Saturday 4 October 2014

அம்மா நான் சமைக்கிறேன்

ஏன்டா இப்படி உட்காந்துட்டு இருக்கே வந்து சாப்பிட்டு போ அம்மாவின் குரல் கேட்டது.

எனக்கு சாப்பாடு வேண்டாம்மா, அப்புறம் வந்து நான் சாப்பிடுறேன் என நான் மறுப்பு தெரிவித்தது அம்மாவுக்கு சங்கடமாக இருந்து இருக்கும்.

ஏன்டா இப்படி பண்ற, அப்படி என்ன தலை போற விசயம், உனக்காகத்தான் இவ்வளவு அவசரமா செஞ்சேன். இப்படி சாப்பிடாம போனா என்னடா அர்த்தம்.

அம்மா வந்து சாப்பிடுறேன் என அவசரமாக கிளம்பினேன். அம்மா அடுப்பங்கரையில் இருந்து எட்டி வந்து பார்த்தார். அவரது முகத்தில் கோபத்தை விட சோகம் இழையோடிக் கொண்டு இருந்தது. சரி கொடும்மா என வேக வேகமாக நாலு வாய் சாதம் அள்ளிப்போட்டேன். மெதுவா சாப்பிடுடா, விக்கிக்கிற போகுது.

அடுப்பங்கரையில் பெரும்பாலும் அம்மாவின் பொழுது கழியும். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு இரவு சாப்பாடு என அம்மா தினமும் சமைத்துக் கொண்டே இருப்பார். விறகு எரியும் அடுப்பில் அவரும் எரிந்து கொண்டு இருப்பார். அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பேன் ஆனால் எனது அவசரம் எதுவும் செய்ய விடாது. எனக்கு சமைக்கத் தெரியாது. சாப்பிட மட்டுமே தெரியும். அதுவும் எனக்கு அம்மா தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தால் தான் நான் சாப்பிடுவேன். மறு சோறு வாங்கும் பழக்கம் இல்லை என்பதால் அம்மா நிறையவே சாப்பாடு எடுத்து வைப்பார்கள். நான் சாப்பிட்டால் தான் அவரது பசி அடங்கும்.

என்னடா விஷயம் எனும் அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசிக்கும் முன்னரே ரகுராமை பார்க்கப்போறேன் என பொய் சொன்னேன். எதுவும் வேலை விசயமா என்று அம்மாவின் அடுத்த கேள்விக்கு என்னால் பதில் யோசிக்க  முடியவில்லை. வரசொல்லி இருந்தான்மா என சமாளித்து கிளம்பினேன்.

நான் சென்றபோது எதிர்பார்ப்புடன்  நின்று கொண்டிருந்தாள். என்னடா இவ்வளவு லேட்டு? வீட்டில சொன்னியா இல்லையா? எங்க அப்பாவும் அம்மாவும் நீ வேலைக்கு சேராம உன்னை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு காலுல நிக்கிறாங்க. எப்படா நீ வேலைக்கு போவ? எப்படா என்னை கல்யாணம் பண்ணுவ? என சோகமாக கேட்டாள். இப்போது பாவ்யாவின் ஊர் நகரம், எனது ஊர் இப்போதும் கிராமம்.

இன்னும் இல்லை பாவ்யா, எப்படி சொல்றதுன்னு தெரியலை. அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு என்றதும் பயப்படாதடா என்றாள்

இன்னும் ஒரு வாரத்தில் வேலை கிடைச்சிரும். அப்புறம் அப்பாகிட்ட நம்மளை பத்தி சொல்லிட்டு முடிவு சொல்றேன்.

எத்தனை வாரமா இதை சொல்லிட்டு இருக்க, எத்தனை இன்டர்வியூடா? டேய் நான் சாம்பாதிக் கிறேன்ல,  நீ சமைச்சி போடுடா  உனக்கு அதில என்னடா சிரமம். எனக்கு நீ சீக்கிரம் சொல்லு, உன்னைத்தவிர எனக்கு வேறு எவனோடயும் கல்யாணம் ஆகாது. மனசில வைச்சிக்கோ. இந்தா பணம், உன் அம்மாவோட பிறந்தநாளுக்கு சேலை வாங்கனும்னு சொன்னியே, இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நாளைக்கு வந்தா கடையில வாங்கித்தாரேன். என் அம்மாவுக்கு தன்னோட பிறந்தநாள் எப்போது எத்தனை வயது என்று கூட தெரியாது.

பணத்தைக் கொடு, நானே போயி வாங்கிக்கிறேன்.

நல்ல பார்டர் போட்டது வாங்கிக்கொடு. நான் என்னோட வீட்டில சொல்லி சமாளிக்கிறேன். மனசு போட்டு குழப்பிக்காதே. சேலை வாங்கியதும் உன் அம்மாவோட ஒரு ரவிக்கை கொண்டு வா, அந்த சேலைக்கு ரவிக்கை தச்சி தரேன்.

அவள் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டே நின்றேன். சின்ன வயசு காதல். எனக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போவாள். என் மீது அவளுக்கு அத்தனை பிரியம். அவள் தைரியமாக அவளுடைய காதலை அவளது வீட்டில் சொல்லிவிட்டாள். எனக்கோ இந்த வேலையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

கடைக்கு செல்வதற்குமுன் ரகுராமை பார்த்துவிட்டு செல்லலாம் என சென்றேன்.

உனக்கு அடுத்த வாரம் வேலை ஆர்டர் வந்துரும். எல்லாம் சரி பண்ணிட்டேன். சந்தோசமா இரு.

நிசமாவா?

என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லைல. அடுத்த வாரம் வந்து பேசு என சொல்லிவிட்டு போனான்.

கடையில் சென்று சேலை  வாங்கினேன். அம்மாவுக்கு முதன் முதலில் வாங்கும் சேலை அதுவும் அவள் கொடுத்த பணத்தில். சேலையை வாங்கிக்கொண்டு வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தேன்.

அம்மா எனக்கு அடுத்த வாரம் வேலை கிடைச்சிரும்னு ரகுராமன் சொன்னான்.

அம்மாவுக்கு சந்தோசமாக இருந்தது. இந்த தடவையாச்சும் உனக்கு வேலை கிடைக்கணும். அப்பாவுக்கும் முடியலைடா.

அம்மா நான் சமைக்கட்டுமா என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே என்னடா இப்படி ஒரு விபரீத ஆசை.

வரப்போற பொண்ணுக்கு சமைக்கத் தெரியலைன்னா என்னம்மா பண்றது.

கல்யாணம் பண்ணிட்டா என்னை விட்டு போயிருவியாடா?

இல்லைம்மா, வேலைக்குப் போற பொண்ணு வந்தா நீதானம்மா சமைக்கணும், உன் வாழ்க்கை சமைச்சே கழிஞ்சிரும்

எனக்கு சமைக்கிறது, தோட்டம் போறதை விட்டா வேறு என்னடா தெரியும்? ஏன்டா பொண்ணு பார்த்துட்டியாடா?

அது வந்துமா...

அதான்டா பார்த்தேன். என்னைக்குமில்லாம சமைக்கிறது பத்தி பேசறன்னு

அம்மா, நம்ம ஊருல இருந்தாங்க பாவ்யா குடும்பம் அந்த  பொண்ணைதான் சின்ன வயசில இருந்து விரும்பறேன் அவளும் விரும்புறா அவங்க வீட்டில சொல்லிட்டா எனக்கு வேலை கிடைச்சா பேசலாம்னு அவங்க  வீட்டில சொல்லிட்டாங்க. அவ வேலைக்கு போறா உனக்கு வேலை கிடைக்கலைன்னா என்னடா நான் சம்பாதிக்கிறேன் நீ சமைச்சி போடுன்னு இன்னைக்கு சொன்னா.

அப்படினா நீ ரகுராமனை பார்க்கப் போகலை.

ரகுராமனைப் பார்த்துட்டுதான் வந்தேன்மா.

சபாஷ். அப்பாவின் வார்த்தையை கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.

சிவகாமி, நீ இவனுக்கு சமையல் கத்துக்கொடு, வரப்போற பொண்டாட்டிக்கு சமைச்சிப் போடட்டும்.

அப்பா அது வந்து...

நீ வேலை தேடு அப்புறமா அந்த பொண்ணு பத்தி பேசு என அப்பா சொல்லிவிட்டு போய்விட்டார்.

அம்மா, உனக்கு அப்பா கூடமாட சமைக்க உதவியே பண்ணினது இல்லையிலம்மா

ஏன்டா இப்படி, உன்னோட அக்காக்களே எனக்கு உதவி பண்ணினது இல்லை. நான் சமைச்சாத்தான் எனக்கு திருப்தி, உங்களுக்கு திருப்தி.

அடுத்த நாள் ஒரு ரவிக்கையை எடுத்து சென்று பாவ்யாவிடம் சேலையுடன் தந்தேன். நல்ல செலக்ஷ்சன்டா என்றாள். அப்பாவின் சம்மதம் என்னை ரகுராமனை தினமும் பார்த்து வர செய்தது. எனது நச்சரிப்பு தாங்காமல் நாளைக்கு வா என சொல்லி அனுப்பினான்.

அம்மாவின் ஐம்பாதவது பிறந்தநாளுக்கு  இன்னும் நான்கு நாள் மட்டுமே இருந்தது. பாவ்யாதான் எனக்கு ஒரு யோசனை சொன்னாள்

டேய் உன்னோட அம்மாவோட பிறந்தநாளை சூப்பரா செஞ்சா என்னடா?

பணத்துக்கு எங்க போவேன்?

என்கிட்டே இருக்குடா. உங்க அம்மாவோட நெருங்கிய தோழிகள் எல்லாரையும் கூப்பிடுவோம் உங்க அம்மாவுக்கு தெரியாம சர்ப்ரைசா வைப்போம்டா.

என் அம்மா ஊரை விட்டே வரமாட்டாங்க.

உன் வீட்டிலேயே வைப்போம்டா. நீயும் நானும் சமைக்கிறோம்டா. சரி என சொல்லிவிட்டு வந்தேன்.

ரகுராமனை சென்று பார்த்தேன். ரகுராமன் இந்தா வேலை ஆர்டர் என கையில் கொடுத்தான். அவன் கையை பிடித்து வணங்கினேன். எங்க வீட்டுக்கு இந்த சனிக்கிழமை விருந்துக்கு வந்துரு என சொன்னேன்.

அம்மாவின் நெருங்கிய தோழிகள் என நான்கு பேரில் இரண்டு பேர் ஊரில் இருந்தார்கள். மற்ற இரண்டு பேர் வேறு ஊரில் இருந்தார்கள். அவர்களை குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தேன். அக்காக்கள், சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா என நிறைய பேரை அழைத்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த சந்தோசத்தினை கொண்டாட நானே சமைக்க இருப்பதாக சொன்னேன். அம்மாவுக்கோ ஆச்சரியம்.

எங்கடா சமைக்க கத்துக்கிட்ட?

அந்த பொண்ணு  அன்னைக்கு வந்து சமைக்கிறேன்னு சொல்லி இருக்காம்மா.

இந்தாடா பணம் என அப்பா தந்தார்.

இரண்டு தினங்கள் கழிந்தது. பாவ்யா என்னை வரச்சொல்லி இருந்தாள்.

என்னடா உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்துருந்தார்டா. உன்னோட வேலை கிடைச்ச விருந்துக்கு எங்களை எல்லாம் வரச்சொல்லி இருந்தார்டா.

அம்மாவின் பிறந்த தினம் அன்றுதான் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். முன்னிரவே அம்மாவிடம் நாளை எனது நாள் என சொல்லி வைத்தேன்.  காலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி வாசல் தெளித்தேன். பாவ்யா அதிகாலை வந்து விட்டாள். அவளே கோலம் போட்டாள். 

நான் முதன் முதலில் வியந்த ஓவியம் கோலம்.

நானும் அவளும் சமைக்க ஆரம்பித்தோம். அம்மா உதவி செய்ய வந்தார்கள். அம்மா நீங்கள் இன்று ஓய்வு எடுக்கும் நாள் என சொல்லி வைத்தேன். நிறைய பேரு சாப்பிட வராங்கடா. ஏம்மா நீ நல்லா சமைப்பியா?

சாப்பிட்டுட்டு சொல்லுங்கத்தே என்றாள்.

சமையல் தயாராகி முடிந்தது. அம்மா வந்து ருசி பார்த்துவிட்டு பிரமாதம்டா என்றார்கள். உன் கைக்கு தங்க வளையல் போடணும்மா என்றார் அம்மா. அக்காக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். பாவ்யாவின் அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.

ரகுராமனும் வந்து இருந்தான். எல்லோரும் அமர்ந்து இருக்க பாவ்யா என் அம்மாவை சாமி அறைக்கு அழைத்து சென்றாள். நானும் உடன் சென்று புது சேலையை ரவிக்கையை தந்தேன். அம்மா உனக்கு இன்னைக்கு ஐம்பாதவது பிறந்தநாள் அதனால்தான் இவ்வளவு ஏற்பாடும், பாவ்யாவோட யோசனை என்றேன்.

அம்மாவுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை. பாவ்யா கேட்டுக்கொண்டதால் சிறிது நேரத்தில் புது சேலை ரவிக்கை அணிந்து வந்தார். அம்மாவின் ஐம்பாவது பிறந்தநாள் குறித்து அனைவருக்கும் சொன்னேன். அப்பா மெய்மறந்து நின்றார். அம்மா வெட்கம் கொண்டார்.

வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி அம்மாவுக்கு சமைச்சி போட்டியா என எல்லோரும் அம்மாவை வாழ்த்திவிட்டு சாப்பிட்டுச் சென்றார்கள். அத்தனை பேரும் சாப்பாடு குறித்தும் அம்மாவின் பிறந்தநாள் குறித்தும் பேசினார்கள். அம்மாவுக்கு பெருமிதமாக இருந்தது.

------------------

எந்தவொரு பிறந்தநாளையும் கொண்டாடாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடித்துவிடும், தனது வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக்கி அம்மாவை மறந்து போகும் பிள்ளைகள் கொண்ட அம்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பாவ்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.









2 comments:

Anonymous said...

Arumai!!

Radhakrishnan said...

மிக்க நன்றிங்க :-)