Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Wednesday 22 September 2010

இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை

இயற்பியலை எப்படி பிரித்து சொல்வது என தமிழ் ஆசிரியரைத்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்த தமிழில் இயல்பு+இயல் என பிரித்து லகரம் றகரமாக திரிந்தது என சொல்லித் தந்து விடுவது எளிதாகத்தான் இருக்கும்.

இந்த இயற்பியல் விதிகள் மூலம் இந்த உலகத்தை பார்த்தால் இறைவன் என்பவர் ஒருவர் இருக்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக ஒரு அறிவியலாளர் அறிவித்து இருக்கிறார். இயற்கையாகவே எல்லாம் நடந்தது என்பதுதான் அவரது விதி. யாரும் எதையும் படைக்கவில்லை என்பது அவரது உறுதிப்பாடு. பல அறிவியல் அறிஞர்கள் பல வித கண்டுபிடிப்புகளை கண்டு சொன்னாலும் இறைவன் என்பவரை ஒதுக்குவதில் சற்றே தயக்கம் காட்டினார்கள்.

எங்கள் மனதிலும், எங்கள் அனுபவத்திலும் இருக்கும் இறைவனை எவராலும் அகற்ற இயலாது என நம்பும் கூட்டம் உண்டு என்பதை உறுதிபடுத்தும் வண்ணம் சமீபத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என சுற்றிப் பார்க்க வந்த போப் அவர்களை பார்க்க குழுமியிருந்த கூட்டம் உறுதிபடுத்தியது.

இந்த அறிவியல் அறிஞரின் இயற்பியல் விதியை நமது மக்களிடம் சொன்னால் 'வேலை வெட்டி இல்லாத ஆள்' என சொல்லிவிட்டு போவார்கள். நாங்கள் தான் இயற்கையை மட்டுமல்ல எல்லாமே இறைவன் என ஏற்றுக் கொண்ட பின்னர் இதில் என்ன பாகுபாடு வேண்டி இருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாய் இருப்பார்கள்.

எதையும் உறுதியாய் நம்புவர்களின் உள்ளத்தில் ஒருபோதும் கீறல் ஏற்படுவதில்லை. இறைவனை உறுதியாய் நம்புவர்களுக்கு இறைவன் சுகமாக இருக்கிறார்.

இறைவன் பற்றிய கவலையைவிட இப்போதெல்லாம் திருடர்களை பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டி இருக்கிறது. பொருளாதார சரிவினால் மட்டுமல்ல, திருடுவதை ஒரு தொழிலாக கொண்டு வாழ்பவர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். திருடர்களின் தொல்லை மிகவும் அதிகம் ஆகிவிட்டது.

இந்தியாவுக்கு செல்லும் முதல் நாள் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் வாகனம் திருடு போனது. இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஊரில் இருந்து வந்தபின்னர், ஊரில் இருந்து எடுத்த படங்கள் அனைத்தையும் வழக்கம் போல அச்சடிக்க அனுப்பி இருந்தேன். அவர்களும் அடுத்த தினமே அச்சடித்து அனுப்பி இருந்து இருக்கிறார்கள். எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் இடம் வரை அந்த படங்கள் வந்து சேர்ந்துவிட்டது. ஒரு வாரம் ஆகியும் எனக்கு கிடைக்காமல் இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்படவே விசாரித்தேன். அதை எனக்கு கொண்டு சேர்க்க வேண்டி கொண்டு வந்த வாகனம் திருடு போய்விட்டதாக இன்று தகவல் சொன்னார்கள். கோவில் படங்கள் பல அதில் இருந்தது.

திருடியவனின் கண்ணை சாமி குத்துமா என இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை என  சொன்ன அறிவியல் அறிஞருக்கு தொலைபேசி போடலாமா என நினைத்தேன், ஆனால் அதைவிட  எனக்கு கோவிலில் எடுத்த படங்களில் இருந்த தெய்வங்கள், மலைகளிலும், மரங்களிலும், மழைத்துளிகளிலும், மக்களிலும் நிறைந்து இருந்த இறைவன் தொலைந்து போன  வருத்தம் மட்டுமே மிஞ்சி இருந்தது.

Thursday 17 June 2010

இறைவன் இருக்கிறாரா? இது தேவையற்ற கேள்வி

இது ஒரு நண்பரின் ஆதங்கம்

கோவிலில் கூட்ட நெருச்சலில் மக்கள் பலியாகுகிறார்கள்.

தீ விபத்தில் சாகிறார்கள்.

சுனாமியில் தேவாலயத்தின் முன்னர் பலர் செத்து மடிகிறார்கள்.

மசூதிகளில் வெடிகுண்டு வெடிப்பில் பலர் உடல் சிதறி சாகிறார்கள்.

இவை எல்லாம் ஏன் நடக்குது, கடவுளுக்கு கண் இல்லையா? உணர்ச்சிகள் இல்லையா?

எனது விளக்கம்:

கடவுள் எங்குமே இல்லை என்றாலும் இதே நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதை ஏன் எவரும் புரிந்து கொள்வதில்லை.

மனிதர்களின் விருப்பத்திற்கேற்ப அவரவர் துன்பமோ இன்பமோ அடைகிறார்கள் என்பதுதான் உலகநியதி.

கோவிலோ, மசூதியோ, தேவலாயமோ அங்கு கொடிய நிகழ்வுகள் நிகழ்வதால் இறைவன் இல்லை என்றாகிவிடுமா? பாவம் இறைவன், எதற்கெல்லாம் பழி சுமக்க வேண்டியிருக்கிறது.

இறைவன் எங்குமே இல்லை. இப்பொழுது மனிதர்கள் என்ன செய்வார்களாம்?

எது பாவம், எது பாவமில்லாதது என்பதற்கான வரையறை எதுவும் உள்ளதா?

கடவுள் இல்லவே இல்லை என்பதில் கூட கடவுள் சுகமாகத்தான் இருக்கிறார்.

மற்றொரு நண்பரின் ஆதங்கம்:

மற்றவர்களை ஏமாற்றுவது, நம்பிக்கை துரோகம் செய்வது, மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் பொய்யுரைப்பது, என்பது எல்லாமே பாவது தான்... அவர்கள் அவர்கள் செய்த பாவத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும்... அது போன ஜென்மத்தில் செய்திருந்தாலும் சரி அதற்கான தண்டனை வழங்கப்படுகிறது... இதில் ஏதும் சந்தேகம் உண்டா??

எனது விளக்கம்: 

அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இதெல்லாம் மனிதர்களை பயமுறுத்த சொல்லப்பட்டவை.

இவர்களைப் போன்றவர்களுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும் எனில் எதற்கு சட்டம் எல்லாம்? அதுவும் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட சட்டம் என.

மனிதர்களின் வாழ்க்கைமுறையில் எதுவுமே பாவமில்லை என்கிற கோட்பாடும் உண்டு.

இந்த ஜென்மத்து விசயங்களே ஞாபகத்துக்கு இல்லை, இதில் சென்ற ஜென்மம் வேறா?

தண்டனை என்பது தவறு என வெளியில் அறியப்பட்டால்தான். அதுவும் தண்டனை பெறாமலே தப்பிக்கவும் இவ்வுலகில் மானிடர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே நண்பரின் ஆதங்கம்:

இந்த மனிதப்பிறவி என்பது இந்த ஒரு ஜன்மத்துடன் முடிவடைவது கிடையாது... நாம் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் நமக்கு அடுத்த ஜென்மங்களில் கணக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது...

இந்த உடலுக்கு மட்டுமே மரணம்.. இந்த ஆத்மாவுக்கு கிடையாது... உடலானது குழந்தை பருவத்திலிருந்து, வயோதிகப்பருவத்துக்கு சென்று பின் மரணமடைந்த பின் நம் ஆத்மா வேறொரு உடலுக்கு நம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப செல்கிறது.. அது மனித உடலாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.. அதனால் சிறு குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் போன பிறவியில் செய்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயம்... இது கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுவே நிதர்சன உண்மை 

சாதாரண மனிதர்கள் சொன்னால் அதை நம்பும் நாம் கடவுளே சொல்லும் விஷயத்தை நம்பாததில் இருந்தே இந்த கலி எவ்வளவு முத்தி விட்டது என்று தெரிகிறது.

என்னை பொறுத்த வரை கடவுள் இருக்கிறார்.  பிரகலாதன் சொன்னதைப் போல் தூணிலும் இருக்கறார், துரும்பிலும் இருக்கிறார். இதை நீங்களே நிச்சயம் உணருவீர்கள் விரைவில். அவர் நிச்சயம் அனைவரையும் காப்பார். வேண்டிய நேரத்தில் தண்டனைகளும் வழங்கப்படும். என் கருத்துக்களில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையும் உள்ளது.

எனது விளக்கம்:

இதுபோன்ற வாசகங்கள் மனிதர்களின் சிந்திக்கும் தன்மையை சிதறடித்துவிடுகின்றன.

ஒவ்வொரு விசயத்தையும் அருகில் இருந்து பார்த்தது போல் எழுதப்படும்போது அதனை எளிதாக நம்பிவிடக்கூடிய மனநிலையில்தான் மனிதர்களில் பலர் இருக்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடக்கிறது என உங்களுக்கும் தெரியாது (உங்களுக்குத் தெரியும் என சொன்னாலும் நான் நம்பப் போவதில்லை, நம்பிக்கைகளை நான் அத்தனை எளிதாக நம்புவதில்லை) எனக்கும் தெரியாது.

நீங்கள் எழுதியதை எல்லாம் மறுத்துத்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு எதுவுமில்லை. இப்படியெல்லாம் இல்லை என நீங்கள் எழுதியதை சிந்தித்தால் கூட ஒரு பதில் இருக்கத்தான் செய்யும்.

எனக்கு மேலே சொன்னது நம்பிக்கை என்று இல்லை. அதுதான் நான் அறிந்த தத்துவம். எனது அறிவுக்கு உட்பட்ட மொழி.

கடவுள் தன்னைப் பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்ய சொன்னதில்லை. அவர் தம்மை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுவதும் இல்லை.

கடவுளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவரை பற்றி கடவுள் கவலை கொள்வதும் இல்லை.

எல்லாம் இந்த மனிதர்களின் செயல்பாடு.

கடவுள் இதுவரை எதுவுமே சொன்னதில்லை. எல்லாம் மனிதர்கள் கடவுள் சொன்னதாய் சொன்னது.

கலி முத்திவிட்டதா? அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டதா?

உண்மையான கடவுள் என சொல்லும்போது பொய்யான கடவுளும் இருக்கிறதா என சிலர் எண்ணக்கூடும்.

பிறருக்கு பிரயோசனப்படாமல் போகக்கூடும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள் என நினைத்திருந்தால் இன்று பைபிளும் இல்லை, திருக்குரானும் இல்லை, பகவத் கீதையும் இல்லை.

கடவுளை நான் உணர வேண்டுமா? எதற்கு?

அடிப்படை நம்பிக்கையா? அப்படியெனில் அது என்னது?

அவர் காப்பாற்றவிட்டால் அவர் இல்லை என்றாகிவிடுமா? ஏனிப்படி கடவுளை கலங்கப்படுத்துகிறீர்கள்.

உலகில் எத்தனை கோடி மனிதர்கள், எத்தனை கோடி உயிரினங்கள் தெரியுமா?

அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதால் மட்டுமே ஒரு விசயம் உண்மையாகி விடமுடியாது.

இன்னொரு நண்பர்:

உலகில் நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதாக ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லையா?

எனது  விளக்கம் 


நமக்கு உட்பட்ட சக்திதான் இவ்வுலகில் இருக்கிறது. திறமையுடையவர்கள் சக்திகளை தமது ஆளுகைக்குட்படுத்திக் கொள்கிறார்கள். திறமையில்லாதவர்கள் நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு என ஆகாயம் பார்த்து சொல்கிறார்கள்.

அதே நண்பர்:


நமக்குட்பட்ட சக்தி தான் இங்கே இருக்கின்றது. தங்களின் அறிவியல் கணக்கீட்டின்படி மனித இனம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஏன் மனிதனால் கர்ப்ப காலத்தை குறைவாக்க முடியவில்லை. குறைந்தது 8 முதல் 9 மாதங்கள் ஏன் தேவைப்படுகின்றது?. 10 நாள் அல்லது 15 நாளில் ஒரு பரிபூரணத்தன்மையுடைய குழந்தையை உருவாக்க முடியுமா? இது நமது சக்திகுட்பட்டது தானே. விஞ்ஞானிகள் நினைத்தால் முடிக்கலாம் என்ற பதிலே வரும். அப்போ, அந்த விஞ்ஞானியின் அறிவு எப்படி விசாலமடைந்து இத்தகைய கண்டுபிடிப்புக்களைச்செய்கின்றது.

எனது  விளக்கம் 


எங்களை என்ன, வித்தைகாட்டும் மனிதர்கள் என நினைத்துவிட்டீர்களா?

அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்கிறீர்கள்.

இருக்கும் மக்கள் தொகை போதாதா? என்ன ஒரு வில்லங்கமான சிந்தனை.

நமது ஆளுமைக்குட்பட்டு இருக்கும் சக்தியை தங்களது திறமைக்குட்படுத்தி சாதிக்கவல்லகூடிய ஆற்றல் மனிதர்களுக்கு உண்டு. அதில் மாற்றம் ஏதுமில்லை.

எல்லாவற்றையும் இறைவன் படைத்தார் என, படைப்புகள் இல்லாத‌ கிரகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது, இறைவனை கொச்சைப்படுத்த வேண்டாம்.

தேவை ஏற்படும்போது அதற்கான தேடல்கள் மனிதர்களிடம் இருந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு சக்திக்குட்பட்ட விசயங்களை வசியப்ப‌டுத்தும் திறமை வேண்டும் என்பதுதான் எனது கோட்பாடு. அந்த திறமை இல்லை என்பதற்காக நமக்கு மீறிய சக்தி என்பதில் உடன்பாடில்லை.


இதோ மற்றொரு நண்பர்


என்னைப்பொறுத்தவரை எல்லோருக்கும் கடவுள் பயம் காட்டாயம் இருக்க வேண்டும். யாம் அறியா சக்தி இருக்கிறது எனும் நம்பிக்கையே இன்று ம்னிதர்கள் இன்னும் முழுமைப்படுத்தப்பட்ட காட்டுமிராண்டிகளாகாது சற்று மனித நேயத்தோடு வாழ வழி செய்கிறது.

நம்மை மீறி எதுவ்மே இல்லை என எண்னுவோமானால் யாரும் யாருக்க்கும் பயப்படாது கட்டுபடாது வாழ வழி செய்வோம். அங்கே அக்கிரமமும் அநீதியும் மிகுதியாகும். கொள்ளைகளும் கொலைகளும் அதிகரிக்கும். இதோ கடவுள் இல்லை என சொல்ல்லிசொல்லியே ஒருத்தரையொருத்தர் விரோதிகளாக பாவித்து இன்னும் இன்னும் உலகத்தை இரத்தகட்டுக்குள்ளே கொண்டு செல்வோமென்பதே நிஜம்.

தம்மை மீறிய் சக்தி இருக்கும் எனும்நம்பிககை எல்லோருக்கும் வேண்டும்.தாம் செய்யும் தப்புக்கு தண்டனை கிடைக்கும் எனும் பயம் இருக்கணும். கடவுள் இல்லை என்போமானால் நாம் யாருக்கும் பயப்படோம்.. .

எனது விளக்கம்.

கடவுள் பயம் அவசியமற்றது.

ஒழுக்கம் என்பதன் அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து இருந்தால் அது போதுமானது.

தவறு செய்தால் தண்டனை எனும் நம்பிக்கை ஒருவரை தவறு செய்வதில் இருந்து ஒன்றும் நிறுத்திவிடாது.

தவறு செய்யக்கூடாது எனும் தனிமனித கட்டுப்பாடு ஒன்றுதான் தவறுதனிலிருந்து எவரையும் காப்பாற்றும்.

மனித நேயத்தோடு வாழ்வதற்கு கடவுள் அவசியம் இல்லை. மனிதர்களின் நல்லெண்ணம் போதுமானது.

தனிமனித ஒழுக்கம் பயத்தால் வரக்கூடாது.

இறைவனே இல்லை என சொல்வோரிலும் நல்லவர் உண்டு; இறைவன் உண்டு என சொல்வோரில் தீயவரும் உண்டு.

இதற்காகத்தான் சொல்கிறேன் இறைவன் அவசியமில்லை. இறைவன் பற்றிய பயம் அவசியமில்லை.

இறைவன் பற்றிய பயம் இருப்பின் நாட்டில் சட்டங்கள் எதற்கு? வீட்டை பூட்டி வைப்பதற்கு எதற்கு?

இப்படித்தான் தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்காமல் இறைவனை முன்னிறுத்தி செய்ததால் இறைவன் மீதான குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இறைவன் குற்றமற்றவர்.

************************************************************************************

இப்படி இறைவன் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் ஒரு முடிவில்லாதவைகளே. இறைவன் பற்றி அறிந்தவர் இறைவன் பற்றி பேசமாட்டார். இறைவன் விளம்பரமில்லாதவர். இறைவன் விளக்கம் அற்றவர். இறைவனை மறுத்து பேசுபவர்கள் இறைவனை பற்றி பேசுபவர்கள் எல்லாம் விளம்பர பிரியர்கள் தான்.

Friday 14 May 2010

எனக்குப் பிடித்த ஆழ்வார்கள்

மதம் என்பதெல்லாம் கடந்து ஒரு பார்வை இருக்குமெனில் அதில் இருக்கும் ரசனைகள் அத்தனை அழகு. இதைத்தான் தெய்வீக உணர்வு என சொல்வார்கள். மதம் கடந்த ஒரு உணர்வு இருப்பது மிக மிக அவசியம் தான். இப்பொழுது ஆழ்வார்கள் என எடுத்துக்கொள்ளும் போது இந்து மத சாயலும், இந்து மத உட்பிரிவான வைணவ சாயலும் வந்து சேரும். அதைத் தவிர்த்து விட இயலாது. ஆனால் அதையும் தாண்டிய  ஒரு பார்வை என்பது ஒரு வித பூசி மொழுகுதல் என்றே அர்த்தப்படும்.ஆனால் எனக்கு இந்த மதம் தாண்டிய வாசம் பிடித்து இருக்கிறது.

இந்த ஆழ்வார்கள் பிடித்துப் போனதால் எனக்கு எந்த சாயமும் தேவை இல்லை. இப்படித்தான் எனக்குப் பிடித்தவர்கள் என ஒவ்வொரு மனிதரைப் பற்றி எழுதும் போது அவர் என்ன மதம், என்ன சாதி என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே முன் வைக்கப்படக் கூடாது என்பது எனக்கு சௌகரியமாக இருக்கும். ஆனால் எனது துரதிர்ஷ்டம் இவர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய சாயம் பூசப்பட்டு விட்டது, அல்லது பூச வேண்டிய சூழலுக்கு  தங்களை உட்படுத்திக் கொண்டார்கள்.

பன்னிரண்டு  ஆழ்வார்கள் என சொன்னதும் எனக்குள் எழுந்த கேள்வி, எதற்காக பன்னிரண்டுடன் நின்று போனது என்பதுதான். அதற்கடுத்து எவருமே ஆழ்வார்கள் ஆகும் தகுதியைப் பெறவில்லையா என யோசித்தபோதுதான் ஆழ்வாரோடு நாயன்மார்களும் எனும் கவிதை எழுந்தது.

நான் குடும்பஸ்தன். சகல ஆசைகளும் உடையவன். எனக்கு கடவுள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என் தேவைக்கு கடவுள் எனக்குத் தேவை எனும் சுயநலம் நிறைந்த மனிதர்கள்  வாழும் உலகில் இந்த ஆழ்வார்களுக்கு எப்படி கடவுள் முதலாகிப் போனான்? ஒரு கால கட்டம் கடந்ததும் தங்களை இறைப்பணிக்கு என ஒதுக்கிக் கொண்டார்கள். கடவுளை தொழுது வாழும் வாழ்க்கை என்பது கடினமானது.

இதைத்தான் எனது தந்தை அடிக்கடி சொல்வார். திருவள்ளுவர் நெசவுத் தொழிலாளர். அவர் ஒருவரிடம் நூல் வாங்கி வேலை செய்வது உண்டு. ஒரு முறை  திருவள்ளுவர் நூல் விற்பவரை காண வீட்டுக்குச் செல்கிறார். அப்பொழுது நூல் விற்பவரின் மனைவி அவரது கணவர் பூஜை அறையில் இருப்பதாக சொல்கிறார். அதற்கு திருவள்ளுவர் பூஜை அறையில் இருக்கிறாரா, நூல் கணக்கை சரி பார்க்கிறாரா எனக் கேட்கிறார். உடனே நூல் விற்பவர் பூஜை அறையில் இருந்து ஐயனே என திருவள்ளுவரை நோக்கி ஓடி வருகிறார்ர். என் மனதில் பூஜை அறையில் இருந்து கொண்டு நூல் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் என வருத்தம் தெரிவிக்கிறார். அதாவது தனது மனதில் சகல ஆசைகளும் வைத்துக் கொண்டு இருப்பவர்களால் தெய்வத்தை உண்மையாக தொழுதல் சாத்தியம் இல்லை என்பதுதான் இந்த விசயத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் நீதி.

இப்படி எல்லா நேரங்களிலும் உலக வாழ்க்கையை பற்றிய பெரும் சிந்தனையில் இருந்து விலக முடியாமல் இருக்கும் என்னால் எப்படி கடவுள் மீது ஒரு உண்மையான பக்தியை செலுத்த இயலும். வெறுமனே இறைவா என இரு கை கூப்பி கோவில் சென்று வணங்குவதால் நான் ஒரு பக்தனாக முடியுமா? கவிதையில் முடித்தேன். நாணிக் கொள்கிறேன்  என!

மதம் தாண்டிய ஒரு பார்வை மட்டுமல்ல. தனி மனிதருக்கு என சொந்தம் அல்லாத கடவுள் எனும் பார்வை மிகவும் சுகம் தரும். எனினும் இறைவனை தனது சொந்தம் என கொண்டாடிய இந்த ஆழ்வார்கள் எனக்குப் பிடித்துப் போனார்கள். ஆழ்வார்கள் மட்டுமா? என்றால் இல்லை என்றே சொல்வேன்.

யார்  அந்த பன்னிரண்டு ஆழ்வார்கள். ஆண்டாள், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கயாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார். இந்த ஆழ்வார்கள் பற்றி  படிக்க இதோ இந்த தளத்தை அணுகலாம். வேறு பல தளங்களும் இருக்கும். மிகவும் சுவாரஸ்யமாகவே எழுதிஇருக்கிறார்கள். பேயாழ்வார், பூதத்தாழ்வார் என இருவருக்கும் ஒரே விஷயத்தை எழுதி இருக்கிறார்கள்.

ஆண்டாள் பற்றி முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன். திருப்பாவை பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்ததாகும். அதைப் போன்றே தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி எனும் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்தது. இதை அடியார்க்கெல்லாம் அடியார் கதையில் நான் உபயோகப்படுத்திய இடம் சற்று வித்தியாசமாக இருந்தது என தோழி ஒருவர் சொன்னபோது அட இப்படியும் அமையுமோ என எண்ணத் தோன்றியது. அடுத்ததாக   பெரியாழ்வார் எழுதிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்னை மெய் மறக்கச் செய்யும். 

இப்படி ஆழ்வார்கள் பிடித்தது மட்டுமின்றி நாயன்மார்களும் மிகவும் பிடித்துப் போனார்கள். இவர்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்டு எனவும் யார் பெரியவர் எனும் போட்டியும் இருந்தததாகவும் கதைகள் உண்டு. இரு இயக்கங்கள் என இருந்தால் யார் பெரியவர் எனும் சச்சரவு இருக்கத்தான் செய்கிறது, ஒரு இயக்கமென இருந்தாலும் ஏற்படும் சச்சரவு தவிர்க்க இயலாதுதான்.

அரசராக இருந்தவர் ஆழ்வாரானார் அவர் குலசேகர ஆழ்வார். வழிப்பறி செய்து இறைவன் தொண்டு செய்த ஆழ்வார் எனவும் இருந்தார் அவர் திருமங்கை ஆழ்வார் . என்னதொரு விளக்கம் தந்தாலும் எனக்கு இவர் இப்படி செய்ததில் உடன்பாடில்லை. நம்மாழ்வார் மிகவும் போற்றப்படுகிறார். இவரை புகழ்ந்து பாடியே ஒருவர் ஆழ்வார் ஆனார் அவர் மதுரகவி ஆழ்வார்.  

இவர்கள்  பாடிய பாடல்கள் என நாலாயிர திவ்விய பிரபந்தம் எனும் இசைத் தட்டு வாங்கி வைத்து இருகிறேன். தமிழ் வரிகளுக்காக இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான்.

Thursday 25 March 2010

நானும் மதங்களைத் திட்டவா?!

எனக்குத் தெரிந்த மதங்கள் என இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், புத்த மதம் மட்டுமே. எனக்கு யூதர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்ததுண்டு. மேலும் யூதர்கள், ஹிட்லர் போன்ற விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் ஆவல் இதுவரை வந்தது இல்லை. இனிமேலும் வந்தாலும் வந்து தொலையும். இந்த இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் கொண்டுள்ள புனித நூல்கள் எனக் கருதப்படும் முறையே பகவத் கீதை, பைபிள், திருக்குரான் என எதையுமே அதன் வடிவில் முழுமையாகப் படித்தது இல்லை. அதன் காரணமாக இதுவரை எதையும் இழந்து விட்டதாக கருதவும் இல்லை. மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்ததில் இருபது மதங்கள் சம்பந்தபட்டவை இருப்பதாக தெரிந்து கொண்டேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்திருந்த ஜெயின், சீக்கிய மதம் எல்லாம் மதங்கள் என நினைவுக்கு வந்திருந்தது. மேலும் மதங்கள் என்றால் என்ன என முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதுகுறித்து முழு விளக்கங்கள் வழக்கம்போல விக்கிபீடியாவில் தென்படுகிறது.

மதம் என்றால் என்ன? மதக் கோட்பாடுகள் என்றால் என்ன என்பதை ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே மதங்கள் குறித்த பார்வையானது முழுமை பெறும். ஆனால் நம்மில் பலர் என்ன செய்து கொண்டிருக்கிறோம் நமக்குக் கிடைக்கும் விசயங்களின் அடிப்படையில், அவ்வப்போது ஏற்படும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம், நமது ஆதங்கங்கள் நமது சிந்திக்கும் திறனைக் கட்டுப்படுத்திவிடுகிறது. மொத்தமாகவே மதங்கள் பொல்லாதவை, மதங்களை பின்பற்றும் மனிதர்கள் பொல்லாதவர்கள் எனும் பார்வையை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஒரு சமூகத்திற்கு ஏற்படும் அவலங்களுக்கு அந்த சமூகத்தைச் சார்ந்த மனிதர்களும், அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகளுமே முழு பொறுப்பாக முடியும் என்பதை தெரிந்து கொள்ள ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை. அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகள் என முழு பங்கு வகிப்பது மதங்களே என பட்டிமன்ற தீர்ப்பு வழங்குவது போல பார்வை இருப்பதை கண்டு வருத்தமாகத்தான் இருக்கிறது.

அண்ணல் காந்தி ஒரு கோவிலுக்குச் சென்றாராம், அங்கே கோவில் களை இழந்து காணப்பட்டதாம், கோவில் வியாபாரக்கூடமாக இருப்பதைக் கண்டு அண்ணல் மிகவும் வருந்தினாராம். அதற்கடுத்து அந்தக் கோவிலுக்கு அண்ணல் காந்தி போகாமல் இருந்தாரா என்றால் அதுதான் இல்லை, அந்த கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறார். இப்போது அங்கே வியாபாரம் நடக்கிறது என்பது எந்த வகையில் ஒரு தனி மனிதனின் இறைவன் சம்பந்தபட்ட வேண்டுதலுக்குத் தொல்லை தருகிறது. நம்மை பொருள் வாங்கச் சொல்லி நச்சரிக்கும் போது நமக்கு எரிச்சலாக வருகிறது. கோவிலின் வாசலில் அமர்ந்து நம்மிடம் கையேந்தும் போது நமக்கு வேதனையாக இருக்கிறது. அவர்களின் இதுபோன்ற நிலைமைக்கு காரணம் அந்த கோவில் இருப்பதால்தான் என்றால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் இந்த பூமி இருப்பதால்தான் கோவில் வந்தது என நினைத்து இந்த பூமியையே அழிக்க முயற்சித்துவிட வேண்டாம். ஆனால் அதைத்தான் பெரும்பாலோனோர் மறைமுக செய்து கொண்டு வருகிறோம். மேலும் நமக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைத்தானே நாம் செய்து கொண்டு வருகிறோம், அதுமட்டுமின்றி நமது தேவைக்காக நமக்கு விருப்பம் இல்லாததையும் நாம் செய்யத் தயங்கமாட்டோம் என்பதும் உலகம் அறிந்த விசயம்.

தீவிரவாதத்திற்குத் தொடர்புடைய மதம் என இஸ்லாமைச் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சில மனிதர்களின் செயல்பாட்டால் ஒரு மதம் இன்னலுக்கு உள்ளாவது எத்தனை கொடுமை. சைவம் தாக்கிய சமணம் என சொல்லும்போது ஒரு வரலாற்று நிகழ்வு மதத்திற்கே பெரும் இழக்காக அல்லவா அமைந்து போகிறது. தேவர்கள், அசுரர்கள் என பிரிவினையில் எத்தனை அவதாரங்கள் தான் வந்து போனது. அன்பினால் அனைவரையும் குணப்படுத்துகிறேன், அனைவரது பாவங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என ஒருவர் சொன்னபோது இவருக்கு என்ன அக்கறை என்றுதானே பார்க்கத் தோன்றுகிறது. என் பாவங்களுக்கு நானே காரணன் எனும் எண்ணம் எப்போது ஒவ்வொருவரிடமும் எழவில்லையே அதுவரை எந்தவொரு நிலையும் மாறப்போவது இல்லை.

நமக்கு கிறிஸ்துவ நண்பர்கள் பலர் உண்டு, இந்து நண்பர்கள் பலர் உண்டு, முஸ்லீம் நண்பர்கள் பலர் உண்டு எனச் சொல்வதில் என்ன பெருமை இருந்து விடப் போகிறது. நமக்கு வாய்த்த நண்பர்கள் நல்ல நண்பர்களா, நாம் நல்ல நண்பராக நமக்கு வாய்த்த நண்பர்களிடம் இருக்கிறோமா என்பதில்தானே நமது அக்கறை இருக்க வேண்டும், பெருமைபட்டுக் கொள்ள வேண்டும். இந்த மதத்தின் சாயம் பூசப்பட்டதால் மட்டுமல்ல, மதத்தின் சாயம் பூசப்படாதபோதும் கூட நண்பர்கள் என எவரையேனும் ஏற்றுக்கொள்வது பெரும் சிரமமான காரியமாகத்தான் நமக்கு இருக்கிறது. எவரைத்தான் நம்பிக்கையின் பேரில் இந்த உலகில் நம்பி வாழ்வது, நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார்கள், அந்த நம்பிக்கையினால் மட்டுமே அழிந்து கிடப்போர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம். இதற்கு மதம் மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும்? கடவுள் காப்பாத்துவார் எனும் நம்பிக்கை இருக்கிறவர்கள் எவரேனும் படிக்காமல் இருக்கிறார்களா? வேலைக்குப் போகாமல் இருக்கிறார்களா? அவரவர் அவரவருக்குத் தெரிந்த காரியங்களைத்தானே செய்து வருகிறார்கள். இதில் மதங்களின் செயல்பாடு என்பது எப்படி ஒரு தனி மனிதனுக்குத் தொல்லையாக முடியும்.

சாமியார்கள் பற்றி பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, இங்கே குறிப்பிடப்போகும் விசயம் என்னவெனில் சாமியார்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள், ஏதாவது ஒருவகையில் சக நண்பரை, தந்தையை, தாயை, சகோதரியை, சகோதரனை, மனைவியை, முதலாளியை, தொழிலாளியை என உறவுகளையே ஏமாற்றி வாழும் வாழ்க்கைதானே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பதை நாம் சகித்துக் கொண்டு வாழ்கிறோமே, ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதி ஒருவர் மக்களை ஏமாற்றும் நயவஞ்சகர்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது என்கிறார், நல்லதொரு செய்தி என்றே ஆமாம் ஆமாம் என தலையாட்டிச் செல்லும் மனிதக் கூட்டங்களாகத்தானே நாம் இருக்கிறோம். இதை வள்ளுவர் அழகாகச் சொல்வார் மக்கள் அல்ல மாக்கள் என! ஒரு தனிமனிதனின் கேலிக்கூத்துக்கெல்லாம் ஒரு சமயமோ, மதமோ பொறுப்பாக முடியாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். கருத்துகளாலும், செயல்களாலும் கவரப்படுபவர்கள் அதன் வலியை பொறுத்துக் கொள்ளும் வலிமை பெற்றுக்கொள்ள வேண்டும். யாரோ என சொன்னப்பட்ட கருத்துக்கு எத்தனை மரியாதை இருக்கிறது இந்த உலகில், ஆனால் இவர் சொன்னார், அவர் சொன்னார் உடனே ஆஹா ஓஹோ என பாராட்டும் மனப்பக்குவம் எந்த மதம் கற்றுத் தந்தது.

மேலும் ஒரு விசயம் மட்டும் எனக்குத் தெளிவாகவே புரியவில்லை. மனிதம் மனிதம் என்று சொல்லித் திரிகிறோமே மனிதம் என்றால் என்ன என்பதை இதுவரை எவரேனும் தெள்ளத் தெளிவாக தெளிந்து வைத்திருக்கிறோமா என்றால் என்னைப் பொருத்தவரை நிச்சயமாக இல்லை என என்னால் சொல்ல இயலும்.

இந்து மதத்தைத் திட்டுகிறீர்களே, ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டிப் பாருங்களேன் என சண்டையை மூட்டிவிடும் எண்ணம் பலருக்கு இருக்கிறது என்பதை அறிந்த போது மிகவும் கவலையாகத்தான் இருந்தது. ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டக்கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா?  வேதநூல் என ஒரு கதையையே எழுதி வைத்து இருக்கிறேன், ஆனால் அந்த கதையின் நுட்பம் பலருக்குப் புரியாது. இந்து மதத்தில் கூறப்படும் அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என்றுதான் என்னளவில் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். இறந்து போன என் தாயை தெய்வம் என கொண்டாடும் அளவுக்கு எனது எண்ணம் ஒன்றும் மழுங்கிப் போய்விடவில்லை. ஆனால் தாய் என்கிற மரியாதை, அன்பு எல்லாம் நிறையவே உண்டு. புத்தர் எனும் மனிதர் சொன்ன கருத்துகள் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னை பெளத்தனாக்கிக் கொள்ளும் ஆசை என்னிடம் இல்லை. என் முன்னோர்களை நினைத்து கண்ணீர் விட்டுவிடும் அளவுக்கு மனதளவில் நான் ஒரு கோழைதான்.

பெரியோர்களின் ஆசிர்வாதம் என சொல்வார்கள், அதற்காக அல்ல, பிறரின் மனம் புண்படும்படியாய் நடக்கக்கூடாது என்பதில் தான் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் எனச் சொல்ல எனக்கு எவரும் தைரியம் தரத் தேவையும் இல்லை. இத்தனை காலம் மனிதர்களின் மனதில் நிலைத்துவிட்ட அந்த மனிதனை பாராட்டித்தான் ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இல்லை.

இறைவன் மிகப்பெரியவன், இறைவனே எல்லாம் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதனே மிகப் பெரியவன், இல்லையெனில் தனது சிந்தனையை சொல்ல இறைவனுக்கு மனித அவதாரங்களும், மனித தூதர்களும் அல்லவாத் தேவைப்பட்டார்கள். அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிறரின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு நடந்து கொள்வதுதான் மனிதம் என்கிற காரணத்தினாலேயே மனிதம் மீறிச் செயல்படுவோர்களை காணும்போதெல்லாம் நம்மில் பலருக்கு வெறுப்பும் எரிச்சலும் வந்து சேர்கிறது. இது போன்று பல விசயங்கள் கேள்விப்படும்போது எனக்குள் நகைப்புதான் வருகிறது, ஏனெனில் பல நேரங்களில் மனிதம் மீறியச் செயல்களை நாமும் செய்து விடுகிறோம். வேதநூல் மனிதம் மீறிய செயல், எனது பல கட்டுரைகள் மனிதம் மீறிய செயல். பிறர் உணர்வுகளை எங்கேயாவது ஒருவிதத்தில் புண்படுத்தி இருப்பேன், இது தெரிந்தே செய்தது அல்ல, எனது எண்ணங்கள் எவரேனும் ஒருவரை புண்படுத்திவிடும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன், ஏனெனில் வாழ்க்கையில் ஒரே விதமான மனிதர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.

ஒரு இசைத்தட்டு வெளிவந்தது, அதை இசை அமைத்தவர் வேறு, ஆனால் இசைத்தவர் எனப் பெயரிட்டப்பட்டவர் வேறு. பெயரிடப்பட்டவர் பிரபலமானவர் என்பதற்காகவே அந்த இசைத்தட்டு மிகவும் விற்பனையாகிப் போனது. ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கூக்குரல் இட்டார்கள். இப்பொது சொல்லுங்கள் இசை கேட்டு வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் மக்கள் ஏமாறுவார்களா? தானாக ஏமாந்து போவார்களாம், ஐயோ ஏமாற்றப்பட்டு விட்டேனே என புலம்புவார்களாம். பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் பிறரின் மேல் கொள்ளும் பரிதாபம் அவர்களுக்கு ஒரு வித தூண்டுகோலாகவே முடியும். புனிதநூல்கள் அப்படி என்னதான் சொல்லித் திரிகின்றன என ஆங்காங்கேப் படித்தால் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. 

2012ல் உலகம் அழியப் போகிறதாமே, அதையும் பைபிளில் எழுதி இருக்கிறதாமே என என்னிடம் கேட்கப்பட்டபோது எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படித்தான் 2000த்தில் உலகம் அழியப் போவதாக பைபிளில் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொல்லித் திரிந்தார்கள். உலகம் அழிவதில்லை, உலகம் மாறுபாடு கொள்கிறது என அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னால் எவருக்குப் புரியப் போகிறது. அறிவியலின் யுரேனியத்தின் மதிப்பீட்டின் படி இந்த உலகம் பதின்மூன்று பில்லியன் ஆண்டுகள் முன்னால் பெரு வெடிப்புக் கொள்கையின் மூலம் காலம் கொண்டு தொடங்கியது என்பதை படித்தபோதும் என்னால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்றைய காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை வைத்து ஒன்றை தீர்மானிப்பது என்பது எனக்கு அத்தனை செளகரியமாக இல்லை.

எதற்கெடுத்தாலும் இதோ திருக்குரானில் எழுதி இருக்கிறது பாருங்கள். அறிவியல் அனைத்தையும் மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதோ கரு உருவாவது பற்றி கூட எழுதி இருக்கிறது, பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் எழுதி இருக்கிறது என அறிவியலுடன் இஸ்லாமை இணைத்துப் பார்ப்பதில் பலருக்கு பலவிதமான சந்தோசம். இதில் பல ஆராய்ச்சியாளர்கள் வேறு, ஆமாம், ஆமாம் திருக்குரானில் அப்படியே சொல்லி இருக்கிறது என சான்றிதழ்கள் வேறு. இறைவனையும், மனிதனையும் தனித்தனியே பார்க்கிறதாம் இஸ்லாம். நானும் தான் இறைவனை தனியாக வைத்துப் பார்க்கிறேன், அதற்காக நான் என்ன முஸ்லீமா?! ஒரு தனி மனிதனின் சிந்தனையை இறைவனின் சிந்தனை என எப்போது முலாம் பூசுகிறோமோ அப்போதே தெரிந்து கொள்ள வேண்டியதுதான் இறைவன் வேறு மனிதன் வேறு என்பதை ஒழுங்காகச் சொல்லவில்லை என. இதற்காக கடவுள் என்றே ஒரு பெரும் கவிதையை வடித்து வைத்திருந்தேன். அந்த கவிதையை முடிக்கும் போது இதை எழுதியது நான் அல்ல என கடவுள் சொல்வதாகவே அமைத்து இருந்தேன்.

இஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும் அறிவியல் பேசுகிறது என உதாரணங்கள் காட்டுவார்கள். பார்வதியின் மகன் விநாயகர் உருவான கதை தெரியுமா? தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா? புஷ்பக விமானம், திரிசங்கு உலகம் என புராணங்கள் பேசும், வேதங்கள் சொல்லும் பல விசயங்களை அறிவியலுடன் இணைத்தேப் பேசலாம். நோய் தீர்க்கும் ஜெபக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்வது, ஒரு நோய் அதன் தன்மையைப் பொருத்து மாறுபாடு அடையும். அறிவியலில் ஆச்சரியத்தக்க நிகழ்வு என சொல்வார்கள், அதையே ஜெபக்கூட்டங்கள் செய்வதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு பிறர் நோய் தீர்க்கும் சக்தி என்பது குறித்து ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறேன். இப்படி தனிமனித சிந்தனைகளை எல்லாம் புனிதநூல்களில் எழுதப்பட்ட விசயங்களை இன்று நடைபெறுகின்ற விசயத்திற்கு ஒப்புமைப்படுத்தி பேசுவதன் மூலம் புனித நூல்கள் களங்கம் அடைகின்றனவேயன்றி பெருமை கொள்வதாகத் தெரியவில்லை.

இப்படித்தான் இந்த மதங்களை எல்லாம் ஒழித்துவிட்டு ஒரு புதிய கொள்கைகள் உருவாக்க வேண்டும் என சொன்னபோது மத ஒழிப்பு எப்போதுமே நடைபெற வாய்ப்பில்லை என்பதுதான் முற்றிலும் உண்மையாகிப் போனது. அக்பரின் தீன் இலாஹி என்னவானது? கடவுள் இல்லை எனச் சொன்ன புத்தரே கடவுளாகிய பரிதாபம் நிகழ்ந்தேறியது இந்த பூமியில் தான் என சொல்வார்கள். மேலும் நமது கொள்கைகள் கூட பின்னாளில் மதம் எனும் சாயம் பூசப்பட்டு விடும் அபாயம் மிகவும் அதிகமாகவே உள்ளது. மனிதர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பிரிவுகளும், பிரிவினைகளும் தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டன. தீபாவளியோடு ரம்ஜான் கிறிஸ்துமஸ் என ஒரே ஒரு விழாவாக கொண்டாட இயலாத மக்கள் வெறும் இனிப்புகளால் ஒற்றுமைச் சொல்லித் திரிவார்கள். நானும் புன்னகை புரிந்து கொண்டு போவேன்.

எனக்கு மதங்களைத் திட்ட இயலாது, ஏனெனில் மனிதர்களை அல்லவாத் திட்டி தீர்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை, சக மனிதரை அன்புடன் பார்க்காதவர்கள் அனைவருமே மாக்கள் எனத் திட்டிவிடத்தான் தோன்றுகிறது, அட என்னைத் திட்டுவது போல் அல்லவா இருக்கிறது.

Thursday 21 January 2010

கடவுள் யாருக்குச் சொந்தம்? திரு.சிவசக்திபாலன்

முழுவதும் படிக்க இங்கே அழுத்தவும். -----> கடவுள் யாருக்குச் சொந்தம்? - திரு சிவசக்திபாலன்.


1. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அத்வானியாலோ, அப்துல் சமதினாலேயோ ஏற்படுத்தப் படுவது அல்ல.

பள்ளி வாசல் - சர்ச் - கோவில், இதில் எங்காவது நின்று கொண்டு வருவோர் போவோரிடம் "நீங்கள் ஏன் கடவுளை நம்புகின்றீர்கள்?" என்று கேட்டுப் பாருங்கள். நோய் நொடி, பொருளாதாரச் சிக்கல், திருமணப் பிரச்னை, பிள்ளைப் பேறு, குடும்பத் தகராறு, நம்பிக்கைத் துரோகம், விபத்துக்கள் என்று மனித வாழ்வின் துயரங்களில் தன்னுடைய பிரார்த்தனைகள் மூலம் கடவுளின் அற்புதங்களைக் கண்டதாய் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாய்க் கூறுவதைக் கேட்கலாம்.

2. ஆதிசக்தி - அதிலிருந்து பிரம்மா - விஷ்ணு - சிவன், அவர்களுக்கு சரஸ்வதி - லட்சுமி - பார்வதி மற்றும் பிள்ளையார் - முருகன்.

இவர்களுக்குக் கீழே இந்திரன், நவக்கிரகங்கள், ஐம்பூதங்கள், இதற்கும் கீழே சொல்லப் போனால், குல தெய்வங்கள், மாரியம்மன்கள், எல்லையம்மன்கள், அய்யனார் கருப்பணன் போன்ற தெய்வங்கள்.

இது தான் ஆதியிலிருந்து இந்தியாவில் இருந்து வரும் தெய்வ நம்பிக்கை.

ரிக் வேதம், "ஏகம் சத்; விப்ர பஹூத வதந்தி" என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமாய்க் கூறுகின்றது. இதற்குக் கடவுள் ஒருவரே, ஞானிகள் அவரைப் பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். என்பது பொருள்.

இந்தப் பிரபஞ்சம் நாம் நினைக்கும்படி அவ்வளவு சிறியதல்ல. கடவுளின் சக்தி மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மார்க் போட்டு அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ தள்ளும் வாத்தியார் வேலை போன்று அவ்வளவு சிறியதல்ல.

3. நியூட்டனின் விதி ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சம விகிதத்தில் எதிர் செயலைத் தோற்றுவிக்கின்றது என்று கூறுகின்றது.

நாம் வாழ்கின்றோம், பேசுகின்றோம், பார்க்கின்றோம், கேட்கின்றோம், உண்ணுகின்றோம், உறங்குகின்றோம். எந்த நேரமும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டே இருக்கின்றோம். விஞ்ஞானம் கண்டறிந்த இயற்கையின் விதிப்படி, நமது ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சமமான எதிர் செயலை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் விஞ்ஞான விதியே தப்பு என்றல்லவா ஆகி விடும்?

இதைத் தான் நம் முன்னோர்கள் நாம் செய்யும் பாவம் புண்ணியம், அதற்குரிய பலனை நாம் அனுபவிப்போம் என்று கூறியுள்ளார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

4. இந்தக் கடவுள் எங்கே இருக்கின்றார்?

கடவுள் ஏதோ மேக மண்டலத்துக்கு அப்பால் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றால் அதை நம்பி விடாதீர்கள். அதே போல் மாய மந்திரம் செய்பவன் தான் கடவுள் என்று யாரேனும் நினைத்தால் அதை மூட்டை கட்டி வைத்து விடுங்கள்.

பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மாங்காய் கிடைக்கும். மந்திரத்தால் மாங்காய் வருவதில்லை.

இவ்வாறு கடவுளின் செயல்கள் அத்தனையும் நேர்த்தியாய் தீர்க்கமான செயல்பாடுகள் கொண்டிருப்பதால் கடவுளை விஞ்ஞான ரீதியாய் சுட்டிக் காட்ட முடியும். அது பாவச் செயலும் அல்ல.

5. யார் செய்த பாவமோ தெரியவில்லை, கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை மனித இனத்திற்கு ஏற்படவே இல்லை. ஒவ்வொருவரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல தத்தம் கொள்கைகளே உண்மையானவை என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

இது விஞ்ஞான யுகம். நம் முன்னோர்கள்-ஞானிகள், கடவுளைப் பற்றிக் கூறிய அனைத்துத் தத்துவங்களையும், அவை எந்த மதத்துக் கொள்கையாய் இருப்பினும் விஞ்ஞான ரீதியாய் அலசி ஆராய்ந்து கடவுளின் தன்மைகளைப் பற்றி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். இப்படியாக இருப்பவர் தான் கடவுள் என்று அறுதியிட்டுக் கூற வேண்டும்.

கடவுள் ஆதி அந்தம் இல்லாதவர். இதில் எந்த மதத்திற்கும் பேதம் இல்லை. ஆக, ஆதி அந்தமில்லாத ஒன்றைக் கடவுள் என்று கூறுவது தவறில்லை தானே!.

6. ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாம் நாமாக இருக்க மாட்டோம். நாமும் ஒளியாகவே மாறி விடுவோம். இதுவே சிருஷ்டி!

இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். மிரண்டு விடாதீர்கள். எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரம்பொருளாகவே மாறி விடுவோம்.

இத்தத்துவம் விஞ்ஞான பூர்வமானது. சும்மா எடுத்துக்காட்டி எழுதப்பட்டதல்ல. வேதங்கள் எடுத்த எடுப்பிலேயே - 'தத்வமசி' - நீயே அது என்று கூறுகிறது.

7. மரத்தடியில் படுத்திருந்த நியூட்டன் நெற்றியில் ஒரு ஆப்பிள் விழுந்தது. இக்கனி ஏன் மேல் நோக்கிச் செல்லாது கீழ் நோக்கி வந்தது என்று நியூட்டன் தன்னுள் கேள்வியை எழுப்பினார். முடிவு புவி ஈர்ப்பு சக்தியை அறிந்தார்.

அவர் கேள்விக்குப் பதில் எங்கிருந்து கிடைத்தது? வானத்திலிருந்து விழுந்ததா? அல்லது மண்ணுக்குள்ளிருந்து முளைத்ததா? நியூட்டன் கேள்வியை யாரிடம் கேட்டார்? யார் அவருக்குப் பதில் அளித்தார்கள்? அவர் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். பதில் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது.

8. ஆசை, கோபம், அஹங்காரம் என்ற சிருஷ்டியின் அனைத்து உணர்ச்சி வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்படக்கூடிய சந்தர்ப்பம் அமையப் பெற்றுள்ள அத்தனை இல்லறத்தாருக்கும் எதிர் நீச்சல் போட ஒரு எளிய படகை கடவுள் அளித்துள்ளான். நம் உள்ளத்தில் எழும் எல்லா ஆசைகளையும் அறுத்தெறிய இறைவன் ஒரு இலகுவான ஆயுதம் அளித்துள்ளன்.

அது தான் அன்பு, தூய அன்பு, பரந்த அன்பு.
9. பயம் மனிதனின் அடிப்படை உணர்ச்சி.

இந்த பய உணர்ச்சி இருப்பதால் தான் நம்மில் பல பேர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். தாய் தந்தைக்குப் பயந்து கீழ்ப்படிபவன் பண்புள்ளவனாய் வளர்கின்றான். கணவனுக்குப் பயந்து நடக்கும் மனைவியும் மனைவிக்குப் பயந்து நடக்கும் கணவனும் நாகரீகமான சமுதாயத்தைப் படைக்கின்றார்கள்.

நான் சொல்லும் பயம் அன்பினால் ஏற்படும் பயம். தன் உயிர் மேல் ஆசை - உடைமைகள் மீது ஆசை - எதிர்பார்க்கும் சுகத்தின் மீது ஆசை ஆகியவற்றால் ஏற்படும் பயத்தைச் சொல்லவில்லை. அன்பினால் ஏற்படும் பயம் பக்தி எனப்படும். ஆசையால் ஏற்படும் பயம் அடிமைத்தனம் எனப்படும்.

பக்தி, தன்னுடைய இன்ப - துன்ப - சுக - துக்கம் அத்தனையையும் இழந்து நிற்கத்தயாராய் இருக்கும்.

இந்த பக்தி இருக்கிறதே! அப்பப்பா. இதைச் சொல்லியோ எழுதியோ புரிய வைக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.

10. மூன்று ஆயுதங்களை இது வரை பார்த்தோம். மிஞ்சி இருப்பது ஒரே ஆயுதம். அதன் பெயர் தியானம். இதைத் தான் நம் பெரியவர்கள் ராஜயோகம் என்றார்கள்.

11. மதத் தீவிரவாதிகளே! உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனதை அடக்கி விட்டீர்களா? ஐம்புலன்களினால் ஏற்படும் ஆசையை வென்று விட்டீர்களா? அப்படியென்றால் மட்டுமே கடவுளைப் பற்றி பேசுங்கள். அவர்கள் தான் மக்களுக்கு ஆன்மீகத்தின் அற்புதத்தை உணர வைக்க முடியும்.

12. கடவுள் எண் குணங்களைக் கொண்டவர்.

ஆதி அந்தமில்லாதவர். எல்லையில்லாதவர். உருவமில்லாதவர். கால நேரங்களைக் கடந்தவர்.
அவரன்றி அண்டத்தில் வேறொன்றில்லை என்று வியாபித்திருப்பவர். பற்றற்றவர். இப்படித்தான் இருப்பார் என்று எடுத்துரைக்கத் தக்க தன்மைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிர்க்குணமாய் இருப்பவர். இடம், பொருள், காரண, காரியங்கள் இல்லாதவர்.

13. ஆதி சங்கரர் இங்கு அனைத்துமாய் காட்சியளிப்பது ஒரே பரம்பொருள் என்னும் அத்வைத கொள்கை கொண்டிருந்தார். ஸ்ரீராமானுஜரோ நாமெல்லாம் கடவுளின் அங்கங்கள் என்னும் விசிஷ்டாத்வைதக் கொள்கை கொண்டிருந்தார். மத்வாச்சாரியாரோ, கடவுள் வேறு, ஜீவன்கள் வேறு என்னும் த்வைதக் கருத்துகளைக் கொண்டிருந்தார். புத்தரோ, மறந்து கூட கடவுளைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவரையே கடவுளாக்கி நம்மவர்கள் கலவரங்களைச் செய்கிறார்கள்.

14. "பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை நிறுத்திக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்?"

சுக்கு நூறாய் உடைந்து போகும்? சிதறிப் போகும்? சூரியனில் போய் விழும்? எரிந்து விடும்? என்றெல்லாம் பதில் தந்தால் பூஜ்ஜியம் தான் உங்களுக்கு மதிப்பெண் போட முடியும்.

பதில் என்னவென்றால், "பூமி மாயமாய் மறைந்து விடும்"

திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட சூட்சும நிலையை அடைந்து விடும்.

15. அணுவைப் பற்றி படித்திருப்பீர்கள். புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் பற்றியும் தெரிந்திருப்பீர்கள். இதில் புரோட்டான் பாசிட்டிவ் எனவும், நியூட்ரான் நியூட்ரல் எனவும், எலக்ட்ரான் நெகடிவ் எனவும் தெரிந்திருப்பீர்கள். அணுக்களின் இயக்கம் இந்த முப்பெரும் சக்திகளாலேயே ஏற்படுகின்றது. அணுக்களின் பிளவு, சிதைவு, கலவை, கோர்வை, மூலக்கூறுகளின் தோற்றம், கூட்டுப் பொருட்களின் வெளிப்பாடு, அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பூமி, சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் இந்த முப்பெரும் சக்திகள் ஏற்படுத்தும் மின் காந்த அலைகளினால் மட்டுமே சாத்தியமாகின்றன.

இதைத்தான் மும்மூர்த்திகள் என்று கூறுகின்றேன். இவை முறையே, ஆக்கல், காத்தல், அழித்தல் பணிகளைச் செய்கின்றன.

16. ஒரே ஒரு செல்லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கி விடலாம் என்று உங்களுக்குத் தெரியும்.

17. "துன்பத்திற்குக் காரணம் ஆசையே" - புத்தர்.

துன்பம் என்றால் என்ன?

ஒரு குழந்தை தான் ஆசையாய் விளையாடிய பலூன் உடைந்து விட்டால் அளவில்லா துன்பத்தை அடைகிறது. ஆனால் சில நேரங்கள் சிலர் பலூன் உடைப்பதையே விளையாட்டாய் விளையாடுகின்றனர்.

18. அரைகுறை டிரைவிங் படித்தவர்கள் காரினை தாறுமாறாய் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்வது போல் நமது குணாதிசயங்களை தாறுமாறாய் பயன்படுத்தி நாம் ஆபத்தை வரவழைக்கிறோம்.

எனவே, நமக்கு எவ்வாறு வாழ்வது என்பது கற்றுத் தரப்பட வேண்டியதாகும்.

எனவே, பிச்சை புகினும் கற்கை நன்றே.

19. மரணத்தின் மூலம் இந்த இயக்கமற்ற நிலையை சாதிக்க இயலுமா? இயலாது. ஏனென்றால் ஜனனம், மரணம் என்னும் இந்த இரண்டுமே இயக்க நிலையாகிய சிருஷ்டியின் இரு பெரும் அத்தியாயங்கள்.

விரிந்து பரந்த அண்டமே மிகச்சிறிய பிண்டமாய் இந்த மனிதனாயும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

அண்டத்தின் விளைவே பிண்டம். பிண்டத்தை விட்டு தாண்டிக் குதித்தாலே அண்டத்தையே தாண்டிக் குதித்தது தான்.

எனவே, ஐம்புலன்கள், மனம், புத்தி, நான் என்னும் அகங்காரம் இவற்றை எவ்வழியாயினும், எம்மதத்தின் மூலமாகவேனும் அடக்கி ஆண்டு ஜெயித்துக் காட்டுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். கடவுளை உணருங்கள். கடவுளாய் உணருங்கள்.

Thursday 7 January 2010

உண்மை வேறு நம்பிக்கை வேறு

ஆன்மிகப் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பமாகவே பலருக்கும் இருக்கும். இறைவனை நினைத்து எழுதப்பட்ட பாடல்கள் என்றே மனம் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளும். பலரின் கண்களும் நீர் கோர்த்துக் கொண்ட தருணங்களும் அதிகம் உண்டு. மனதில் இருக்கும் மென்மை உணர்வினைத் தழுவிச் சென்ற ஆன்மிக பாடல்களைக் கேட்கும்போது பலமுறை யோசித்தது உண்டு. ஏனிந்த நிலை என?

அமைதியான சூழ்நிலையை விரும்பும் உயிரினங்கள் மிகவும் அதிகம் உலகில் உண்டு என எடுத்துக் கொள்ளலாம். அமைதியாக இருக்கும்போது நமக்கு ஆனந்தமாக இருக்கும். அதே வேளையில் விழாக்காலங்களில் ஏற்படும் சப்தங்களும் நமக்கு ஆனந்தமாக இருக்கும். ஆனால் இதே சப்தமானது சண்டைகளின் போது ஏற்பட்டால் நமது ஆனந்தம் தொலைந்து போய்விடும். இப்படி பலவிதமான உணர்வுகளை நம்மிடம் நாம் ஏற்படுத்தியதன் நோக்கம் எதுவென ஆராய்ந்து கொண்டிருக்க ஆவல் அதிகமாகவே இருந்தது. இதில் எப்படி இறை உணர்வை மட்டும் தனிமைப்படுத்திப் பார்ப்பது எனப் புரியாமலேதான் இருக்கிறது.

ஒரு விசயத்தை நமக்குப் பிடித்தமானவர் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், நமக்குப் பிடித்தமில்லாதவர் சொல்லும்போது அதை ஒதுக்கித் தள்ளும் பக்குவமும் நமக்குள் ஏற்பட்டது எவ்வாறு எனச் சிந்தித்தபோது பல விசயங்கள் புரியப்படாமலே இருந்து ஒதுங்கிப் போவதுண்டு. இதற்கெல்லாம் ராசிகளும், நட்சத்திரங்களும் கூட கூட்டுச் சேர்ந்து கொண்ட விதம்தனை கூட படித்துப் பார்த்து அறிந்து கொள்ள அவசியம் வந்ததுண்டு.

முதலில் சொன்ன பாடலையே சிந்தித்துப் பார்க்கலாம். காதலன் காதலியை நோக்கி எழுதும் பாடல். காதலி காதலனை நினைத்து எழுதும் பாடல். இதே பாடலை இறைவனுக்கும் இணைத்துப் பார்க்கலாம். மிகவும் பொருந்தித்தான் போகிற‌து. யோசித்தேன், மனிதர்கள் செய்யும் செயல்களை நாம் எதனுடனும் இணைத்துப் பார்த்தாலும் அது போலவேத் தோற்றம் எடுத்துக்கொள்ளும்படி நமக்குள் ஒரு வித எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்த நிலையை கண்டு பிரமிப்பு ஏற்பட்டது.

ஒரு விசயத்தை எப்படி நீ பார்க்க நினைக்கிறாயோ அப்படியே அந்த விசயம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது எனச் சொல்ல இயலுமா? அந்த விசயம் மாற்றம் கொள்ளவில்லை, ஆனால் அந்த விசயத்தை மாற்றியமைத்துக் கொண்டது நமது எண்ணம். இதற்கு மூல காரணன் யார்? நம்பிக்கை.

உண்மை வேறு, நம்பிக்கை வேறு என எவரேனும் பிரித்துப் பொருளுணர்ந்து கொள்ள முனைந்திருப்போமானால் இன்று உலகில் பல்வேறு சர்ச்சைகள் இருந்திட நியாயமில்லை. ஒருமுறை இருவரிடம் நடந்த ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

'கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'

'இல்லை'

'அப்படியெனில் கடவுளிடம் நம்பிக்கை இல்லையா?'

'இல்லை'

'நீங்கள் கடவுளை நம்பவில்லை எனலாமா?'

'அப்படியே சொல்லலாம்'

'நீங்கள் மிகவும் சிறந்த ஆன்மிகவாதி என்று கருதியது என் தவறா?'

'அதுகுறித்து என்னால் எதுவும் சொல்ல இயலாது'

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?'

'இருக்கிறார்'

'பின்னர் ஏன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்கிறீர்கள்?'

'இருக்கிறது எனச் சொல்வதற்கு நம்பிக்கையின் தேவை அவசியம் எனில் அங்கே இருக்கிறது எனச் சொல்லப்படுவதன் அர்த்தம் சந்தேகத்துக்கு உட்படுகிறது'

'எனக்குப் புரியவில்லையே, கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்கிறீர்கள், ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள்'

'ஒன்றை நம்புவது வேறு, ஒன்று இருக்கிறது என அறிந்துணர்வது வேறு. நாம் நம்பும் விசயத்தை பிறர் நம்பும்படி நாம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதன் காரணமாக நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்பட வாய்ப்பு அமைத்து தந்துவிடுகிறோம்'

'என்னதான் சொல்கிறீர்கள், கொஞ்சமும் விளங்கவில்லை, கடவுளை நம்புகிறீர்களா, இல்லையா?'

'கடவுளை நான் நம்பவில்லை, ஆனால் கடவுள் இருப்பதாக உணர்கிறேன்'

'புரியும்படிச் சொல்லுங்கள், என்னை நீங்கள் நம்புகிறீர்களா?'

'இல்லை'

'எனக்குப் புரிந்துவிட்டது ஐயா, நீங்கள் மிகச் சிறந்த ஆன்மிகவாதி'

இந்த உரையாடல் முடிந்ததும் எனக்குள் ஒரு பாடல் ஒலித்தது. கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...

நானும் சிந்தித்துப் பார்த்தேன், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் இறைவன் இல்லாது ஒழியக்கூடும் அல்லவா? அப்போதே மனதுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. நம்பிக்கை இல்லாத போதிலும் அவன் இருந்து கொண்டுதானிருக்கிறான் என்பதை எவரையும் நான் நம்ப வைக்கவேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் ஏற்படப் போவ‌தில்லை.

அது இருக்கட்டும், நம்பிக்கையினால் மட்டுமா இறைவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?

உண்மை எது?

உண்மை என்றால் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளும் பட்சத்தில் உண்மையின் சொரூபமாக இறைவன் விளங்குகிறாரா, விளங்கவில்லையா என்பது தெரிந்துவிடும். எப்படி உண்மை என்று உருவானது எனத் தேடி தேடிக் களைத்துப் போனேன். களைத்திருந்த வேளையில் அவ்வழிதனை கடந்த ஒருவர் சொல்லிச் சென்றார், உண்மை ஒருநாள் வெளி வரும். ஒளிந்திருக்கத்தானா உண்மை? மறைந்திருக்கத்தானா உண்மை? ஒரு உண்மையை பற்றி விளக்கக்கூட ஒரு பொய்மை நிகழ்வுதானா தேவைப்படுகிறது? சிந்தித்துப் பார்க்கையில் இறைவன் இஷ்டம் போல சிரிக்கிறான்.

ஒரு நிகழ்வு நடக்கிறது, அந்த நிகழ்வு உண்மையிலே நடந்ததா எனும் கேள்வி எழுகிறது. அதாவது ஒன்று நடந்தது எனில் அது எவ்வாறு நடந்தது, எந்த முறையில் நடந்தது எனும் விளக்கங்கள் தேவைப்படுகிறது. அந்த நிகழ்வினைப் பார்க்கும் தனித்தனி நபர் சொல்லும்போது ஒவ்வொருவரின் விளக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் காரணமாக அங்கே நிகழ்வின் தன்மை மாற்றம் கொள்கிறது. உண்மையான நிகழ்வு என்பது இப்போது பல சந்தேகங்களுக்கு உட்பட்டு தள்ளாடித் தவிக்கிறது. ஒரு அரை மணி நேரம் முன்னர் நடந்த விசயத்தையே நம்மால் புரிந்து கொள்ள இயல்வதில்லை, அதன் தன்மையை அப்படியே நம்மால் விவரிக்க இயல்வதில்லை. இதைத்தான் எந்தவொரு ஆராய்ச்சியும் ஒரு பொருளின் தனித்தன்மையை முழுவதுமாகச் சொல்லிவிட இயல்வதில்லை என ஒருவர் அழகாக எழுதி வைத்ததை உண்மை என்றே இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். அதுதான் உண்மையா என எப்படிச் சோதித்து கண்டு கொள்வது, எந்த சோதனைப் பயிற்சியைச் செய்து பார்ப்பது? புரியவில்லை. இதன் காரணமாக உண்மை எதுவென இன்னமும் தெரியவில்லை.

உண்மை எதுவெனத் தெரியாதபோது எப்படி இறைவன் உண்மையின் சொரூபமாகத் திகழ்கிறார் எனச் சொல்வது? நல்லது நடக்க வேண்டுமெனில் ஒரு பொய் என ஓராயிரம் பொய் கூடச் சொல் என்கிறது முன்னோர்களின் அறிவு. ஒரு பொய்தனைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதுவே உண்மையாகிவிடுகிறது என்கிறது ஆய்வுகளுக்கு உட்படாத அறிவு. பொய் என்பது என்ன என எண்ணிப் பார்த்தோமெனில் உண்மையைத் தவிர்த்த அறிவு எனக் கொள்ளலாம். இருப்பதன் அடிப்படையில், அந்த அந்த அறிவுக்கு அடிப்படையில் ஒரு நிகழ்வினைப் பார்க்கும்போது, அந்த நிகழ்வுக்கான காரணிகள் என காணும்போது உண்மை எது, பொய் எது எனும் நிலைத் தடுமாற்றம் என்பது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அறிவு என்றால் எதுவெனச் சிந்தித்துப் பார்த்தேன்.

அறிவு என்பதன் அர்த்தம் அறிந்து கொள்வது எனப் பொருள்படும்படி வைத்துக் கொள்ளலாம். அவரவர் அறிந்து கொள்வது அனைவரும் அறிந்து கொள்வது என்றாகாது, அனைவரும் அறிந்து கொள்வது என்பது அவரவர் அறிந்து கொள்வது என்பதும் ஆகாது. அப்படியெனில் அறிவு என்பது பொதுவான கருவி. இருப்பதை வைத்து அறிந்து கொள்வது என வரும்போது அதற்கான காரணிகள் கிடைக்கும். இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்படியெனில் கற்பனையும் கூட உண்மையின் வசம் தன்னை ஒப்படைத்து இருந்திருக்கக் கூடுமோ?

Monday 4 January 2010

ஆன்மாவைத் தீண்ட இயலாது

ஆன்மா என்பது என்ன?

இதற்கான பதிலைத் தேடிக் களைத்து விடுவோர்தான் அதிகம். ஆன்மா என்பதை உயிர் எனக் கொள்வோரும் உண்டு. ஜீவாத்மா, பரமாத்மா, மகாத்மா என ஆன்மாதனைப் பிரித்துச் சொல்வோர் உண்டு. நாமெல்லாம் அதாவது மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களும் ஜீவாத்மா எனப் பொருள் கொள்ளலாம். மகாத்மா என்பது ஜீவாத்மா கொள்ளும் உயர் பதவி என எடுத்துக் கொள்ளலாம். பரமாத்மா என்பது ஜீவாத்மா, மகாத்மா, ஆன்மா அற்றது என அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. அதாவது பரமாத்மா என்பது ஆத்மா அல்லாத ஒன்றையும் (சூன்ய ஆத்மா) அடக்கிக் கொள்வது எனக் கொள்ளும் பட்சத்தில், அதெப்படி ஆத்மா அல்லாத ஒன்றும் பரமாத்மாவில் அடக்கம் என நினைத்து, உயிர் அற்ற ஜடப் பொருளுக்கும் உயிர் உண்டு என பின்னாளில் சிலர் ஏற்றுக்கொள்ளும்படி அமைய வந்தது எனலாம். இருப்பினும் பரமாத்மா தனித்தே இயங்குவதாகத்தான் கருதப்பட வேண்டும், ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என இவைகளை உள்ளடக்கியது என கருதுவது சரியாக இருக்காது.

ஆக ஆன்மா என்பது உயிர்! இந்த உயிர் எங்கும் நிறைந்து இருக்கிறது. அது காற்றின் வடிவினனாய் இருக்கிறது, காற்று அற்ற வடிவினனாகவும் இருக்கிறது. இப்படி எங்குமிருக்கும் உயிர் என்பதாலேயே அதுதான் இறைவன் எனச் சொல்வது முரண்பாடாகத்தான் முடியும்.

தீண்டல் என்பது என்ன?

தீண்டல் என்பது ஒருவகை உணர்வு. கண்ணும் கண்ணும் தீண்டியது எனச் சொல்வோர் உண்டு. 'நினைச்சேன் பாரு' என டெலிபதி பேசுவோர் உண்டு. தீண்டல் தொடுவது மூலம் மட்டுமின்றி தொடாமலே நடக்கக் கூடும் என அரிய தத்துவத்தைச் சொன்னவர்கள் உண்டு. எண்ணப் பரிமாற்றத்தால் ஏற்படும் தீண்டல் மனத் தீண்டல் எனச் சொல்லலாம். உயிர்த் தீண்டல் என இறைவனை வணங்கும் பொருட்டு ஏற்படுவதாகச் சொல்லப்பட்டாலும், உயிர்த் தீண்டல் என ஒன்று நடப்பதே இல்லை.

பரமாத்மா எனப்படும் ஒன்றும் சரி, பரந்து விரிந்து கிடக்கும் உயிர் எனப்படும் ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என்றாலும் சரி, எந்த வகையிலும் தீண்ட இயலாது. 'என் உயிரேப் போச்சு' எனச் சொல்லக் கேள்விப்படலாம். உயிர் போகும்படி நடந்து கொண்ட ஒரு செயல் ஒரு எண்ணத் தீண்டலேயன்றி உயிர்த் தீண்டல் ஆகாது.

உடலைத் தீண்டினால் உடல் சாகும். உயிர் சாகாது. கல்லைத் தீண்டலாம், கல்லின் உயிரைத் தீண்டலாகாது.

ஆன்ம பலத்திற்காக வேண்டப்படும் வேண்டுதல்களும், இந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்க வேண்டும் என நினைத்து வாழும் முறைகளும் அவசியமற்றவை.

இதன் மூலம் ஆன்மாவைத் தீண்ட இயலாது என வலியுறுத்தலாம் என கருதுகிறேன்.

தேக பலம் வேண்டி உணவு உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலாம், தியானம் செய்யலாம். ஆன்ம பலம் வேண்டி எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 'உடல் வளர்த்தேனே; உயிர் வளர்த்தேனே' என்பது மிகவும் ரசனையான வரிகள், ஆனால் உயிர் வளர்வதுமில்லை, உயிர் ஒடுங்குவதுமில்லை.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.

எத்தனையோ சுடர் எரியும், சூரியச் சுடர் முதற்கொண்டு. சூரிய வெப்பத்தைத் தீண்டும் சக்தி எவருக்கும் இல்லை. எங்கள் ஊரில் கதையாகச் சொல்வார்கள். ஒருவர் சூரியனைத் தொட்டுவிட வேண்டுமென பறவையில் மேல் அமர்ந்து சூரியனுக்கு அருகில் பறந்து சென்றாராம், ஆனால் பறவையும் அவரும் வெந்து போய் கீழே விழுந்துவிட்டார்களாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படி ஒருவர் அத்தனை தைரியத்துடன் சூரியனைத் தொட வேண்டுமென பறவையில் அமர்ந்து சென்றார் என, அதுமட்டுமின்றி எப்படி இவர்களால் இப்படியெல்லாம் ஒரு கதையை உருவாக்க முடிந்தது என. அந்த‌ கதைக்கான உண்மையான அர்த்தம் எனக்கு இதுநாள் வரையும் தெரியவில்லை, ஆனால் இப்போது புரிகிறது, ஆன்மாவைத் தொட வேண்டுமென நினைப்பவர்களின் நிலையும் அதுதான் என‌.

பாரதி பாடலைக் குறிப்பிட்டேன், அதற்கான அர்த்தம் ஒரு மகாகவிஞனுக்குள் எழுந்த ஓர் அரிய அற்புத சிந்தனை. சிந்தனையில் தீண்ட முடியும் என பாரதி முயன்றார், ஆனால் சிந்தித்துப்பார்த்தால் எந்த ஒரு சிந்தனையாலும் கூட ஆன்மாவைத் தீண்ட இயலாது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

கண்கள் மட்டும் கலங்குகிறது. எனது கண்ணீரால் கூட ஆன்மாவைத் தீண்ட இயலவில்லை.

Wednesday 28 October 2009

ஆன்மிகம் என்றால் சைவமா? யோகன் ஐயாவிற்கான பதில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது. //

மிக அருமையான முத்தாய்ப்பு...என்னை வெகுநாட்களாக குடையும் கேள்வி!


நான் அசைவம் உண்பவன். எனவே" குருவிக்கு அரிசியைப் போட்டுவிட்டு"; மற்றைய உயிர்கள் மேல் அன்பு செலுத்துகிறேனெனச் சொல்வது சுத்த பொய்.

//ஒரு உண்மையை மிகவும் தைரியமாகச் சொன்னதற்காக எனது பணிவான வணக்கங்கள் ஐயா. நீங்கள் அசைவம் உண்பது என்பது தங்களின் உணவுப் பழக்க வழக்கம் என எடுத்துக் கொள்ளலாம் //

இதே வேளை ஆத்மீக வாதியாக வாழ ;

அன்புடையவனாக வாழ ;

ஒழுக்க சீலனாக வாழ;

உண்மைபேசுபவனாக வாழ;

உழைத்து உண்பவனாக வாழ..

அவன் சைவ உணவுதான் உண்ண வேண்டுமா? ஆமெனில் துருவத்தில் வாழும் மக்கள், இந்தோனேசியக் காட்டுவாசிகள்; அமேசன் காட்டு வாசிகள், வேடர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்களா? அவர்களிடம் ஆத்மீகம் இல்லையா?


//சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் வாழ்கிறார்கள் என வரையறுத்துவிட இயலாது என்பதுதான் உண்மை. அதே வேளையில் மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் அசைவ உணவு உண்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சைவ உணவுப் பொருட்களை உண்டு ஒரு உயிரினத்தால் வாழ இயலும் எனச் சூழ்நிலைச் சந்தர்ப்பங்கள் இருக்கும்போது ஏன் அசைவ உணவு வகைகளை உண்டு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டோம் எனச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும். அசைவ உணவு உண்பவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் எனச் சொல்ல இயலாது, அவர்களிடம் ஆன்மிகம் இல்லை எனவும் மறுக்க இயலாது. எனினும் இதன்படி நடந்தால் சிறப்பு என்று மட்டுமே ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்ட இயலும், ஏன் அதன்படி நடக்காமலும் சிறப்பாக இருக்க இயலாதா எனக் கேள்வி கேட்டால் இரு சிறப்புகளுமே வெவ்வேறு அர்த்தம் கொண்டவை என்று மட்டுமேச் சொல்ல இயலும் //


எனவே இந்த மற்றும் உயிர்மேல் அன்பென்பது ஒரு இடைச்செருகல்... குறிப்பாக இடைக்கால இந்தியாவில் உள்னுளைந்த சமாச்சரமோ? ஆடையே இல்லாமல் வாழ்ந்த மனிதன் ஆடைகட்டி; இப்போ மானம் காக்கிறோம்; என்று சொல்வது போல்.


//காலப்போக்கில் எல்லாமே மாற்றம் கொள்ளும் நிலையை அடைந்தது. உயிர் கொன்று வாழும் மனித இனங்களே முன்னாலிருந்தது. நரபலி கொடுக்கும் மனிதர்களும், நரமாமிசம் சாப்பிடுவோர்களும் வாழ்ந்து வந்தனர். எதையுமே சாப்பிடும் சீனர்கள் என ஒரு பொது கருத்தும் உண்டு. பிற உயிர்களை கொலை செய்வது என்பது மட்டும் பார்க்கப்படவில்லை, பிற உயிர்களை வதைத்து வேலை வாங்கும் தன்மையும் கண்டு இளகிய மனம் படைத்தோர் உருவாக்கிய எண்ணம் எனக் கொள்ளலாம். பிற உயிர்கள் என்பது சக மனிதரையும் குறிக்கும் என்பது முக்கியம். //


அதனால் ஆத்மீகத்துக்கும் மற்றைய உயிர் கொல்லாமல் வாழ்வதற்கும்;சைவ உணவுப் பழக்க வழக்கத்துக்குமான தொடர்பு வெறும் இட்டுக்கட்டலா? அதனால் மற்றைய உயிர்களின் மேல் அன்பு செலுத்த முடியாத; அசைவமுண்ணும் நான் ஆத்மீகத்துக்கு உகந்தவனில்லை எனக் கருதுகிறீர்களா?


// ஆன்மிக உணர்வு என்பது எந்தத் தீங்கும் விளைவிக்காது இருப்பது. சைவ உணவுப் பழக்கமும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடையதாகக் கருத வேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லை. ஆனால் பிற உயிர்களின் மேல் அன்பு செலுத்துவது என்பது ஒரு பொது நலம் கருதிய செயலாகக் கருதலாம், அதுவே ஆன்மிகம் எனவும் கொள்ளலாம். அசைவம் உண்ணும் தாங்கள் ஆன்மிகத்துக்கு உகந்தவரா என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியில் உயிர் கொன்று பணி புரியும் நான் என்னை ஒரு ஆன்மிகவாதியாக எப்போதுமே எண்ணிக் கொண்டதில்லை. //


என் மனம் கத்தரிகாய்ப் பிஞ்சுக்கும்; முளைக்கீரைக்கும் உயிர் இருக்கிறது. அதையும் வெட்டி; அவித்து; பொரித்து, வறுத்து உண்பதுகூட பாவமாகத்தான் படுகிறது. ஆனால் நான் வாழ வேண்டும் எனும் சுயநலம் என்னைத் தடுக்கிறது. அதனால் அது பாவம் இல்லை;இது பாவம் என சால்சாப்பு தேடுகிறது.


//அசைவம் உண்பவர்கள் இதை ஒரு கருத்தாகக் கொள்வது உண்டு. தாவரங்கள் தானே உணவு உற்பத்தி பண்ணும் திறன் உடையவை. மரத்திலிருந்து பழம் பறித்து உண்பது என்பது கொலையாகாது, ஆனால் அந்த மரத்தையே வெட்டுவது கொலையாகக் கருதப்படும் எனக் கொள்ளலாம். மேலும் கத்தரிக்காய்தனை அப்படியே விட்டுவிட்டால் அழுகிப் போய்விடும். எனவே அவையெல்லாம் கொலை எனவோ, பாவம் எனவோ கருதுவது கூடாது. தாவரங்கள் அல்லாத பிற உயிர்கள் தாவரத்தை முதல் உணவாகக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமே. தானாக இறந்த விலங்குகளை உண்பது தவறில்லை எனக் கொள்வது சரியென சொல்வாரும் உண்டு. ஆனால் ஒரு உயிரைக் கொன்று அதை உண்பது பாவப்பட்ட செயலே ஆகும். இதில் தாவர இனங்கள் உட்படா //


ஆத்மீகவாதிகளும், அறிவு படைத்தோரும் தமக்கு வசதியானதைக் கூறி அதையே பொது விதி ஆக்குவார்கள்.என்னைப் போன்ற பரதேசிகள் ஏற்கவேண்டும்; அல்லது சாகவேண்டும்.
அந்த பொது விதியில் தான்....ஒபாமாவுக்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள்.


//அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஐயா. பொது விதி என்பது பொதுவான விசயத்திற்காக வைக்கப்பட்டது. அவரவர் வசதிற்கேற்ப வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் நடந்து கொண்டு வருகிறது. 'எது உனக்குச் சரியாகப்படுகிறதோ, அதை நீ சந்தேகமின்றி, சந்தோசமாகச் செய்து கொண்டு வா' என்பது கூட ஒரு பொது விதி தான். அப்படியெனில் கொலைகாரர், கொள்ளைக்காரர் எல்லாம் தனது செயல் சரியே என வாதிடக் கூடும். எது எப்படியோ, இந்த உலகம் இருளும் வெளிச்சமும் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. //




Tuesday 22 September 2009

இறைவனும் இறை உணர்வும் - 3

3.
உண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்
உண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்
பொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்
கயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்
ஐயனே உன்னை அறிந்த பின்னும்
பொய்யனாய் வாழ்வது முறையோ?

என பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ? என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.

‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.

‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.

‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன?’’ என்றார் பாடியவர்.

‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.

‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.

‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.

இறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி?. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது? சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்?

(தொடரும்)

Thursday 20 August 2009

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா?!

Robin said...

moral sense - ஐ ஆன்மிகம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். தவறு. ஆன்மிகம் moral sense -ஐ பலப்படுத்தும். ஆனால் அதுதான் ஆன்மிகம் என்பது சரியல்ல.

Robin said...

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள். ஒன்றில் அதி தீவிரமாக ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒரேயடியாக வெறுத்து விடுவது. கடவுளை நம்புபவர்கள் பலரும் செய்யும் தவறுகளால் கடவுள் என்றாலே வேண்டாத பொருளை போல பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது. மதங்கள் வேண்டாமென்ற நிலை மாறி இப்போது கடவுளே தேவையில்லை என்னும் போக்கு வளர்ந்து வருகிறது.


சம்பந்தபட்ட பதிவு: http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_20.html

----------------------------------------

மிக்க நன்றி ராபின். நீங்கள் இவ்வாறு எழுதிய பின்னர் எனக்குள் இருந்த ஆன்மிகம் குறித்த தெளிவான பார்வை சற்று மங்கலாக முயற்சித்தது. ஆனால் மீண்டும் சிந்தித்த பின்னர் மிகவும் தெளிவாகத்தான் தெரிந்தது. இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது. நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார்? இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என இறைவனை நான் பணித்தேனா? இது அவரின் கடமை என என்னைக் கேட்காமல் இறைவன் செய்ய முற்படுகிறாரா? இதில் ஒன்றை தீவிரமாகப் பின்பற்றுவது, அல்லது ஒரேயடியாக வெறுத்துவிடுவது எனக் கருத வேண்டாம். இறைவன் அவசியமில்லை எனச் சொல்வதற்கும் இறைவனை வெறுத்து ஒதுக்குவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்னர் ஆன்மிகம் என்றால் என்ன எனத் தேடியதில் ஆன்மிகம் குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் பதிவில் இருந்து சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.


தன் தளத்தில் ஆன்மிகம் என்பது ஓர் இருத்தல், நிகழ்தல் மட்டுமே. அதற்கடுத்த தளத்தில் அது ஒரு தேடல். இரு வகையிலும் அதில் நெறி என ஏதுமில்லை. ஆன்மிகம் என்றால் ‘சாராம்சவாதம்’ என்று பொதுவான பொருள். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும், இருப்புக்கும் சாராம்சமான ஒன்று அதில் உள்ளது. நாம் அறிவது அச்சாராம்சத்தின் ஒரு தோற்றத்தை மட்டுமே. ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.


ஆன்மிகம் என்றால் இறைவாதம் அல்ல. ஆன்மிக வாதிகளில் ஒருபெரும்சாரார் சாராம்சமாக தாங்கள் உருவகிப்பதை இறைசக்தியாக உருவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல. மதம் தன்னை மரபார்ந்த நம்பிக்கைகள் குறியீடுகள் சடங்குகள் மூலமே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திக் கொள்கிறது. உதாரணம் நீத்தார்சடங்கு என்பது புராதனமான ஒரு நடைமுறை மட்டுமே. அதை மதம் தனக்குரிய பொருள் அளித்து தனது வழிமுறைகளில் ஒன்றாக ஆக்குகிறது. பல நம்பிக்கைகளிலும் குறியீடுகளிலும் சடங்குகளிலும் இவ்வாறு மதம் மூலம் ஏற்றப்பட்ட ஆன்மிக அடிப்படை இருக்கக் கூடும். ஆனால் ஆன்மிகம் என்பது அவை ஏதும் அல்ல.


நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல்.


நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி.


முழு பதிவினையும் படித்திட http://jeyamohan.in/?p=118


பெரும்பாலனவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் சொன்னால் உலகம் சரியென்று ஏற்கும் எனச் சொல்ல வரவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் ஆன்மிகம் குறித்து வேறுபட்டிருக்கக் கூடும். இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான்.

ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை

ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


இறைவனையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள் வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள் இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.


இப்பொழுது ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.


இவ்வாறு ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும் ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.


அறிவியல் வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும், உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப் போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள் வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத் தெரியாமல் போனது.


ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக் கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம் நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.


இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.


ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


Tuesday 18 August 2009

ஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்?

ஆன்மிகம் என்றாலே வேண்டாம் எனச் சொல்லி ஒதுங்குமளவிற்கு இன்றைய ஆன்மிக நிலை பலரை உள்ளாக்கியிருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். அப்படி என்னதான் இந்த ஆன்மிகம் செய்தது, செய்து கொண்டிருக்கிறது?

நல்லதை வேண்டாம் என சொல்லுபவர் உண்டோ உலகில்? தமக்கேனும் இல்லாது போனாலும் பிறருக்கேனும் நன்மை வாய்த்திட வேண்டும் என வாழ்ந்த/வாழும் புண்ணியர்கள் நிறைந்த, நிறைந்திருக்கும் பூமியல்லவா இது. இதைத்தான் ஆன்மிகம் செய்ய வந்தது, இன்னும் சிலரால் செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன கதை உண்டு. நீங்கள் அனைவரும் அறிந்திருக்கவும் கூடும். ஒரு ஐந்து வயது சிறுவன் சாய்வு நாற்காலியில் எப்பொழுதும் சென்று அமர்ந்திருப்பான். சாப்பிடுவது, உறங்குவது, உட்கார்வது என இதுதான் அவனது வேலை. எப்பொழுதும் ஓய்வு தான். அவனை அவனது தாத்தா

''ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி இருக்க'' எனக் கேட்பார்.

அதற்கு அவன்,

''என்ன செய்யனும் தாத்தா'' என்பான்.

''நீ படிக்கனும், வேலைப் பார்க்கனும், கல்யாணம் பண்ணனும், குழந்தைக பெறனும், என்னைப் போல தாத்தா ஆகனும், அப்புறம் இப்படி உட்காரனும்'' என்பார்.

''இதெல்லாம் செஞ்சிட்டு உட்காருரதுக்கு, இப்ப இருந்தே உட்கார்ந்தா என்ன தப்பா தாத்தா'' என்பான் அந்த சிறுவன்.

தாத்தா விழிப்பார். இந்த தாத்தா நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம், அது அவரவர் விருப்பம்.

இதுதான் வாழ்க்கை. ஒன்றை பற்றிக் கொண்டு செய்தலும் சரி, பற்றிக்கொள்ளாமல் இருத்தலும் சரி, முடிவில் அத்தனை வித்தியாசம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. பேசாமல் சாதித்த இரமணரும் சரி, பேசி சாதித்த விவேகாநந்தரும் சரி! ஒவ்வொருவருக்கு ஒரு திசை, ஒவ்வொருவருக்கு ஒரு அனுபவம்.

ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. அந்த உணர்வினை வெளிக்காட்டுதலின் பொருட்டு எழுந்ததே அத்தனை வேதங்களும், சத்தியங்களும், தர்மங்களும், நெறிக்கலைகளும், பாடல்களும், புராணங்களும் என்ற கருத்தும் எனக்கு உண்டு. என்னவொரு பிரச்சினை எழுந்தது எனில் எழுதியவர் தன்னை முன்னிலைப்படுத்தியதின் விளைவு பிறர் அந்த எழுத்துக்களை கொஞ்சம் சந்தேக விழிகளுடன் பார்க்கத் தொடங்கினர் எனலாம்.

ஆன்மிகத்தைப் பொதுப்படுத்தி எழுதியவர் எவரேனும் உண்டு எனில் உண்டு, மெளனத்தை மொழியாக்கிக் கொண்ட ஞானிகள். அந்த மெளன மொழியை கற்றுக்கொண்டவர்களும் உண்டு. ஆன்மிகம் பற்றி எழுதியதை, எழுதப்பட்ட விதத்தை கண்டு மெய்மறந்து ரசிப்பேன், பாடப்பட்ட பாடல் எல்லாம் படிக்கும்போது எத்தனை திறமை என உள்ளூர வியந்து கொள்வேன். அது எந்த அடையாளம் கொண்ட எழுத்தாக இருந்தாலும் சரி, எந்த ஒரு இலக்கை சுட்டுவதாக இருந்தாலும் சரி, ரசிப்பதும், விளங்கிக் கொள்வதும் தான் எனக்கு வேலை. இங்கேயும் என்னை முன்னிலைப்படுத்துவதன் காரணம் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றாக இருக்கலாம் என்பதேயாகும்.

மேலும் ஒன்றை விலக்கிட ஓராயிரம் காரணங்கள் இருந்தாலும், ஒன்றைச் சேர்த்துக் கொள்ள ஒரு காரணம் போதும், ஆனால் அந்த காரணமும் ஆன்மீகத்தில் இல்லாதிருப்பது போன்று ஆகிவருகிறது இன்றைய காலகட்ட சூழல்கள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, என்னிடம் எவரேனும் எதையும் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா? எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்லிவிடுவேன். என்ன காரணம் எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அதனால் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை அதனால் பிடிக்கவில்லை என சொல்லி நிறுத்திவிடுவேன்.

இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பி்டிக்கிறது என்றும், இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பிடிக்காமல் போகிறது என்றும் சொல்ல மிகவும் யோசிப்பேன். காரணம் சொல்லமாட்டாயா எனக் கேட்பவர்களுக்கு என்ன பெரிய காரணம் இருந்துவிடப் போகிறது என இருந்துவிடுவேன். இப்படித்தான் ஆன்மீகத்தினை அணுகத் தொடங்கினேன். ஆன்மீகத்திற்கு எந்த ஒரு காரணமும் அவசியமில்லை என்றே உறுதி கொண்டேன்.

ஒரு காரணமும் சொல்ல மாட்டேன்கிறாயே என என்னைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் காரணம் சொல்லிப் பழகிய காலமும் சரி, விசயங்களும் சரி, மனதில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தத் தொடங்கின. காரண காரியங்கள் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கி வருவன. ஆன்மீகம் என்றாலே அமைதி என்ற கொள்கையை எனக்குள் வைத்துக் கொண்டு நான் எழுதுவதும் சரி, பேசுவதும் சரி, வாழும் முறையும் சரி பெரும் முரண்பாடாகத்தான் இருக்கின்றது. இந்த முரண்பாடு ஒரு காரணமோ? ஆன்மீகம் என்றாலே அமைதி என்பது ஒரு காரணமோ? காரணம் சொல்லாமல் வாழ முயல்வதே பெரிய விசயம் தான், ஆனால் காரணமின்றி காரியங்கள் இல்லை எனப் பழகிவிட்டோம் நாம்.

மேலும் நோய் இல்லாத உடம்பைத்தான் இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் நோய் என்பது பாவ புண்ணியங்களின் அடிப்படையில் வந்த விசயம் எனக் கருதப்பட்டு அவ்வாறே இன்றும் சில இடங்களில் சொல்லப்பட்டு வருகிறது என எண்ணுகிறேன். நோய் வந்தால் சமூகத்திலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்தார்கள், இன்று கூட சில தொற்று நோய் உடையவர்களை தனித்து இருக்கச் சொல்வதுண்டு. அதேவேளையில் ஏன் நோய் வருகிறது என இவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தி அதை தீர்க்க வந்தார் ஒருவர், அவரையும் அன்றைய சமூகம் விட்டுவைக்கவில்லை. அவரை கேலி பண்ணியது, உதாசீனம் செய்தது. ஆனால் அவர் போராடி வெற்றி பெற்று மருந்தினை கண்டுபிடித்தார். ஹும், நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படும்பாடு இருக்கிறதே, இது எந்த பாவ புண்ணியத்தில் சேரும் எனத் தெரியவில்லை.

'நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா'

எனும் கவிதையை எழுதியது உண்டு. ஆன்மிகம் என்றாலே கசக்கும் பொருளாகிப் போனது பலருக்கு. தீண்டத்தகாத விசயமாக ஆன்மிகம் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையை ஏற்படுத்த உதவிய பல சடங்குகள் சம்பிராதயங்கள் ஆன்மிகத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவை. ஆன்மிகத்தை இந்த சடங்குகள் சம்பிராதயங்களிலிருந்து விலக்கிப் பார்த்தால் அது ஒரு அருட்பெருஞ் சுவையாகத் தெரியும். ஆன்மிகத்திலிருந்து விசயங்களைக் கற்றுத் தெளிதல் எளிது. வேறுபாட்டினைப் பார்த்தால் எப்படி ஒற்றுமை கண்ணுக்குத் தெரியும்? மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை என்பதை அறிந்து கொள்வோம்.

இப்பொழுது சிந்தியுங்கள், ஆன்மிகம் என்றால் ஒதுங்கிப் போவோரா நீங்கள்?

Monday 17 August 2009

'தோன்றாப் பெருமையனே'

இறைவன் உலகில் தோன்றவே இல்லை என்பது சத்திய வாக்கு. அதெப்படி உனக்குத் தெரியும் எனக் கேட்டால் இதை நிரூபிக்க புதிய செய்முறைப் பயிற்சி ஒன்றை எழுதி அதை விளக்கிக் கொண்டிருக்கமுடியாது. ஒன்றை விளக்க முடியாது போனால் அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? அதுவும் அந்த விளக்கம் முழுவதையும் விளக்க முடியாது இருக்குமானால் அதனால் என்ன பயன்?

இப்படி நினைத்து இருந்தால் எந்த ஒரு விசயத்தையும் அறிந்து கொள்ள இயலாது. கண்கள் குருடாகும் வரை வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவியலாளார் ஒருவரை உலகம் நினைவுப் படுத்திக் கொண்டிருக்காது.

இறைவனுக்குப் பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. இதுதான் உண்மை. இதில் கிருஷ்ணரின் பிறந்ததினம் என வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியெனில் கிருஷ்ணர் கடவுள் இல்லை என்றாகிவிடுகிறது. ஆம், கிருஷ்ணர் இறைவன் இல்லை. அப்படியெனில் சிவனின் திருவிளையாடல்கள் என பலவும், அவரது குழந்தைகள் குமரன், விநாயகர், அவரது குடும்பம் எனப் பேசப்படுவதால் அவரும் இறைவன் இல்லை என்றாகிவிடுகிறது. அவர்கள் மனிதர்கள், அவ்வளவே. ஆனால் நம்மில் பலரால் அவர்களை மனிதர்கள் என ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, காரணம் நமக்குள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. எப்படி நமது பெற்றோர்கள், மூதாதையர்கள் இறந்தபின்னும் வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கிறார்கள் என எண்ணுகிறோமோ அதைப் போலவே இவர்களும் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்.

இதனால் தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வானை எனச் சொல்லி வானுறையில் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். ஆக, வையத்துள் இறைவன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் என்பது இல்லை என்பதாலேயே மனிதர்கள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் உருவாகின. இதில் மனிதனின் சிந்தனை அதிகமாகி இறைவனுக்கு ஒருத் தோற்றம் கற்பிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவாக வாழ்வாங்கு வாழ்ந்தாரை வையத்துள்ளே தெய்வமாகப் போற்றினர். அதன்படி சிவன், முருகன், கிருஷ்ணர் இஷ்ட தெய்வங்கள், குல தெய்வங்கள், ஊர் தேவதைகள் என எல்லாரும் அடங்குவர்.

இதில் ஹரியும் சிவனும் ஒன்று எனச் சொல்வாரும் உளர். ஆனால் இருவரும் வெவ்வேறு. எப்பொழுது ஒன்று தன்னை தனியாகக் காட்டிக்கொள்கிறதோ அப்பொழுது அது அதன் தனித்தன்மையைக் காட்ட வேண்டும்.

மேடு, பள்ளங்கள், உயர்வு, தாழ்வு உள்ள பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவு மேல் சென்று பார்த்தால் எல்லாம் சமமாகத்தான் தெரியும், ஆனால் சமமில்லை என்பதை உற்று நோக்கினால்தான் புரியும். அதிகமாக உற்று நோக்கினால் அதிலும் வித்தியாசம் இருக்காது. இதை உணர்த்தவே ஹரியும் சிவனும் ஒன்று எனக் கொண்டார்கள். இப்படி தோன்றாமலே இருக்கும் இறைவனுக்குத் தோற்றம் கொடுத்து அதிலும் இறைத்தூதர்கள் என பறைசாற்றிக்கொண்டு வாழ்ந்த மனிதர்கள் தங்களை சாதாரண மனிதர்கள் எனச் சொல்லாமல் சென்றது பெரும் குழப்பத்தை விளைவிக்கக் காரணம் ஆனது.

குழப்பமில்லாமல் இருக்க, எது குழப்பம் தருகிறதோ அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் முறை. ஆனால் தெளிவு கிடைக்கும் என்கிற எண்ணத்தில் தெளிவான ஒன்றை குழப்பிக் கொண்டிருப்பதில் நாம் மிகவும் முன்னேறிவிட்டோம். அதன்காரணமாகவே தோன்றாப் பெருமையனின் பெருமைகளை திருவிளையாடல்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அழிவில்லாதவனை அழிந்து பின் வருவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்த தோன்றாப் பெருமையனே என எழுதிய மாணிக்கவாசகரிடம் இதுபற்றிக் கேட்டால் அதற்கு வேறு விளக்கமும் கிடைக்கும், ஏனெனில் அவரே சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருள்வது நீயே என்கிறார். இப்படி இறைவனின் மேல் கொண்டுள்ள பற்றால் எழுதப்பட்ட பல விசயங்கள் இறைவனை கேலிக்குரியப் பொருளாய் பார்க்கும்படி செய்தது எவரின் தவறு எனத் தெரியவில்லை.

இறைவன் தோற்றமில்லாதவன், பிறப்பில்லாதவன், தொடக்கமில்லாதவன், முடிவில்லாதவன், எனச் சொல்லி இன்னபிற கதைகள் சொல்லும்போது தெளிவு பிறப்பதில்லை மாறாக எதுதான் இறைவன் என்கிற கேள்வி எழுந்து விடுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே இனிவரும் சந்ததிகளுக்காவது எவரேனும் ஒருவர் தான் நினைத்ததை, எண்ணியதைச் சொல்லாமல் உண்மையை உரைப்பாரேயானால் இந்த உலகத்துக்கு ஒரு விடை சொல்ல முடியாத கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

'கண்டவர் விண்டில்லை; விண்டவர் கண்டில்லை' எனச் சொல்லும் நிலை ஏற்படாது. இப்படி இதைச் சொன்னவருக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்தது என்பது ஆச்சரியம் தான்.