Wednesday 22 July 2009

ஆசைப்பட்டேன் - 2

சின்னஞ்சிறு வயதில்

அன்னையின் அரவணைப்பில் அன்பின் கதகதப்பில் வாழ்ந்த பருவம். என்ன என்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதை இப்பொழுது நினைத்துப்பார்க்க முடியவில்லை, நினைவில் அனைத்தும் நின்றுவிடவில்லை. எப்படி இறவா ஆசைகளாய் இருக்கும் இது?

ஆசைப்படுவது என்பது அனைவருக்கும் சாத்தியமே. 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா' என்பார்கள். ஆசைப்படட்டும், அப்பொழுதுதானே முடம் என்பது ஒன்றும் தடையல்ல என வேறு வழி தேட முயற்சி வரும்.

பள்ளிக்குச் சென்று பயின்றிட ஆசைப்பட்டு இருப்பேனா?

படுத்து உறங்கியே சுகமான தாலாட்டு கேட்க ஆசைப்பட்டு இருப்பேனா?

புத்தம் புது நண்பர்கள் கொண்டதால் மகிழ்ச்சியில் திளைத்து இருப்பேனா?

இருப்பதை பங்கு போட இவர்களா என ஆசையை கொளுத்தியிருப்பேனா?

கதை கதையாய் பாட்டியும் பெற்றோர்களும் சொன்னால் தான் சின்னஞ்சிறு வயது ஆசைகள் வெளித் தெரியும்.

பசிக்கும்போது தாயின் பாலுக்காக ஆசைப்பட்டிருப்பேன். வலியின்போது அன்பின் அதட்டலுக்கு ஆசைப்பட்டிருப்பேன். எல்லா பொம்மைகளுமே எனக்கே என என்னிடம் வைத்திருந்திருக்க ஆசைப்பட்டு இருப்பேன்.

இப்படி ஆசைகளில் மனதில் நீங்காத ஒரு ஆசை உண்டே.

வயல் வரப்புகளில் வாகனம் ஓட்டுவது போல் ஓடுவதுண்டு. மிகவும் வேகமாக, ஆட்களை ஏற்றி இறக்குவதாக கற்பனையும் அதில் உண்டு. இதற்கென ஒரு நண்பரும் கிடைத்தார். அவர் என்னைவிட வயதில் மூத்தவர். சின்னஞ்சிறு வயதில் அப்படி வாகனம் ஓட்டுவது போல் ஓடியதை பெரியவன் ஆனதும் நினைவு கொள்வார். அப்படி வாகனம் ஓட்டிய காரணத்தாலே பேருந்து ஓட்டுநராக வேண்டும் என ஆசை சிறு வயதிலே உண்டு. கனவெல்லாம் காண்பேன். ஆனால் இந்த ஆசை நிறைவேற நான் எப்பொழுதுமே முயற்சி செய்தது இல்லை. இந்தியாவில் இருந்தவரைக்கும் இரு சக்கர வாகனத்துக்குக் கூட நான் பயிற்சி எடுக்கச் செல்லவில்லை. ஆக இது ஒரு அற்ப ஆசை என்றே தோன்றுகிறது!

ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதை அடைய முயற்சி செய்ததுண்டா? வலிகள் சுமந்ததுண்டா? அவமானம் தாங்கியதுண்டா? சாதித்தே தீருவேன் என அடம்பிடித்ததுண்டா? அப்பொழுதுதான் ஆசைக்கு அர்த்தம் வரும்.

என் ஆசைகள் தொடரும்.

No comments: