Saturday 11 October 2008

குஞ்சுகளை விரட்டும் தாய்பறவை

முன்னுரை:-

தனிமனிதனின் ஆர்வமும், தனிமனித திறமையை அடைத்து வைத்துக் கொள்ளாமல், அத்திறமையானது உலகம் யாவும் பரவி தனி ஒருவருக்கு மட்டுமல்லாது, உலகத்திற்கே பயன்படுமாறு ஒருவர் வாழும் வாழ்க்கை மிகவும் சிறந்த வாழ்க்கையாக கருதப்படுகிறது. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் அத்தகைய சிறப்பு வாழ்க்கை வாழ்வதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

திருவள்ளுவரின் கூற்று:

‘’தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று’’ என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் பிறந்த பிறப்பின் வெற்றியானது அவர் பெறும் புகழ் மட்டுமல்லாது, அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. இந்த குறள் திருவள்ளுவருக்கு மிகவும் பொருந்தும்.

‘’ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்’’எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அன்னையானவர் தனது குழந்தைகளை அடைத்து வைத்தால், உலக அறிவினைப் பெற விடாது ஒடுக்கி வைத்தால் எப்படி அக்குழந்தை சான்றோன் ஆவது?

எந்த ஒரு தாயும் தனது பிள்ளைகளின் மகிழ்ச்சியில் பெரிதும் பூரித்துப் போவாள். பாரெல்லாம் போற்றும்படி தனது பிள்ளை இருக்க வேண்டி, தாயானவள் தனது பிள்ளைகளை தொலைதூர கல்லூரியிலும் படிக்கவும், வேலை பார்க்கவும் அனுப்பி மகிழ்ச்சியில் திளைத்து இருப்பாள். பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது பாசத்தை மனதோடு பூட்டி வைத்து அப்பிள்ளையை அனுப்பும் அன்னையை குறை சொல்ல இயலாது.

பறவைகளின் வாழ்க்கை:

‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ ‘’திரைகடலோடியும் திரவியம் தேடு’’ என நமது முன்னோர்கள் கூறியதன் காரணம், இவ்வுலகத்தில் வந்து பிறந்த மறு கணமே நமக்கு இந்த உலகம் முழுவதும் சொந்தம் என்றாகிவிடுகிறது. எனவே நம்மை சுருக்கிக் கொள்ளாமல், நமது ஆற்றலைப் பெருக்கி, பொருளாதாரத்தில் உயர்வு அடைவது மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்படி செய்வது சிறந்தது. அதற்கு தாயானவர் தனது பிள்ளைகளை சுயமாக வாழும்படி கற்றுக் கொடுத்து திறமையானவர்களாக இருக்க வழி செய்ய வேண்டும்.

பறவைகள் தனது குஞ்சுகளுக்கு இரை தேடி வருவது மட்டுமின்றி, பிற விஷமிகளிடமிருந்து காப்பாற்றியும் வரும். ஒரு காலகட்டம் ஆனதும், அந்த குஞ்சுகளை தனது சொந்தக்காலில் நின்று வெற்றி பெற வழி அனுப்பி வைக்கும். அப்படி அந்த தாய் பறவையானது செய்யாது போனால், பறவை இனம் இன்று அழிந்து போய் இருக்கும் என்பதை கண்கூடாக நாம் அறியலாம்.

‘’இறக்கை முளைத்துவிட்டது, அதனால்தான் பறந்து போய்விட்டது’’ என பறவையினை எடுத்துக்காட்டி பேசுபவரும் உண்டு. பறக்காமல் இருக்க வேண்டுமெனில் இறக்கை எதற்கு? எனவே பறவையின் வாழ்விலிருந்து தனக்கென தொழிலைக் கற்றுக் கொண்டு தனித்துவமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி பறவைகள் போல் விதைக்காமல், அறுவடை செய்யாமல் இருந்தால் நமது மனித இனம் அழிந்து விடும்.

ஒரு உண்மைச் சம்பவம்:

ஒரு தாய் தனது மகனை தன்னுடன் கிராமத்திலேயே இருக்கச் செய்தார். இளநிலை படிப்பு படிக்க வேறு இடம் அனுப்ப அவருக்கு மனமில்லை. இவ்வாறு அனுப்பாமல் அந்த மகனுக்கு உரிய தொழிற்பயிற்சியும், மனவலிமையும் கற்றுத்தராமல் அந்த மகனை தாய் வளர்த்து வந்தார். பெரும் செல்வந்தரான அந்த மகன் தாயின் அரவணைப்பிலே வளர்ந்து எதுவும் கற்றுக் கொள்ளாமல் பின்னாளில் அனைத்து சொத்துக்களையும் இழந்து தனிமைப் படுத்தப்பட்டு அவதிப்பட்டார். அந்த மகனின் இயலாமைக்கு அந்த தாய் பழி சுமத்தப்பட்ட நிகழ்வு அனனவரது மனதிலும் ஒரு ஆதங்கத்தை உருவாக்கும். மேலும் இது போல் வாழ்பவருக்கு இது ஒரு நல்ல படிப்பினையாகும்.

வெளி இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதால் மட்டும் அப்பிள்ளை சாதித்து விடாது, அதற்குரிய மனவலிமை, பயிற்சி அனைத்தும் தாய் கற்றுத் தர வேண்டும், பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நினைவில் கொள்வது நல்லது.

முடிவுரை:

‘’பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’’ ‘’குழந்தையைப் பெத்தா கோமணம் மிச்சம்’’ போன்ற பாடல் வரிகள் இனிமேல் வராமல் இருக்க வேண்டுமெனில் பெற்ற குழந்தைகளை அடைத்து வைக்காமல், உரிய பயிற்சி தந்து அவர்களது முயற்சியில் வெற்றி பெற அவர்களை தனியாய் அனுப்பி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

No comments: