Sunday 8 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 2

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நான் ஜார்ஜ் ஹார்ட் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றேன். நான் முதன் முதலாக சம்ஸ்கிருத பேராசிரியராக விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றினேன். பின்னர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  ஆண்டு முதல் நான் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் தலைமைபீடத்தின் பொறுப்பாளராக அந்த பல்கலைகழகத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மட்டுமல்லாது தொன்மை வாய்ந்த லத்தீன், கிரேக்கம் போன்றவைகள் நன்றாக தெரியும், அந்த மொழிகளில் எழுதபட்டிருக்கும் இலக்கியங்களை அதன் மூல மொழியில் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறேன். இது தவிர ஐரோப்பா மொழிகளில் ரஷ்யா, ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் படித்து இருக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் அல்லாத இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்து இருக்கிறேன். தெலுங்கு மொழியில் உள்ள இலக்கியங்கள் குறித்து அதிகம் தெலுங்கில் புலமை பெற்ற நாராயண ராவ் அவர்களிடம் விவாதம் செய்து இருக்கிறேன். இந்தி இலக்கியங்களை அதிகம் படித்து இருக்கிறேன், குறிப்பாக மகாதேவி வர்மா, துளசி மற்றும் கபீர் போன்றவர்களின் படைப்பை வாசித்து இருக்கிறேன்.

எனது மொத்த வாழ்நாள் காலங்களை சமஸ்கிருதம் படிப்பதில் அதிகமாக செலவழித்து இருக்கிறேன். காளிதாசர், மகா, பைரவி, ஹர்சா, ரிக் வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம், கதாசரிதசாகரா, ஆதிசங்கரரின் எழுத்துகள் என எல்லாம் சமஸ்கிருதத்தில் படித்து இருக்கிறேன். இதை எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் என்னவெனில் எனது பல மொழிகளின் புலமையை வெளிப்படுத்த அல்ல, தமிழ் செம்மொழி என்பதை சொல்வதற்கு நான் தகுதியானவன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன்.

பாரதியார் குறிப்பிடுவதை போல 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதே வாக்கியங்களை சொல்வதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக கருதுகிறேன். எந்த ஒரு அடிப்படை காரணம் எடுத்தாலும், தமிழ் மொழி மிகவும் தொன்மையான, மரபு சார்ந்த ஒரு அழகிய மொழி என்பதை ஆணித்தரமாக என்னால் அடித்து சொல்ல முடியும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு எனினும் நான்கு காரணங்கள் மட்டும் குறிப்பிட விழைகிறேன். முதலில் தமிழ் தொன்று தொட்டு பேசப்பட்டு வரும் மொழியாகும். குறிப்பாக தொல்காப்பியம் தனை சொல்லலாம். பிற இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட தமிழ் இலக்கியங்கள் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. மிகவும் பழமை வாய்ந்த சங்கம் வளர்த்த தொகை நூல்கள் பல. தமிழில் பத்துப்பாட்டு போன்ற கவிதை இலக்கியங்கள் காளிதாசரின் எழுத்துகளை விட குறைந்தது இரு நூறு வருடங்கள் முன்னர் இருந்தது ஆகும்.

இரண்டாவதாக தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்த செல்லாத மொழியாகும். சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் வருவதற்கு முன்னரே தமிழ் தன்னில் ஒரு பெரிய இலக்கியத்தை தன்னளவில் படைத்து வளர்த்து கொண்டிருந்தது அதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமே பிற இந்திய மொழிகளில் இருந்து தனித்தன்மை பெற்று இருந்தது. தமிழின் சொந்த இலக்கணங்கள், கவிதை விதிமுறைகள், அழகியல் கோட்பாடு என தமிழ் தனித்துவம் பெற்று விளங்கியதை எவரும் மறுக்க இயலாது. மிகவும் பழைய, மிகவும் பெரிய பாரம்பரியத்தை தமிழ் பெற்று இருந்தது என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தனித்து இருந்தது எனலாம்.

மூன்றாவதாக தமிழ் இலக்கியங்களில் தரமானது பத்தரை மாத்து தங்கமானது. இதுவே தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளின் இலக்கியங்கள், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சைனீஸ், பெர்சியன், அராபிக், இருந்து வேறுபடுத்தி காட்டி கொண்டிருந்தது. திருக்குறள் பற்றி நான் சொல்லித்தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பல தரம், திறம் வாய்ந்த இலக்கியங்கள் கொண்ட தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பது திருக்குறள். இந்த தமிழ் இலக்கியம் எல்லாவிதமான மனித இருப்புதனை பட்டைதீட்டி கூர் பார்த்துவிட்டது எனலாம், மனித இருப்புதனை தொடாத இடமே இல்லை என சொல்லலாம்.

இறுதியாக தமிழ் மொழிதான் இந்திய மொழிகளின் மூல காரணி என்பதை குறித்து நிறையவே எழுதி இருக்கிறேன். தென்னிந்திய கலாச்சாரம் எப்படியெல்லாம் சமஸ்கிருதத்தை பாதித்து உள்ளது என்பது சம்ஸ்கிருத இலக்கியங்களில் தென்படும். தமிழ் இந்து மத கோட்பாடுகள், சங்க தொகை நூல்கள், எல்லாமே பகவத் புராணம் போன்றவைகள் மட்டுமல்ல, கன்னடம், பிற மொழி இலக்கியங்களில் கையாளப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியின் புனித தன்மையால் அவை வேதங்களுக்கு நிகரானவை, அதன் காரணமாகவே திருப்பதி போன்ற பெரிய தலங்கள் முதற்கொண்டு பல தென்னிந்திய தலங்களில் வேந்தங்களுக்கு நிகராக தமிழ் மொழி ஓதப்பட்டு வருகிறது. எப்படி சமஸ்கிருதம் இந்திய-ஆரியர்களின் மூல மொழியாக இருக்கிறதோ அதைப்போல தமிழ் மொழி பல தென்னிந்திய மொழிகளின் மூலம் என சொல்லலாம்.

தமிழை செம்மொழி இல்லை என மறுப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்லக்கூடிய வகையை சேர்ந்தவர்கள். செம்மொழி எனும் தகுதி எந்த ஒரு மொழிக்கும் இந்த உலகில் இடம் இல்லை, தமிழை தவிர. ஒரு செம்மொழி என அதற்கு பழமையானது, தனித்துவம் பெற்று தனக்கே உரிய மரபு கொண்டது, பழமையான இலக்கியங்கள் கொண்டது என பல காரணிகள் பார்க்கும்போது தமிழ் ஒன்றே அதற்கு தகுதியானது ஆகும்.

இதை எல்லாம் உங்களிடம் சொல்வதற்கு நான் மிகவும் விந்தையாக, அதிசயமாக உணர்கிறேன். ஏனெனில் இந்தியா மாபெரும் தேசம், இந்து மதம் உலகின் மிக சிறந்த மதம் என எவரும் சொல்லியா தெரிய வேண்டும். தமிழ் மொழி பற்றி தெரிந்தவர்கள் ஒருபோதும் தமிழ் செம்மொழி என்பதை மறுக்க மாட்டார்கள்.

வாழ்க தமிழ்.

-------------

இப்படி பேசிய ஜார்ஜ் ஹார்ட் அவர்களிடம் இதை எல்லாம் ஆங்கிலத்தில் சொன்ன நீங்கள் தமிழில் பேசி இருக்கலாமே என்று கேட்க தோணியது. தமிழர்களே தமிழில் பேச, எழுத தயங்கும்போது ஆங்கிலேயன் நான் ஆங்கிலத்தில் பேசுவது தவறு என எப்படி சொல்ல முடியும் என கேட்டாலும் கேட்பார் என நினைக்க வேண்டியதானது, அதோடு மட்டுமில்லாமல் இப்படி பழமை வாய்ந்த தொன்மையான மொழி பலரும் பேசும், எழுதும் மொழியாக வளர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழர்களின் குறுகிய மனப்பான்மை என்று சொல்ல இயலுமோ? திரை கடலோடி திரவியம் தேடு என்று சொன்னார்களே தவிர திரைகடலோடி தமிழ் மொழி பரப்பு என சொல்ல மறந்துவிட்டார்கள். எனது சந்ததிகள் தமிழ் தெரியாத சந்ததிகளாக உருவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை நினைக்கும் போதே தமிழ் செம்மொழி என சொன்னாலும் தமிழ் தமிழ் என சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது?

மேலும் பிற மொழிகளை தன்னில் கலக்கவிட்டு தனது நிறம் தொலைத்த தமிழ் மொழி குறித்து என்ன சொல்ல முடியும்? மொழிகளில் தாய் இன்னும் தொடரும். 

4 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

//இரண்டாவதாக தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்த செல்லாத மொழியாகும். சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் வருவதற்கு முன்னரே தமிழ் தன்னில் ஒரு பெரிய இலக்கியத்தை தன்னளவில் படைத்து வளர்த்து கொண்டிருந்தது //

ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்...அப்படிப்பட்ட தமிழ் மொழியின் ஒரு சிறு முனையை நாமும் ருசிக்கிறோம் என்பதே சந்தோஷம்.

Radhakrishnan said...

நன்றி ரத்னவேல் ஐயா, நன்றி சகோதரி.

dravid said...

மிக அருமை இந்தப்பதிவு .பல பேர் பயனடைய இது போன்ற பதிவு அவசியம். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

Radhakrishnan said...

மிக்க நன்றி. தொடர்வோம்.