Tuesday 13 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 17

''அத்தை  ரொம்ப நல்லா சமைச்சி இருந்தாங்க''

எனது கவனம் எல்லாம் காயத்ரியின் அக்காவின் செயல்பாட்டில் இருந்தது.

''முருகேசா, நான் சொல்றது காதுல வாங்கலையா''

''அம்மா எப்பவும் நல்லா சமைப்பாங்க''

எந்த ஒரு ஜீவனும் இல்லாமல் பேசி வைத்தேன். அதற்குள் அம்மா, பால் காய்ச்சி கொண்டு வந்தார்கள்.

நாங்கள் மூவரும் மாடிக்கு வந்தோம். சுபத்ராவிடம் சொல்வதா வேண்டாமா எனும் யோசனையுடன் காயத்ரி அக்கா விசயத்தை காயத்ரியின் அனுமதி இல்லாமல் சொல்லி முடித்தேன்.

''இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்''

''சுபா, என்ன சொல்ற நீ''

''அவங்களுக்கு பிடிச்ச லைஃப் தேடிக்கிட்டாங்க, இதுல என்ன இருக்கு''

''ஒரு முறை இருக்கு சுபா''

''என்ன முறை''

''வாழ்க்கை முறை, நெறிமுறை''


''ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்து கொண்டு, தனது சந்ததிகளை பெருக்குவதில் மிகவும் குறியாக இருக்கும், அப்படிப்பட்ட உயிரினமே இந்த பூமியில் வாழ தகுந்த அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும். அதுமாதிரிதான், மனுசங்களும். தனக்கு ஏதாவது சாதகம் நடைபெறக் கூடியதா இருந்தா அதுபக்கம் தனது நிலையை வைத்து கொள்வார்கள். இப்படி வாழ்ந்து கொண்டிருந்தவங்க ஒரு சமூகமா அமைஞ்சப்போ, இந்த மாதிரி தனக்கு மட்டுமே சாதகமா நடந்து கொண்டிருந்ததை ஒரு சிலரால் சகிச்சிக்க முடியலை. அதனால கொண்டு வரப்பட்டதுதான் நெறிமுறைகள், மரியாதை, கலாச்சாரம் எல்லாமே. ஆனா பரிணாம விதிப்படி இது எல்லாம் சரியானதுதான்''

சுபத்ராவின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது, ஆனால் அதுதான் நிதர்சனமோ என எண்ண வைத்தது.

''சுபா, நீ சொல்றது சரிதான், ஆனா...''

''என்ன ஆனா...  இப்போ நீ காயூவை காதலிக்கிறே, நாளைக்கே நீ காயூவை விட்டுட்டு வேற பொண்ணோட வாழ மாட்டேன்னு எப்படி உன்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா அப்படி நடக்காது, நடக்க கூடாதுன்னு நீங்க இரண்டு பேருமே முடிவோட இப்போ இருப்பீங்க, அப்படிப்பட்ட நினைவுகளுக்கு இடையூறு வந்தா என்ன பண்ணுவீங்க, நீங்க இரண்டு பேரும் முயற்சி பண்ணுவீங்க, எந்த விசயம் டாமினேட் பண்ணுதோ அதுவே கடைசியில ஜெயிக்கும், உதாரணத்திற்கு என்னை உனக்கு ஒரு போட்டியானவளா காயூ இப்போ நினைச்சிட்டு கலங்கிட்டு இருப்பா''

இப்படி சுபத்ரா சொல்வாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனக்கு மனதில் எவரோ கடப்பாரை கொண்டு பெயர்ப்பது போன்று இருந்தது. காயத்ரியின் முகம் கூட சற்று மாறிப் போனது. திடீரென சுபத்ரா ஆங்கிலத்திற்கு மாறினாள்.

''This world is full of uncertainties, anything can happen to anyone at anytime. However the probability of that happening is very limited on that given occasion and on that given situation''

''ரொம்ப தத்துவம் எல்லாம் பேசற சுபா. நீ எத்தனை நாளைக்கு இந்த ஊருல இருக்க போற, நீ போன காரியம் என்ன ஆச்சு''

''முருகேசா,  என்ன பேச்சை மாத்துற. இதைத்தான் இப்போ சொன்னேன், உனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்குல. எது எப்ப வேணும்னாலும் நடக்கும், நடக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையனும், அமைச்சிகிரனும். இப்போ you feel me as a threatening to your relationship''

காயத்ரிக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''சுபா, என்ன பேசுறீங்க நீங்க, உங்களுக்கு முருகேசுவை பிடிச்சி இருந்தா நேரடியா பேசுங்க, அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சி பேசறீங்க. நானே என்னோட அக்கா பண்ணினது பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கேன், நேரம் காலம் புரியாம பேசறீங்க''

''காயூ, ஆமா நான் முருகேசனை காதலிச்சேன், இன்னமும் காதலிக்கிறேன், அவன் மனசை மாத்துறேனா இல்லையா பாரு, இந்த ஊருலதான் இன்னும் ஒரு மாசம் இருப்பேன், தேவைப்பட்டா ஒரு வருசம் கூட இருப்பேன். என்ன நடக்குதுன்னு பாரு, வரேன் பை''

சுபத்ராவின் பேச்சு எனக்கு கனவில் நடந்தது போன்றே இருந்தது. அவ்வாறு பேசியவள்  வேகமாக கிளம்பினாள்.

''சுபா ஒரு நிமிசம் உட்கார், நீ என்ன பேசினனு தெரிஞ்சிதான் பேசினியா. படிக்கிற காலத்தில ஒரு நல்ல பிரண்டா பழகிட்டு இப்படி பேசற, அதுவும் காயூ முன்னால''

''ஏன், காயூ இல்லாதப்ப பேசி இருந்தா இனிச்சி இருக்குமா, ஆசை ஆசையா உனக்கு சோறு கொண்டு வருவேனே, உனக்கு ஒன்னுனா நான் ஓடி வருவேனே. என்னோட காதல் உனக்கு புரியலையா! I will take you away from her, this is for sure. Bye''

சுபத்ரா காயத்ரியின் அக்கா போனது போலவே வேகமாக கீழிறங்கி சென்றாள். நாங்களும் கீழிறங்கினோம். என் அம்மாவிடம் சென்று வருகிறேன் அத்தை என சொல்லிவிட்டு கிளம்பினாள். சிறிது நேரம் கழித்து என் அப்பா வந்தார். என் அப்பாவிடம், அம்மாவிடம் சுபத்ரா பற்றிய விசயத்தை சொல்லி வைத்தேன். அம்மாவிற்கு மிகவும் கோபமாக இருந்தது. அப்பா யோசனையோடு இருந்தார்.

''என்னப்பா பண்ணலாம்''

''என்கிட்டே கேட்டா எப்படி, நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தா அவ என்ன பண்ண முடியும்''

''முருகேசு, நீ கவலைப்படாத, அவளோட காலை நான் ஓடிச்சி விடுறேன், அடுத்தவாட்டி வரட்டும், நல்ல பொண்ணுன்னு நினைச்சா இப்படியா பேசிட்டு போறா''

''அம்மா, கால் எல்லாம் ஒடிக்க வேண்டாம். அப்பா, காயத்ரியோட அக்கா வீட்டை விட்டு கிளம்பி போய்ட்டாங்க, ரங்கநாதன் வந்து கூப்பிட்டு போய்ட்டார், உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க''

''என்ன சொல்ற''

''ஆமா, இனிமே வரமாட்டாங்க, அப்படியே கல்யாணம் பண்ணி வாழ போறாங்க''

''என்னம்மா காயத்ரி இது எல்லாம்''

காயத்ரி அழத் தொடங்கினாள். அவளுக்கு எத்தனை வலிக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

''நீ ஏன்மா அழற, அதுதான் சரின்னா நல்லா இருந்துட்டு போகட்டும், கல்யாண தேதி இடம் தெரிஞ்சா போயிட்டு வருவோம். நீ கவலைப்படாதம்மா''

அப்பா ஆறுதல் வார்த்தை சொன்னார். அம்மா காயத்ரியின் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

''இங்க பாரு காயத்ரி, நீ எதை நினைச்சியும் மனசை குழப்பிக்காத, உன்னை பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. இந்த வயசுல உனக்கு இத்தனை சோதனையா? கவலைபடாத  நாளைக்கு ரங்கநாதன் வீட்டுக்கு போவோம், உன் அக்காகிட்ட பேசுவோம். சந்தோசமா இருக்கட்டும், எப்ப இருந்தாலும் அந்த வீட்டுக்கு போகப் போற பொண்ணுதான''

காயத்ரி சற்று சமாதானம் அடைந்தது போன்றே தெரிந்தது. நானும் காயத்ரியிடம் உறுதி கொடுத்தேன். நான் காதலித்த ஒரே பெண் காயத்ரி மட்டுமே என்பதை சத்தியம் செய்தேன். இருப்பினும் சற்று பயம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. அதிகாலையில் காயத்ரியின் முகம் தனை பார்த்தபோது இரவெல்லாம் அழுது இருக்க கூடும் என்றே காட்டியது.

காலையில் நாங்கள் நால்வரும் ரங்கநாதன் வீட்டிற்கு போனோம். ரங்கநாதனின் அம்மாவிடம் பேசினோம். அவர்கள் காயத்ரியின் அக்கா அவர்களுடன் இருப்பதையே விரும்பினார்கள். காயத்ரியின் அக்கா தான் அவ்வாறு கிளம்பி வந்தமைக்கு வருத்தம் தெரிவித்தாள். திருமணத்திற்கு கட்டாயம் அழைக்கிறோம் என சொன்னார்கள். காயத்ரி, அவளின் அக்காவிடம் தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தாள். அப்போது சுபத்ரா அங்கே வந்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அத்தை என்றே ரங்கநாதனின் அம்மாவை அழைத்தாள். பேசினாள். தனியாக பேசிவிட்டு காயத்ரியும் அவளது அக்காவும் திரும்பி வந்தார்கள். காயத்ரிக்கு அங்கே சுபத்ராவை கண்டதும் அச்சத்துடன் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டு இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வீட்டு வாசலை கடந்து கொண்டிருந்த போது, சுபத்ரா காயத்ரியிடம் வந்து சொன்னாள். எனக்கு மெல்லிதாக கேட்டது.

''உன்னோட அக்கா வாழ்க்கை என் கையில, ரொம்ப வசதியா போச்சு''

சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். நாங்கள் நடக்க ஆரம்பித்தோம், காயத்ரியின் உள்ளம் நடுங்கியதை என் உள்ளம் நடுக்கத்துடன் கண்டது.

(தொடரும்)

No comments: