Thursday 30 July 2009

உண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா?! என்னாது!

கோவிலுக்கு எனப் பணத்தைச் செலவழிக்கிறோம், மக்களை மறந்துவிட்டோம், முக்கியமற்ற செய்திகளை நாளேடுகள் வெளியிடுகின்றன எனும் செய்திக்கு என்னுள் எழுந்த வினாக்கள் இவை.

1. நாம் குடியிருக்கும் வீடு மூன்று குடும்பங்களுக்கு தங்க வைத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக பண வசதியின்றி வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு வாடகை வாங்காமல் வீட்டில் தங்க வைத்திடும் தைரியம் எவர்க்கேனும் உண்டா? (எனக்கு இல்லை!)

2. கடவுளைப் பற்றி காராசாரமாக விவாதிக்கும் நாம் நமது குடும்பத்தில் நடக்கின்ற விசயங்களை (உண்டியல் போடுவது முதற்கொண்டு அனைத்து விசயங்களைச் சொல்கிறேன்) நம்மால் தடுத்த நிறுத்த இயலுமா? (என்னால் இயலாது காரணம் நம்பிக்கை கொண்டவர்களை புண்படுத்தும் பழக்கம் என்னிடம் இல்லை).

3. எதற்கெடுத்தாலும் ஆலயங்கள், வருமானம் என பேசுகிறோமே இப்படியெல்லாம் நடக்கிறதே என அலுத்துக் கொள்கிறோமே, நமது வீட்டில் நாம் சாப்பிடும் சாப்பாடுடன் இன்னும் பலருக்கு சாப்பாடு போட்டு அவர்களை வாழ்வில் முன்னேற வழிவகுக்கும் திறமை இருந்தும் நாம் செய்கிறோமா? (நான் செய்வது இல்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை)

4. நாளிதழ்களின் பணி அவர்களுக்கு வருமானம் வேண்டும் அதன் காரணமாக பிரபலங்களை, மக்கள் கவரும் விசயங்களை (எதுவேண்டுமெனினும்) வெளியிட்டு கொள்கின்றன, ஆனால் இப்படி வெளியிடுகிறார்கள் என புறக்கணிக்கும் சக்தி உண்டா? ஓசிப் பேப்பராவது படிக்கிறோமே? (இங்கு ஓசி பேப்பர்கள் அதிகம் வெளியிடப்படுகிறது)

5. சமூக நலத்திட்டம் , சமூக நலத்திட்டம் என பேசும் நாம், நமது வீட்டினைச் சுத்தமாக நமது எண்ணங்களை சுத்தமாக வைத்து கொள்கிறோமா? சரி கோவில்களுக்கு வந்த பணத்தில் தான் கோவில்களுக்கு செலவழிக்கிறார்கள், நிதி என கேட்டு வந்தால் தராமல் இருந்து விடுங்கள், யாரும் வற்புறுத்தி எந்த கோவிலும் வருமானம் சேர்த்துக் கொண்டதாய் இல்லை. நமது வீட்டை அலங்காரப்படுத்தும் பணத்தில் தெருக்களை சீரமைக்கும் சக்தி நமக்கு உண்டா?

6. அறநிலையத் துறை மட்டும்தானா அடித்தட்டு மனிதர்களின் வளர்ச்சிக்குத் தடை? பணக்காரனாக நாம் இருந்தால் அடித்தட்டு மனிதரின் நிலை குறித்து கவலைப் படக் கூட நேரம் இருக்காது காரணம் இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசை. நமது தேவைகள் பெரும் தேவைகளாக இருக்கும்.

7. மடாபதிகளும் ஆத்திகர்களும் மக்கள் இல்லையா? அவர்களை இப்படி ஒதுக்கி வைத்துப் பார்ப்பதே பெரும் குற்றமாகத் தெரியவில்லையா? இதுவும் ஒருவகையில் தீண்டத்தகாமையைச் சார்ந்தது.

8.நிரூபிக்கப்படாத கடவுள்? நாளை நாம் யார் என்பதை இந்த உலகம் மறந்து போகும் நம்மை எப்படி நிரூபிப்பது? ஆண்டாண்டு காலமாய் வழக்கத்தில் வந்து கொண்டு இருக்கும் அந்த ஒன்று இல்லாததாய் இருப்பினும் இருப்பதாய் உணர்வினை உரச வைக்கிறதே அதனை எதிர்க்கிறோம் என பேசுவது முரண்பாடாகத் தெரியவில்லையா? இல்லாமல் போகப் போகும் நமக்கு நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்? இதனை நியாயப்படுத்தினால் அதுவும் நியாயம் தான். ஆதங்கப்படுவதே நமக்கு வாடிக்கையாய் போய்விட்டது, முடிந்ததை செய்து அதன் மூலம் திருப்தி அடைவதுதான் வாழ்க்கை என்னும் ஒரு சின்ன தத்துவம் கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்னும் பட்சத்தில் நமது பேச்சுக்கள் வியப்பைத் தரும்?

9. ஏழைக்கு உணவு தருதல் அல்ல வாழ்க்கை முறை, ஏழையை உணவு உற்பத்தி பண்ணச் சொல்லி அதன் மூலம் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதுதான் வாழ்க்கை முறை.

10. பணம் பணம் பணம் இதுதானே மூல காரணம், இதனை அழிக்க முடியுமா நம்மால்? இதனை ஒழிக்க முடியும் எனில் கடவுளை உணர்வது பற்றி உரைக்கிறேன். அப்படி முடியாது எனில் தயவு செய்து கடவுள்களை இம்சிக்காதீர்கள், பேதம் பார்க்காதீர்கள். காரணம் நமது மனித இனத்தை மதிக்கத் தெரியாத, மனம் குறுகிப் போன மனிதர்கள் நாம் என்பதை மறந்து போகாதீர்கள்.

2 comments:

கிரி said...

//இப்படி வெளியிடுகிறார்கள் என புறக்கணிக்கும் சக்தி உண்டா//

வாய்ப்பே இல்ல..காரணம் அடுத்தவர்கள் விசயத்தில் நம்மவர்கள் ஆர்வம் காட்டுவதே அதற்க்கு காரணம்

Radhakrishnan said...

மிகவும் உண்மை, மிக்க நன்றி கிரி அவர்களே.