Monday 27 September 2010

தோழிகள் ஒரு சாபக்கேடு

1. நல்லாவே சமைப்பேன் 


2. எனது மனைவி போடும் கடிவாளம்    


3. பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் 

4. சபலத்தில் அல்லாடும் மனம் 


5. விளையாட்டுப் பெண்கள் 

'என்னது எனது பெயர் போட்டு இருக்கிறாய்' என அந்த ஆத்திரத்தில் கத்திவிட்டேன். 'உங்கள் பெயர் போட்டதில் என்ன தவறு, இந்த பெயர் உங்களுக்கு மட்டுமா இருக்கிறது' என்றாள் அவள். எனது மனைவி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

'பொதுவாக காதலனை, காதலியை மணம் முடிக்க இயலாமல், வேறு ஒருவருடன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு பிள்ளை பெற்றுக் கொள்பவர்கள் தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பெயர் வைப்பார்கள். நினைவுகளில் எப்போதும் இருக்கிறார்கள் என சொல்லும் ஒரு போலித்தனம். ஆனால் நான் அப்படி இல்லை' என்றாள்.

என்ன ஆச்சுங்க, என்ன பிரச்சினை என்றாள் என் மனைவி. இதோ இந்த பத்திரிகையில் எனது பெயர் மணமகன் எனும் இடத்தில் இருந்தது, அதுதான் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது என்றேன். என்னங்க, இவங்க சொல்றமாதிரி இந்த பெரு உங்களுக்கு மட்டுமா சொந்தம் என சிரித்தாள் எனது மனைவி.

அசடு வழிந்தேன். எல்லாம் நன்றாக இருக்கிறது. அச்சடிக்கலாம் என்றேன் . அப்படியெனில் வரவேற்பு உங்கள் இருவர் தலைமையில் என இணைத்து விடட்டுமா என்றாள். எனது மனைவி அதெல்லாம் எதற்கு என மறுத்துவிட்டாள். நானும் எனது பங்குக்கு மறுப்பு சொன்னேன். எனது வாழ்க்கையையே குலைத்து போட இருந்தவள். அவளையா என் தோழியாக நினைத்து முதன் முதலில் வேலைக்கு சேர்ந்ததும் எல்லாம் சொல்லி தந்தேன். நினைக்கும் போதே எனக்கு நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. அவள் போனதும்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

அவ மேல உங்களுக்கு ஆசை இருக்குல என்றார்  என் மனைவி. எனக்கு எரிச்சலாக போய்விட்டது. இப்பொழுதுதான் ஒரு சனியனை விரட்டி அடித்தேன். பெண் மட்டும் போய்விட்டாள். ஆனால் சனியன் எனது மனைவி மீது அமர்ந்துவிட்டதோ என அச்சம் அடைந்தேன். அவள் மீது ஆசை இருந்தால் எதற்கு நான் அவளை ஒதுக்க வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர்  வெறுப்பில் தான் ஆசை அதிகம் வளருமாம் என்றார். அன்பில் தான் ஆசை அதிகரிக்கும் என்றல்லவா படித்து இருக்கிறேன் என்றேன்.

உங்கள் பெயரை பத்திரிகையில் பார்த்ததும் உங்களுக்குள் தேனாட்டம் இனித்து இருக்குமே என்றார். தேளாட்டம் இருந்தது என வெடுக்கென பேசினேன். நச்சரித்து கொண்டே இருந்தார். இனிமேல் உன்னுடனே இருபத்தி நான்கு மணி நேரம் இருக்கிறேன் என அவசரமாக சொல்லிவிட்டேன். என்னிடம் எதையோ மறைக்க பார்க்கிறீர்கள் என்றார். எதுவும் இல்லை என சத்தியம் செய்தேன்.

வீட்டினுள் இருக்கப் பிடிக்காமல் ஊரின் தெருக்களில் உலாத்திக் கொண்டு இருந்தேன். 'மாமா' என வந்தாள் என் மாமா மகள். அடுத்த ஒரு தொல்லையா என நினைத்தேன். கைபேசியை எடுத்தாள். அவளுடைய முன்னால் காதலுனுக்கு அவள்  அனுப்பிய தூது ஒன்றை காட்டினாள்.

வருத்தம் தரும் செய்தி கேட்டேன். வாழ்க்கை நீ இழக்கவில்லை. உனக்கு வாழ்க்கைப்பட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். நாளை எனது அலுவலகத்தில் மாலை சந்திக்கலாம். அவள் அனுப்பிய செய்தி படித்ததும் அதிர்ந்தேன்.

நீ என்ன காரணம் செய்து கொண்டு இருக்கிறாய் தெரியுமா? உனது வாழ்க்கையை வீணடித்து விடப்போகிறாய் என எச்சரித்தேன். அவள் அதற்கு சிரித்தாள். அவன் வரமாட்டான், குற்ற உணர்ச்சியில் அவன் குறுகி போய் இருப்பான் என்றாள். நான் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் கதையை சுருக்கமாக சொன்னேன்.

நான் சொல்லித்தந்த டெக்னிக்கு மாமா அது, அதை உங்களுக்கே காட்டிட்டா, என விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் விழுந்து விழுந்து சிரித்ததில் எனது மனம் புண்ணாகி கொண்டு இருந்தது. இவளைப் போய் ஒரு தோழியாய் நினைத்தோமே என மனம் வருந்தியது.

வீட்டினை அடைந்தேன். உங்கள் மாமா மகளுடன் இந்த இரவில் என்ன அப்படி இளிப்பு என்றார். சிரித்தது நான் இல்லை, அவள் தான் என்றேன். பெரிய நாகேசுனு உங்களுக்கு நினைப்போ என்றார். என்ன சொல்வது என தெரியவில்லை.

எத்தனையோ நல்ல தோழிகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவரவர் குடும்பத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். குடும்பமாக வருகிறார்கள், குடும்பமாக போகிறார்கள். அவர்களை பற்றியெல்லாம் எனது மனைவி ஒருபோதும் தவறாக பேசியதே இல்லை. ஆனால் இந்த இருவர் மூலம் நான் படும் தொல்லைகள் மிக அதிகம். எவர் கொடுத்த சாபமோ என உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் எனது மாமாவிடம் அவரது மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் பண்ணி வைக்குமாறு சொன்னேன். அவளது செயல்கள் பற்றி எச்சரித்தேன். அந்த எச்சரிக்கை எனக்கே வினையாக வந்து சேர்ந்தது.

அன்று இரவே எனது வீட்டுக்கு வந்து எனது மாமா மகள் கன்னாபின்னாவென்று சத்தம் போட்டாள். எனது மனைவிக்கு பொறுக்க இயலவில்லை. பளார் பளார் என எனது மாமா மகளை அறைந்தார். யாரைப் பத்தி எனக்கு முன்னால இப்படி பேசுவ என எனது மனைவி கொண்ட கோபத்தில் அவரது பலநாள் ஆத்திரம் தெரிந்தது. பிள்ளைதாட்சியா இருக்கே, இல்ல நிலைமையே வேற என அழுதபடி வெளியேறினாள் எனது மாமா மகள்.

கைகால்கள் எல்லாம் நடுங்கியபடி அமர்ந்து இருந்தேன். கோவிலுக்கு போய்விட்டு வந்த எனது பெற்றோர்கள் என்ன ஆச்சு என்றார்கள். சிறிது நேரத்தில் எனது மாமாவும், அத்தையும் வாசலில் வந்து நின்றார்கள். ஓ என எனக்கு அழவேண்டும் போலிருந்தது.

No comments: