Friday 3 July 2009

நான் சந்தித்த வழக்குகள் - 2

பல கட்டுப்பாடுகளை முன்னரேச் சொல்லி இருந்தார்கள். வழக்கைப்பற்றி வெளியில் பேசக்கூடாது. யாரிடமும் கலந்துரையாடக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். தகுந்த வழக்குக்கு தெரிவு செய்யப்பட்டவர்களே அது குறித்து விவாதிக்கலாம் ஆனால் ஒரு தனி அறையில், என நிபந்தனைகள்.

ஒவ்வொருவராக அழைக்கப்பட்டதும் ஒரு சிலர் நேரடியாக சரி சொல்லி அமர்ந்து கொண்டார்கள். சிலர் விளக்கம் சொன்னதும் அதில் ஒரு சிலரே விடுவிக்கப்பட்டார்கள். சிலர் விளக்கம் சரியில்லை என அமர்த்தப்பட்டார்கள். எனது பெயர் அழைக்கப்படவில்லை. சந்தோசமாக இருந்தது. தப்பித்தோம் என நினைத்துக் கொண்டேன். மாலை வரை இருந்தோம். அடுத்த நாள் வர வேண்டாம், தொலைபேசி மூலம் அவர்களை அழைக்கச் சொன்னார்கள்.

அடுத்த நாள் அழைத்தேன், அன்று வேண்டாம் என அதற்கு அடுத்த நாள் அழைத்தார்கள். பன்னிரண்டாம் தேதி புதன் வரச் சொன்னார்கள். சென்றோம். இம்முறை பதினாறு நபர் சென்றோம். பன்னிரண்டு பேர் என சொன்னார்கள். அது மூன்று நாள் வழக்கு. என் பெயர் அழைத்தார்கள். முதல் வழக்கிற்கு பெயர் வரவில்லை, மகிழ்ந்தேன், இப்பொழுதும் மகிழ்ந்தேன் மூன்று நாட்கள் தானே. ஆனால் இருவாரங்கள் இருக்க வேண்டும் என்பது குறைந்த பட்சம். இந்த வழக்கு முடிந்ததும் ஆறு வாரம் வழக்கு திரும்பவும் கிடைக்கலாம் எனும் நிலை.

ஒருவரிடம் பேசியபோது நாம் செய்யும் சொந்த வேலையை விட இது முக்கியம். நமது அரசாங்கத்துக்கு உதவி செய்கிறோம் என்றார். அவர் ஆறு வாரம் வழக்கில் இருப்பதாக சொன்னார். சிலர் நான்கு வாரங்கள் முடிந்து விட்டது , இன்னும் நான்கு வாரங்கள் ஆகலாம் என்றார்கள். அப்பொழுதுதான் இந்த வாசகம் கண்ணுக்குப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் சொன்னது என நினைக்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கும், அந்த வாசகமும்தான் என்ன?

(தொடரும்)

No comments: