Tuesday 13 November 2012

எனக்கு மட்டும் இல்லையா தீபாவளி?

சிறு வயதில் கேள்விப்பட்ட நரகாசுரன் கதை தான் தீபாவளிக்கு என இருந்தாலும் வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன. நிறைய பெண்களை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த நரகாசுரனை வீழ்த்திய தினம் தான் தீபாவளி என்றே கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி அன்று வெடி வெடித்து ஆராவரத்துடன் புத்தாடை உடுத்தி மகிழ்ந்து இருப்பது ஒரு பொழுது போக்கு. எப்போது தீபாவளி வரும், எத்தனை புது படங்கள் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்போரும், ஒரு புது ஆடை கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் சிலரும், எந்த பண்டிகை வந்தாலும் நமது நிலை இதுதான் என இருப்போர் பலரும் என விழாக்காலங்கள் இந்தியாவில் களைகட்டும்.

சரவெடி, லக்ஷ்மி வெடி, அணுகுண்டு, மத்தாப்பு என சந்தோசமாக கழித்த நாட்கள் நினைவில் ஆடும். இந்த தீபாவளியுடன் எங்கள் கிராமத்தில் பொங்கலும், அதனுடன் கரி நாள் என கொண்டாடப்படும். தீபாவளிக்கு என விடுமுறை நாட்கள் குறைந்தது மூன்று தினமாவது  கிடைத்துவிடும். இது போன்று தீபாவளி கொண்டாடி பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. தீபாவளி அன்று கூட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போலவே நிலைமையும் மாறிவிட்டது.

இந்த சிறப்பான தீபாவளி லக்ஷ்மி தேவிக்கு தொடர்புடையது என்று ஒரு சாரர் கூறுவது உண்டு. அதாவது ஒளியானது வாழ்வில் வீசத் தொடங்கினால் அங்கே லக்ஷ்மி தேவி வாசம் செய்வது உண்டு எனும் ஐதீகம் உண்டு. அதாவது லக்ஷ்மி தேவி அவதாரம் செய்த தினம் இந்த தினம் தான் என்று குறிப்பில் இருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாமல் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது லக்ஷ்மி தேவியை இந்த திருநாளில் தான் பாலி எனும் அரசனிடம் இருந்து வாமணர் காப்பாற்றினார் என்பதால் இந்த திருநாளை லக்ஷ்மி தேவிக்கு அர்பணிக்கிறார்கள்.

வனவாசம் முடித்துவிட்டு பாண்டவர்கள் திரும்பி வந்த தினம், இலங்கையில் இருந்து சீதையை  மீட்டு அயோத்திக்கு ராமர் வந்த தினம் கூட தீபாவளியாக கொண்டாடப்படுவதும் உண்டு. இந்த தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாது சீக்கியர்கள், ஜெயின் மதம் தொடர்புடையவர்கள் கூட கொண்டாடுவது உண்டு. யுகங்கள் மாறினாலும் வெவ்வேறு காரணத்திற்காக இந்த தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது தெள்ளத் தெளிவாகிறது.

இனி வரும் காலங்களில் இந்த தீபாவளி தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்ட தினமாகவும், இனம், நிறம் போன்ற வேறுபாடு நீக்கிய நாளாகவும், மதங்கள் அழிக்கப்பட்டு தெய்வீகத் தன்மை நிலைபெற்ற நாளாகவும் கொண்டாடப்படலாம். அப்படிப்பட்ட ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் நாள் ஒன்றே உண்மையான தீபாவளி. அதுவரை இந்த தீபாவளி பண்டிகை எல்லாம் ஒரு பொழுது போக்கு. ஒரு விடுமுறை தினம் அவ்வளவுதான். 

Friday 9 November 2012

வள்ளலார்

யார் இந்த வள்ளலார்? வள்ளலார் பற்றி இன்றைய சமூகம் மறந்து கொண்டிருக்கலாம், ஆனால் சாதிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று எனும் சமரச சன்மார்க்க கொள்கையை பரப்பியவர். இறைச்சி உண்பவர்களை அறவே வெறுத்தார் என்பது மட்டும் சமரச சன்மார்க்க கொள்கைக்கு எதிரான ஒன்று.

சிதம்பரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் ராமலிங்கம். ராமலிங்க அடிகளார் என மாற்றம் கொண்டு வள்ளலார் என பின்னாளில் போற்றப்பட்டவர். இவரின் வாழ்க்கை குறிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இவரின் தொண்டு மிகவும் போற்றத்தக்கது என்றும் திருவருட்பா இயற்றி தமிழுக்கு பெருமை சேர்த்தார் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

இவரின் ஜீவ காருண்யம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என இவரது சொல்லாடல்  மிகவும் பிரபலமானவை. உலகில் நன்மையே நிலைக்க வேண்டும் எனும் கனவுலகில் இவர் வாழ்ந்தவர் என்றே சொல்லலாம்.

சிதம்பரத்தில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். சென்னைக்கு சென்ற தருணத்தில் வேடிக்கையாக சென்னையை தர்மமிகு சென்னை என அழைத்தவர் பின்னாளில் தீட்டிலே திளைத்த சென்னை என மாற்றிக் கொண்டார். உலகில் நீதி, நியாயம், நேர்மை எல்லாம் நிலைக்காமல் போவது கண்டு மனதில் வாட்டம் கொண்டு இருந்து இருக்கிறார். அந்த வாட்டம் எல்லாம் போக்க இறைவன் ஒருவனே கதி என்ற நிலையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இப்படியெல்லாம் இருந்தாலும் ஞானம் என்பது அத்தனை எளிதாக எவருக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் இறைவன் பற்றியும், சமயங்கள் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. விளையாட்டு பருவத்தில் இறைவன் மீதான பற்று என வரும்போது அங்கே மற்ற விசயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

ஒரு விசயத்தை பற்றி அறிந்து கொள்ள கல்வி சாலைகள் அவசியமே இல்லை என்பதுதான் முந்தைய கால சூழல். அவரவர் அறிந்து கொண்டிருந்த விபரங்கள் தலைமுறைக்கு கடத்தப்பட்டன. ராமலிங்கம் சிறு வயதில் இருந்தே அவரது மூதாதையர்களின் சமயமான சைவம் குறித்து ஆர்வம் கொண்டிருந்து இருக்கிறார். அதுவும் சென்னையில் தனது அண்ணனுடன் வசித்து வந்தபோது தனது அண்ணனின் சைவ புலமை அவரை மிகவும் கவர்ந்து இழுந்து இருக்கிறது. இதன் பொருட்டு வீட்டிலேயே தமிழ் கற்று கொண்டு இறைவன் மீதான பற்றினை வளர்த்து வந்து இருக்கிறார்.

பொதுவாக சித்தர்கள் சமய சடங்குகளை அறவே வெறுக்க கூடியவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் பரமானந்தனை வெளியில் தேடுவது எங்கனம் என்றே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது போலவே ராமலிங்கம் இந்த கருத்தில் மிகவும் வலுவாக இருந்து இருக்கிறார்.

பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் போதும், அவருக்கு கூட்டம் சேர்ந்துவிடும். அப்படி கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு இவரின் பால் அன்பு பாராட்டியவர் ஏராளம். சில சங்கங்கள் அமைத்து வெற்றியும் கண்டவர்.

சிறு வயதிலேயே இறைவன் மீது அன்பு கொண்டு  இருந்தவருக்கு இவரின் விருப்பத்திற்கு மாறாக இவரது திருமணமும் நடந்தேறியிருக்கிறது. அதெல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு வாய்ந்தது.

இப்படி இருந்த இவர் ஜனவரி மாதம் முப்பதாம்  நாள் தனது தொண்டர்களிடம் இதோ இந்த வீட்டில்  உள்ளே செல்கிறேன், யாரும் கதவை திறக்க வேண்டாம், அப்படி திறந்தாலும் அங்கே நான் இருக்க மாட்டேன் என சொல்லி சென்றதாகவும், கதவு நான்கு மாதமாக திறக்கப்படமால் அரசு உத்தரவின் பேரின் மே மாதம் திறக்கப்பட்டு பார்த்த போது  அங்கே ராமலிங்கம் எனும் வள்ளலார் இல்லாமல் இருந்ததை அரசு பதிவேட்டில் பதிந்து வைத்துவிட்டது.

இது குறித்து தொண்டர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

வள்ளலார் அருட்பெரும் சோதியுடன் கலந்து விட்டார் என்றே சொல்லித் திரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அவரின் மனதின் வலியை கண்டு கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்து இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

தனது உடலானது மிகவும் கேவலமானது என்றே எல்லா சித்தர்களும் வள்ளலார் உட்பட பாடி வைத்து இருக்கிறார்கள். மண வாழ்க்கை கேவலமான ஒன்றே என்பதுதான் இவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏதோ இவர்கள்,  இறைவன் மீது பற்று வைத்து விட்டால், இறைவனையே சதா பாடித் திரிந்தால் எல்லாமே நன்றாக இருந்துவிடும், உடல் தேஜஸ் நிலை அடைந்து விடும்  என்பது இவர்களின் ஒரு கற்பனை காட்சியாக வலம் வந்து இருக்கிறது.

நெருப்பில் மறைந்த மாணிக்கவாசகர், அப்படியே சமாதியாகிப் போன காரைக்கால் அம்மையார் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவது என்பது அறவே கிடையாது என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது. ஆனால் இந்த ஆன்மா அழிவது இல்லை, பாதிக்கப்படுவது இல்லை என்று சொல்வதற்கு காரணம் இந்த இயற்கை வாழ்வில் ஒவ்வொருவரும் கண்டு கொண்ட பிரச்சினைகள்.

எவர் எல்லாம் இறைவனை நாடுவார்கள்? இதற்கு மிகவும் எளிமையான காரணம் ஒன்று இருக்கிறது. இதை எத்தனை பேர் மனதைத் தொட்டு மனசாட்சிக்கு உட்பட்டு ஆமாம் என சொல்லப் போகிறார்கள்?

பிரச்சினைகள் உள்ளவர்கள், பிரச்சினை வராமல் இருக்க வேண்டுபவர்கள் இறைவனை நாடுவார்கள். இறைவனை நாடினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனும் எதிர்பார்ப்புகளே பெரிதும் இந்த இறைவனின் மீதான சடங்குகள் சம்பிராதயங்கள் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன. பெரும்பாலனவர்கள் இதனை அறிந்து வைத்து இருந்தாலும் நம்பிக்கை எனும் பேரில், பயம் கருதி இதனை காலம் தொட்டு தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். இதனை வள்ளலார் கடுமையாகவே எதிர்த்தார். அதனால் தான் இவரின் தொண்டு இடங்களில் எந்த ஒரு சடங்குகளும் அனுமதிக்கப்படுவது இல்லை.

இத்தனை பாடல்கள் இயற்றியும், எத்தனையோ நல்ல விசயங்கள் எடுத்து சொல்லியும் திருந்தாத மானிடர்கள் கண்டு மனம் வெதும்பிய வள்ளலார் இறுதியாக எடுத்த முடிவு. யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போவது. இதை சாதாரணமாக செய்தால் ஓடிப் போய்விட்டார் என்றே கேவலமாக பேசக் கூடும் என திட்டமிட்டே இந்த செயலை செய்தார் எனலாம்.

தான் பாடிய திருவருட்பாக்கள் மூலம் திருந்தாத மானிட சமூகம் தான் இறைவனுடன் ஐக்கியமானது என நினைத்தாலாவது திருந்தட்டும் என்றே இந்த ஓடிப்போன மறைதல் செயலை நிறைவேற்றி இருக்கிறார்.

உண்மையை சொல்பவன் சதிகாரன்.
நன்மையை நினைப்பவன் நாசக்காரன்.

ஒரு உயர்ந்த உள்ளத்தை, சமூகம் சமரச வாழ்வில் திளைக்க வேண்டும் என தனது வாழ்நாளில் பாடுபட்ட ஒரு ஜீவனை ஓடிப்போக வைத்த இந்த சமூகம் வெட்கி தலை குனிய வேண்டுமே தவிர அருட்பெரும் சோதியில் கலந்து விட்டார் என பொய் சொல்லித் திரிய கூடாது.

இவரது சமரச சன்மார்க்கத்தை மட்டுமே பெரிதாக பேசித் திரியும் சமூக ஆர்வலர்கள் சமரசத்தை ஒவ்வொரு ஊரில் முதலில் நிலைநாட்டத் தொடங்கட்டும். ஒரு சமூகம் அவரவர்  தலைவரின் பிறந்த நாள், இறந்த நாள் என கொண்டாடி பிற சமூகத்தை களங்கப்படுத்துவது நிற்கட்டும். இராமலிங்க பிள்ளையில் இருக்கும் சாதிய பெயர் வள்ளலாரில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

Thursday 1 November 2012

ஓவபைன் தந்த அதிர்ச்சி

பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் போல. இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதி, பலவகையான செயல்முறை பயிற்சிகள் என எதுவமே இல்லாத காலத்தில் இந்த இந்த தாவரம் இந்த இந்த பலனைத் தரும் என சித்தர்கள் என போற்றப்படுபவர்கள் கண்டுபிடித்து தந்ததே பெரும் அதிசயம் தான்.

இந்தியா, சைனா போன்ற நாடுகள் இது போன்ற மருத்துவ முறைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து கொண்டிருந்தன. தாவரங்களின் மூலம் தங்களது உடல் நலனை காத்துக் கொள்ளும் முறையை மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள். இது கூட இயற்கைத் தேர்வு அடிப்படையில் மனித இனம் தம்மை இவ்வுலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு முயற்சி எனலாம்.

ஓவபைன் அல்லது ஸ்ட்ரோபந்தின் எனப்படும் மருந்து ஸ்ட்ரோபந்துஸ் எனப்படும் மலர் இன வகை சார்ந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பொருளாகும். இந்த ஸ்ட்ரோபந்துஸ் ஆப்பிரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வளரும் தன்மை உடையது. இவை மிகவும் உயரமாக வளரக்கூடிய தாவரமும் ஆகும்.

இந்த தாவரம் மிகவும் விஷத்தன்மை உடையது என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த ஆப்பிரிக்கர் கூட்டம் இதனை அம்பில் தடவி பிறரை கொல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றே குறிப்புகள் இருக்கின்றன. அதி வேளையில் இந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓவபைன் இதயத்திற்கு மிகவும் உபயோகமாகக் கூடிய மருந்தாக பயன்படுத்தப்பட்டது. எதுவுமே அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த மருந்து அளவு அதிகமானால் ஆளையே கொன்று விடும் என்பதுவும் அறியப்பட்ட ஒன்று.

இதய கோளாறுகள் நீக்கும் இரண்டு வகை மருந்துகள் என டிஜிடளிஸ் மற்றும் ஸ்ட்ரோபந்துஸ் இரண்டுமே விஷத்தன்மை உடையவை. இந்த ஓவபைன் சோடியம் பொட்டாசியம் பரிமாற்றத்தை தடுக்கும் தன்மை உடையது. இப்படிப்பட்ட மிகவும் கொடிய மருந்துடன் வேலை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் தலையில் எழுதப்படாத விதி.

கினிபிக்ஸ் வேகஸ் நரம்புதனில் இந்த மருந்தினை சோதனை செய்தபோது இவை மிகவும் அற்புதமாகவே வேலை செய்தது. மிகவும் சிறப்பான மருந்து ஒன்று கண்டுபிடித்துவிட்டோம் என்ற குதூகலத்தில் இந்த மருந்து அளவு அதுவும் மிகவும் குறைவான அளவு கினிபிக்ஸ் ற்கு தந்தபோது அவை அனைத்தும் இறந்து போயின. இந்த செயல்முறையை செய்வதற்கு முன்னரே எனக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. கவனத்துடன் இரு, இல்லையெனில் இந்த மருந்து உன்னை தாக்கலாம் என.

ஆனால் மிகவும் குறைந்த அளவே தந்தும் இப்படி இந்த மருந்து செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாழ்விலும் அப்படித்தான். கெட்ட விசயங்கள் மிகவும் குறைவாக செய்தால் பிரச்சினை இல்லை என்று நினைக்க கூடியவர்கள் உண்டு. ஆனால் அந்த குறைவான கெட்ட விசயங்கள் மனிதர்களை அழிக்கும் வல்லமை உடையதுதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடப்பதைவிட ஒரு உண்மை சொல்லி அந்த கல்யாணம் நின்றால் அதுதான் சிறப்பு.

இப்படி உலகில் பல விஷத்தன்மையான விசயங்கள் நல்லது செய்வது போலவே வலம் வருகின்றன. அவை வளம் பெறாமல் காப்பது நமது கையில் உள்ளது.