Tuesday 9 October 2012

எதற்காக பொய் பேசுகிறோம்?

''நீங்கள் பொய் பேசும் பழக்கம் உடையவரா?''

''ஆமாம், எப்போதாவது பேசுவது உண்டு''

''எதற்காக பொய் பேசுவீர்கள்?''

''தேவை ஏற்படின் அதற்காக பொய் பேசுவேன்''

''எந்த மாதிரியான தேவைகள்?''

''நான் பிறருக்கு நல்லவராக இருக்க வேண்டும் எனும் தேவை ஏற்படும் போதெல்லாம், எனது வாழ்வாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பொய் பேசுவேன்''

''பொய் பேசுவது மிகவும் கடினமான ஒன்றா?''

''அது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை''

''பொய் பேசுவது ஒரு நோய் என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது. அது என்ன நோய்?''

''பொய் ஒரு தொற்று நோய். ஒரு பொய் சொல்லிவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். அது அடுத்தவரிடமும் சென்று பரவிக்கொண்டு இருக்கும். 

இதுவரை எத்தனை முறை பொய் சொல்லி இருப்பீர்கள்?''

''கணக்கில் இல்லை''

''அப்படியெனில் நீங்கள் முதலில் சொன்னது பொய்யா?''

''எப்போதாவது பொய் பேசுவேன், ஆனால் அதை கணக்கில் வைத்துக் கொண்டது இல்லை''

''நாம் பொய் பேசுவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா?''

''பிறரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான், இது கூடவா தெரியாது. பிறரை ஏமாற்றவும் பொய் சொல்லலாம்''

''எதற்கு பிறரை ஏமாற்ற வேண்டும்?''

''நாம் நன்றாக வாழ வேண்டுமெனில் பிறரை ஏமாற்றத்தான் வேண்டும். இது இயற்கை விதி''

''இயற்கை விதியா?''

''இல்லாத கடவுளை இருப்பதாக சொன்னது கூட பொய் தான்''

''எவர் சொன்னது?''

''ஒரு சொற்பொழிவு கூட்டத்தில் ஒருவர் சொன்னார்''

''அவர் சொன்னது உண்மை  தான் என்பது தெரியுமா?''

''ஆமாம், இல்லை இல்லை. அவர் சொன்னது பொய்''

''அது எப்படி தெரியும்?''

''எனக்குத் தெரியும்''

''நீ அவர் சொன்னதை நம்பாததால் அவர் சொன்ன விசயம் உனக்கு உண்மையாகத் தெரியவில்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா?''

''இல்லை, அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய்''

''உனக்குள் ஏற்படும் பயம் ஒன்றுதான் உன்னை பொய் சொல்ல வைக்கிறது என்பது உனக்கு தெரியுமா?''

''இருக்கலாம்'' 

''பயம் இல்லாத பட்சத்தில் பொய் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போகும் அல்லவா?''

''அப்படி சொல்ல முடியாது. அப்படியும் சொல்லலாம்''

''சொல்ல முடியுமா, முடியாதா?''

''முடியும், பயம்  இல்லையெனில் பொய் தேவை இல்லை''

''வாழ்வில் எந்தவொரு பயம் இல்லாத பட்சத்தில் உண்மையாக இருக்க இயலும்  என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது, ஆனால் இப்போது தெரியும்''

''ஒன்றை தெரியாமல் சொல்வது பொய் இல்லை, தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி சொல்வதுதான் பொய், அதாவது தெரியுமா?'' 

''புரியலை''

''தெரியாமல் சொல்வது அறிவீனம். அறிவீனத்தை அறிவால் போக்கி கொள்ளலாம். நீ அறிவாளியா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாகத் தெரியாது''

''முட்டாளாக இருப்பது எளிது. முட்டாளாக நடிப்பது கடினம். நீ முட்டாளா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாக தெரியாது''

''இவ்வுலகில் எப்படியாவது வாழ வேண்டும் என்றே உயிரினங்கள் போராடுகின்றன. அதில் மனிதர்கள் விதிவிலக்கல்ல. தனது வாழ்விற்கு பங்கம் ஏற்படும் எனில் அதில் இருந்து தப்பிக்க பொய் சொல்வது மனிதர்களின் இயற்கை குணம். பொய் சொல்கிறோம் என்கிற ஒரு உணர்வு கூட அப்போது இருப்பதில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் மனிதர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது பொய் இல்லை என்று மேலும் மேலும் பொய் சொல்வார்கள். நீ அறிவாளி இல்லை, முட்டாளும் இல்லை. அப்படியெனில் நீ என்னவாக இருக்க கூடும்?''

''எனக்கு தெரியாது. அதுதான் சொன்னேனே நான் எப்போதாவது பொய் பேசுவேன்''

''பொய் பேசுபவரா நீங்கள்! ஒருநாளைக்கு எத்தனை முறை பொய் பேசுகிறீர்கள் என்பதை குறிப்பில் வைத்து கொள்ளுங்கள். பொய் பல நேரங்களில் உண்மை போன்றே உங்களுக்குத் தோற்றம் அளிக்கும்'' 

''ஆமாம், நீங்க பொய் பேசுவீங்களா''

''பொய், அது என்னனு எனக்கு தெரியாது''

''....''



No comments: