Saturday 14 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 3

3. நாராயணி

நாச்சியார். வசுதேவனின் தங்கை. பெருமாள்பட்டியில் இருந்து முதல் பட்டதாரியாக விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். வசுதேவன் தனக்குப் படிப்பு ஏறவில்லை என விவசாயம் மட்டுமே தனக்குப் போதும் என இருந்து கொண்டார். வசுதேவனுக்கு பதினைந்து வயது இருக்கும் போதே தனது பெற்றோர்களை இழந்தார். நாச்சியாருக்கு எல்லாமே வசுதேவன் என ஆனது. அந்த ஊரில் வசுதேவனின் தாத்தாவின் தாத்தா கட்டியதுதான் பெருமாள் கோவில். இப்பிணைப்பின் காரணமாகவோ என்னவோ நாச்சியாருக்கு பெருமாள் மீது நிறைய பிடித்தம் ஆனது.

நாச்சியார் தான் படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என பாப்பநாயக்கன்பட்டியில் சென்று பள்ளியில் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது வழக்கம். அதோடு பெருமாள்பட்டியில் உள்ள பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித்தருவதும் உண்டு. இதற்கு எல்லாம் பணமாகப் பெற்றுக் கொள்ளக்கூடாது என ஒரு சேவையாகவே செய்து வந்தார். அதைத் தவிர்த்த நேரங்களில் எல்லாம் விவசாயம், பெருமாள்தான் அவரது கனவும், வாழ்வும். இப்படிப்பட்ட சேவை மனமோ என்னவோ திருமண வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நாச்சியாரின் மனம் ஈடுபடவே இல்லை.

வசுதேவன் பல வருடங்கள் காத்து இருந்து, தங்கையின் மனம் மாறாது என அறிந்த பிறகு தான் ஒரு திருமணம் பண்ணிக்கொண்டார். மணப்பெண் கோமதி உள்ளூர் மற்றும் அதிகம் படிக்கவில்லை என்பதாலும், நாச்சியார் நல்ல பழக்கம் என்பதாலும் நாச்சியார் அந்த வீட்டின் இளவரசியாகவும் பின்னர் மகாராணியாகவும் வலம் வந்தார், வருகிறார். வசுதேவனுக்கு 23 வயதில் யசோதை எனும் ஒரு பெண் பிள்ளை மட்டுமே. படிப்பில், விளையாட்டில் மிகவும் சுட்டி. யசோதை மதுரை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவப் படிப்புதனை முடித்து இருந்தார். யசோதைக்கு பாப்பநாயக்கன்பட்டி அறிவியல் வாத்தியார் மாணிக்கவாசகரின் மகன் சுந்தரவேலன் மீதான காதல் பாப்பநாயக்கன்பட்டி பள்ளியில் மலர்ந்த ஒன்று அது மதுரை மருத்துவ கல்லூரி வரை வளர்ந்து இருந்தது. இவர்களின் காதல் குறித்து வசுதேவனும் அறிந்தது இல்லை, மாணிக்கவாசகரும் அறிந்தது இல்லை. தனது காதல் நிறைவேற தனது அத்தை நாச்சியாரை நிறையவே நம்பி இருந்தார் யசோதை.

தனது இடது தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சியை கூர்ந்து கவனித்தாள் பூங்கோதை. அது பூங்கோதையைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தது. அதனுடைய வண்ணம் பேரழகாக இருந்தது. இந்த உலகில் எதையும் எட்டி நின்று பார்த்துக் கொண்டால் மட்டுமே பேரழகாக தெரியும், அருகில் சென்றால் பேரழகு மறைந்து போகும் எனும் ஒரு சிறு வழக்கம் உண்டு, ஆனால் பேரின்பம் கொண்ட மனதுக்கு தொலைவிலும் சரி, அருகிலும் சரி பேரழகாக மட்டுமே தெரியும்.

''கோதை, இந்த பட்டாம்பூச்சி இப்போ எதுக்கு வந்து உன்மேல உட்கார்ந்து இருக்கு, நான் சொல்ற கதையை கேட்கவா'' எனச் சிரித்தார் நாச்சியார்.

''தெரியலைம்மா, கதை கேட்கனும்னு வந்து இருக்குமோ, கதையைச் சொல்லுங்கம்மா''

பட்டாம்பூச்சி பறந்து போய்விடக்கூடாது என ஆடாமல், அசையாமல் அமர்ந்து இருந்தாள் பூங்கோதை. இந்த உலகில் நடனம் என ஆடுவதற்கு நடராசர் பெரும் பெயர் பெற்றவர். ஆனால் அவரே கயிலையில் இருந்து வந்து கண்ணனின் நடனம் காண வந்ததாக பேரழகு மிக்க கற்பனை. அந்தளவுக்கு அருமையான நடனம் ஆடும் வல்லமை கண்ணனுக்கு உண்டு, அவன் ஆடி வந்தால் இந்த உலகம் எல்லாம் ஆடும் எனவே கண்ணனை ஆடாமல், அசங்காமல் வா கண்ணா என அவன் மீதான காதலை வெளிப்படுத்தும் கவித்துவம் பேரழகு. அதே சூழலை பூங்கோதை பட்டாம்பூச்சிக்காக செய்து கொண்டு இருந்தாள்.

''இந்த பட்டாம்பூச்சி உருமாற்றம்தனை கொள்ள பல வருடங்கள் எடுத்துக்கிறது இல்லை. இந்த உலகில் உள்ள உயிரினம் எல்லாம் வெவ்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தவை என்பதற்கு இந்த பட்டாம்பூச்சி எடுத்துக்காட்டு. டைனோசர் காலத்து பட்டாம்பூச்சி, அப்போ உண்டான வெகு மோசமான கால சூழலில் டைனோசர் அழிந்து போனாலும் அழியாம இருந்து கொண்டது இந்த பட்டாம்பூச்சி''

நாச்சியார் சொன்ன விசயத்தைக் கேட்ட பூங்கோதை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

''இத்தனை வருசமாகவா இருக்கு இந்த பட்டாம்பூச்சி''

''ஆமா கோதை, பட்டாம்பூச்சிகள் எல்லாம் பூக்கள் உள்ள தாவரங்கள் வரும் முன்னமே இந்த உலகில் வந்த ஒன்று. நீ கவனிச்சிப் பார்த்தா நல்ல இலைகளைத் தேடித் தேடிப் போய் முட்டை இடும். அந்த முட்டையில் இருந்து வெளி வரும் இலார்வா, அதன் பின்னான பூச்சி எல்லாம் இலையை மட்டுமே உணவாகக் கொள்ளும். அதற்குப் பிறகு பட்டாம்பூச்சி உருவமாற்றம்தான் பூக்களில் போய் உணவு கொள்ளும் வழியை கற்றுத் தந்தது''

நாச்சியார் சொன்னதும் பட்டாம்பூச்சி சட்டென பூங்கோதையின் இடது தோளில் இருந்து பறந்து போனது. தன்னை கொஞ்சம் அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டாள் பூங்கோதை. அடுத்து சில நிமிடங்களில் நிறைய பட்டாம்பூச்சிகள் அந்த அறையை பேரழகாக மாற்றிக் கொண்டு இருந்தது.

''உங்க கதையைக் கேட்க எல்லோரையும் கூட்டி வந்து இருக்கும்போலம்மா'' என்றாள் பூங்கோதை.

''கோதை, எனக்கு நிறைய ஆச்சரியமா இருக்கு, என்ன சொல்றதுனு தெரியலை, உனக்குப் பெண் குழந்தை பிறந்தா என்ன பெரு வைப்ப கோதை''

நாச்சியார் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அதே பட்டாம்பூச்சி மட்டும் பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. ஓரிடத்தில் அமராமல் பல பட்டாம்பூச்சிகள் அந்த அறையில் பறந்து கொண்டு இருந்தன.

நாச்சியார் தான் பட்டாம்பூச்சிகள் பற்றி மேலும் சொல்வதா, வேண்டாமா என யோசனையில் மூழ்கினார்.

''நாராயணி'' என்றாள் பூங்கோதை.

(தொடரும்)

Sunday 8 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 2

2. பட்டாம்பூச்சி

உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை மாலை ஐந்தரைமணி வரை மூடி வைத்து விடுவார்கள். வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பூஜைகள் என ஆரம்பிப்பது என வழக்கம். இரவு எட்டு மணிக்கு எல்லாம் கோவில் நடை சாத்தப்பட்டு விடும்.

எல்லா நாட்கள் மாலையிலும் ஏதேனும் ஒரு உணவுப்பொருள் தயார் செய்து வருவோர் போவோர்க்கு எல்லாம் தருவது வழக்கம். சுதாமன் பட்டர் இதனை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என சொன்னார் ஆனால் அது சாத்தியப்படவே இல்லை. சனிக்கிழமை மட்டும் பொங்கல் சுண்டல் என நின்று போனது. பரந்தாமன் வந்த பிறகு இதை அறிந்து இருந்தான். பூங்கோதை வந்த பிறகுதான் தினமும் அன்னம் இடும் பணி தொடங்கியது. கிராமத்தில் இருந்து நாச்சியார் வந்து உதவி செய்து விட்டுப் போவார், பல சமயங்களில் பரந்தாமன் சமைப்பதும் உண்டு.

'சாமி கும்பிட வராங்களோ இல்லையோ, வயிறு நிறைய சாப்பிட்டுட்டுப்  போகட்டும்' என சுதாமன்  பட்டர் அடிக்கடி சொல்வது உண்டு. அன்னம் இடுதல் என்பது பெரிய சேவை. இதனால் சுற்றி இருக்கும் ஊரில் இருந்து பலர் மாலையில் வந்து போவார்கள்.

''கோதை நீ ஓய்வு எடுத்துக்கோ, நானே இன்னைக்கு அன்னம் தயார் பண்ணிருறேன்''

பரந்தாமன் நன்றாகச் சமைக்கக்கூடியவன். பெருமாளுக்கு நெய்வேத்யம் எல்லாம் அவனே தயார் செய்வான்.

''ஒன்னும் இல்லை, நானே செய்றேன்''

''வேணாம் கோதை, நீ சொன்னமாதிரி பிள்ளையா இருந்தா நல்லா இருப்பு கொள்ளட்டும்''

''கோதை''

நாச்சியார் வந்து இருந்தார். நாச்சியார்க்கு வயது அறுபது ஆகிறது. திருமணம் எதுவும் பண்ணாமல் பெருமாளே தன் வாழ்வு என இருந்து கொண்டவர். சில முடிவுகள் எதனால் எடுக்கப்படுகிறது என்பது அந்த முடிவுகளை எடுப்பவர் மட்டுமே மிகவும் தெளிவாகவோ அல்லது குழப்பமாகவோ அறிந்து வைத்துக் கொள்கிறார்கள். நாச்சியார்க்கு இந்த உலகம் குறித்த அறிவு என்பது நிறையவே உண்டு.

''வாங்கம்மா'' பரந்தாமன் வீட்டுக்குள் அவரை அழைத்து வந்தான். பூங்கோதையின் முகத்தைப் பார்த்தார் நாச்சியார்.

''என்னது முகத்தில மாத்தம் தெரியுது'' என்றவர் பூங்கோதையின் நாடி பிடித்து பார்த்துவிட்டு முகம் மலர்ச்சியுடன் சொன்னார்.

''நீ அம்மா ஆகப்போற கோதை''

பரந்தாமன் மனம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. பெருமாளே என வேண்டிக் கொண்டான். பூங்கோதையின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

''உனக்கு நான் துணையா இருக்கேன் கோதை, இந்த முறை நிச்சயம் நல்லபடியா நீ குழந்தை பெத்துருவ''

''எனக்காக வேண்டிக்கோங்கம்மா'' என பூங்கோதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. சில முறை இப்படி கருத்தரித்து கரு எதுவும் தங்காமல் போன துயரம் அனுபவம் கொண்டவள் பூங்கோதை. மருத்துவர்கள் உன் உடம்பு கருத்தரிச்சி அதை வைச்சிருக்க சக்தி இல்லை எனச் சொன்னது உண்டு.

''கவலைப்படாத கோதை'' என ஒரு தாயின் பரிவோடு சொன்னார் நாச்சியார்.

அப்போது ஒரு பட்டாம்பூச்சி பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. நாச்சியார் மெதுவாக புன்னகை புரிந்தார்.

''பட்டாம்பூச்சி பத்தி ஒரு சொல்வழக்கு உண்டு கோதை. மகிழ்ச்சின்றது ஒரு பட்டாம்பூச்சி போல, அதை யாரும் விரட்டிப் பிடிக்க போனா கையில் அகப்படாமல் பறந்து போகும். அதே வேளையில் நாம பேசாம அது பறப்பது இருப்பதுனு பார்த்துட்டு இருந்தா நம்மேல வந்து தானா உட்காரும், அப்படித்தான் இப்போ உன்மேல உட்கார்ந்து இருக்கு, பட்டாம்பூச்சியும், மகிழ்ச்சியும்''

பட்டாம்பூச்சி சிலமுறை பூங்கோதையை சுற்றி வலம் வந்துவிட்டு பறந்து போனது. மனிதர்களோடு இந்த பறவைகள், பூச்சிகள் இனம் எல்லாம் ஒருவித பரிவோடுதான் இருக்கின்றன.

காலம் கடந்து கொண்டு இருந்தது. பூங்கோதையின் மீது அதிக கவனமும் அக்கறையும் கொண்டான் பரந்தாமன். நாச்சியார் துணைக்கு வந்து போனார். இத்தனை வருடங்கள் காத்து இருந்தாலும் தான் தாயாகப்போகும் நிம்மதி பூங்கோதையின் மனம் எல்லாம் நிறைந்து இருந்தது.

எட்டாவது மாதம் ஆகி இருந்தது. ஒரு நாள் பட்டாம்பூச்சி பத்தி ஒரு கதை சொல்றேன் என்றார் நாச்சியார்.

''பட்டாம்பூச்சி பத்தி எதுக்கும்மா'' என்றார் பூங்கோதை.

''ஆண்டாளோட இடது தோளில் இருக்கும் கிளி, மீனாட்சியின் வலது தோளில் இருக்கும் கிளி பத்தி உனக்குத் தெரியுமா கோதை, அது போல உன் இடது தோளில் வந்து உட்கார்ந்துட்டுப் போச்சே பட்டாம்பூச்சி, நீ எத்தனை வருசம் இந்த ஊர்ல இருக்க என்னைக்காச்சும் உன் மேல பட்டாம்பூச்சி உட்கார்ந்துட்டு போயிருக்கா, நானும் இந்த ஊருல அறுபது வருசமா இருக்கேன், என் மேலே எப்பவாச்சும், இல்லையே''

''கிளி கதை என்னம்மா''

''பட்டாம்பூச்சி கதை சொல்றேன், கேளு''

''எங்கே இதை எல்லாம் படிப்பீங்க''

''பெருமாள்தான் என்னோட அறிவு எல்லாம், அவனோட படைப்புகளை பத்தி தெரிஞ்சிக்கிறது எல்லாம் பேரின்பம் கோதை''

அப்போது ஒரு பட்டாம்பூச்சி பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. பூங்கோதையின் உடல் சிலிர்த்தது.

(தொடரும்)

Saturday 7 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்

தலைப்பு தந்த அருணா எனும் இராதை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 

1. அருந்தவப்புதல்வி 

சின்னஞ்சிறு கிராமம். பெருமாள்பட்டி. வயல்வெளிகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும், ஆடுகளும், நாய்களும், பூச்சிகளும், பறவைகளும், கோழிகளும், மாடுகளும் அதோடு மனிதர்களும் செழிப்புடன் இருந்தார்கள். 

கிராமத்தில் மொத்தம் நாற்பது வீடுகள் மட்டுமே. வீட்டுக்கு ஐந்து நபர்கள் என கணக்கில் கொண்டால் கூட மொத்தம் இருநூறு நபர்களே தேர்வார்கள். அதில் பலர் வெளியூருக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கியும் போனார்கள். கிராமத்து திருவிழா என தலைகாட்டிப் போவார்கள். கிராமத்திற்கு என்று பள்ளிக்கூடம் எல்லாம் கட்டப்பட்டு இருக்கவில்லை. பெருமாள்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர்கள்  தொலைவில் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்குத்தான் படிக்க எல்லாம் போக வேண்டும். செம்மண் சாலை மட்டுமே. கிராமத்திற்கு என ஒரே ஒரு கோவில், ஊருக்குப் பெயர் வாங்கித்தந்த பெருமாள் கோவில். அதே ஊரைச் சேர்ந்த பரந்தாமன்தான் அக்கோவிலின் அர்ச்சகர். கோவில் சுற்றி இருந்த நிலங்கள் எல்லாம் ஊருக்குப் பொதுவானது. 

பதினைந்து வருடங்கள் முன்னர் அந்தக் கோவிலின் அர்ச்சகராக இருந்த பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுதாமன் பட்டர் வைகுண்ட பதவியை அடைந்த பிறகு கிராமத்தின் தலைவர் வசுதேவன் தேடி அலைந்து பரந்தாமனை திருத்தங்கலில் இருந்து அழைத்து வந்தார். 

பரந்தாமனுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். கோவில் அருகே ஒரு வீடு ஒன்றை கோவில் நிலத்தில் பரந்தாமனுக்கு கட்டித்தந்தார் வசுதேவன். பரந்தாமனுக்கு இருபத்தி ஒரு வயது ஆனபோது வசுதேவனே மறுபடியும் தேடி அலைந்து கல்லுப்பட்டியில் இருந்து பூங்கோதையை சம்மதிக்க வைத்து தானே முன் நின்று பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் திருமணம் பண்ணி வைத்தார். பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. 

அன்று காலையும் எப்போதும் போல சூரியன் உதித்து இருந்தது. எல்லா வீட்டின் வாசல்களில் கூட்டிப் பெருக்கப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு கோலம் போடப்பட்டு இருந்தன. பரந்தாமன் எப்போதும் போல கோவிலுக்கு கிளம்பினான். பூங்கோதை பட்டு ஆடை உடுத்தி பரந்தாமன் கண்ணே பட்டுவிடுவது போல பேரழகியாகத் தெரிந்தாள். 

''இன்னைக்கு நம்ம பன்னிரண்டாவது வருச திருமண தினம், பெருமாள் நமக்கு கருணையே காட்ட மாட்டாரா''

''நமக்கு குழந்தை இல்லைனு ஆகிப்போச்சு, எதுக்கு வீணா கவலைப்பட்டுக்கிட்டு, ஊருல இருக்க குழந்தைக்கு சேவகம் பண்ணினாள் போதும்''

''நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்ல''

''நீயும் தான் அஞ்சாறு வருசமா சொல்லிட்டு இருக்க, அதெல்லாம் நடக்கிற காரியமா''

''நாம சரியா தேடலை, வசுதேவன் ஐயா கிட்ட சொன்னா தேடிக்  கொண்டு வந்து இருப்பாருல''

''அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும் அவருகிட்ட நாம எதுவும் கேட்க வேணாம்'' 

''பெரியாழ்வாருக்கு கிடைச்ச கோதை போல நமக்கு ஒரு பொண்ணு கோவில் நிலத்தில் கிடைக்காதா''

''இப்படி வெட்டியா கனவு காணாம கிளம்பி வா, கோவில் நடை திறக்க நேரம் ஆகிருச்சு''

''நாளு வேற தள்ளிப் போயிருக்கு, நமக்கு ஒரு பிள்ளை பிறக்கும்''

''இப்படி அப்போ அப்போ சொல்லி சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கிற''

பரந்தாமன் பூங்கோதையின் தலையினைத் தடவியபடி தனது மார்பில் சாய்த்துக் கொண்டான். பல வருடங்கள் பூக்காத, காய்க்காத மரம் சட்டென பூத்து குலுங்குவது எத்தனை மகிழ்ச்சியை அந்த மரத்திற்குத் தருமோ தெரியாது ஆனால் அந்த மரத்தை பல வருடங்களாக வளர்த்து வந்தவருக்கு பெரும் மகிழ்வைத் தருவதாகும். 

கோவில் நடையைத் திறந்தான் பரந்தாமன். புறாக்கள் பறந்தன. கோவில் வளாகத்தை கூட்டிப் பெருக்கினாள் பூங்கோதை. கோவிலுக்குள் இருந்த கிணற்றில் நீர் இறைத்து தெளித்தான் பரந்தாமன். கர்ப்பகிரகத்தை திறந்து சிறு விளக்கேற்றி வைத்தான். பெருமாள் அருகில் சிறு குழந்தை போல தாயார் அமர்ந்து இருக்கும் கோலம். வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்கள் என இக்கோவிலுக்கு வந்து வணங்கியே செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கென நாலாயிர திவ்விய பிரபந்தம்தனில் சில பாடல்கள் பாடி தீபம் ஆராதனை காட்டுவது வழக்கம். 

வெளியூரில் இருந்து சில வேண்டுதல்கள் என வந்து போவோர்கள் உண்டு. பரந்தாமன் புரியும் சேவை எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒன்று. இருவருமே பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தும் இருந்தார்கள். கோவில் சேவை தவிர்த்து கோவில் நிலத்தில் பணிபுரியும் வழக்கம் கொண்டு இருந்தார்கள். அந்த நிலத்தில் இருந்து வரும் பொருட்கள் யாவும் கிராமத்து மக்களுக்கு என பகிர்ந்து தரப்பட்டு இருந்தது. இதை எல்லாம் முறையாக வசுதேவனே பல வருடங்களாக கண்காணித்து வந்தார். பரந்தாமன் வந்த பிறகு அந்த முழு பொறுப்பையும் பரந்தாமனிடம் தந்தார். பரந்தாமனின் நேர்மை வசுதேவனுக்கு பெரும் நிம்மதியைத் தந்து கொண்டு இருந்தது. 

கிராமத்தில் இருந்து சிலர் இந்த நிலத்தில் வந்து வேலை செய்து விட்டுப் போவார்கள். குழந்தைக்கென என்ன என்னவோ கிராமத்துப் பெண்கள் பல யோசனைகளை தந்து போனார்கள். அதெல்லாம் சில வருடங்கள் மட்டுமே, அதற்குப்பிறகு அந்த பெருமாள் மனசு வைச்சாதான் உண்டு என எவரும் குழந்தை பற்றி பேசுவது இல்லை. 

அன்று மதியம் உச்சிகால பூசை முடித்துவிட்டு கோவில் கர்ப்பகிரகத்தின் முன் இருந்த பெரும் வெளியில் பரந்தாமன் அமர்ந்து இருந்தான். தக்காளி, கத்தரிக்காய் என பறித்து வந்து சிறு மூட்டைகளை அங்கே வைத்துவிட்டு பரந்தாமனை பற்றியபடி மயங்கி விழுந்தாள் பூங்கோதை. 

''பூங்கோதை, பூங்கோதை'' பதறினான் பரந்தாமன். 

அங்கே இருந்த தண்ணீர் எடுத்து அவளது முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் விழித்தவளுக்கு குடிக்கத் தண்ணீர் தந்தான். 

''தலை சுத்தி வந்துருச்சி, வெயிலு இன்னைக்கு அதிகம்'' என மெல்லிய குரலில் சொன்னாள் பூங்கோதை. 

''பேசாம உட்காரு, சாயந்திரம் வெயிலு சாஞ்சப்பறம் வேலை செய்யலாம்ல, எல்லாரும் பதினோரு மணிக்கு வீட்டுக்கு போயிருறாங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க'' 

தன்  வயிறு பிடித்தவள் ''என்னமோ மாதிரி வருது'' என எழுந்து கோவில் நடையைத் தாண்டி நடந்தாள். பரந்தாமன் அவளை கைத்தாங்கலாக பற்றியபடி இருந்தான். வாந்தி எடுத்தாள். வாய் முகம் கழுவிட உதவினான் பரந்தாமன். 

''பித்தமா இருக்கும்'' என்றான் பரந்தாமன். 

''பிள்ளையா இருக்குமோ'' என கண்களில் நீர் மல்க பரந்தாமனிடம் கேட்டாள் பூங்கோதை. 

எங்கிருந்தோ வந்த ஒரு பறவை கோவிலில் இருந்த மணியினை அசைத்துவிட்டுச் சென்றது. கோவில் மணியின் ஓசை எப்போதுமே பேரின்பம் தரவல்லது. 

(தொடரும்)