Saturday 31 December 2011

புதிதாக என்ன இருக்கிறது?

இன்றைய புதியவகைகள் நாளைய பழையவகைகள் ஆகின்றன. நேற்றைய புதியவைகள் இன்றைய பழையவைகள் ஆகின்றன. புதியவைகள் புதியவைகளாக என்றுமே இருப்பதில்லை. இருந்தும் புதியவகைகள் தரும் மோகத்திற்கு குறைவும் இல்லை.

புதிதாக வாங்கிய ஒன்று தொலைந்து போயிருந்தது. அதை தேடி கண்டெடுக்கும்போது அது பழையவையாக மாறியிருக்க கூடும். புதியவகைளை போற்றி பாதுகாக்க செய்யும் முயற்சியை போல பழையவைகளை போற்றி பாதுகாக்க மனம் முயல்வதில்லை. பழையதுதானே எனும் அலட்சியம் பரவலாகவே ஏற்படுவது உண்டு.

பழையவைகள் தம்மை புதியவைகளாக மாற்றி வலம் வருவதுண்டு.  இருப்பினும் தம்மிடம் இருக்கும் பழமையை முற்றிலும் அவை துறப்பது இல்லை. தாம் பழையவைகள் ஆகிவிடுவோம் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எண்ணற்ற புதியவைகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய சிந்தனைகள் எல்லாம் பழையவற்றில் இருந்தே தோன்றி அந்த புதிய சிந்தனைகள் மீண்டும் பழைய சிந்தனைகள் ஆகின்றன. சிந்தனையற்ற நிலையில் மனம் லயித்து கொண்டிருப்பது என்பது ஒரு கடினமான பயிற்சியாகவே இருக்க கூடும். தியானத்தில் கூட, உறக்கத்தில் கூட ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிடித்து உட்காரவைக்கும் திறன் எவர் கொண்டு இருப்பாரோ?

ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்திலும் நிரம்பிய இறைவன் மிக மிக பழையது. புதிதாய் தோன்றும் மனிதர்களால் இறைவன் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறான் அல்லது இறைவனை  புதுப்பிக்க புதிய புதிய விசயங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

நிறைக்கும் எடைக்கும் வித்தியாசம் உண்டு. மாற்றமில்லா நிறை இந்த பிரபஞ்சத்தில் எங்கும் ஒரே நிலையில் இருக்கும். அதே மாற்றமில்லா நிறையின் எடை கிரகத்துக்கு கிரகம் மாறும். இருக்கின்ற எல்லாமே பழையது. அதில் வந்து அமரும் சிந்தனை, சிந்தனையின் செயல் வடிவம் புதியது.

ஒரு பொருளுக்கு நிறை வந்தது எப்படி எனும் தேடல் புதியது. நிறை என்பது எந்த ஒரு பொருளுக்கும் பழையது. பொருளின் வஸ்து அளவை நிறையை கொண்டே கணிக்கப்படுகிறது. அந்த பொருளில் எத்தனை அணுக்கள் இருக்கின்றன, மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது மூலமும் எத்தனை சக்தியால் பின்னப்பட்டு இருக்கிறது என வஸ்துவின் அளவை கணிக்கிறார்கள்.

ஒரு பொருளின் சடத்துவதிணிவு என்பது ஒரு விசையை அந்த பொருளின் மீது செலுத்தும்போது அந்த பொருளானது தனது இடப்பெயர்ச்சியை எதிர்க்கும் சக்தியை பெற்று இருப்பதை பொறுத்தே அளக்கப்படுகிறது. ஈர்ப்பு பொருண்மை பொறுத்து பொருளின் வேகம் மாறுபடும். இதுபோன்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் பழையது. அதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னால் தமிழுக்கு புதியது.

இந்த கவிதை புதியது, அதில் இருக்கும் எழுத்துகள் பழையது.

புதிய ஆண்டுதான்
புதிய எண்கள்தான்
நாம் ஏனோ
பழையது போன்றே இருக்கிறோம்.

ஆசையுடன் வாங்கினேன்
புதிய ஆடை, புத்தாண்டு
என்னிடம் இருந்த
பழைய ஆடையும் புதிதானது
இல்லாதவன்
உடுத்தி கொண்டதால்.

பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள்
பெருமிதமாய் சொல்லி வைத்தார்
பழையன கழிதல் என்றே
பொக்கிசங்கள் தொலைந்து போயின.

புதியது பழையது
எல்லாம் மனது
சொல்லி சிரித்தார்
அவரிடமே கேட்டேன்
இனி புதிதாக என்ன இருக்கிறது?


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
   (மொழி வாரியாக, இனம் வாரியாக, நாடு வாரியாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவது புதிதான பழையது)

Wednesday 28 December 2011

மயக்கம் என்ன வியக்கும் வண்ணம்

சார், எதற்கு ஒரு மாதிரி இருக்கீங்க?

வாழ்க்கையே வெறுத்து போச்சுயா, எதுக்கு இந்த உசிரை பிடிச்சி இருக்கணும்னு தோணுது.

சார், எதுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா உங்க பொண்டாட்டி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவாங்க, இப்படி விரக்தியா எல்லாம் பேசமாட்டீங்க.

வெங்காயம், அவளால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து உட்காந்துருக்கேன், கல்யாணமாம் கல்யாணம், கிளம்பிரு இல்லை கடிச்சி வைச்சிருவேன்.

சில நேரங்களில் பல விசயங்கள் மிகவும் அதிகபடுத்தபட்டு பேசபடுகிறதோ எனும் ஒரு எண்ணம் தானாக எழுவது உண்டு. பிறர் நமக்கு ஊக்க சக்தியாக இருந்தாலும், நம்முள் ஒரு ஊக்கமும், உந்துதலும் இல்லையெனில் நம்மால் ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பதுதான் நான் கண்டு கொண்ட கற்று கொண்ட பாடம். எதற்கு இந்த எண்ணம் சிந்தனை எழுந்தது எனில் இந்த விசயத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து ஒரு காந்தி மட்டும் ஏன் உருவானார் என்பதுதான்?

மயக்கம் என்ன படம் சரியில்லை என்று கேள்விபட்டேன், ஆனால் விமர்சனம் எதுவும் படிக்கவில்லை. படம் பார்க்க அமர்ந்ததும் படத்தின் வேகம் சற்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனாலும் மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவே காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அதுவும் 'ஓட ஓட' எனும் பாடலில் 'சாமி என்ன பங்கம் பண்ணுது' எனும் காட்சி அமைப்பில் சாமி சிலைகள் தலையை தொங்கபோட்டதை கண்டு அதிகமாகவே சிரிப்பு வந்தது. இப்படியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும், அவரது நண்பனும் அழுத பின்னர் 'ரொம்பவே அழுதுட்டோம்' என சொல்லும் போது சிரிப்பு வந்து சேர்ந்தது.

ஒரு படைப்பு என்பது என்ன? அதை படைப்பவரின் வலி எப்படி இருக்கும் என்பதை பிறர் எழுத்து மூலம் அறிந்த நான் இந்த படத்தை பார்த்துதான் காவியமாக தெரிந்து கொண்டேன். நான் ஆராய்ச்சி செய்தபோது நான் எனது ஆராய்ச்சி பற்றி வெளியிட இருந்த அதே விசயத்தை, ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது குறித்து ஏமாற்றம் மட்டுமே என்னால் அடைய முடிந்தது. அங்கே வேலைக்கு என ஒரு வருடம் முன்னர் தான் விண்ணப்பம் போட்டு இருந்தேன். வெளியிட்ட ஆராய்ச்சியில் எல்லா வேலைகளும் அவர்கள் செய்தது, ஆனால் சிந்தனை மட்டும் என்னுடையது. அதே வேளையில் ஆராய்ச்சியில் ஒரே சிந்தனை பலருக்கு வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நாம் செய்து இருக்கலாம் என்கிற ஒரு ஏக்கம் இருப்பது இயல்புதான். அதே வேளையில் எவர் செய்தால் என்ன எனும் பக்குவம் அந்த நாளில் இருந்து எனக்குள் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் புன்னகையுடன் கடக்க பழகி  கொண்டேன். அதைப் போல இந்த எழுத்துகளை திருடினேன், தாரளாம திருடங்க என பதிவுகளும் போட்டு இருக்கிறேன். ஆனால் தனது வேலையை மட்டுமே நம்பும், உயிராக போற்றும் மனிதரின் வலிகள் மிகவும் அதிகம் தான்.

ஒரு திறமைசாலியின் திறமையை எவராலும் அடைத்து வைக்க முடியாது. ஒரு படம் எடுத்த அந்த கதாநாயகன் அதைப்போல பல படங்கள் எடுக்க இயலும், ஆனால் மனம் உடைந்து போகும் பலவீனனாக காட்டி இருப்பது யதார்த்தம். பலர் தங்களது திறமைகளை உணராமலே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் எடுத்துகாட்டு. உடைஞ்சி போய்ட்டேன் என எத்தனை தடவை எத்தனை விசயங்களில் பேசி இருப்போம். நமக்குள் ஒரு உந்துதல் இல்லையெனில் நம்மால் முன்னேறவே முடியாது. படம் எடுத்தது கதாநாயகன், படத்தை அனுப்பி வைத்தது மனைவி. சில எதிர்மறை விசயங்கள் படத்தில் உண்டு, அதை பற்றி எதற்கு பேசுவானேன்.

ஒரு மனிதன் போராடி சாதிக்கும் போது நமக்குள் கண்ணீர் வந்து சேர்வது இயல்புதான். அதற்கு பின்னணி காரணங்கள் என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இந்த படத்தை பற்றி இன்னும் இன்னும் எழுதி கொண்டே போகலாம். பல விசயங்கள் கனவாக இருக்கும் என நினைத்தபோது நான் என்ன சீரியலா எடுத்துட்டு இருக்கேன் என இயக்குனர் காட்சிகள் மூலம் நம்மை கேள்வி கேட்பது மிகவும் அருமை.

மயக்கம் என்ன என்கிற வார்த்தையை படத்தின் தலைப்பாக போட்டுவிட்டு மௌனம் என்ன என கதாநாயகனின் மனைவி மூலம் நிறையவே பேசி இருக்கிறார். சில பல நேரங்களில் தவறிப் போகும் மனிதர்களை மன்னித்து அவர்களை நல்ல பாதையில் செல்ல வைக்க இயலும் எனும் இயல்பான வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த மயக்கம் என்ன பலருக்கும் மயக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.


Tuesday 27 December 2011

டெரர் கும்மி விருதுகளும் டெரரான நானும்

டெரர் கும்மி விருதுகள் - 2011  காண அழுத்துக   உங்களுக்கு பிடித்த உங்கள் பதிவுகளை இணைத்து விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். 


ஐயா டெரர் கும்மிகளே, வணக்கமுங்க. உங்களோட விருது பற்றிய அறிவிப்பை இங்கே நான் வெளியிடுறதால நான் போட்டியில இணையறது பாதிக்கும்னா அதுபத்தி கவலை இல்லீங்க. நான் என்னோட பதிவுகளை இணைச்சிட்டேன். மறக்காம நடுவர்களுக்கு அனுப்பி வைச்சிருங்க, சொல்லிட்டேன். அப்படி செய்யலைன்னா 'இது ரத்த பூமி' அப்படிங்கிற வசனத்தை 'இது ரத்த உலகம்' அப்படின்னு ஆக்கிபூடுவேன்.

அட சாமிகளா! நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்களே! நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை. கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு எழுதுறாங்களே, இவங்க எழுத்தை ஊக்கம் செய்ய ஒரு அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். அதுவும் தமிழ்மணம் இந்த வருஷம் விருது அறிவிப்புகள் இல்லைன்னு சொல்லிருச்சா நல்ல வாய்ப்பா இருக்கும்னு நானும் மனப்பால் குடிச்சேன்.

அதோட மட்டுமா. பல அறிவிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளார வைச்சிருந்தேன். இணையத்தில் எழுதுறவங்களுக்கு ஏகப்பட்ட ஊக்கத்தொகை, விருதுகள் எல்லாம் அறிவிச்சி எழுதறவங்க நாம வெட்டியா ஒன்னும் எழுதலை அப்படின்னு நினைக்க வைக்கனும்னு. ஆனா என்ன ஒன்னு, பயபுள்ளக நான் விளம்பரம் தேடுறதுக்குதான் இப்படி அலையுதுன்னு மனசை குத்தும் குத்தம் சொல்லிப்போடுவாகனு விட்டுட்டேன்.

 நீங்க மொக்கை பதிவுகளோட கூடாரம் அப்படின்னு சொல்றதை பார்த்தா என் கண்ணுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே! நீங்க பண்றதெல்லாம் மொக்கை மறுமொழிகளின் ராஜ்ஜியம் அப்படின்னு சொல்றாங்களே, ம்ம்ம். எத்தனை பேரு நாம எழுதற பதிவுக்கு உருப்படியா ஒரு மறுமொழி கூட வரலைன்னு கவலைபட்டு இருக்காங்க. ஒருவேளை நான் எழுதறது கூட மொக்கை பதிவுகள் அப்படிங்கிற உணர்ச்சி இல்லையோ எனக்கு. ஒரு சினிமா படத்தில சொல்லக்கூடிய மிக முக்கிய கருத்தை சீரியஸா சொல்றதை  விட நகைச்சுவையா சொன்னாத்தான் புரியும்னு அந்த காலத்திலேயே என் எஸ் கிருஷ்ணன் ரொம்பவே தீவிரமா செயல்பட்டார், அதுபோல உங்க பதிவுகள் சிலதை படிச்சேன், ரசிச்சேன். நகைச்சுவையை ரசிக்க நான் என்ன நகைக்கடையில செலவு பண்றதுக்கு யோசிக்கிறமாதிரியா யோசிக்கனும். விருது அறிவிப்பு நேரத்தில இப்படி நான் எழுதறது ஒரு வழக்கு நடக்கிற நேரத்துல அந்த வழக்கு பத்தி வழ வழானு எழுதறமாதிரி ஆயிரும், அதுவும் பயபுள்ளைக நான் ஜெயிக்கிறதுக்காக காக்கா பிடிக்குறேனு கோஷம் போடபோறாங்க.

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எழுத்து தகராறு வந்ததை படிச்சேன். அந்த எழுத்து தகராருல இப்படி கூட்டமா வெளியே போயிடீங்க அப்படிங்கிற விவரத்தையும் படிச்சேன்.  ரொம்ப பேருக்கு மனசு வருத்தம், ரொம்ப பேருக்கு மனசுல சந்தோசம். நீங்க அடிக்கிற கும்மி எழுத்துல, சீரியஸ் எழுத்து எல்லாம் செத்து போகுதுன்னு ரொம்ப பேரு கவலைபட்டாங்களாம். சீரியசான விசயத்தை படிக்க நாலு பேருதான் இருப்பாங்க அப்படிங்கிற உத்தியை கண்டுபிடிச்சி ரஜினி கணக்கா கலக்கலா பாதை போட்டது நீங்க தான். கும்மி அடிச்சாலும் கம்மியான பதிவுகள் தானே போடறீங்க.

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். என்னைப் போல பலர் மின்னஞ்சல் மூலமே உங்கள் போட்டியை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும், பலருக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்குமென்பதாலும், எனது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இந்த இடுகை. அதோட விட்டுருவமா!

இந்த கும்மி பத்தி கொஞ்சம் எழுதிரலாம்.  கீழே தரப்பட்ட தகவல்கள் தமிழ்வு எனப்படும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.


//புற விளையாட்டுகள்
கும்மியும்     கோலாட்டமும் தமிழக நாட்டுப்புற உழைக்கும் வர்க்கப்
பெண்களிடையே காணப்படும் புற     விளையாட்டுகள் ஆகும்.
இவ்விளையாட்டுகள் பெண்களின் உடல்திறனை வளர்ப்பவையாக
உள்ளன.
 கும்மி
பெண்கள்     வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும்
விளையாட்டு கும்மி ஆகும்.
நாட்டுப்புறப்     பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத்
தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி
விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால்
பாடப்படு்ம் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப் படுகிறது.
கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு,முளைப்பாரிப்
பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம்
 எனப் பலவாறு
கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே
பெருவழக்காக உள்ளது.
கும்மி,     திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற
நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால்
விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும்
போதும் கும்மி கொட்டுதல் உண்டு.
குலவையிட்டுக்     கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும்
கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே
பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும்     கூறாகவும்
அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக்
கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி
ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.
கும்மி     விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள்
பார்வையாளர்களாக     மாறுவதும்     பார்வையாளர்கள்     கும்மி
கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.
கைகளை     உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை
மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து
நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக்
கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மன்     கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு
சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப்
பாடுவதுண்டு.
தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
(ரெக்கத்திலே = இடத்திலே)
வயது     வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப்
பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து
வருகின்றன
மகளிர்     விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது
போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின்
அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும்
மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன
எனலாம். //