Thursday 24 November 2011

ஒழுக்கம்

எத்தனையோ வருடங்கள் முன்னர் கவிஞர் வைரமுத்து சொன்னதாக ஒருவர் என்னிடம் சொன்னது இன்னும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது. அவர் உண்மையிலேயே அப்படி சொன்னாரா என்பதை இப்போது அவரிடம் கேட்டால் அவர் மறந்து இருக்க கூடும். ஒரு நல்ல கவிஞர், ஆனால் நடிகைகள் பற்றி எதற்கு அப்படி சொன்னார், உண்மையிலேயே சொல்லி இருப்பாரோ என எண்ணும் போது அந்த கவிஞரை நடிகை சிம்ரனை பற்றி இணைத்து பேசிய செய்தி கசிந்தது. 

நடிகையாக என்ன தகுதி வேண்டும் என கேட்டால் தகாத உறவுக்கு தயாரானவராக இருக்க வேண்டும் என்றுதான் பலர் மனதில் சொல்லிக்கொள்கிறார்கள். குடும்ப பாங்கான படங்களில் நடித்தவுடன், ஓரளவுக்கு புகழ் பெற்றவுடன் ஒரு நடிகை தனது முந்தைய வரலாற்றினை அழித்துவிடுகிறார் எனும் குற்றச்சாட்டு உண்டு. இதன் மூலம் ஒரு நடிகை என்றாலே எத்தனை கேவலமான எண்ணம் மக்களின் மனதில் உள்ளது என்பதை அறியலாம். விலைபொருட்கள் போலவே நடிகைகள் நடத்தப்படுகிறார்கள் எனும் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இந்த நடிகைகள் குறித்து ஒருமுறை நாளிதழ் ஒன்று வெளியிட்டதை எதிர்த்து பெரும் போராட்டமே வெடித்தது. நடிகைகளும்  சாதாரண பெண்மணிகள் எனும் எண்ணம், சகோதரத்துவம் போன்றவை பொதுவாக ஒரு பாமரனிடம் எழுவதில்லை. 

ஒரு நடிகையின் கதை என குமுதம் ஒன்றில் வந்த தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது எல்லாம் கற்பனை, அந்த தொடருக்கு தடை விதிக்க போராடி வருகிறோம் என அரசியல் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அன்று என்னிடம் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. அவர் சொன்ன ஓரிரு வாரங்களில் தொடர் நின்று போனது. 

சமீபத்தில் கூட கவிஞர் வாலி ஒழுக்கமில்லாத துறை திரைத்துறை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த திரைத்துறையில் வெகு சிலரே ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அவர் சொன்னது குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மது உட்கொள்தல் ஒழுக்க கேடு என கவிஞர் வாலி நினைக்கிறார் போலும். 

கிசுகிசுக்கள் அதிகம் உலவும்  துறை திரைத்துறை தான். இரண்டு மூன்று படங்களில் ஒரே நடிகர், நடிகை சேர்ந்து நடித்தால் காதல் என கிசுகிசுக்கப்படுகிறார்கள். அதற்கு அலங்காரம் செய்வது போல சில நடிகை, நடிகர்கள் செயல்படுவது உண்மைதான்.  இயக்குனர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது பொய்யான கற்பழிப்பு வழக்கு போடப்பட்டதாக செய்திகள் உலவின. தற்போது பிறிதொருவரின் மனைவியை, குழந்தையை கடத்தியாக கவிஞர் சினேகன் மீதான குற்றச்சாட்டு. அரசியல் பலத்தினாலும், சொந்த செல்வாக்கினாலும் நடிகை சோனா சொன்ன பாடகர் எஸ் பி பி மகன் சரண் மீதான குற்றச்சாட்டு ஒன்றும் இல்லாமல் போனது. நடிகைகள் பற்றிய படம் எடுத்தால் என்ன ஆகும் என்கிற பயம் பலருக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை திருமணங்கள், விவாகரத்து என எதிர்கொண்டது திரைத்துறையில் உள்ளவர்கள் என அறியலாம். 

நடிகர் கமல்ஹாசன், நடிப்பு என சொல்லிக்கொண்டு இவர் நடிகைகளிடம் பண்ணும் அட்டகாசம் பெருமளவில் ரசிக்கப்படுவது உண்டு.  தன்னை தானே ஒழுக்கம் கெட்டவன் என தைரியமாகவே சொல்லக்கூடியவர் இவர் என சொல்கிறார்கள். இவர் மட்டும் காந்தியை போன்று சத்திய சோதனை எழுதினால் திரை உலகம் சந்தி சிரித்துவிடும் என சொல்பவர்கள் உண்டு. நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் நடிகை அமலா பற்றியும் கூட வேலைக்காரன் படத்தின் போது அரசல் புரசலான செய்திகள் பரவியது உண்டு. 

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அமலா பால் இடையே தகாத உறவு இருந்ததால் தான் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என ஒரு இணையம் எழுதி இருந்தது. சமீபத்தில் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா சாமியார் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது. நடிகர் சிம்பு, நடிகர் பிரபுதேவா, நடிகை நயனதாரா விவகாரங்கள் திரையுலகின் ஒழுக்கம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பின. 

இப்படி இருக்க திரைத்துறையில் பேசப்படும் இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? உண்மையிலேயே திரைத்துறை ஒழுக்கம் கெட்டதா? எல்லா துறைகளிலும் ஒழுக்க கேடு என்பது கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் என பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள் மூலம் அறியலாம். ஆனால் இந்த திரைத்துறையில் நடிப்பு என்ற போர்வையில் பாலியல் வன்முறைக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாகவே வெளியில் இருப்போர்க்கு தென்படுகிறது. மேலும் திரைத்துறை பெருமளவு மக்களால் பார்க்கப்படுவதால், ரசிக்கப்படுவதால் அங்கே நடக்கும் சில விசயங்கள் பூதகாரமாக்கப்படுகின்றன. அவரவர் கற்பனைக்கேற்ப தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறதோ என அச்சம் நிலவுகிறது. 

அப்பொழுதெல்லாம் நினைவு வரும், எங்கிருந்து இந்த கற்பனைவாதிகள் புறப்படுகிறார்கள் என! உறவுகள் குறித்து எதற்கு ஒரு தவறான கண்ணோட்டம் நமது தமிழ் மக்களிடம் வந்து சேர்ந்தது. புறம் பேசுதல் குறித்து இலக்கியங்கள் அதிகமாகவே பேசுகிறது. ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் இதிகாசங்கள், இலக்கியங்கள் உருவாகி இருக்கின்றன. 

இது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை என எவரும் விடுவதில்லை. ஊரெல்லாம் இவர்கள் பற்றி தெரிவதால் நமட்டு சிரிப்புடன், பரிகாச பார்வையுடன் இவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அதே வேளையில் கவிஞர் கண்ணதாசன் போல எவரும் தன்னைத்தானே இந்த திரையுலகில் மட்டுமல்ல உலகில்  நிர்வாணப்படுத்தி கொள்ள முன்வருவதில்லை. 

திரைத்துறையில் ஒழுக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகனும், ரசிகையும் அதிகமாக தமிழகத்தில் இருக்கிறார்கள் எனும் போது மொத்த தமிழகமே ஒழுக்கம் கெட்டதோ எனும் கேள்வி எதற்கு எழுவதில்லை. 

திருவள்ளுவர் அற்புதமாக சொல்கிறார் 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 

அதாவது ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் கூட தகாத வார்த்தைகளை சொல்லமாட்டார்களாம்! 

வள்ளுவர் சொல்வதைப் பார்த்தால் அத்தகைய ஒழுக்க நெறி இந்த உலகில் மிகவும் குறைவாகவே இருக்கிறது எனலாம். எனவே ஒழுக்கம் கெட்டதுதான் திரைத்துறை என சாலமன் பாப்பையா அங்க வை, இங்க வை என தீர்ப்பு கூறலாம். 

No comments: