Friday 14 July 2017

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை 

இன்று அனைத்து நகரங்களும் வளர்ந்து நிற்பதற்கு பின்னால் கிராமங்கள் தான் இருக்கின்றன. மனிதனின் பழக்க வழக்கங்கள் அழியாமல் இருப்பதற்கும் உறவின் உன்னத நிலையையும் கிராமங்கள் தான் புரிய வைக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் முறையையும் சமயம் மனிதனின் வாழ்வோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது அடியார்க்கெல்லாம் அடியார்.

இக்கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்திற்குள் பயணம் செய்த உணர்வை கொடுக்கும்.நகரத்தில் ள்ள இளைய சமுதாயத்தினர்க்கு இந்நாவல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்

கிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையில் தொடக்கி உறவுகளின் முக்கியத்துவத்தையும் சமயம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தையும் இக்கதையின் மையகருத்தாக எடுத்து உணர்த்தியிருப்பது சிறப்பு.


இக்கதையின் சில இடங்களில் உலகநியதிகளை எடுத்துரைப்பது மிகவும் சிறப்பு.அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லவும் மறக்கவில்லை.அதை வாசகர்களுக்கு புரியும்படி மிக எளியமுறையில் விவரித்துள்ளார் இராதாகிருஷ்ணன்.சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வு முறை பற்றி கூறியிருப்பது அற்புதம். இதன் மூலம் இவர் மிகச் சிறந்த அறிவியலார் என்பதை நிரூபித்துளார்

கடவுள் சமயம் சார்ந்த விஷயங்களை எழுதுவதற்கு அதை பற்றிய அறிவும் புரிதலும் மிக முக்கியம். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார். ஆங்காங்கே இறைவனை பற்றி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் அவர்களின் சிறப்புகளை சொல்லியிருக்கிறார். மனிதன் வாழ்வதற்கு அன்பு ஒரே அடிப்படை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார்

அடியார்க்கெல்லாம் அடியார் என்னும் இந்நாவலில் பல அரிய தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் தன்னுடைய மிகச் சிறப்பான எழுத்துக்களால் புரியவைத்தமைக்கு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.”யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகஎன்று தான் ஒவ்வொரு கதை ஆசிரியரும் தம் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். இராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த எண்ணத்திலேயே தன்னுடைய நாவலை வெளி உலகிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்பதே என்னுடைய எண்ணம். இது போன்ற பல நாவல்கள் எழுதி எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நன்றி  

                                 
அன்புடன்                                                                                                                                                  
சு.சந்திரகலா  

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை 

இந்த நாவலைப் படித்தபோது உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல் இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல் கூட கடந்துவிட்டேன்.

ஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில் ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.

காதல் சிவனை வென்றது என சொல்லலாமா என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும் குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என குறிப்பிடலாம்.

மதுசூதனன் மற்றும் வைஷ்ணவி இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின் பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில் காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

என்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை. அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.

காதல்தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.

அன்புடன்
ஹனுமலர்


Tuesday 16 May 2017

ஆட்டுக்கு வளைகாப்பு

ஆடு கர்ப்பமாக இருக்கிறது என அறிந்து பெரு மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடிச் சென்றேன்.

''அம்மா அம்மா ஆட்டுக்கு வளைகாப்பு பண்ணுவோம்மா''

அம்மா என்னை முறைத்துப் பார்த்தார்கள்.

''ஏன்டா இப்படி இருக்க ஊருல என்ன பேசுவாங்க தெரியுமா''

''ஆட்டோட கர்ப்பத்துக்கு நம்ம தலைவர் வீட்டு கிடாதான் காரணம் அதையும் கூட்டி வரலாம்மா, தயவு செஞ்சி சரினு சொல்லும்மா''

''என் வயித்துல எப்படிடா நீ வந்து பொறந்த, நீயெல்லாம் ஆட்டுக்குப் பொறக்க வேண்டியவன், போயிரு''

அம்மாவின் கோபம் எனக்கு எரிச்சல் தந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் வளைகாப்பு விழா ஏற்பாடு பண்ண வேண்டும் என திட்டமிட்டு வரும் ஞாயிறு அன்று விழா நடத்த ஒரு சின்ன அரங்கம் பிடித்தேன். ஆட்டிடம் செய்தி சொன்னேன். ஆடு என்ன சொல்றான் இவன் என்பது போல என்னைப் பார்த்தது.

கால்கள் மட்டுமே உள்ள ஆட்டுக்கு கொலுசு போலத்தான் வளையல் போட இயலும் என அறுபது வளையல்கள் அதன் நான்கு கால்களுக்கு அளவெடுத்து வெளியூரில் உள்ள கடையில் சொன்னேன்.

''யாருக்குவே''
.
''ஆட்டுக்குண்ணே''

''புத்தி கெட்டுப் போச்சாலே, அவனவன் பெத்த புள்ளைக்கே வளைகாப்பு செஞ்சி வைக்கமாட்டீங்கா இவனைப் பாருவே, கலிகாலம். சரி சரி கொடுத்துட்டு போ நாலு நாளுல செஞ்சி வைக்கேன்''

''சனிக்கிழமை வேணும்''

''சரிவே, வெள்ளிக்கிழமை வந்து வாங்கிக்கோ''

பூக்கடையில் சென்று நின்றேன். ஆட்டுக்கு மாலை போட்டால் மாலை தரையில் தட்டக்கூடாது. அந்த ஆடு தன்னை வெட்டப் போகிறார்களோ என எண்ணவும் கூடாது என யோசித்தேன்.

''என்ன தம்பி, என்ன வேணும்''

''சந்தனம், குங்குமம் வேணும்''

''வேற''

''ஆட்டுக்கு ஒரு நல்ல மாலை செஞ்சி தாங்க''

''என்ன கிடா வெட்டா''

''இல்லை ஆட்டுக்கு வளைகாப்பு''

''முன்னமே சொல்ல வேண்டிதான தம்பி, தப்பா பேசிட்டேனே, சரி ஆடு எவ்வளவு உயரம்''

எப்போது ஆட்டின் உயரம் அளந்து இருக்கிறேன். கால் அளவு அளந்த எனக்கு ஆட்டின் உயரம் தெரியவில்லை.

''என்னோட தொடை உயரத்துக்கு இருக்கும்ணே''

தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எட்டிப்பார்த்தார்.

''இப்பவே கட்டித்தரவா''

''சனிக்கிழமை வேணும்''

அங்கிருந்து நேரடியாக துணிக்கடைக்குப் போனேன். எனக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா அல்லது ஆட்டுக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா என யோசித்தபடி உள்ளே சென்றேன். சந்திரன் அண்ணனை அங்கே பார்ப்பேன் என நினைக்கவில்லை. அவர் கண்ணில் படாமல் ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டேன்.

சந்திரன் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள் தான். அந்தப் பெண் கூட பக்கத்து ஊர்ப் பையனை காதல் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் முன்னர் ஓடிப்போய்விட்டாள். சில வாரங்கள் கழித்து வந்த அவர்களை இந்த சந்திரன் அண்ணன் வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். அந்தப் பையன் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. என் மாமன் பையன் கணேசன் தான் சற்று தொலைவில் உள்ள பூச்சிக்காட்டில் ஒரு வீடு தந்து அடைக்கலம் தந்து இருக்கிறான். அந்த பெண் கூட மாசமாக இருப்பதாக கணேசன் சொன்னான். நான் பூச்சிக்காடு எல்லாம் போனது இல்லை. இந்த வளைகாப்புக்கு அவனை அழைக்கலாம் என்றால் வேலை காரணமாக டில்லி செல்வதாக போன வாரம் சொல்லி இருந்தான்.

ஆடு கருப்பு நிறம். அதற்கு என்ன நிறம் பொருத்தம் என கடையில் சேலை எடுக்க அமர்ந்தேன். துணியாக எடுத்து தைக்கலாம் என்றாலும் சேலையாக எடுத்தால் நல்லது என எண்ணினேன். நீல நிறத்தில் பச்சை நிறம் கலந்தது. சேலையில் இது முன்புறம் வருவது, ஜாக்கெட் பீஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.

''சேலை ஆட்டுக்குத்தான்''

''ஆட்டை கல்யாணம் கட்டியிருக்கிகளா''

என்னவொரு சேட்டை அந்தப் பெண்ணுக்கு என நினைத்தேன். அவளது கழுத்தை கவனித்தேன். தாலி ஒன்றும் தட்டுப்படவில்லை. மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.

''ம்ம்ம் நான் வளர்க்கிற ஆடு அது. கட்டினா உங்களைத்தான் கட்டிக்கிறலாம்னு இருக்கேன்''

''ஆமா காத்துக்கிட்டு இருக்காக''

சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்ததால் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சு கொடுக்கக்கூடாது என சேலையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. யார் எவர் என பிறகு விசாரிக்க வேண்டும். பக்கத்தில் கிடாவுக்கு ஒரு வேட்டியும் சட்டையும் வாங்கினேன்.

சேலையுடன் தையல்கார கோமதி அக்கா வீட்டுக்கு வந்தேன்.

''ஒரு சத்தியம் பண்ணுக்கா''

''என்னடா வந்ததும் வராததுமா சத்தியம் பண்ண சொல்ற''

''இப்போ ஒரு சேலை கொடுப்பேன் அதை என்னோட ஆட்டுக்கு தைச்சி கொடுக்கணும்''

''நீ லூசுன்றது சரியாத்தான்டா இருக்கு''

பட்டென என்னை லூசு என அந்த அக்கா சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

''சரிடா சேலையைக் கொடு''

சேலையை வாங்கிப் பார்த்ததும் அக்காவின் முகத்தில் ஏகப்பட்ட ஆச்சரியம்.

''டேய் இது விலை உசந்த பட்டாச்சேடா, கொடுத்து வைச்ச ஆடுதான்''

''ஆட்டோட அளவுக்கு தைச்சிக் கொடுக்கா, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சொல்லுக்கா''

''போடா ஆட்டுக்கு சேலை தைக்கிறேன்னு சொன்னா யார் என்கிட்டே தைக்க கொடுக்கமாட்டாங்க. யார்ட்டயும் சொல்லலை. இன்னைக்குப் போய் ஆட்டுக்கு அளவு எடுத்துக்கிறேன்''

''அப்படியே இதை கொஞ்சம் வெட்டிக்கொடுக்கா''

''என்னடா இது''

''கிடாவுக்கு சட்டை வேட்டி''

''சரிடா''

''அளவு''

''போடா நான் பாத்துக்கிறேன்''

குங்குமம், சந்தனம் இவற்றை ஆட்டுத் தொழுவத்தில் ஒளித்து வைத்தேன்.

வளைகாப்பு பத்திரிக்கை அடிக்க வேண்டும் என வெள்ளையாபுரம் சென்றேன்.

''யாருக்கு வளைகாப்பு''

''ஆட்டுக்கு''

''ஆடுனு மட்டும் போட்டு இருக்கு, ஆட்டுக்குப் பேரு இல்லையா''

''ஆட்டுக்கு பேரு ஆடுதான், இது ஆடு, கிடா படம்''

நான் எழுதிக் கொடுத்த தாளினை தலையில் அடித்துக் கொண்டார்.

''எவ்வளவு காப்பி வேணும்''

''முன்னூறு, இல்லையில்லை முன்னூற்றி மூணு''

''இந்த ஞாயிற்றுக்கிழமைனு போட்டு இருக்கு, இப்ப வந்து தர, இன்னைக்கு செவ்வாய்க்கிழமை''

''சும்மாதானே இருக்கீங்க''

''எகத்தாளம்''

''வெள்ளிக்கிழமை காலையில வரேன்''

''சரி அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ''

அங்கேயே ஒரு உணவுக்கடையில் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், பருப்பு சாதம் என உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

தலைவரிடம் சென்று விபரத்தைச் சொன்னேன். கலகலவென சிரித்தார்.

''முட்டாப்பய வேலை எல்லாம் நீ செய்ற, சரி வந்து சனிக்கிழமை சாயந்திரம் பத்திட்டுப் போ''

''ஐயா யார்கிட்டயும் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்ல வேணாம்''

''ரகசிய வளைகாப்பா''

''ஊரறிய வளைகாப்பு தான்''

மீண்டும் சிரித்தார்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. சேலையை அட்டகாசமாக கோமதி அக்கா தைத்து இருந்தார். ரவிக்கை கூட தைத்து இருந்தார். வேட்டி சட்டை எல்லாம் எப்படி துல்லியமாக வெட்டினாரோ தெரியவில்லை.

வெள்ளையாபுரம் சென்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கை வாங்கி வந்தேன். அவருக்கே முதல் பத்திரிகை. வளையல்களை வாங்கிக்கொண்டு ஒரு பத்திரிக்கையை அங்கே தந்தேன். நேராக துணிக்கடைக்கு சென்று அந்தப் பெண்ணைத் தேடிப் போய் பத்திரிகை தந்தேன்.

''நிசமாலுமா''

''ம்ம்''

''வராம இருந்துராதீங்க''

''கட்டாயம் வரேன்''

அவளது பெயர் வனிதா. பூச்சிக்காடுதான் சொந்த ஊரு. பெண்ணின் பெற்றோர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். கணேசனுக்கு தெரிந்த பெண் தான். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வீடு வந்து சேர்ந்தேன்.

''அம்மா இன்னைக்கு எல்லோருக்கும் வளைகாப்பு பத்திரிகை தரனும்''

''உனக்கு அறிவே இல்லையா, என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற, உனக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு ஊரெல்லாம் பேசப் போறாங்க''

அம்மா பத்ரகாளியானார். நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அப்பா சத்தம் கேட்டு வந்தார்.

''உங்க புள்ள என்ன காரியம் பண்ணி இருக்கு பாருங்க''

எனது கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தார்.

''நல்ல காரியம் பண்ணி இருக்கான். நம்ம பேரைக் கூட போட்டு இருக்கான்''

''உங்க ரெண்டு பேரை என்ன பண்றது''

''நீங்க வர வேண்டாம், நானே பத்திரிகை போய் வைக்கிறேன்''

''அதுதான் முறை''

''என்னங்க முறை கிறைங்கிறீங்க''

''போகட்டும்''

நானாக மட்டும் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை தந்தேன். என்ன நினைத்தார்களோ வரோம்பா என்றார்கள். சந்திரன் அண்ணன் முகத்தில் மட்டும் பெரும் சோகம் நிறைந்து இருந்தது போல எனக்குத் தென்பட்டது.

சனிக்கிழமை அன்று மாலை வாங்கி வந்தேன். அன்று முழுவதும் மிகவும் படபடப்பாக இருந்தது. தலைவர் வீட்டில் சென்று அன்று மாலையில் கிடாவை அழைத்து வந்தேன். நன்றாக ஆடு மற்றும் கிடாவை குளிப்பாட்டினேன். ஆட்டுத் தொழுவத்தில் தான் அன்று உறங்கினேன்.

மறுநாள் காலை ஆட்டிற்கு ரவிக்கை சேலை அணிவித்தேன். கிடாவுக்கு சட்டை வேட்டி அணிவித்தேன். என் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. ஊரெல்லாம் வளைகாப்பு பற்றிய பேச்சாக இருந்தது. வீட்டுக்கு ஒருவர் என பெண்கள் கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ஆடு, கிடா சற்று மிரண்டது. பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆடு என்னைப் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பார்த்தேன். கிடா தன்னை வீரன் என எண்ணிக்கொள்ளத் தொடங்கியது.

வனிதா தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தாள். என் அப்பா அம்மாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் பேசிக்கொள்ள தொடங்கினார்கள். வனிதா என்னுடன் வந்தாள்.

''எவ்வளவு கூட்டம்''

''அன்பை போற்றும் மனிதர்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்காங்க, எதையும் ஒரு தெய்வ நிலையில் பார்க்கும் மனம் அவங்களுக்கு இருக்குங்க''

அம்மாயிதான் முதலில் ஆட்டுக்கு சந்தனம் குங்குமம் வைத்தார். அதன் பின் அப்பத்தா வந்தார். அவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பெருமிதம் கொண்டார்கள். அம்மாவும் வந்தார்கள். இப்போது என்னவோ அவர்களிடம் பெரும் மகிழ்ச்சி இருப்பது போல தோனியது. என்னிடம் நேராக வந்தார். வனிதா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

''யாரும் உனக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்கனு நினைச்சேன், என் தப்புதான்''

அம்மா என்னிடம் அப்படி சொல்லிவிட்டு வனிதாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போனார்.

வனிதாவின் முகத்தில் வெட்கம் கண்டேன்.

ஆடு, குங்குமம் சந்தனம் என தன்னை நிரப்பிக் கொண்டு இருந்ததை பார்த்தபோது ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவே எனக்குத் தென்பட்டது.

எல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். வந்தவர்களில் ஒருவர் வருமானத்துக்கு வைக்கிற விழானு நினைச்சேன் ஆனா யார்கிட்டயும் காசு கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டியேப்பா என ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தார். வேண்டாம் என மறுத்தாலும் அவர் கேட்பதாக இல்லை. சாப்பாட்டின் சுவையை விழாவின் சிறப்பை பெருமை பேசாதவர்கள் ஊரில் இல்லை.

அன்று இரவு களத்துமேட்டில் அமர்ந்து இருந்தேன். சந்திரன் என்னைத் தேடி வந்தார். வந்தவர் என் கைகளைப் பிடித்தபடி கலங்கி நின்றார்.

''என் கண்ணைத் தொறந்திட்ட தம்பி''

காதல் செய்து ஓடிப்போன சந்திரன் அண்ணன் மகளின் திருமண வரவேற்பு மற்றும் வளைகாப்பு என அதே அரங்கத்தில் ஒரு சேர பத்து நாட்கள் கழித்து வெகு விமரிசையாக நடந்தது.

முற்றும்