Saturday 25 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 1

திருவான்மியூரினில் ஒரு அழகிய வீட்டினில் அதிகாலை அனைத்து சப்தங்களுக்கும் மத்தியில் ஒரு சப்தம் அதிகமாகவே கேட்டது.

''ஆண்டாள், ஆண்டாள், எழுந்திரும்மா, மணி ஏழாகப் போகுது, இன்னுமா உறக்கம். சனிக்கிழமைனு வந்துட்டாப் போதுமே'' என பதினைந்து வயது நிரம்பிய ஆண்டாளினை அவரது அன்னையார் கோதைநாச்சியார் எழுப்பி விட்டார்.

''என்னம்மா, இன்னைக்கும் என்னோட கனவை நீ கெடுத்துட்ட, கல்யாண மேடையெல்லாம் தயாரா இருந்துச்சு, போம்மா'' என முனகிக் கொண்டே எழுந்தாள் ஆண்டாள்.

''அடியம்மா, வார வாரம் சனிக்கிழமையானதும் மூணு மாசமா இதே பல்லவியை நீ பாடறியே, இப்ப உன்னை கல்யாணம் செஞ்சிக் கொடுத்தா என்னை ஜெயிலுலப் போட்டுருவாங்கம்மா, போன வாரம் ஏழரைக்குத்தான் எழுப்பினேன் இதே பல்லவியைத்தான் பாடின. சீக்கிரம் குளிச்சிட்டு வா, கோவிலுக்கு நேரமாகுது எனக்கு'' என கோதை நாச்சியார் பரபரப்பாகத் திரிந்தார்.

''இன்னைக்கும்மா கனவு கண்டேனு சொன்னா, சமத்துப் பிள்ளை'' என தனது பங்குக்கு ஆண்டாளின் தந்தை நாராயணன் கேட்டு வைத்தார்.

''ஒரு சினிமாவுக்குப் போகமாட்டேங்கிறா, டி.வி முன்னால உட்கார மாட்டேங்கிறா, புள்ளைகளோட ஊர் சுத்த மாட்டேங்கிறா. ஆனா எப்படித்தான் இப்படி கனவு வருதோ இவளுக்கு, நீங்கதான் அவளை மெச்சிக்கனும், கிளம்புங்க'' என அவசரப்படுத்தினார் கோதை நாச்சியார்.

ஆண்டாள் குளித்துவிட்டு தலையில் சாம்பிராணி புகையைப் போடச் சொல்லி அம்மாவிடம் வந்து நின்றாள். ''ஹேர் ட்ரையர் எடுத்து தலை முடியை காய வை, இப்படி துண்டாலத் துவட்டிக்கிட்டு வந்து நிக்கிற, தடுமம் பிடிக்கப் போகுது'' என ஓடியாடினார் கோதைநாச்சியார். ''எனக்கு அதெல்லாம் வேணாம், மல்லிகைப்பூ இருந்தா அப்படியே வைச்சி விடும்மா'' என்றாள் ஆண்டாள்.

சாம்பிராணி புகைப் போட்டுக்கொண்டே இருக்கும்போது ''ஏன்மா மஞ்சள் கொஞ்சமாப் பூசிக்கிறக் கூடாதோ, வெயில் அடிக்கிற மாதிரி இருக்கு'' என்றார் கோதைநாச்சியார்.

''என்னை அவசரப்படுத்திட்டு இப்படி சாவகாசமா நின்னா எப்படி'' என்றார் நாராயணன். அவசர அவசரமாக கிளம்பினார்கள். ''அம்மா பச்சைக் கலர் தாவணி மாத்திக்கிரட்டா?'' என சத்தமிட்டாள் ஆண்டாள். ''நீலக் கலருக்கு என்னப் பிரச்சினை வந்துச்சு இப்போ, அதையேப் போட்டுக்கிட்டு வா'' என மறுபதில் சொன்னார் கோதைநாச்சியார். ''மாத்திக்கிரேன்'' என மறுபடியும் சத்தமிட்டாள் ஆண்டாள். ''உன் இஷ்டப்படி செய், ஏன் ஸ்கூல் யூனிபார்ம் கூடப் போட்டுக்கிட்டு வா'' எனச் சொன்னவர் ''மாடர்னா இருப்பாளுனுப் பார்த்தா இப்படி பட்டிக்காட்டுத்தனமா இருக்கா'' என தனது கணவரிடம் சொல்லிக்கொண்டார் கோதைநாச்சியார்.

''நீ ரொம்ப மாடர்னு, நட நட'' என்றார் நாராயணன். ஆண்டாள் துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள். ''போலாம்மா'' என்றாள் அவள். மூவரும் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றார்கள். ''இன்னைக்கு என் பையனோட பிறந்தநாள், பேரு கோபாலகிருஷ்ணன். அவன் பேர்ல ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என கோதைநாச்சியார் சொன்ன மறுகணம் ''என் பேரு ஆண்டாள், அப்படியே எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என்றாள் ஆண்டாள். கோவில் பட்டர் சிரித்தார், ''என்னம்மா அர்ச்சனை பண்ணிரட்டுமா'' என்றார் பட்டர். ''அவாகிட்டே எதுக்குக் கேட்கறீங்கோ, நான் சொன்னதைச் செய்யுங்கோ சாமி'' என்றாள் ஆண்டாள்.

''ஏன்மா சும்மா இருக்கமாட்டியா, என்னைக்க்குமில்லாம இன்னைக்கு ஏன் இப்படி கோவிலுல வந்து மானத்தை வாங்குற, சாமி நீங்க பையனுக்கு மட்டும் பண்ணுங்கோ'' என கோதைநாச்சியார் சொன்னார். ''பொண்ணு விருப்பத்துக்கும் செஞ்சிருங்கோ'' என்றார் நாராயணன்.

பட்டர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். அங்கே வந்து இருந்தவர்கள் ஆண்டாளை ஒருமாதிரிப் பார்வையுடன் பார்த்தார்கள். ஆண்டாள் கண்களை மூடி பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தாள். அவள் பிரார்த்தனையைக் கேட்ட கோதைநாச்சியார் ''யேய் ஆண்டாள், என்னப் பிரார்த்தனை இது, உன் விளையாட்டுக்கு அளவில்லையா?'' என மெல்லச் சொன்னார். ஆனால் ஆண்டாள் பிரார்த்தனையை நிறுத்தவில்லை. ''எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை பெருமாளே'' என பிரார்த்தனையை முடித்தவள் முன்னால் தீபத்தைக் காட்டினார் பட்டர்.

(தொடரும்)

2 comments:

கோவி.கண்ணன் said...

அந்தக் காலத்து ஆண்டாளின் இந்தக் காலத்துக் கதையா ? நன்றாக இருக்கிறது. இரு பகுதிகளையும் படித்துவிட்டேன்.

Radhakrishnan said...

அந்த ஆண்டாள் 'தமிழை ஆண்டாள்', நம் இந்த ஆண்டாள் 'என்ன ஆண்டாள்?' என விரைவில் தெரிந்துவிடும். மிக்க நன்றி கோவியாரே.