Thursday 16 January 2014

நீங்க எந்த ராசி?

''டேய், போயி அந்த பெரியவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திரு, உன் கல்யாணத்துல எந்த தடையும் வந்திரக்கூடாது பாரு''

''என்னம்மா நீ ரொம்ப தொனதொனத்துட்டே இருக்கே, நானும் ஸ்ரீயும் கல்யாணம் பண்ணப்போறோம், நீ என்னமோ ஆசிர்வாதம் அது இதுன்னுட்டு இருக்க''

''அதுக்கில்லைடா, ஸ்ரீ குடும்பத்தில தகராறு பண்றதா நீதானே சொன்ன, அப்பா வேற ரொம்ப கவலையா இருக்காருடா. சொன்னா கேளுடா''

ராம் 23 வயதான நல்ல உயரமான கருப்பு வண்ண இளைஞன். சமீப ஆறு மாத காலமாக தன்னுடன் வேலை பார்த்து வரும் 21 வயதான சற்றே உயரமான சிவப்பு வண்ண ஸ்திரீயான ஸ்ரீயை காதலித்து வருகிறான். இந்த காதல் விவகாரம் நேற்றுதான் ஸ்ரீ வீட்டுக்கும், ராம் வீட்டுக்கும் தெரிந்தது. ராம் பெற்றோர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். இந்த எதிர்ப்பு விவகாரத்தை ராம், தனது அம்மாவிடம் சொல்ல அம்மா அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து வர சொன்னார்கள். ராம் செல்லமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

''யாரும்மா அந்த பெரியவரு, அவர் என்ன சித்தரா, ஸ்ரீயோட அப்பா அம்மா மனசை மாத்துறதுக்கு. சும்மா கிடம்மா, நானே எப்படி கல்யாணம் பண்ணலாம்னு யோசனையில இருக்கேன்''

''டேய், அவரை பாத்துட்டா, தடைபட்ட கல்யாணம் எல்லாம் நடக்குதாம்டா. அதோட இல்லை கல்யாணம் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாம். நம்ம கோமதி பாட்டி கூட வந்து சொல்லிட்டு போனாங்க''

''அப்படினா விவகாரத்து பண்றவங்களை அவரை பார்க்க சொல்ல வேண்டியதுதானே, சேர்ந்து வாழுவாங்கள''

''அப்படியும் நடந்து இருக்காம்டா, சொன்னா கேளுடா. ஸ்ரீ நம்பர் இருக்காடா''

''எதுக்கு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சனிக்கிழமை அன்னைக்கு போறேன், என்னை நிம்மதியா போய் தூங்கவிடு''

''நம்பர் தாடா, எதுக்கும் வைச்சிக்கிறேன்''

''இந்தாம்மா''

ராம் உறங்க சென்றதும் ஸ்ரீக்கு போன் செய்தார்.

''ஸ்ரீ, நான் ராம் அம்மா பேசறேன்''

''சொல்லுங்க, இருங்க மாடிக்கு போய்க்கிறேன்''

சிறிது இடைவெளிக்குப் பின்னர்

''ம்ம் சொல்லுங்க''

''ஏன்மா, என் பையனை நீ காதலிக்கிறியாமே, உங்க வீட்டுல பிரச்சினையாமே, ராம் சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தான்''

''ஆமாம், வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்க முடிவுல மாத்தமில்லை, உங்களுக்கு சம்மதம் தானே''

''சம்மதம் தான், நீ எதுக்கும் எங்க ஊருக்கு வெளில ஒரு குடிசையில பெரியவர் ஒருத்தர் இருக்காரு, ராசிசாமினு கேட்டா சொல்வாங்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா எந்த பிரச்சினையும் வராது''

''ம்ம்''

''மறந்துராதம்மா''

''ம், மறக்கலை''

ராம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த நாள் ஸ்ரீ, ராசிசாமியை தேடி வந்துவிட்டாள்.

''வணக்கம் சாமி''

''ம்ம்''

''என்னோட கல்யாணத்துல பிரச்சினை, அதை நீங்க தீர்த்து வைக்கனும்''

''ம்ம் உன்னோட பேரு, ராசி என்னம்மா?''

''ஸ்ரீ, மகரம்''

''என்ன நட்சத்திரம்?''

''திருவோணம்''

''எந்த மாசத்தில் பிறந்த?''

''மே  7''

''பையனோட பேரு, ராசி?''

''ராம், மீனம்''

''பையனோட நட்சத்திரம்?''

''ரேவதி''

''எந்த மாசத்தில் பிறந்தார்?''

''ஜனவரி 11''

''எல்லாம் துல்லியமா வைச்சிருக்கியே''

''காதலிக்க ஆரம்பிச்சதும், ராசி பொருத்தம் பாத்துட்டேன்''

''இது ஜாதகப்படி சரி. எதுக்குனா இது சந்திர ராசி. ஜாதகத்தில எங்க சந்திரன் இருக்கோ அதுதான் ராசி. ஆனா பெரும்பாலான இணையதளங்களில் பிறந்த மாசம் வைச்சிதான் கணக்கு பண்ணுவாங்க. அது சூரிய ராசி. ஆங்கில மாச பிறப்பு படி நீ ரிஷபம், அவர் மகரம். இந்த ராசிக்கான நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ராசி மட்டுமே பாக்கனும், அப்படி பாக்கப்போனா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. தாராளாம கல்யாணம் பண்ணலாம்''

''சரிங்க சாமி, தட்சிணை எவ்வளவு?''

''அந்த பணத்தை அப்படியே போறப்ப அநாதை பிள்ளைகளுக்கு சோறு வாங்கி கொடுத்துட்டு போ''

ஸ்ரீ, ராமிடம் உற்சாகமாக விஷயத்தை சொன்னாள்.

''அந்த பெரியவர் மாத்தி சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பியா''

''மனசுக்கு கஷ்டமா இருந்து இருக்கும்''

''சரி, வேலைக்கு வந்து சேரு''

ஸ்ரீ தனது அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''சரி கவலைப்படாதே, உன் அப்பாகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி வைக்கிறேன்''

ஸ்ரீ, ராமிடம் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''நான் சொன்னேன் பார்த்தியா, அதுதான் அந்த பெரியவரோட மகிமை''

''தேங்க்ஸ்த்தை''

ஸ்ரீ வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ராம் சில தினங்கள் பின்னர் பெரியவரை சந்திக்க சென்றான்.

''எப்படி உங்களால் இந்த கல்யாணம் எளிதாக சாத்தியம் ஆச்சு?''

''என் மேல மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கை. நான் சொன்னா நல்லா நடக்கும்னு நினைக்கிறாங்க. இந்த நம்பிக்கையை ஸ்ரீக்கு கொடுத்து அது ஸ்ரீ பெற்றோருக்கு போய் சேர்ந்தது. அவங்க அவங்க மேல நம்பிக்கையை வரவைக்கிறதுதான் என்னோட வேலை. மத்தபடி ராசி, ரோசி எல்லாம் ரெண்டாம் பட்சம். பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்னைக்குமே பஸ்பம்தான்''

''ரொம்ப நன்றிங்க''

''இந்த நம்பிக்கை விஷயத்தை ஒரு நாப்பது வருஷம் முன்னாடி நான் என்னோட சுமதிக்கு சொல்லி இருந்தா இந்த ராசி கருமாந்திரம் எங்களை பிரிச்சி இருந்து இருக்காது''

ராமின் சந்தோசத்தில் சின்னதாய் வலி ஒன்று வேகமாக ஊடுருவி போனது. 

No comments: