Wednesday 15 October 2008

பேரின்பத் தழுவல்கள் நிறைவுப் பகுதி (9)

பொய்யென சொல்ல ஆரம்பித்ததும் அதில்
மெய்யும் இருக்கும் என்றே நீயும்
தாயாய் காத்து இருந்தாய் நானும்
சேயாய் விளையாடி விட்டேன்

இருநிலை வைத்ததன் நோக்கம் மனம்
ஒருநிலை எவர்கொள்வார் என்றே அறியவோ
பலநிலை பார்த்தபின் பழிசொல்லும் குணமற்று
தவநிலை எய்திட விரைந்தேன்

நடந்திடும் செயல்களில் எல்லாம் நீயென
கிடந்து உழலும் மனம் கொண்டதும்
மடிந்து எழும் மானிட பிறவிகள்
நொடிந்து போகாது இருத்திடுவாய்.

இருக்கிறாய் என்றே உரக்கச் சொல்கிறேன்
உருக்கிய உயிரை உனதென தருகிறேன்
தெளிவாய் சிந்தையில் ஒளிர்வாய் என்றென்றும்
அளிப்பாய் ஓரருள் யாவர்க்கும்.

பாதைகள் பலவென போடச் சொல்லி
போதையில் அமிழ்த்தி விட்டது போதும்
உனை அடையும் வழியானது ஒன்றேயென
வினை தீர்த்து சொல்லிடுவாய்!

No comments: