல ஊர்வன இனங்கள் துவம்சமாகின.

காட்டினை விட்டு வெளியே வந்து நின்றார். சூரியன் அதிக வெப்பத்தை வீசிக்கொண்டிருந்தது. தண்ணீரில் குளித்த மரங்கள் வெகுவேகமாக காயத் தொடங்கின. காட்டின் ஒரு ஓரத்தில் சில நாட்கள் அமர்ந்து இருந்தார். தரையில் ஈரம் காய்ந்து மழை விழுந்த தடமே இல்லாமல் இருந்தது. மரம் ஈரத்தை விட்டுத் தள்ளியிருந்தது. இரு கற்கள் எடுத்தார். உரசினார். விறகுகளில் தீ மூட்டினார். காட்டிற்கும் தீ மூட்டினர். காடு வெகுவேகமாக எரியத் தொடங்கியது. விலங்குகளும் பறவைகளும் அந்த காட்டை விட்டு வெளியேறாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. தீ மரத்தோடு பறவைகளையும் விலங்குகளையும் உண்ணத் தொடங்கியது. இனி சாம்பல் மட்டுமே மிஞ்சும். கிழக்கு நோக்கி நடக்கலானார் அவர்.

(தொடரும்)

No comments: