Friday 17 June 2016

இது கர்மவினை அல்ல, பரிணாமம்

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - முன்னுரை

பரிணாமம் குறித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்து இந்த கதையைத் தொடங்கினேன். அப்போது பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் எனும் இந்த வாக்கியம் மிகவும் பிடித்து இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டேன். எதற்காக இதைச் சொன்னார்கள் என்பதை விடுத்து இந்த வாக்கியத்திற்கு இரண்டு விதமான பொருள் தரலாம். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது பெண்களின் சமயோசித புத்திகளில் ஒன்று. மற்றொன்று இந்த பிரபஞ்சமானது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து இன்று கடவுள் இவ்வுலகை படைத்தார் என்பதற்கான காரணியாக பெண்கள் விளங்குகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

இன்றைய மருத்துவ உலகில் தாயின் கர்ப்பப்பை இல்லாமல் ஒரு குழந்தையை முழுமையாக உருவாக இயலாத நிலைதான் இருந்து வருகிறது. அப்படியே வைத்துக் கொண்டால் இந்த உலகின் சந்ததிகள் தாயின் வழித் தோன்றல்களாக இருப்பார்கள். தாய் தனது சந்ததிகளை பேணி காத்து வராது போயிருப்பின் உயிரின பரிணாமத்தின் நிலையை யோசிக்க இயலாது. 

இப்படித்தான் கதையின் பாதையை சிந்தித்து வைக்க கர்மவினை என்ற ஒரு விஷயம் நிறைய இடைஞ்சலாகவே இருந்தது. போன ஜென்மத்தில் நீ அதுவாக பிறந்து இருப்பாய், அடுத்த ஜென்மத்தில் நீ இதுவாக பிறப்பாய் என்றெல்லாம் மனிதர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது இல்லை என முழுவதும் விலக்கி வைத்தாலும் உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொள்ள வைக்கின்றன.

காதல், கல்யாணம், குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் மனிதனின் எண்ணங்கள் ஒரு வட்டத்தில் நின்றது இல்லை. மேலும் பரிணாமத்தின் 'வலுவுள்ளதே பிழைக்கும்' எனும் கோட்பாட்டின் படி தனக்கு சாதகமான விஷயங்களை செய்து முடித்துக்கொள்ள எந்த ஒரு எல்லைக்கும் ஒரு உயிரினம் போகும் ஆனால் மனிதன் மட்டும் காதல், உறவு, நட்பு என சொல்லிக்கொண்டு தியாகம் என அடைமொழி கொடுத்து மரணித்துப் போகவும் தயங்கமாட்டான்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்த கர்ம வினை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் சிந்திக்காமல் பரிணாமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட எண்ணங்கள், சிந்தனைகள் ஒருபோதும் வந்து இருக்காது.

ஒருவனின்  வாழ்வில் என்னவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டோ அல்லது தொடர்பு இன்றியோ நடக்கிறது போலவே இந்த கதையை முடித்து வைத்தேன்.

கர்ம வினை என்பதை விட பரிணாமம் மிகவும் சரியாகவே இருக்கிறது.



No comments: