Friday 3 February 2012

ரஜினிகாந்தும் இலக்கியமும்

ரஜினி இலக்கிய விழாவில் பங்கு எடுக்க போகிறார் என்றதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த மனிதருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என நினைப்பு வந்து அமர்ந்தது. அதோடு நான் இது சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வலைப்பூ ஒன்றில் படித்தபோது எஸ் ரா மீதான குற்றச்சாட்டு கண்டு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என யோசிக்க வைத்தது. 

அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான். 

இத்தனைக்கும் எஸ் ரா எனது பக்கத்து ஊர்க்காரர். நான் அவரை பார்த்தது இல்லை, படித்தது இல்லை. எடின்பரோ நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த 'உறுபசி' கூட இன்னமும் புத்தக அலமாரியில் உறங்கி கொண்டிருக்கிறது. சில முறை எடுத்து பார்த்துவிட்டு வாசிக்காமல் வைத்து இருக்கிறேன். சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஊரில் இருந்தவரை சில புத்தகங்கள் கல்கத்தாவில் இருந்த நூலகங்களில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன். என்னுடன் படித்த அன்பழகன் சார், எனது சீனியர் அண்ணாதுரை சார் இவர்கள் எல்லாம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வாரம் வாரம் அள்ளிக்கொண்டு வந்து படிப்பார்கள். ஆச்சர்யபட்டு இருக்கிறேன். 

இப்படி இலக்கியங்கள் படைத்து கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் இடையே போட்டி பொறாமை என்றெல்லாம் அந்த வலைத்தளத்தில் படித்தபோது மிக மிக வருத்தமாகவே இருந்தது. மனதில் என்னவெல்லாமோ எழுத தோன்றியது, பின்னூட்டம் எதுவும் இடாமல் வந்துவிட்டேன். ஏனெனில் சென்னையில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளமால் என்ன சொல்வது எனும் மனநிலைதான். எப்போது இந்த இலக்கிய விழா நடக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் ரஜினியும் எலக்கியமும் என தலைப்பிட்டு ஒன்றை எழுத நினைத்தபோது ரஜினியின் பேச்சை கேட்காமல் எழுதக் கூடாது என தள்ளிவைத்தேன். அது மிகவும் சரியாக போய்விட்டது. ரஜினிகாந்தும் இலக்கியமும் என நன்றாகவே தலைப்பிட்டு எழுத வைத்தது. 

ரஜினி மேடை பேச்சுகளில் எப்போதுமே குட்டி குட்டி கதை சொல்வார். அந்த கதையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். எழுத்து என்பதன் வலிமை என்ன என அவர் பேசிய பேச்சு அற்புதம். அதிலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான கதையை சொல்லி அதற்கு பின்னர் அவர் முடித்த விதம் அட்டகாசம். அந்த கதையின் கடைசி வரிகள் தான் ரஜினி ஒரு சிறந்த இலக்கியவாதி என காட்டியது. என்ன சொல்கிறாய் என்பதல்ல எழுத்து, எப்படி சொல்கிறாய் என்பதுதான் எழுத்து. 

எத்தனை விசயங்கள். தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். இதைவிட அந்த வலைத்தளத்தில் எழுதி இருந்த குற்றச்சாட்டுதனை பொடிபொடியாக்கும் வண்ணம் எப்படி இந்த விழா நடக்க காரணமானது என அவர் சொன்ன விதம் எப்படியெல்லாம் உலகில் பிறர் பொய் பேசித் திரிகிறார்கள், வன்மை வைத்து திரிகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினி ஏமாறவில்லை. ஏமாற்றவும் இல்லை. 

தமிழ் எழுத்தாளர்கள் என ஜெயமோகன், சாருநிவேதிதா ( இவரை பலநாட்கள் பெண் எழுத்தாளர் என்றே நினைத்து இருந்தேன், சுஜாதாவை நினைத்தது போல) இவர்களுக்கு இடையே நடக்கும் எதோ அறபோராம் , அக்கப்போராம் அதையெல்லாம் படித்து எழுத்தாளர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் எனும் நினைப்பை அகல வைத்தது ரஜினியின் பேச்சு. 

இவரது பேச்சை கண்டு ரசிக்க இதோ இங்கே. இரண்டாம் பகுதி. 

ஒரு குட்டி சுயசரிதை எழுதப்பட்டு விட்டதாம். பிறர் மனம் நோக வேண்டாம் என வெளியிடவில்லை என அவர் சொன்னதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். 




Thursday 2 February 2012

இந்த பிரபஞ்சம் தட்டை தான்

என்னைய நீங்க நொட்டை சொல்லக் கூடாது. இந்த பிரபஞ்சம் தட்டை தான், மட்டைகளா என ஒரு அறிவியல் குழு சொல்லிவிட்டது. நான் மொட்டை தலையை தடவி கொண்டு இருக்கிறேன். 

இந்த பிரபஞ்சம் தட்டை தான். 

ஆச்சர்யமாக இருக்கிறதா? இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. 

ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சம் சற்று வளைவானது என்று சொன்னதில் இருந்தே இது குறித்து அறிவியலாளர்கள் நிறையவே சிந்தித்து இருக்கிறார்கள். 

ஆனால் சமீபத்தில் அன்டார்டிகா மீது வானில் பறந்த ஒரு பலூன் இந்த பிரபஞ்சம் தட்டை என்றுதான் உறுதி செய்து உள்ளது. 

அதாவது ஈர்ப்பு விசை இல்லாத பட்சத்தில் ஒளியானது நேர்கோட்டில் மட்டுமே செல்லும், வளைந்து செல்லாது என்பது ஒரு விதி. 

அதோடு மட்டுமா, இந்த உலகம் எப்படி பெரு வெடிப்பு மூலம் உருவானதோ அதைப்போல பெரு சுருக்கத்தில் சென்று முடிவடையும் என்று முன்னாளில் நினைத்து இருந்தார்கள். ஆனால் அவ்வாறு இந்த பிரபஞ்சம் பெரு சுருக்கத்தில் முடிவடையாது என சமீபத்தில் ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து நோபல் பரிசு கூட பெற்று விட்டார்கள் அறிவியலாளர்கள். 

இப்படி தொடர்ந்து விரிவடைந்து அப்படியே உறைந்துவிடும் பிரபஞ்சம் தட்டையாகவே இருக்க இயலும் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

நாம் சாப்பாட்டினை சூடு செய்ய உபயோகிக்கும் மைக்ரோ அலைகள் பெரு வெடிப்பு நடந்தபோது உருவாக்கிய கதிரியக்க வெப்பம் தனை கொண்டு பல எப்படி பிரபஞ்சம் விரிவடைகிறது என கண்டறியலாம். 

இதற்காக ஒரு தனிதன்மையுள்ள கருவியை உருவாக்கி இருந்தார்கள். அதில் ஒரு கேலக்ஸியில் இருந்து உருவாகும் ஒளி செல்லும் பாதையை விட முதன் முதலில் உருவான (பெரு வெடிப்பில்) ஒளியானது பிரபஞ்சத்தை ஊடுருவி சென்றது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்ததாம். 

இந்த பிரபஞ்சம் முதன் முதலில் அது கொஞ்ச நேரத்திற்கு வளைவாக இருந்தது, ஆனால் இப்போது தட்டையாகிவிட்டது என்கிறார்கள்.

ஆமாம், வேத நூல்களில் 'தட்டை' என சொன்னது பிரபஞ்சத்தையா, பூமியையா? எதுக்கு சொல்ல வருகிறேன் எனில் சொல்பவர் சொல்வதை புரிபவர் வேறு விதமாக புரியலாம் அல்லவா. 

Wednesday 1 February 2012

வானியல் ஆராய்ச்சியில் விருப்பமா?

சிறு வயதில் இரவில் நான் ஓடிக்கொண்டிருக்க என்னுடன் ஓடி வரும் நிலா. நான் நின்றால் நின்று கொள்ளும் நிலா. என் பேச்சு கேட்கும் அன்பு நிலா.

அம்மாவின் இடுப்பில் அமர்ந்து நிலாவைப் பார்த்து சாப்பிட்ட தருணங்கள். இந்த நிலா, வெள்ளை நிலா, 

நிலா நிலா ஓடி வா என பள்ளி காலங்களில் படித்து ரசித்த பாடங்கள். நிலா உள்ளம் கொண்ட கொள்ளை நிலா. 

தேய் பிறை, வளர் பிறை என நிலா தேய்வதும், வளர்வதுமாய். இது நிலா பற்றிய ஒரு கால கணிப்பு. 

வானத்தில் மேகங்கள் வலம் வர அங்கே எவரோ இருப்பதாய் கண்டு சிரித்த காலங்கள். 

ஆடு போன்ற உருவங்கள், ராஜா பவனி வரும் குதிரை வண்டிகள் என எத்தனை எத்தனையோ மேகங்களில் பார்த்து ரசித்த ஓவியங்கள். ஒவ்வொரு தினமும் எவரேனும் வரைந்து வைத்ததைப் போன்றே புதிதாக தோன்றும். 

இரவில் வானத்தைப் பார்த்து நட்சத்திரங்கள் எண்ணுவது ஒரு பொழுது போக்காக இருந்தது. எங்கோ தொலைவில் விழுந்து விடும் நட்சத்திரங்கள் விர்ரென பறந்து போனது கண்டு எரி நட்சத்திரம் என்றார்கள். 

சூரிய பகவான். வாயு பகவான். வருண பகவான் என வானத்தில் கடவுளர்களை தேடிய பொழுதுகள் உண்டு. இடி இடித்தால் அர்ஜுனன் பெயர் சொல்லி கதவுக்கு பின்னால் மறைந்த பொழுதுகள் உண்டு. 

எத்தனை எத்தனை கவிதைகள், பாடல்கள். வான மங்கை போட இருக்கும் கோலத்திற்கான புள்ளிகள் தான் நட்சத்திரங்கள் என வாசித்த போது சிலிர்க்க வைக்க சிந்தனைகள். 

மழைக்காக மாரியம்மனுக்கு மழை கஞ்சி எடுத்த நினைவுகள். இன்னும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது. 

வானத்தில் இருக்கும் சொர்க்கம் என்றே பாட்டியிடம் கேட்ட கதைகள். இறந்தவர்கள் சாமியிடம் சென்று விட்டார்கள் என வானத்தை நோக்கி சொன்ன வார்த்தைகள். 

சூரிய நமஸ்காரம் சொன்னதோடு நவ கிரகங்கள் என ஒன்பது கிரகங்களை கோவில்களில் சுற்றி வந்த பொழுதுகள். எந்த கணக்கில் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் என கண்டு கொண்டார்களோ என புரியாத கணக்குகள். ராசியும் பலன்களுமாய். 

ஒவ்வொரு கிரகத்திற்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த மொத்த அண்ட சாரமும் பிண்டத்தில் உண்டு என்று சொன்ன விதிகள். 

இன்னும் இன்னும். நிலா தொட்டு விட்டோம். பூமிக்கு மட்டுமே நிலா அல்ல, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிலா உண்டு என்று கண்டு கொண்டோம். 

நாம் இருக்கும் இடம் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன துளி. என்றோ அனுப்பப்பட்ட வானியல் கோள் புளுட்டோவை தாண்டி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. 

சிறு வயதில் வானத்தில் படங்களை பார்த்தது போல தொலை தூர நட்சத்திரங்களில் நெபுலாவில் அதிசய படங்கள் பார்க்கிறார்கள். அதிசய படங்கள் காட்டுகிறார்கள். அத்தனை அழகுடன் வியாபித்து இருக்கிறது இந்த பிரபஞ்சம். 

நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஆக்சிஜன் அணு அளவும், நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆக்சிஜன் அணு அளவும் வெவ்வேறு என கண்டு கொள்ள முடிகிறது. இதனால் புது விசயம்தனை தெளிந்து கொள்ளலாம் என போராடுகிறார்கள். 

இப்படி எத்தனையோ முன்னேற்றம் அடைந்து கொண்ட இந்த கால தொழில் நுட்பம் பொது மக்களை வானியல் ஆராய்ச்சி செய்ய அழைக்கிறது. தொலை நோக்கி மூலம் வானில் ஏற்படும் அதிசயங்களை கண்டு தர சொல்கிறது. 

ஒருவரின் கண்ணுக்கு தெரிவது மற்றொரு கண்ணுக்கு வேறொன்றாக புலப்படலாம். பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த பணியில் இறங்கி எந்த ஆராய்ச்சி பட்டம் பெறாத ஒருவர் ஒரு புது கிரகத்தை அதுவும் பூமி போன்ற கிரகத்தை சமீபத்தில் கண்டு பிடித்தார். 

சந்திர கிரகணம். சூரிய கிரகணம். பாம்பு விழுங்கிய கதை எல்லாம் இன்னமும் நினைவில் இருக்கிறது. இன்றும் கூட கிரகணம் சமயங்களில் வெளியில் வர வேண்டாம் என கட்டுபாடுகள் விதிக்கிறார்கள். 

வானத்தில் அதிசயங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. வெடித்து சிதறும் பல நட்சத்திரங்கள். குட்டியாய் தோன்றும் நட்சத்திரங்களில் தண்ணீர் சிதறும் மர்மங்கள். இன்னும் இன்னும்.

ஒரு நாள் இரவில் தனியாய் மகனுடன் நடந்து கொண்டு இருந்தேன். வானத்தைப் பார்த்தவன் அதோ நிலவுடன் ஒரு நட்சத்திரம் என்றான். வானில் பறக்கும் விமானமாக இருக்கும் என்றேன். இல்லை இல்லை அது நேர்கோட்டில் அமைந்த நட்சத்திரம் என்றான். படம் எடு என வற்புறுத்த வேண்டாம் என மறுத்தேன். 

மறுநாள் மீண்டும் இரவில் நடந்தோம். அதே நிலா, அதே நட்சத்திரம். படம் எடுத்தே ஆக வேண்டும் என சொன்னான். படம் எடுத்தேன். வானியல் ஆராய்ச்சி விருப்பம் உடையவர்கள் ஒரு தொலைநோக்கியுடன் வானத்தைப் பாருங்கள். அதிசயங்கள் கிட்டும். 


வானில் எத்தனையோ அதிசயங்கள். இறைவன் மட்டும் தென்படுவதே இல்லை.