Monday 4 January 2010

ஆன்மாவைத் தீண்ட இயலாது

ஆன்மா என்பது என்ன?

இதற்கான பதிலைத் தேடிக் களைத்து விடுவோர்தான் அதிகம். ஆன்மா என்பதை உயிர் எனக் கொள்வோரும் உண்டு. ஜீவாத்மா, பரமாத்மா, மகாத்மா என ஆன்மாதனைப் பிரித்துச் சொல்வோர் உண்டு. நாமெல்லாம் அதாவது மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களும் ஜீவாத்மா எனப் பொருள் கொள்ளலாம். மகாத்மா என்பது ஜீவாத்மா கொள்ளும் உயர் பதவி என எடுத்துக் கொள்ளலாம். பரமாத்மா என்பது ஜீவாத்மா, மகாத்மா, ஆன்மா அற்றது என அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. அதாவது பரமாத்மா என்பது ஆத்மா அல்லாத ஒன்றையும் (சூன்ய ஆத்மா) அடக்கிக் கொள்வது எனக் கொள்ளும் பட்சத்தில், அதெப்படி ஆத்மா அல்லாத ஒன்றும் பரமாத்மாவில் அடக்கம் என நினைத்து, உயிர் அற்ற ஜடப் பொருளுக்கும் உயிர் உண்டு என பின்னாளில் சிலர் ஏற்றுக்கொள்ளும்படி அமைய வந்தது எனலாம். இருப்பினும் பரமாத்மா தனித்தே இயங்குவதாகத்தான் கருதப்பட வேண்டும், ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என இவைகளை உள்ளடக்கியது என கருதுவது சரியாக இருக்காது.

ஆக ஆன்மா என்பது உயிர்! இந்த உயிர் எங்கும் நிறைந்து இருக்கிறது. அது காற்றின் வடிவினனாய் இருக்கிறது, காற்று அற்ற வடிவினனாகவும் இருக்கிறது. இப்படி எங்குமிருக்கும் உயிர் என்பதாலேயே அதுதான் இறைவன் எனச் சொல்வது முரண்பாடாகத்தான் முடியும்.

தீண்டல் என்பது என்ன?

தீண்டல் என்பது ஒருவகை உணர்வு. கண்ணும் கண்ணும் தீண்டியது எனச் சொல்வோர் உண்டு. 'நினைச்சேன் பாரு' என டெலிபதி பேசுவோர் உண்டு. தீண்டல் தொடுவது மூலம் மட்டுமின்றி தொடாமலே நடக்கக் கூடும் என அரிய தத்துவத்தைச் சொன்னவர்கள் உண்டு. எண்ணப் பரிமாற்றத்தால் ஏற்படும் தீண்டல் மனத் தீண்டல் எனச் சொல்லலாம். உயிர்த் தீண்டல் என இறைவனை வணங்கும் பொருட்டு ஏற்படுவதாகச் சொல்லப்பட்டாலும், உயிர்த் தீண்டல் என ஒன்று நடப்பதே இல்லை.

பரமாத்மா எனப்படும் ஒன்றும் சரி, பரந்து விரிந்து கிடக்கும் உயிர் எனப்படும் ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என்றாலும் சரி, எந்த வகையிலும் தீண்ட இயலாது. 'என் உயிரேப் போச்சு' எனச் சொல்லக் கேள்விப்படலாம். உயிர் போகும்படி நடந்து கொண்ட ஒரு செயல் ஒரு எண்ணத் தீண்டலேயன்றி உயிர்த் தீண்டல் ஆகாது.

உடலைத் தீண்டினால் உடல் சாகும். உயிர் சாகாது. கல்லைத் தீண்டலாம், கல்லின் உயிரைத் தீண்டலாகாது.

ஆன்ம பலத்திற்காக வேண்டப்படும் வேண்டுதல்களும், இந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்க வேண்டும் என நினைத்து வாழும் முறைகளும் அவசியமற்றவை.

இதன் மூலம் ஆன்மாவைத் தீண்ட இயலாது என வலியுறுத்தலாம் என கருதுகிறேன்.

தேக பலம் வேண்டி உணவு உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலாம், தியானம் செய்யலாம். ஆன்ம பலம் வேண்டி எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 'உடல் வளர்த்தேனே; உயிர் வளர்த்தேனே' என்பது மிகவும் ரசனையான வரிகள், ஆனால் உயிர் வளர்வதுமில்லை, உயிர் ஒடுங்குவதுமில்லை.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.

எத்தனையோ சுடர் எரியும், சூரியச் சுடர் முதற்கொண்டு. சூரிய வெப்பத்தைத் தீண்டும் சக்தி எவருக்கும் இல்லை. எங்கள் ஊரில் கதையாகச் சொல்வார்கள். ஒருவர் சூரியனைத் தொட்டுவிட வேண்டுமென பறவையில் மேல் அமர்ந்து சூரியனுக்கு அருகில் பறந்து சென்றாராம், ஆனால் பறவையும் அவரும் வெந்து போய் கீழே விழுந்துவிட்டார்களாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படி ஒருவர் அத்தனை தைரியத்துடன் சூரியனைத் தொட வேண்டுமென பறவையில் அமர்ந்து சென்றார் என, அதுமட்டுமின்றி எப்படி இவர்களால் இப்படியெல்லாம் ஒரு கதையை உருவாக்க முடிந்தது என. அந்த‌ கதைக்கான உண்மையான அர்த்தம் எனக்கு இதுநாள் வரையும் தெரியவில்லை, ஆனால் இப்போது புரிகிறது, ஆன்மாவைத் தொட வேண்டுமென நினைப்பவர்களின் நிலையும் அதுதான் என‌.

பாரதி பாடலைக் குறிப்பிட்டேன், அதற்கான அர்த்தம் ஒரு மகாகவிஞனுக்குள் எழுந்த ஓர் அரிய அற்புத சிந்தனை. சிந்தனையில் தீண்ட முடியும் என பாரதி முயன்றார், ஆனால் சிந்தித்துப்பார்த்தால் எந்த ஒரு சிந்தனையாலும் கூட ஆன்மாவைத் தீண்ட இயலாது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

கண்கள் மட்டும் கலங்குகிறது. எனது கண்ணீரால் கூட ஆன்மாவைத் தீண்ட இயலவில்லை.

No comments: