Monday 13 October 2008

ராட்ஸ் விதி

என்னது ராட்ஸ் விதி என நினைத்து விட வேண்டாம். தமிழரான எனக்கு இந்தியாவில் இருந்தபோது ஆங்கில மோகம் இருந்தது என்பதை மறுக்க இயலாதுதான். சிறு வயதிலே கதை கட்டுரை நாடகம் படம் என விளையாட்டாய் திரிந்த பொழுது எங்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜெராகரா புரொடக்ஸன்ஸ். ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் அரோகரா ஆகிவிட்டது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கவிதைகளை எழுதிக் குவித்த காலம். இப்படி கவிதைகளை எழுதி அதை வெளியிடும் நிறுவனமாக வைத்துக்கொண்டதுதான் ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட். ஆனால் இந்த ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட் நிறுவனமாக மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை.

ராட்ஸ் எனும் பெயர் எனக்கு எப்படி வந்தது? அழகிய பெயரான இராதாகிருஷ்ணனை இராதா என்றே பலர் அழைக்க கல்லூரியில் வைத்துக்கொண்டதுதான் ராட்ஸ். ஆங்கிலத்தில் Rads என வரும். இன்றும் சில நண்பர்கள் ராட்ஸ் என்றே அழைப்பார்கள். ஆனால் வெளிநாட்டிற்கு வந்தபின்னர் உன்னை எப்படி அழைக்க எனக் கேட்டவர்களுக்கு ராதா என அழையுங்கள் என்றேன். பெண் பெயர் அல்லவா என தெரிந்தவர்கள் கேலி செய்தது உண்டு. என்னை ராதா என்றே அழையுங்கள் என சொல்லியாயிற்று. Rada என்றே எழுத ஆரம்பித்தார்கள். ஆஹா Rads இப்பொழுது Rada ஆகிவிட்டதே என நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.

ஆனால் இந்த ராட்ஸ் எனும் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கல்கத்தாவில் அனைவராலுமே ராட்ஸ் என்றே அழைக்கப்பட்டேன். ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட் பதிவிட வேண்டும் என இங்கிலாந்திலே முயற்சித்தது உண்டு. ஆனால் இது தற்பெருமை அல்லவா என என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்ட நாளும் உண்டு. ஆனால் ஒருவர் என்னை மற்றவரிடம் அறிமுகப்படுத்தும் போது இவர் ஒரு விஞ்ஞானி, எழுத்தாளர் என்றெல்லாம் சொல்ல கூனி குறுகிப் போனேன். இறைவனின் அருளால் இத்தனை தூரம் கடந்த வந்த பாதைக்கு இப்படியும் ஒரு புகழுரை இருக்குமோ என அஞ்சாமல் இருக்க இயலவில்லை. என்ன சாதித்து விட்டோம், குடும்பத்தில் நிம்மதியை நிலவ முடிந்ததா, உலக குழந்தைகளின் வறுமை போக்க இயன்றதா? எதுவுமே இல்லை! ஆனால் இது எண்ணங்களோடு சரி, எதை செயல்படுத்த முடிந்தது? செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள், செய்ய இயலாதவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என ஒருவர் சொல்ல கேள்விப்பட்டது உண்டு. நான் இரண்டாவது ரகம் போலும். எனது பேச்சைக் கேட்டு எவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அறிவதற்கில்லை. ஏனெனில் செய்பவர்கள் அத்தனை பேசுவதில்லை.

இதெல்லாம் எல்லாம் இருக்கும் வரை தான். அதன் அடிப்படையிலே வலைப்பதிவு ஒன்றையும் தொடங்கிவிட்டேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு எல்லாம் கிடையாது அங்கே. முத்தமிழ்மன்றம் சூரியன் எனில் எல்லாம் இருக்கும் வரை வலைப்பதிவு ஒரு பூமி. அவ்வளவே. இங்கே பதிவிடப்படாமல் எந்த ஒரு கவிதையும் கட்டுரையும், கதையும் அங்கே நேரடியாகப் பதிவிடப் போவதில்லை. இப்படியெல்லாம் சட்டதிட்டங்கள் என்னுள். என்ன இவையெல்லாம் எல்லாம் இருக்கும் வரை தான்.

சரி விசயத்துக்கு வருவோம். விஞ்ஞானம் எனும் பகுதியில் இந்த வியாக்கியானம் தேவை தானா? தேவையில்லாமல் எதையும் அத்தனை எளிதாக எழுதிடத் தோணுவதில்லை தான். பின்னாளில், முன்னால் எழுதியவைகளை படிக்கும்போது அட இப்படியும் எழுதினோமா எனத் தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு இங்கே. இப்படியெல்லாமா எழுதினோம் என வெட்கப்பட வைத்த பதிவுகளும் உண்டு. ஆனால் தவறாக மனதில் இன்று படும் முன்னால் பதிவுகளை திருத்திட முனைந்ததில்லை. அன்று அது சரி, இன்று அது தவறு நாளை சரியாகவே இருக்கக்கூடும்.

ராட்ஸ் விதி என்ன சொல்கிறது?

ராட்ஸ் விதி: ஈர்ப்பு விசையும், எதிர் விசையும் அதனால் உண்டாகும் சம விசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே நோபல் பரிசுக்கோ, விதி என சொல்வதற்கோ பரிந்துரைக்கப்படும், சரியென ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விளக்கம் சரியாக இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

நமது முன்னோர்கள் சொல்வார்கள், எல்லாம் மனசு தான் காரணம். உள்ளிருப்பதே வெளியில் எனவும் சொல்வார்கள். இதற்கு, ராட்ஸ் விதிக்கு நான் தரும் விளக்கம்.

நான் நேராக பூமியின் மேல் இப்போது நிற்கிறேன். பூமியின் விசையானது என்னை நேராக கீழே இழுக்கிறது. ஆனால் நான் விழாமல் இருக்க நான் பூமியின் மேல் எதிர்த்து தரும் விசையானது சமமாக இருக்க நேராகவே நிற்கிறேன். இப்போது எனது எடை 750N. 750N விசையை நான் செலுத்த பூமியானது அதே விசையை என்மீது செலுத்துகிறது. நினைவில் கொள்ளுங்கள் நான் நினைவுடனே நிற்கிறேன் மேலும் நேராகவே நிற்கிறேன்.

சற்று நேரத்தில் தூக்கம் வந்துவிடுகிறது. நான் நேராக நிற்க இயலவில்லை, விழுந்துவிடுகிறேன். அதே 750N. பூமி என்மீது செலுத்தும் விசையும் அதே 750N தான். அப்பொழுது என்னை நேராக நிற்க வைத்திருந்தது உடலில் பரவியிருந்த எண்ண விசை. இந்த எண்ண விசையானது எந்த ஒரு உதவிப் பொருளும் இல்லாமல் என்னை நேராக நிற்க வைத்தது. ஆனால் எண்ண விசையானது இல்லாத பட்சத்தில் நேராக நிற்க இயலவில்லை. ஆக ஈர்ப்பு விசையும் அதற்கான எதிர்விசையும் அதனால் ஏற்படும் சமவிசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே என்கிறேன் நான்.

எதிர்கருத்து வரும் அல்லவா? சரி இப்பொழுது உடல் கீழே விழுந்துவிட்டது. அப்படியெனில் உடலில் விசை ஒன்று அதிகமாகி இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் உடல் ஆகாயத்தில் பறந்திருக்கும். ஆனால் முதலில் உடல் எடை செலுத்திய விசை 750N. அதில் எண்ண விசையும் அடக்கம். இப்பொழுது எண்ண விசை கழிந்தால் குறையத்தானே வேண்டும், ஏன் அதிகரித்தது என கேள்வி வரும். நான் விழுந்தது பக்கவாட்டில்! பூமிக்குள் எனது கால்கள் புதைந்து செல்லவில்லை! பக்கவாட்டில் நான் விழுந்தபோது அங்கே ஈர்ப்பு விசையானது குறைவாக இருக்க நான் விழுகிறேன், இப்பொழுது விழுந்த உடன் மொத்த விசையும் பரவி பூமி எனது உடலுக்கு மேல் செலுத்தும் விசை 750N. எனது உடல் செலுத்தும் விசை அதுவே. அப்படியெனில் எண்ண விசை எவ்வளவு? 0.00000000000001க்கும் குறைவாகவே இருக்கலாம்.

இது எப்படி சாத்தியம்? இந்த விசையானது இப்படியொரு விளைவை எப்படி ஏற்படுத்த முடியும்? ஏற்படுத்துகிறதே. நினைவு வந்ததும் எழுந்து விடுகிறோம். பலரால் எழ முடியவில்லை, நடக்க முடியவில்லை என்பது கூட எண்ண விசையால் கட்டுப்படுத்தப்படுபவையே.

இது எப்படி? புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அணுவின் நிறையானது புரோட்டான் மற்றும் நியூட்ரான் மட்டுமே என்கிறது அறிவியல். எலக்ட்ரானுக்கும் நிறைக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். ஆனால் இந்த எலக்ட்ரான்கள்தான் மொத்த உலகமும் உருவாக புது புது விசயங்கள் உருவம் கொள்ள காரணம். எல்க்ட்ரான்கள் எப்படியோ அப்படியே நமது எண்ணம் கொண்டுள்ள விசையும்.

ராட்ஸ் விதி நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. சாதம் கொதித்தபோது மூடப்பட்ட தட்டு தள்ளாடியது. நீராவி எஞ்சின் உண்டானது. மரத்தில் இருந்த ஆப்பிள் கீழே விழுந்தது, ஈர்ப்பு விசை என கண்டறியப்பட்டது.மனிதனில் ஏற்படும் மாற்றங்கள் என்ன செய்தது? இறைவனை அல்லவா கண்டு கொண்டது. எனவே ராட்ஸ் விதி அறிவியலால் நிராகரிக்கப்படுகிறது.

No comments: